வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடம் இலங்கை – ஃபோர்ப்ஸ்

ஆபிரிக்காவிற்கு வெளியில் வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கை உள்ளதாக பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை தனது தனித்துவமான சுற்றுலா சலுகைகள் மற்றும் இயற்கை அழகு காரணமாக தொடர்ந்து பலரதும் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது.

உலக நாடுகளில் சிறுத்தைகளின் அடர்த்தியான பரம்பலைக் கொண்ட இடமாகவும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை விடவும் மிகச்சிறந்த பூனை இனங்களைக் கொண்ட இடமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆசிய யானைகள், மயில்கள், நீர் எருமைகள், குரங்குகள் மற்றும் தேன் உண்ணி கரடிகளை அதிகம் கொண்ட தேசமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேனப் கோடில் இருந்து டொமினிக்கன் குடியரசு வரை திமிங்கலங்களை பார்க்கக்கூடியதாக இருந்தாலும், இலங்கையில் மாத்திரமே எளிதில் நீலத் திமிங்கலங்களை காண முடியும் எனவும் தெரிவித்துள்ளது.