வடக்கு,கிழக்கில் பெளத்த சின்னங்களை அழித்தே இந்து கோயில்கள் கட்டப்பட்டுள்ளன

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டே இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு,நாம் பொறுமையுடன் செயற்படுகிறோம் எனத்தெரிவித்த முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர நாட்டில் இனப்பிரச்சினை உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்,ஆனால் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று இல்லை எனவும் அடித்துக்கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி.இறக்குமதி கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

வடுகங்கல பகுதியில் உள்ள சிவன் கோயிலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் அரசியல் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

வடுங்கல பகுதியில் பௌத்த சின்னங்கள் காணப்பட்டுள்ளமை தொல்பொருள் சான்றுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து சட்டத்திற்கு முரணாக சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராக சிவனின் சாபம் திரும்புமே தவிர ஏனைய தரப்பினருக்கு அல்ல,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளினால் தான் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் குருந்தூர் மலையில் பழமை வாய்ந்த பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது,பௌத்த வழிபாடுகளுக்கும் தமிழ் அரசியல் தரப்பினர் தடையேற்படுத்தியுள்ளார்கள்.

தேரவாத பௌத்த கொள்கையை பாதுகாக்கும் ஒரு நாடாக இலங்கை உள்ளது.ஆகவே பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இனவாத முரண்பாடுகளை தமிழ் அரசியல்வாதிகளே தோற்றுவிக்கிறார்கள். நாட்டில் இனப்பிரச்சினை உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்,ஆனால் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று இல்லை. பிரதான நிலை வர்த்தகத்தில் தமிழர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களின் வாடிக்கையாளர்களாக சிங்களவர்கள் உள்ளார்கள், இனப்பிரச்சினை என்பதொன்று இருக்குமாயின் இந்த நிலை காணப்படாது.ஆகவே இல்லாத இனப்பிரச்சினையை தமிழ் அரசியல்வாதிகளே தோற்றுவிக்கிறார்கள்.

பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு, பொறுமையுடன் செயற்படுகிறோம்,கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.சிங்கள மரபுரிமைகள் அழிக்கப்படுகின்ற நிலையில் சர்வதேச மட்டத்தில் சிங்களவர்களுக்கு எதிராக தவறான நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது.தமிழ் இனப் படுகொலைக்கு சிங்களவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கனடாவில் அண்மையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இது முற்றிலும் தவறானது

தமிழ் மக்களை பாதுகாப்பதற்காகவே யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் விடுதலை புலிகள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது.இலங்கையில் எவ்வித இனபடுகொலையும் இடம்பெறவில்லை என்பதை சர்வதேச நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்றார்.