சீனாவின் மாநிலமாக மாறும் துறைமுக நகரம் – அனுரகுமார திஸாநாயக்க

துறைமுக நகரத்தை சீனாவின் மாநிலமாக மாற்றும் அதிகாரத்தை வழங்கி, ஆணைக்குழு சட்டமூலம் ஒன்றை ஜனாதிபதி உருவாக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு என்ற பெயரில் சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது.

இந்த துறைமுக நகரம் எந்த உள்ளூராட்சி நிறுவனத்தின் ஆளுகைக்கும் உட்படாது. உள்ளூராட்சி நிறுவனங்கள் அந்த பிரதேசத்திற்கு உட்பட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படுகிறது.

எனினும் ஜனாதிபதியால், நியமிக்கப்படும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களே துறைமுக நகரத்தை ஆட்சி செய்வார்கள். அத்துடன் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதனை செய்தாலும் செய்ய தவறினாலும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கோப் உட்பட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இந்த சீன மாநிலத்தை அழைக்க முடியாது. அதேபோல் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரமே துறைமுக நகரில் முதலீடு செய்ய முடியும். துறைமுக நகரில் தொழில் புரியும் நபர்களுக்கு சீனாவின் யுவான் நாணயம் மூலமே சம்பளம் வழங்கப்படும்.

வருமான வரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள முக்கியமான சட்டங்களை துறைமுக நகரில் அமுல்படுத்த முடியாது. இப்படியான பல பாரதூரமான விடயங்கள் இதன் மூலம் நடக்கும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

கொரோனா தொற்றினால் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 600 ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் 04 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 602 ஆக உயர்ந்துள்ளது என இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலியைச் சேர்ந்த 45 வயது ஆண் ஒருவரும் அக்குரஸவில் வசிக்கும் 71 வயது பெண் ஒருவரும் நேற்றைய தினம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாரஹன்பிட்டவைச் சேர்ந்த 74 வயது பெண் நேற்று காலமானார் என்றும் அதே நேரத்தில் மகரகமவைச் சேர்ந்த 76 வயது ஆண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிமோனியா மற்றும் முன்பே பிற நோய்களினால் அவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் பின்னர் கொரோனா தொற்று உறுதியாகி நால்வரும் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எந்த அரசியல்வாதிகளுக்கும் ஹிட்லர் முன்னுதாரணமாக இருக்க முடியாது -ஜேர்மன் தூதுவர்

மில்லியன் கணக்கானவர்களின் இறப்புகளிற்கும் மனித துயரங்களிற்கும் காரணமாகவிளங்கியவர் ஹிட்லர், எந்த அரசியல்வாதிகளுக்கும் முன்னுதாரணமாக இருக்க முடியாது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் ஹோல்ஹெர் சூபேர்ட் தெரிவித்துள்ளார்.

”ஒரு சர்வாதிகாரி போன்று செயற்படுவார் என எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களித்தனர். ஆனால் இன்று அவரது அரசாங்கத்தின் செயற்பாடின்மைக்காக மக்கள் அவரை குற்றம்சாட்டுகின்றனர். ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால் எவரும் குறைகூறமாட்டார்கள். குற்றம் சாட்ட மாட்டர்கள். தற்போதைய நிலைமை மாறாவிட்டால் அது ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும். ஜனாதிபதி அவ்வாறு செயற் பட விரும்பவில்லை”

என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஹிட்லராக மாறும் சாத்தியக் கூறுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள ஜேர்மனியின் தூதுவர், “ஹிட்லர் ஒருவர் காணப்பட்டால் அது இலங்கைக்கு நன்மைபயக்கும் விடயம் என தெரிவிக்கப்படுவதை அறிந்துள்ளேன். இவ்வாறு கருத்து தெரிவிப்பவர்களிற்கு நான் ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன் – மில்லியன் கணக்கான இறப்புகளுக்கும் கற்பனைக்கு அப்பாற்றபட்ட மனித துயரங்களுக்கும் விரக்திக்கும் காரணமாகயிருந்தவர் ஹிட்லர். எனவே எந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர், நிச்சயமாக முன்மாதிரியில்லை” என்று கூறியுள்ளார்.

