எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது – சபாநாயகர்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது எனவும் அவர்கள் வீண் பேச்சுக்களால் சபையின் பெறுமதியான நேரம் வீணடிக்கப்படுவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய அவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் நடந்து கொள்ளும் விதம் மிகவும் அவமரியாதையாக உள்ளது என தெரிவித்தார்.

இதன்போது எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் மேலும் தெரிவித்த அவர், ”சிலர் எழுந்து நின்று பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் அதை நிறுத்த முயற்சிக்கவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. அணியை நிர்வகிப்பது எனது பொறுப்பு அல்ல, அது உங்களுடையது” என தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு 648,148 டொலர்கள் ஜப்பான் நிதியுதவி

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 6 இலட்சத்து 48 ஆயிரத்து 148 அமெரிக்க டொலர்களை சுரங்க ஆலோசனைக் குழு (MAG) வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம், ஜப்பானின் தூதுவர் Mizukoshi Hideaki மற்றும் சுரங்க ஆலோசனைக் குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் Cristy McLennan ஆகியோருக்கு இடையில் மானிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஜப்பானின் உதவியுடன் சுரங்க ஆலோசனைக் குழுவால் அமுல்படுத்தப்பட்ட 14ஆவது கண்ணிவெடி அகற்றும் திட்டம் இதுவென ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டமானது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மேலதிகமாக 259,464 சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றவுள்ளது.

குறித்த அகழ்வாராய்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பான நிலங்களாக மாற்றுவதுடன், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 7,424 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முந்தைய 13 திட்டங்கள் 15 ஆயிரத்து 831 கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிகுண்டுகளை அகற்றியுள்ளன என்றும் ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்

FAIR MED நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (டிச 1) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அங்கவீனமுற்ற நபர்களுக்கான அமைப்பினை மாவட்ட மட்டத்தில் நிறுவும் வகையில் பிரதேச செயலக மட்டத்தில் இயங்கி வருகின்ற மாற்றுவலுவுள்ளோா் அமைப்பின் அங்கத்தவர்களை உள்ளடக்கி யாப்பின் விளக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் அமைப்பின் பெயரைத்தெரிவு செய்தல், உள்வாங்கப்படும் அங்கத்தவர்கள், பணிகள்,நோக்கம் ,எதிர்பார்ப்புக்கள், செயன்முறைகள்,அமைப்பின் நிர்வாகத் அங்கத்தவர்களை தெரிவு செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், Fairmed நிறுவன உத்தியோகத்தர், மாவட்ட செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

யாழ். மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிராக 3வது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!

கல்லூண்டாயில் யாழ். மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி. தென்மேற்கு பிரதேசசபையினரால் கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டம் நேற்றுமுன்தினம் (30) ஆரம்பமாகியாள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.

நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றையதினம் யாழ். மாநகர சபையினர் வழமையாக குப்பை கொட்டும் கல்லூண்டாய் பகுதிக்கு குப்பை கொட்டுவதற்காக வந்தவேளை, குப்பைகளை ஏற்றிவந்த எட்டு வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதுடன் ஏனைய வாகனங்கள் திரும்பிச் சென்றுள்ளன. ஆனால் இன்றையதினம் இதுவரை எந்த குப்பை ஏற்றும் வாகனங்களும் வரவில்லை.

நேற்றையதினம் யாழ். மாநகர சபையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் குப்பை வண்டிகளை வழிமறித்து போராட்டம் நடாத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்நிலையில் மூன்றாவது நாளாகவும் இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப்போராட்டத்தில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தரப்படுத்தலில் மீண்டும் கீழிறங்கிய இலங்கை

ஃபிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனம், இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணயக் கடன் மதிப்பீட்டை ‘CCC இலிருந்து CC ஆக இரண்டு புள்ளிகளால் தரமிறக்கியுள்ளது.

அதிக வட்டி வீதங்கள் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி நிலைமைகள் காரணமாக, உள்ளூர் நாணயங்களிலான கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை காரணம் காட்டி, நேற்று இந்த தரமிறக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

அரசியல் கட்சிகளிடையே அதிகாரத்திற்கான தாகம் அதிகம் – விக்டர் ஐவன்

இலங்கையின் அரசியல் கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்தே அதிக ஆர்வம் கொணடுள்ளன என மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு பதில் தற்போதைய நெருக்கடியை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக மாற்றும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சீர்திருத்தங்களிற்கான இயக்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊழல் மிகுந்த பொல்லாத அமைப்பு முறையை ஆழமான மாற்றத்திற்கு உட்படுத்தவேண்டும் என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு தேர்தல்கள் எதுவும் இடம்பெறப்போவதில்லை என ராவயவின் ஸ்தாபக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

தேர்தலிற்கான நேரம் என ஒன்று உள்ளது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் நெருக்கடி உள்ளது அதிகாரத்திற்கான தாகம் அதிகமாக உள்ளது எனவும் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு முயல்வதற்கு பதில் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து அதிக கரிசனையை இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் வெளிப்படுத்துகின்றன என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

