விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக கே.மகேசன் நியமனம்

08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய எச்.கே.டி.டபிள்யூ. எம்.என்.பி. ஹபுஹின்ன, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்.மாவட்டச் செயலாளராக பணியாற்றிய கே. மகேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராகவும்,

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றிய எம். யமுனா பெரேரா, மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றிய எம்.எம். நைமுதீன், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராகவும்,

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றிய பி.பி. குணதிலக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளராகப் பணியாற்றிய ஏ.எம்.பி.எம்.பி. அத்தபத்து வணிக, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராவும் விவசாய அமைச்சின் மேலதிகச் செயலாளராகப் பணியாற்றிய ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் யு.டி.சி. ஜயலால், கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க ஆகியோரின் பதவிக் காலம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை முயற்சிக்கு வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் வரவேற்பு

தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒரு விடயத்தை இப்போதாவது உணர்ந்து நிறைவேற்றிக்கொள்ள முன்வந்துள்ளார்கள். இது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஒருங்கிணைவாக மாத்திரம் இல்லாமல் தொடர்ச்சியாக ஓரணியாகச் செயற்படவேண்டும். நிச்சயமாக இந்த நல்லமுயற்சியை முறியடிக்க – குழப்ப தீய சக்திகள் முயலும். அதையும் முறியடித்து இந்த ஒற்றுமை தொடரவேண்டும்.” – இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டு செயற்படும் சிவில் அமைப்புக்கள், மதத் தலைவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் சந்திப்பு நடத்தியிருந்தனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஓரணியாக – கூட்டமைப்பாகப் போட்டியிடுவதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர். இது தொடர்பில் சிவில் மற்றும் மதத் தலைவர்களிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தனர்.

அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அ.விஜயராஜ்,

“தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் கடந்த 13ஆண்டுகளாக பிளவுபட்டு நிற்கின்றார்கள். உள்ளூராட்சித் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுக்கள் மகிழ்ச்சியளிக்கின்றன. இதனை முழுமனதாக வரவேற்கின்றோம்.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிளவின் காரணமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று ஆசனங்கள் சிங்கள அல்லது அரச சார்பு கட்சிகளுக்கு தாரைவார்க்கப்பட்டன. எதிர்காலத்தில் இந்த நிலைமை தோன்றாமலிருக்க ஒன்றிணைவு அவசியம்.

மக்கள் சலுகைகளுக்காக வாக்களிக்கும் கலாசாரமும் இந்த ஒன்றிணைவு ஊடாக முடிவுக்கு வரலாம். தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவு என்பது தமிழ் மக்களுக்கு எப்போது நன்மையே பயக்கும்” – என்றார்.

சிவகுரு ஆதின குருமுதல்வரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரியக்கத்தின் தலைவருமான வேலன் சுவாமிகள்,

“தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் அனைத்து விடயங்களிலும் ஒன்றிணைந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவம் ஒவ்வொரு நிலைப்பாடுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கும். இது எல்லாவற்றையும் கடந்து எங்களுடைய 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுடைய உயிர்த் தியாகங்கள்,  அர்ப்பணிப்புகள் வீண்போகாத வகையில் தமிழ்த் தேசிய பரப்பு ஒன்றாக வேண்டும் என்பதே எங்களுடைய உறுதியான நிலைப்பாடு.

இந்த ஆறு கட்சிகளுக்கு தோன்றியுள்ள எண்ணம் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் வரவேண்டும்” – என்றார்.

திருகோணமலைமறை மாவட்ட ஆயர் அருள்திரு நோயல் இம்மானுவேல்,

“தமிழ்க் கட்சிகள் எமது மக்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை முன்னிறுத்தி ஒரு சரித்திரப்பூர்வமான சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்கள் என்று அறிகின்றேன். இது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

தேர்தல் என்று வரும் போது, கட்சிகள் பிளவுபட்டு நிற்பதால் வரக் கூடிய விளைவுகளை அனைவரும் அறிவர். தொடர்ந்து அதே பிழைகளை நாம் விடாமல் ஒன்றுபட்டு மக்களின் நலனையும் இருப்பையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு ஒற்றுமையாகச் செயற்படுவது காலத்தின் தேவையாகவும் உள்ளது. இது மக்களின் தேவையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

எனவே, தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தமது பேதங்களைக் கடந்து மக்களின் நலனில்  அக்கறையுள்ளவர்களாக செயற்படவேண்டும் என்பதே எமது தனிப்பட்ட விருப்பாகவும் வேண்டுதலாகவும் உள்ளது.