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே உத்தியோகபூர்வ விஜயம்!

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் அவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது சீன பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், சீனாவின் உயர்மட்ட அதிகாரியொருவர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபர் மாதத்தில் சீனாவின் இராஜதந்திரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் இங்கு வரவுள்ளார்.

இதேவேளை சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சீனாவுக்கு பயணமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Posted in Uncategorized

இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் உயர் நிலைக்கு கொண்டுசெல்வோம் – புத்தாண்டு வாழ்த்தில் சீனா

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் உருவாக்கிய முக்கிய உடன்பாடுகளை வழிகாட்டலாகக் கொண்டு சீன-இலங்கை ஒத்துழைப்புக் கூட்டுறவைத் தொடர்ந்து முன்னெடுத்து, மேலும் உயர் நிலைக்கு செல்ல முயற்சிகளை முன்னெடுப்பதாக இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் கீய் ஷென்ஹோங் தெரிவித்துள்ளார்.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சீன தூதுவரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

2021 ஆம் ஆண்டு சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் , சீனத் தொழில் நிறுவனங்கள் மற்றும் இலங்கை வாழ் சீனர்களின் சார்பில் தனிநபர் பெயரில் இலங்கையின் பல்வேறு இன மக்களுக்கும் சீன-இலங்கை உறவு மீது அக்கறை செலுத்தும் நண்பர்களுக்கும் உளமார்ந்த மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்.

கடந்த ஓராண்டில் சீனா – இலங்கை இடையே பரஸ்பர அரசியல் நம்பிக்கை இடைவிடாமல் மேம்பட்டு வந்துள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இரு முறை தொலைபேசியில் உரையாடினர்.

இதனிடையில் தொலைநோக்குப் பார்வையில் சீன-இலங்கை உறவுக்கு வழிகாட்டி இரு நாட்டு ஒத்துழைப்புகள் குறித்து முக்கிய உடன்பாடுகளை உருவாக்கியுள்ளனர்.

பலதரப்பு அரங்குகளில் சர்வதேசத்தின் நேர்மை மற்றும் நீதியையும் இரு தரப்புகளின் கூட்டு நலன்களையும் பேணிக்காக்கும் வகையில் நாங்கள் பலமுறை ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டுள்ளோம்.

கடந்த ஓராண்டில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து கொவிட்-19 நோய் தொற்றை எதிர்த்து போராடியுள்ளன. இதனிடையில் இலங்கையின் பல்வேறு துறையினர்களும் அளித்த உறுதியான ஆதரவுகளை சீன மக்கள் மறக்க மாட்டார்கள்.

சீனா இலங்கைக்கு பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்ததோடு நிதி ஆதரவுகளையும் வழங்கியுள்ளது. இரு நாட்டு மக்கள் இன்னல்களைக் கூட்டாகச் சமாளித்து வரும் போக்கில் நம் பாரம்பரிய நல்லுறவு மேலும் மேம்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகளில் நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்புகளை இரு நாடுகள் முன்னெடுத்து சென்றுள்ளன. பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்து சக்தியாக விளங்கும் கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் சாதனைகள் தெளிவாகக் காணப்படுகின்றன.

சீன-இலங்கை தண்ணீர் தொழில் நுட்பத்துக்கான கூட்டு ஆய்வு மையம், தேசிய சிறுநீரக நோய் மருத்துவ மனை உள்ளிட்ட மக்கள் வாழ்க்கை நலன் சார்ந்த சில செயல்திட்டங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

சில பயன்பாட்டிற்கு வர உள்ளன. இவை இலங்கையின் பொருளாதாரச் சமூகத்தின் நிலையான வளர்ச்சிக்கும் ‘பி.ஆர்.ஐ’ கட்டுமானம் இலங்கையின் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ எனும் கொள்கையுடன் ஒன்றிணைவதற்கும் வலுவான ஆற்றலை வழங்கும்.