அமைப்பு முறை மாற்றத்திற்கான தற்போதைய வேண்டுகோள் அரசமைப்பிற்குள் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் – சமந்தா பவர்

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என USAID நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தவேளை சமந்தா பவர் இதனை தெரிவித்துள்ளார் என USAID பேச்சாளர் ஜெசிகா ஜெனிங்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான சீர்திருத்தங்கள் குறித்து ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மீட்சி வளர்ச்சிக்கு யுஎஸ்எயிட் எவ்வாறு உதவலாம் என்பது குறித்து இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சமந்தா பவர் இலங்கையின் மிகவும் நலிந்த நிலையில் உள்ளவர்கள் ஒதுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களின் அவசரதேவைகள் உட்பட இலங்கை எதிர்கொண்டுள்ள குழப்பமான நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்கான யுஎஸ்எயிட்டின் அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களையும் இணைந்து முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தையும் சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.

 

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணக்கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே – கருத்துக்கணிப்பில் மக்கள்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணக்கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே என மக்கள் கருதுவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் சமூகக் குறிகாட்டி அமைப்பு நடத்திய பொருளாதார சீர்திருத்த குறியீடு ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை அவசியமான பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுக்க கூடியவர் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவே என அதிகளவான இலங்கையர்கள் நம்புவது இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 56.6 வீதமானவர்கள் பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுக்க கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 31.4 வீதமானவர்கள் தாங்கள் அவரை நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடியும் நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 45 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். 50 வீதமானவர்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா மீது 42 வீதமானவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ள அதேவேளை சம்பிக்க ரணவக்க மீது 23 வீதமானவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி கருகல்

யாழ். மாவட்டத்தில் காலபோக நெற் பயிர் செய்கையில் பயிர்களில் பொட்டாசியம் பற்றாக்குறையால் நுனி கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி தெரிவித்தார்.

யாழ். மாவட்டதில் சுமார் 13 ஆயிரம் ஹெக்டயர் விஸ்தீரணத்தில் நெற் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நெற்பயிர்கள் பொட்டாசிய குறைவால் நுனி கருகும் நிலை ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, தைகடி, நவாலி, கோப்பாய், கரவெட்டி, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் போன்ற பல பிரதேசங்களிலும் நெற் பயிர்களில் பொட்டாசியக் குறைபாடு அவதானிக்கப்பட்டுள்ளது.

இக் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறியாக முதிர்ச்சி அடைந்த இலைகள் கடும் மஞ்சள் நிறமாவதோடு பொட்டாசிய பற்றாக்குறை அதிகமாகும் போது இலைகள் நுனியில் இருந்து அடிவரை செம் மஞ்சள் நிறத்திலிருந்து மஞ்சள், கபில நிறமாக மாறும்.

அதாவது இலையின் நுனிப்பகுதியில் தலை கீழ் “வி” (V) வடிவில் எரிவுகள் ஆரம்பிக்கும். இலை நுனியில் இருந்து இறக்கத் தொடங்கும்.

இதன் காரணமாக மட்டம் பெயர்தல் பாதிக்கப்படுவதுடன் தாவர வளர்ச்சி குன்றி பயிர்கள் கட்டையாக காணப்படும் நிலையில் நெல் மணிகள் பதர் ஆகும். இதனால் பாரியளவு உற்பத்தியிழப்பு ஏற்படும்.

விவசாயிகள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நெற் செய்கையில் போசணை முகாமைத்துவத்தை அதிகரிக்க முடியும்.

பொட்டாசியம் அடங்கிய இரசாயனப் பசளைகளை சிபாரிசுக்கு அமைய இடல் , பொட்டாசியம் அடங்கிய திரவ பசளையினை சிபாரிசுக்கமைய விசிறல், மேலும் வைக்கோலில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுவதனால் அடுத்த போகத்தில் வைக்கோலினை இட்டு உழவு செய்தல், நெல் அடிக்கட்டைகளை (ஒட்டுக்கள்) அறுவடையின் பின்னர் உழுதுவிடல் கிளிசிரியா இலைகளை வயலில் தூவிவிடல் வேண்டும் இதன் மூலம் நைதரசன் மற்றும் பொட்டாசியம் கிடைக்கக் கூடியதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு பிரிட்டன் இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றது – தாரிக் அஹமட்

இலங்கை விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் பிரபுக்கள் சபை இலங்கை நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளது.

இதன்போது பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு இலங்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளிற்கு பதிலளித்துள்ளார். இவர் இலங்கை விவகாரத்தில் இந்தியா ஆற்றிவரும் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் கவனத்துடன் இருக்கும் என தெரிவித்துள்ள அவர் இலங்கை மனிதாபிமான விவகாரங்களை எதிர்கொள்வதற்கு பிரிட்டன் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.