சர்வதேச பொதுசன வாக்கெடுப்பு மூலமே தீர்வினை அடையலாம் – வேலன் சுவாமிகள் வலியுறுத்தல்

வடக்கு,கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடாத்தப்படுகின்ற பொது சனவாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடையமுடியும் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

50ஆவது உலக தமிழராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட 09 பேரது 50வது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக உள்ள நினைவாலயத்தில் இன்று இடம்பெற்றது. நினைவேந்தலினை செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழமானது தொடர்ச்சியாக இனவழிப்புக்கு உட்பட்டு வருகின்ற காரணத்திலே எங்களது இனத்துக்கு சிங்கள அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை நினைவுகூருவது காலத்தின் தேவையாக காணப்படுகின்றது. அனைவரும் ஒரணியாக திரண்டு நினைவேந்தலினை அனுஷ்டிக்கவேண்டும்.

இளம் சந்ததியினர்களிடம் நினைவேந்தலினை கடத்த வேண்டும். இனவழிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற தருணத்தில் 50 ஆவது ஆண்டிலே நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

01.வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும் தருணத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும்

02.இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும்

03.சர்வதேச நீதிமன்றத்திற்கு இனப் படுகொலையாளிகளை பரப்படுத்தவேண்டும்

04.ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடாத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் அடையமுடியும் என்றார்.

தீர்வுக்காக அரசியல் கட்சிகளை ஒன்றிணையக் கோரி நாவற்குழியில் போராட்டம்

இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவற்குழியில் போராட்டமொன்று இடம்பெற்றது. நாவற்குழி சந்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சம்ஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும்ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இனப் பிரச்சனை தீர்வுக்கு 5 யோசனைகளை முன் வைத்தார் தயான் ஜயதிலக

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைக் காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் சர்வகட்சி மாநாட்டின் ஊடாக வெற்றி பெறுவதாக இருந்தால் அதில் காணப்படுகின்ற தடைகளை முதலில் இனங்கண்டு களைய வேண்டுமென கலாநிதி தயான் ஜயத்திலக வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், குறித்த தடைகளை களைந்து பேச்சுவார்த்தை முயற்சிகள் வெற்றி பெறுவதற்காக யதார்த்தமாக முன்னெடுக்கப்படக்கூடிய ஐந்தம்ச யோசனைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

அந்த யோசனைகளில் முதலாவதாக, 13ஆவது திருத்தச்சட்டம் பற்றிய விவாதம் முடிவுறுத்தப்பட வேண்டும் என்பதோடு, அதற்கமைவாக இறுதி நிலை ஒப்பந்தமானது உச்சநீதிமன்றத்தின் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் (15 ஆண்டுகள் வரை) முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்ற உத்தரவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் ஊடாகவே, இனங்களுக்கு இடையிலான துருவமுனைப்படுத்தலின்றி முழுமையாக நடைமுறைச்சாத்தியமாக்க முடியும்.

இரண்டாவதாக, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் இந்தியாவினையும் உள்ளீர்த்ததானதொரு கிரமமான அணுகுமுறை அவசியமாகின்றது.

மூன்றாவதாக, மாகாண சபைகள் தற்போதுள்ள நிலைமைகளை விடவும் மேலும் வினைத்திறனாக செயற்படுவதற்கு அனைத்து தரப்பினரும் இணங்குவதோடு அதுபற்றிய விவாதத்தங்கள் நீடித்துச் செல்லாது பூச்சியமாக்கப்பட வேண்டும்.

நான்காவதாக, பொறுபுக்கூறல் குறித்து டெஸ்மண்ட் டி சில்வாவின் அறிக்கையை செயற்படுத்த முடியும். அதேநேரம், போர்க்கால பொறுப்புக்கூறல் தொடர்பிலான விடயங்களை படையினருக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்க கூடாது.

ஐந்தாவதாக, பிரஜைகளுக்கு இடையிலான பாகுபாடுகளை எதிர்க்கும் அதேநேரம், சமத்துவமான நிலைமைகளை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்தோடு, இனப்பாகுபாடு, இனவாதம், மற்றும் சகிப்புத்தன்மை குறைவடைதல் ஆகியவற்றை எதிர்த்துப்போராடுவதற்காக டேர்பன் பிரகடனம் மற்றும் ஐ.நாவின் வழி வரைபடத்தினை பின்பற்ற வேண்டும்.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2008-2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்மொழியப்பட்ட செயற்றிட்டத்தினை நடைமுடைப்படுத்துவதோடு உண்மையான சமத்துவத்தினை  அறிவார்ந்த சமூகங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சிங்கள பேரினவாதத்தின் மீளமுடியாத வெற்றியின் அவதாரம் என்று கருதிய கோட்டாபய ராஜபக்ஷ, அரகலவியின் எழுச்சியால் பதவி கவிழ்க்கப்பட்டு வெளியேற்றப்பட்ட படிப்பினை நம்முன்னே உள்ளது. ஆகவே, இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலை தொடர்ச்சியாக வளர்த்துச் செல்லாது அரசியல்தலைவர்கள் இதயசுத்தியுடன் செயற்படுவார்கன் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் ஜனவரி ஆரம்பத்தில் சந்திப்பு – மாவை சேனாதிராஜா

