13ஆவது அரசியலமைப்பு தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணை இனமோதலுக்கு வழிவகுக்கும் – அதுரெலியே ரத்ன தேரர்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணைகள் நாட்டில் மீண்டும் இனவாத மோதல்களுக்கான வழியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அதற்கு நாங்கள் விருப்பம் இல்லை. அதனால் சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேலைத்திட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சியின் சுயாதீன அணியை சேர்ந்த அதுரெலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி இந்த சபையில் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சுயநினைவுடன் பதிலளிப்பர் என்றே நினைக்கின்றேன். அந்தக் கட்சியினரின் கருத்துக்களுடனே நாங்கள் இருந்தோம். நாங்கள் கோத்தாபய ராஜபக்‌ஷவை ஆட்சிக்கு கொண்டு வர செயற்பட்டவர்கள். தற்போது ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கும் விடயங்களின் பாரதூர நிலைமையை சபையில் உள்ளவர்கள் புரிந்துகொண்டுள்ளார்களா என்று தெரியவில்லை.

நாட்டில் பொதுப் பிரச்சினைகள் உள்ளன. நிதி, கலாசார பிரச்சினைகள் உள்ளன. இவற்றை தீர்ப்பதற்கான இன விவகாரத்தை எடுக்க வேண்டாம். வடக்கிற்கான அதிகாரம், தெற்கிற்கான அதிகாரம், கிழக்கிற்கான அதிகாரம், முஸ்லிம்களுக்கு அதிகாரம் அல்ல. மில்லியன் கணக்கில் முதலீடுகளை மாகாண சபைகளுக்கு கொண்டு வர முடியும் என்று கூறுகின்றார்.

இதன் ஆபத்துக்களை இந்த சபை சிந்திக்க வேண்டும். ஏதேனும் மாகாணத்திற்கென அவ்வாறு முதலீட்டை கொண்டு வர முடியாது. சீனாவை உதாரணமாக கூறியுள்ளீர்கள். அது தனி கட்சி நாடு. அங்குள்ள நிலைமை வேறு. அதனை இங்கே ஒப்பிட முடியாது.

இப்போது மீண்டும் மக்கள் அலை ஏற்பட்டு, மோதல் நிலைமைகளுக்கு நாட்டை கொண்டு செல்ல முடியாது. மாகாண சபை முறைக்கு இப்போதும் நாங்கள் எதிர்ப்பு. ஆனால் மாகாண சபை முறைமையை நீக்குமாறு கோரவில்லை. அருகிலுள்ள இந்தியாவை கோபித்துக்கொண்டு மீண்டும் மோதல்களுக்கு செல்வதற்கு நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய சூழ்நிலை 50 வீதம் உள்ளது. மிகுதி 50 வீதத்தை நாடு முழுவதும் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கண்டாலே தீர்க்க முடியும். இதனால் இந்த பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அனைத்து இனத்தவர்களும் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.

வடக்கிற்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பிரச்சினைகள் தீர்ந்துவிட போகின்றதா? 13 ஆவது திருத்தத்தை வழங்கியதும் யுத்தம் முடிந்துவிடும் என்று நினைத்தனர். ஆனால் யுத்தம் நடைபெற்றது. நாங்கள் மீண்டும் இனவாத போராட்டத்திற்கு செல்ல தயாராக இல்லை. இதனால் நாட்டு மக்களின் கோபத்தை உண்டாக்க வேண்டாம். நீங்கள் செய்யும் இந்த செயற்பாடு மீண்டும் இனவாத மோதல்களுக்கான பாதையையே ஏற்படுத்தும். இதற்கு நாங்கள் விருப்பமில்லை.

சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேலைத்திட்டம் ஒன்றை கொண்டுவாருங்கள்.அதற்காக நாங்கள் வருவோம். முதலில் ஜனநாயகத்துக்காக தேர்தலை நடத்துங்கள் என்றார்.