விடுதலை புலிகள் 3 இலட்சம் தமிழர்களை பகடை காயாக வைத்து போர் செய்தார்கள் – சரத் வீரசேகர

நாட்டில் சிங்கள இனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே புத்த சாசனம் பாதுகாக்கப்படும். புத்தசாசனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே தேரவாத பௌத்த நாடான இலங்கை பாதுகாக்கப்படும்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழர்கள் தமது வீடுகளுக்குள் இருந்தவாறு நினைவு கூர்ந்துக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (29) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் பௌத்த மத உரிமைகள் மற்றும் பௌத்த மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் உள்ளன. இலங்கையில் 72 சதவீதம் பௌத்தர்களும், 12 சதவீதம் இந்துக்களும், 9.7 சதவீதம் இஸ்லாமியர்களும், 6.3 சதவீதம் கத்தோலிக்கர்களும் வாழ்கிறார்கள்.

இலங்கை தேரவாத பௌத்த நாடு அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையின் பிரகாரம் பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டு, போசிக்கப்படவேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையை பாதுகாக்கும் வகையில் பௌத்த சாசனம் அமுல்படுத்தப்பட்டது, ஆகவே பௌத்த சாசனம் பாதுகாக்கப்பட் டால் தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் பௌத்த விகாரைகள், தேரர்கள் மற்றும் பௌத்த மரபுரிமைகள் தான் பௌத்த சாசனம்.

சிங்கள இனத்தவர்கள் தான் பௌத்த சாசனத்தை தோற்றுவித்தார்கள், ஆகவே புத்தசாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் சிங்கள இனம் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆரம்ப காலத்தில் சிங்களே என அழைக்கப்பட்ட இலங்கை காலப்போக்கில் ஸ்ரீ லங்கா என எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை அறியவில்லை. இலங்கையை வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களில் இருந்து பாதுகாக்க சிங்களவர்கள் தான் முன்னின்று போராடினார்கள்.

புத்தசாசனம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நாட்டின் ஒருமைப்பாடு உறுதியாக பேணப்பட வேண்டும். சமஷ்டியாட்சி முறைமையின் கீழ் நாட்டை பிளவுப்படுத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் புத்தசாசனம் பற்றி குறிப்பிட வேண்டிய தேவையில்லை. தற்போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புத்தசாசனத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் இருந்து சிங்களவர்களும்,முஸ்லிம்களையும் பிரபாகரன் மாத்திரம் வெளியேற்றவில்லை.

பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளும் அவ்வாறே செயற்பட்டார்கள்.பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஷ்வரன் கொழும்பில் சிங்களவர்களுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு வடக்கு மாகாணத்திற்கு சென்று குறிப்பிடுகிறார்.

வடக்கில் சிங்களவர்களுக்கு இடமில்லை என்று, இது வெறுக்கத்தக்கதாகும். வடக்கில் புத்த சிலையை நிர்மாணிக்கும் போது அதற்கு எதிராக இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்,இவ்வாறானவர்களிடம் நல்லிணக்கத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது.

வடக்கில் யுத்தம் தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் கொழும்பில் உள்ள கோயில்களில் தேர் வீதி வலம் வந்தது. சிங்களவர்களும் அதில் கலந்துக் கொண்டார்கள்.

அதுவே சிங்கள இனத்தின் பொறுமையாகும். ஆனால் வடக்கு மாகாணத்தில் புத்தசாசனத்திற்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள். குருந்தூர் மலையில் பௌத்த விகாரைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து தடையேற்படுத்தவதையிட்டு ஒட்டு மொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை அவர்களின் உறவுகள் வீடுகளுக்குள் வைத்து நினைவு கூர்ந்துக் கொள்ளலாம். விடுதலை புலிகள் 3 இலட்சம் தமிழர்களை பகடை காயாக வைத்து போர் செய்தார்கள்.

இராணுவத்தை நோக்கி தமிழர்கள் வரும் போது அவர்களை சுட்டு வீழ்த்தினார்கள். இராணுவத்தை நோக்கி 12 வயது சிறுவன் வரும் போது அந்த சிறுவனை பிடித்து கால்களை வெட்டினார்கள்.

விடுதலை புலிகள் அமைப்பினர் மனித உரிமைகளுக்கு எதிராகவே செயற்பட்டார்கள். இவ்வாறானவர்களையா தாம் நினைவு கூறுகிறோம் என்பதை தமிழர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

விடுதலை புலிகள் அமைப்பினர் நெருக்கடி செய்தார்களா அல்லது இராணுவத்தினர் நெருக்கடி செய்தார்களா என்பதை தமிழ் இளைஞர்கள் தமது பெற்றோரிடம் உண்மைகளை கேட்டறிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.