முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: தமிழ்க் கட்சிகள் மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு அழைப்பு

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இன்று (29) யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க.வி.விக்னேஸ்வரன், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், கலையமுதன், ரெலோ சார்பில் தி.நிரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், தமிழ் தேசிய கட்சியின் சார்பில் என்.சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மிகப்பெருமெடுப்பில் மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருதனார்மடத்திலிருந்து யாழ் நகர் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

பின்னர் 7ஆம் திகதி முல்லைத்தீவை முடக்கி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அனைத்து தமிழ் கட்சிகளும் கையெழுத்திட்டு தூதராலயங்களுக்கும் கடிதம் அனுப்பப்படவுள்ளது.