இந்த முயற்சியை முறியடிக்க பல தீய சக்திகள் செயற்படலாம். அவற்றையும் வென்று ஒற்றுமையாகச் செயற்பட வாழ்த்துகின்றேன்” – என்றார்.

நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி,

“இன்றைய காலத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடுவது என்பது மிக முக்கியமானது. இப்போது அரசுடன் பேச்சு இடம்பெறுகின்றது. தமிழ்க் கட்சிகள் ஒவ்வொன்றாகச் செயற்படுவது ஆரோக்கியமல்ல. ஒரே குரலில் பேசும்போதுதான் அது பலமாக இருக்கும்.

தீர்வுக்கான சாத்தியங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் இந்தச் சூழலில் நீங்கள் ஒன்றுபட்டு நின்று செயற்படவேண்டும் என்பதுதான் மக்களினதும் எங்களினதும் மனப்பூர்வமான விருப்பம்” – என்றார்.

தென்கயிலை ஆதீனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார்,

“இந்த ஒற்றுமையை மக்கள் எப்போதோ வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால், கட்சிகள் இதனைப் பேச்சில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நடைமுறையில் செய்து காட்டவில்லை. ஆனால், இப்போது ஒன்றிணைவதற்காக பேசுகின்றார்கள். இது சிறப்பாக நடந்தால் எமது இனத்துக்கு எதிர்காலம் நன்மையாக அமையும். இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” – என்றார்.

தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வே.பத்மதயாளன்,

“நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலே அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றாக இணைந்து பயணிப்பதற்கான முயற்சிகள் தொடர்பில் மகிழ்ச்சி அடைகின்றேன். பல்வேறு வேளைகளிலும் நாங்கள் உடைவுபட்டு பிளவுபட்ட எதனையும் சாதித்துக் கொள்ள முடியாது.

கட்சி ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் மக்களுடைய விடுதலைக்காகவும், பெரும் போர் முடிவடைந்து அதன் பின்னர் பல்வேறு விதமான அழுத்தங்கள் தாக்கங்கள் நிலவு நிலவுகின்ற சூழ்நிலையில் அரசியல் ரீதியான வேறுபாடுகள் களைந்து அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றாகப் பயணிக்கக்கூடிய கருத்துகளை அறிந்து, ஒரு புதிய பேராயராக உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அடுத்த தீர்மானங்களும் தீர்வுகளும் எதிர்காலத்துக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும் என நான் வேண்டுகின்றேன்.

ஏனென்றால் கடந்த காலங்களில் பல கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதோடு மக்களை மையப்படுத்திய அரசியலை நான் வலியுறுத்துகின்றேன்.

மக்கள் பிரதிநிதிகளை மாத்திரம் அல்ல மக்களை மையப்படுத்திய ஒரு தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். இது ஒரு ஆரம்பமே. இனி வர இருக்கின்ற தேர்தல்கள் எல்லாம் மக்களுக்காகவும் எங்களுடைய விடுதலை உணர்வு சார்ந்ததாகவும் மக்கள் மையப்படுத்தப்பட்டதாக இருக்கின்ற போது உண்மையிலேயே அது பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

இந்தச் செயற்பாட்டை நான் உண்மையிலேயே ஆதரிக்கின்றேன். இந்தச் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய ஒவ்வொரு தமிழ் அரசியல் கட்சிகளையும் நான் பாராட்டுகின்றேன். தொடர்ந்து மக்களுடைய வாழ்வியலுக்காக இவர்கள் பாடுபடுவதையிட்டு நான் வாழ்த்துகின்றேன்” – என்றார்.

Posted in Uncategorized

வட கிழக்கிலுள்ள சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது – எல்லே குணவங்ச தேரர்

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அரசியல் பிரச்சினை உள்ளதே தவிர சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது.

நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

கோட்டை – நாகவிகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்படும் பிக்குகளை அடக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்ற அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஒருசில தரப்பினரது முறையற்ற செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த பௌத்த பிக்குகளையும் குறை கூற முடியாது.

