வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்க விரைவில் சிகிச்சை மையம்

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார திணைக்களத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (12) நடத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

கடந்த ஒரு வருடமாக வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் வைத்தியசாலைக்கு வரும்போது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இருப்பினும், முற்று முழுதாக போதைக்கு அடிமையானவர்களை நீண்ட காலமாக வைத்து பராமரித்து சிகிச்சை அளிப்பதற்கென சிகிச்சை நிலையம் ஒன்று வட பகுதியில் இல்லை. அவ்வாறான ஒரு விசேட நிலையத்தை அமைப்பதாயின், அதற்கு பல்வேறுபட்ட வசதிகள் தேவையாக இருக்கின்றன.

இந்நிலையில், இவ்வாறானதொரு நிலையத்தை வடக்கில் அமைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் முயற்சிகளை எடுத்திருக்கிறார்.

அதேவேளை புதிதாக ஒருவர் போதைக்கு அடிமையாகாமல் குடும்ப உறுப்பினர்களும் சமூகத்தவர்களும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.