புதியதோர் ஆண்டில் ஒரு புதிய தொடக்கம் இருக்கும். இரு நாட்டுத் தலைவர்கள் உருவாக்கிய முக்கிய உடன்பாடுகளை வழிகாட்டலாகக் கொண்டுஇ சீன-இலங்கை ஒத்துழைப்புக் கூட்டுறவைத் தொடர்ந்து முன்னெடுத்து மேலும் உயர் நிலைக்கு செல்லவும் மேலதிக சாதனைகளைப் பெறவும் இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்கள் பயன் அடையச் செய்யவும் பாடுபடுகின்றோம்.

Posted in Uncategorized

பெரமுன கூட்டிற்குள் வலுக்கும் குழப்பம் – சமரச முயற்சியில் பிரதமர்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் காணப்படும் கருத்துவேறுபாடுகளிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளி;ல் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.

மேதின நிகழ்வுகள் மற்றும் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் காணப்படும் கருத்துவேறுபாடுகளிற்கு தீர்வை காணலாம் என நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார் என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்பிரல் 19ம் திகதி அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்திற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படடுள்ளதாக ஐலண்ட் தெரிவித்துள்ளது.

அரசியல் கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பில் தங்கள் சொந்தக் கருத்துக்களை கொண்டிருப்பது வழமை என தெரிவித்துள்ள பிரதமர் வேறுபட்ட அரசியல் கொள்கைகள் கருத்துக்களால் இந்த நிலை காணப்படும் என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் காணப்படும் அரசியல்கூட்டணிகளை கருத்தில் கொள்ளும்போது இது புதிய விடயமல்ல என தெரிவித்துள்ள பிரதமர் இது எங்கள் கூட்டணியில் உள்கட்சி ஜனநாயகம் காணப்படுவதை வெளிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கூட்டணி கட்சிகள் பல விவகாரங்கள் தொடர்பில் தங்கள் சொந்தக்கருத்துக்களை முன்வைக்கலாம் என தெரிவித்துள்ள பிரதமர் கூட்டணியின் ஐக்கியத்திற்கு ஆபத்து என்பது இதன் அர்த்தமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க மக்களிடம் ஒத்துழைப்புக் கோருகிறார் சரத் வீரசேகர

இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்க நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அடிப்படைவாத கொள்கை எவ்வழியில் தோற்றம் பெற்றாலும் அதற்கு இடமளிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐ.எஸ்.ஐ.எஸ்.அடிப்படைவாதம், வாஹப் வாதம், சல்பி வாதம் என மதம் மற்றும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாதம் காணப்படுகிறது.

உருவ வழிபாட்டுக்கு இவர்கள் முழுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். தங்களின் மத கொள்கையினை பரப்புவதற்கு பிற மதங்களை கொல்வது சரி என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. பாதுகாப்பு தரப்பினராலும், புலனாய்வுபிரிவினராலும் மாத்திரம் அடிப்படைவாதத்தை இல்லாதொழித்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.

அடிப்படைவாதம் தொடர்பில் நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு உரிய தகவல்களை வழங்க வேண்டும்.

தீவிர மத கொள்கையினை உடையவர்கள் ஒரு கட்டத்தில் அடிப்படைவாதிகளாக மாற்றமடைகிறார்கள். இறுதியில் பயங்கரவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இவ்வாறான பின்னணியில் நடத்தப்பட்டது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன்னிலைப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அடிப்படைவாத தாக்குதல்கள் நாட்டில் எதிர்காலத்தில் இடம்பெறாத அளவிற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை குறித்து எதிர்தரப்பினர் மாறுப்பட்ட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறிந்திருந்தால் அதனை பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு குறிப்பிட்டோம்.

ஆனால் எதிர்த்தரப்பினர் இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினையும் அரசியல் தேவைக்காக எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார்.

Posted in Uncategorized

யாழிலுள்ள திரையரங்குகளை மூட நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியாக பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு, திரையரங்குகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 300 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் கூறினார்.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, பாரதிபுரம் மாத்திரம் கொரோனா கண்காணிப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள திரையரங்குகள் அனைத்தும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. மகேசன் குறிப்பிட்டார்.