புத்தசாசனத்தில் உரிய கோட்பாடுகள் உள்ளன. பௌத்த பிக்குகள் அந்த கோட்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும். பிக்குளை அடக்கும் வகையில் சட்டங்களை இயற்றுவதை அரசாங்கம் கைவிட வேண்டும்.

இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது, உதிரிபாகங்களை இணைத்த வாகனத்தை போல் இயங்கும் இந்த அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட முடியாது.

எனது விகாரையின் மாத மின்கட்டணம் 48 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மின்கட்டணம் அதிகம் என்பதற்காக புத்த பெருமானின் சிலையை இருளிலா வைப்பது.

மின்சார அமைச்சரின் தான்தோன்றித்தனமான பேச்சுக்கள் மக்கள் மத்தியில் வெறுக்கத்தக்கதாக காணப்படுவதுடன்,மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்துகிறது.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. இதற்கு மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது. மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவதை விடுத்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அரசாங்கம் குறிப்பிட்டுக் கொள்கிறது. தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகார பகிர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதை அரசாங்கம் தவிர்த்துக்  கொள்ளவேண்டும் என்றார்.

வியட்நாமில் மீட்கப்பட்ட 151 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303  இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 8ஆம் திகதி மியான் மாரில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு இலங்கையைச் சேர்ந்த 303 பேர் பயணித்த லேடி ஆர் 3 படகில் மியான் மாரில் இருந்து தென் கடற்பரப்பு வுங் டாவ் கடற்கரையில் இருந்து 258 கடல் மையில் கடலில் படகு கடலில் மூழும் நிலையில் அங்கிருந்த ஒருவர் தொலைபேசி ஊடாக இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டதையடுத்து கொழும்பிலுள்ள கடல் சார் ஒருங்கிணைப்பு அவசர முகவரம் வியட்நாம், சிங்கபூர், பிலிப்பையின்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை இலங்கை கடற்படை நாடிய நிலையில் அந்த கடற்பகுதியில் இருந்த ஜப்பானிய கொடியிடப்பட்ட ஹீலியோஸ் லீடர் கப்பல் அவர்களை காப்பாறி வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களை 3 தடுப்பு முகாமில் தடுத்துவைத்திருந்த நிலையில் உலக மீள்குடியேற்ற ஸ்தாபனமான (ஜ.எம்.ஓ) அமைப்பு அனுசரணையுடம் மீண்டு நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த 151 பேரை இன்று செவ்வாய்கிழமை வியட்நாம் நேரப்படி இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கைக்கு செல்லும் விமானத்தில் ஏற்றுவதற்காக முகாமில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நாளை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவர்கள் என முகாமில் இருந்து வருவதற்காக காத்திருக்கும் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிரூட்ட பாகிஸ்தான் முயற்சி – இந்திய ஊடகம்

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயுர் அளிக்கும் நடவடிக்கைகளில் பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவான ஐஎஸ்ஐ ஈடுபட்டுள்ளது என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயுர் அளிக்கும் நடவடிக்கைகளில் பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவு ஈடுபட்டுள்ளது என ரிப்பப்ளிக் வேர்ல்ட் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிக்க முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்தியாவின் தேசிய விசாரணை முகவர் அமைப்பு 9 பேரை கைதுசெய்துள்ள நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த குணசேகரன் புஸ்பராஜா என்ற இருவர் பாக்கிஸ்தானை சேர்ந்த ஆயுத போதைப்பொருள் விற்பனையாளர் ஹாஜி சலீம் என்பவருடன் இணைந்து செயற்பட்டனர் என இந்தியாவின் தேசிய விசாரணை முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் செயற்பட்டுள்ளனர் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்காக போதைப்பொருள் ஆயுதங்களை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என ரிப்பப்ளிக் வேர்ல்ட் தெரிவித்துள்ளது.

இந்திய அமைப்பு இவர்களை கைதுசெய்துள்ள அதேவேளை பிராந்தியத்தில் அமைதி பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக பாக்கிஸ்தான் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயுர் அளிக்க முயல்கின்றது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது – சோபித தேரர்

அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களிடமிருந்து இதுவரையில் 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது. அந்த கட்டணத்தை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என குறிப்பிட்டார்.

மாறாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால், அதற்கெதிராக சட்ட ரீதியாக குரல் கொடுப்பதற்கு மக்கள் சார்பாக செயற்படும் சட்டத்தரணிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் பேரவையினால் திங்கட்கிழமை (டிச. 26) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின்சார சபைக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்கு அமைச்சரிடம் காணப்படும் ஒரேயொரு மாற்று வழி கட்டணத்தை அதிகரிப்பது மாத்திரமேயாகும். இதன் மூலம் மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளை சுமத்துவதே இவர்களின் நோக்கமாகும்.

அண்மையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் தற்போது 10 சதவீதம் மின்சார பாவனையை குறைத்துக் கொண்டு;ள்ளனர். அது மாத்திரமின்றி 16 சதவீதமான தொழிற்துறைகள் இதன் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் எதனைப் பற்றியும் கவனத்தில் கொள்ளாத அமைச்சர் மக்கள் மீது சுமைகளை சுமத்தியேனும் மின்சார சபையின் நஷ்டத்தை ஈடுசெய்யவே முயற்சிக்கின்றார்.

இதுவரையில் 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். இவ்வாறு கட்டணத்தை செலுத்தாமலிருப்பது வறுமையிலுள்ள மக்கள் அல்ல. முன்னாள் அமைச்சர்கள் , தற்போதைய அமைச்சர்கள் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.

அதே போன்று அரசாங்கத்தின் சகாக்களின் நிறுவனங்களும் , அரச நிறுவனங்களும் இதில் உள்ளடங்குகின்றன. இவ்வாறு 39 பில்லியன் ரூபா மின் கட்டணத்தை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காது, மக்களின் சுமைகளை மேலும் அதிகரிக்கும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் நியாயமானதா?

மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி குறித்த வேலைத்திட்டங்கள் எவற்றைப் பற்றியேனும் அமைச்சர் சிந்தித்திருக்கின்றாறா? எரிபொருள் மற்றும் நிலக்கரி என்பவற்றைப் பயன்படுத்தி மாத்திரம் மின் உற்பத்தியில் ஈடுபட எதிர்பார்த்துள்ளமையின் நோக்கம் , தமக்கு கிடைக்கப் பெறும் தரகுப்பணம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியும் பரிந்துரையும் இன்றி அமைச்சரின் தன்னிச்சையான விருப்பத்திற்கு அவ்வாறு மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இடமளிக்க முடியாது. மாறாக அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டால் மக்கள் சார்பாக செயற்படும் சட்டத்தரணிகளை இதற்கு எதிராக குரல் கொடுக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

நாட்டை விட்டு வெளியேறிய கோத்தபாய ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினர்கள்திங்கட்கிழமை (டிச. 26) அதிகாலை 2.55 மணிக்கு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய் நோக்கி சென்றதாகவும் அவர்கள் டுபாயிலிருந்து அமரிக்கா செல்ல உள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர்களோடு மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ, பேரப் பிள்ளையான டி.எச்.ராஜபக்ஷ ஆகியோரும் பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை பிற்போட தேர்தல் ஆணைக்குழுவிடம் மன்றாடும் ரணில் அரசாங்கம் – கிரியெல்ல

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது.

தேர்தலை பிற்போட அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக ரணில் – ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் திங்கட்கிழமை (டிச. 26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்கல் எதிர்வரும் மாதம் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதிமன்றத்தின் மீது முழுமையான நம்பிக்கை எமக்கு உள்ளது. வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று ஆகவே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் 2017 மற்றும் 2028ஆம் ஆண்டு காலப்பகுதியில் தீர்ப்பளித்துள்ளது.

நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி நடத்துவது கட்டாயமாகும். தேர்தலை பிற்போடுவதற்கான உரிய காரணம் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாத (டிசெம்பர்) இறுதியில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடந்த மாதம் தெரிவித்தார்.

ஆனால் தற்போது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வேட்புமனு தாக்கல் தொடர்பான உத்தியோகப்பூர்வமான தீர்மானம் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இம்மாத இறுதி பகுதி,அடுத்தமாதம் முதல் வாரம் வரை பிற்போடப்பட்டுள்ளமைக்கான காரணத்தை இதுவரை ஆணைக்குழு அறிவிக்கவில்லை என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லர் – உதய கம்மன்பில

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலமைப்பு பேரவை ஊடாக அதிகார பகிர்வை அணுகுவார்கள் என்பதனால் கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்தோம்.

கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்கள் நிறைவுப் பெற்றுள்ள நிலையில் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் இன்றும் இழுபறி நிலையில் உள்ளது.உறுப்பினர் நியமனத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கருத்தொற்றுமை கிடையாது.

பெரும்பான்மையினவாதத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், சிறுபான்மையினத்தவர்களுக்கு இடமளிக்க கூடாது என்பதற்காகவும் அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பெயர் பரிந்துரையை பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் எதிர்தரப்பினர் எதிர்த்ததாக கூட்டமைப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

அரசியலமைப்பு பேரவைக்கு சுயாதீன தரப்பினர் ஒருவரின் பெயரை பரிந்துரைக்க நாங்கள் ஆரம்பத்தில் தீர்மானிக்கவில்லை.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வரவு செலவுத் திட்ட மீதான விவாதத்தில் சுட்டிக்காட்டி,அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளை விமர்சித்தார்கள்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டதை தொடர்ந்து கூட்டமைப்பினர் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

தமது நோக்கங்களுக்காக மாத்திரம் செயற்படும் கூட்டமைப்பினரை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களாக நியமிப்பது சாத்தியமற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலமைப்பு பேரவை ஊடாக அதிகார பகிர்வை அணுகுவார்கள் என்ற காரணத்தால் அவர்களின் பெயர் பரிந்துரையை நாங்கள் எதிர்த்தோம்.

இது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடு அல்ல,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களுக்கு உண்மையான அபிவிருத்திகளை வழங்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். அதிகார பகிர்வு அபிவிருத்திக்கான வழியாக அமையாது என்றார்.

என்னை விமர்சித்தவர்கள் ஐ.தே.க வுடன் இணைந்து அனைத்தையும் இழந்துள்ளனர் – மைத்திரிபால

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த போது என் மீது கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அவ்வாறு என்னை விமர்சித்தவர்களே இன்று ஐ.தே.க. தலைவருடன் இணைந்து அனைத்தையும் இழந்து நிற்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் திங்கட்கிழமை (டிச. 26) நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்கள் எதிர்நோக்கியுள்ள துயரம் தொடர்பில் அரசாங்கமும் அறிந்திருக்கிறது. எனவே விரைவில் மக்களுக்கான ஏதேனுமொரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சுதந்திரத்தின் பின்னர் 1977 வரை நாடு இவ்வாறானதொரு நிலைமைக்கு தள்ளப்படும் என்று நான் ஒருபோதும் எண்ணவில்லை.

இதில் தாக்கம் செலுத்தும் 3 பிரதான காரணிகளில் முதலாவது 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பாகும். பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்களில் அரசியல்வாதிகள் தன்னிச்சையாக செயற்படுவதற்கு இதுவே வழியமைத்தது.

தற்போது அமைச்சரவை நியமனமும் இதில் தாக்கம் செலுத்துகிறது. எனவே விஞ்ஞானபூர்வமாக அமைச்சரவை நியமிக்கப்பட்டால் அது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவ்வாறான சூழல் மாற்றமடைய வேண்டுமெனில் தற்போதுள்ள முறைமையில் மாற்றம் அவசியமாகும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் உண்மையானவையாகும். எனினும் இறுதியில் அவர்களின் நற்பெயரை சீரழித்துக் கொண்டனர்.

தலைவரொருவர் இன்றி 3 நாட்கள் நாடு காணப்பட்டது. அந்த 3 நாட்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை தலைவராக தெரிவு செய்திருக்க வேண்டும். எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே அதனை தவறாக வழிநடத்திவிட்டனர்.

நான் ஜனாதிபதியானதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட போது, கட்சியை காட்டிக் கொடுத்துவிட்டதாக தற்போது பொதுஜன பெரமுனவிலுள்ளோர் என்னை விமர்சித்தனர்

. எவ்வாறிருப்பினும் நான் அன்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் பொதுஜன பெரமுன ஜனாதிபதி , பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளையும் இழந்து நிற்கிறது.

அன்று பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் மிகக் குறுகிய காலத்திற்குள் இவ்வாறானதொரு கட்சி ஸ்தாபிக்கப்பட்டு, இத்தகைய வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அதன் தலைவர் பெருமை பேசிக் கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் எதுவும் இல்லாமல் போயுள்ளது என்றார்.