மேலும் பிரத்தியேக வகுப்புகள், திருமண நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், யாழ். திருநெல்வேலி பொதுச்சந்தை இன்று திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் கடைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டுடன் தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் : யாழில் இராணுவத்தளபதி!

வெளிநாட்டுடன் தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்துக்கே இன்று இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம் என்பதை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஏனைய தமிழ் மக்களுக்கும் அது நன்றாக புரியும்.

ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு பணத்தை அனுப்பி அல்லது வெளிநாட்டு தொடர்பு கொண்டுள்ளவர்கள் இங்கே இராணுவத்துக்கு எதிராக பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இராணுவம் கொடுமையான இராணுவம். இங்கே தேவையற்றது என பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப்படுகின்றது என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் முப்படையினரும் புரிவோம். அத்தோடு இன்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக்கொடுத்ததையிட்டு இலங்கை இராணுவத்தினராகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று நாம் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன்.

அத்தோடு கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன். அத்தோடு தற்போதுள்ள கொரோனா நிலையினை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்து இருந்தேன்.

எதிர்வரும் நாட்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசுக்குள் சூடுபிடிக்கும் முரண்பாடு : அவசரமாக பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி

மாகாண சபை தேர்தலுக்கான உத்தேச சட்டமூல யோசனைகள் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் ஆளும் கூட்டணிக்குள் உள்ள அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்பானது வெள்ளிக்கிழமை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்கு முன்னர் பெசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பொன்றுக்கு செல்லவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்தார்.

தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு முறைமையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

ஆனால் தேர்தல் தொகுதியொன்றில் ஒரே கட்சியிலிருந்து 3 வேட்பாளர்களை நிறுத்துவதற்கு உத்தேச புதிய சட்டமூல வரைபின் யோசனைக்கு ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலர் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மேலும் எல்லை நிர்ணய விவகாரம் குறித்தும் எதிர்ப்பை தெரிவித்தவர்கள் கேள்வியெழுப்பினர்.

அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் பந்துல குணவர்தன உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பலரும் இந்த யோசனைக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளின் முக்கிய பகுதியாகவே புதிய தேர்தல் சட்டமூல விவகாரம் அமைந்துள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்கோன் மாகாண சபை தேர்தலை நடத்துவதனை தேர்தல் முறைமையை மையப்படுத்தி புதிய சட்டமூல வரைபை அமைச்சரவையில் சமர்பித்திருந்த நிலையில் அது குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த சட்ட மூல வரைபில் காணப்பட்ட ஒருசில யோசணைகளுக்கு ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் அமைச்சரவை பத்திரத்தை வெளியிடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டது. இதன் பின்னரே கட்சி தலைவர்களுடனான சந்திப்பு ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார். எவ்வாறாயினும் உத்தேச மாகாண சபை தேர்தல் தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு முறையில் நடாத்துவதற்கான பூர்வாங்கல் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன. இதனடிப்படையில் மாகாண சபைகளுக்கான உறுப்பினர் தெரிவில் 70 வீதம் தொகுவாரி முறைமையிலும் 30 வீதம் விகிதாசார முறைமையிலும் தெரிவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகளை தீர்த்து அடுத்த தேர்தல்களுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் பெசில் ராஜபக்ஷ பொதுஜன கூட்டணியின் அனைத்து கட்சி தலைவர்களையும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் இறுதிக்கட்டமாக ஜனாதிபதியுடன் அனைத்து கட்சி கூட்டம் இடம்பெறும். எனவே தான் இதன் உறுதியான நிலைப்பாடு ஜனாதிபதியுடனான கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் தெரியவரும் என ஆளும் கட்சி உறுப்பினரொருவர் தெரிவித்தார். அத்துடன் குறித்த மாகாண சபை தேர்தலுக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இருவாரத்திற்குள் எல்லை நிர்ணயம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.