தமிழ்த்தேசிய பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை ஜனவரி இரண்டாம் வாரம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக தமிழ்த்தேசியக் கட்சிகள் எத்தகைய விடையத்தை கலந்துரையாடவுள்ளோம் என்பதை கொழும்பில் ஆராயவுள்ளோம் என இலங்கை தமிழரச்சுக் கட்சி தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

ஐனாதிபதி மற்றும் தமிழ்தேசிய கட்சிகளுடனான சந்திப்பு  தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் பிளவு பட்டு தனித் தனியா கட்சிகள் போட்டியிடுவதன் மூலம் எங்களின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாங்கள் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்காக அரசாங்கத்துடன் போச்சு வார்த்தை ஆரம்பித்திருக்கின்ற நேரத்தில் தேர்தல் எவ்வாறு எத்தகைய முறையில் நடைபெறப்போகின்றது என்பது தெரியாத நிலையில் நாங்கள் விவாதத்திற்கு அனுமதிப்பது ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மத்தியில் பிளவை, குழப்பத்தை ,பலவீனத்தை ஏற்படுத்திவிடும்.

மேலும், ஜனாதிபதியுடன் ஜனவரி மாதம் 10 ,11, 12 ஆம் திகதிகளில் அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவது தொடர்பில் திகதிகள் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தமிழ்த்தேசியம் தொடர்பில் செயற்பட்டுவருகின்ற கட்சிகள் ஒன்றிணைந்து குறித்த விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடிவருகின்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக ஜனவரி 7, 8 ஆம் திகதிகளில் கொழும்பி கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராயவுள்ளோம் என்றார்.

Posted in Uncategorized

தமிழ் தலைமைகளுடன் விரைவில் அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை – திஸ்ஸ விதாரண

அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சாத்தியமற்றதை போன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அரசியல் தீர்வு சாத்தியமற்றது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற சர்வக்கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொண்டேன்.

பாராளுமன்றம் மற்றும் பொது இடங்களில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து கருத்துரைக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

ஐக்கிய நாட்டுக்குள் பிளவுப்படாத வகையில் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட எதிர்பார்த்துள்ளோம்.

இரண்டு வருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஆனால் அவர் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் அவரால் பதவி வகிக்க முடியாமல் போனது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்பதை நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளமை வேடிக்கையாகவுள்ளது. இவரது செயற்பாடுகள் எதிர்காலங்களில் இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்,அதற்கு ஆதரவு வழங்குவோம் என்றார்.

நிரந்தர அரசியல் தீர்வைப் பெறுவதற்கான பொறிமுறை – அனைத்து தமிழ்த் தேசியத் தரப்பினருக்கும் ரெலோ முன்மொழிவு

  1. இந்தியாவின் தலைமையில் மேற்பார்வை
  2. சர்வதேச நாடுகளின் பங்களிப்பு
  3. ஐநாவின் பிரதிநிதித்துவம்
  4. நிபுணர்கள் குழு உருவாக்கம்
  5. புலம்பெயர் உறவுகள் ஒருங்கிணைப்பு
  6. தீர்வு நடைமுறைப் படுத்தும் வரையான செயல்பாடு

 

இந்தியாவின் தலைமையில் மேற்பார்வை

தமிழ் தேசிய அரசியல் தரப்பில் செயல்படும் அனைவரும் சமஸ்டி முறையான அரசியல் தீர்வே இறுதி நிலைப்பாடு என்பதை ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பிடும் அம்சமாக ஒற்றையாட்சி அற்ற, தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைந்து, எமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய முற்று முழுதாக அதிகார பகிர்வோடு கூடிய அலகாக அமைய வேண்டும் என்பதில் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளோம். அதே நேரம் அரசியல் யாப்பிலே ஏற்கனவே உள்ள அதிகாரங்களை முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்தி மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதிலும் ஒத்த நிலைப்பாட்டில் உள்ளோம்.

பிராந்திய வல்லரசாகவும், தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையில் ஆரம்ப கட்டத்தில் இருந்து அக்கறையோடு செயற்பட்டு வந்த அண்டை நாடாகவும், இலங்கை அரசியலிலே செல்வாக்கு செலுத்தக்கூடிய நிலையிலேயே உள்ளமையாலும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இருப்பவர்களாகவும், ஏற்கனவே இலங்கை அரசியல் யாப்பிலே அதிகாரப் பகிர்வுக்கான ஒரு ஏற்பாட்டை செய்தவர்கள் என்ற வகையிலும், தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை தீர்க்கக்கூடிய அரசியல் தீர்வை வலியுறுத்தி வருபவர்களாகவும் இருப்பதனாலே இந்தப் பேச்சுவார்த்தை இந்தியாவின் தலைமையிலான மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாடுகளின் பங்களிப்பு

சர்வதேச நாடுகளான பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி மற்றும் நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து இப்பொறிமுறையில் பங்குபெற்றல் அவசியமானது. ஐநா பொதுச் சபை, பாதுகாப்புச் சபை மற்றும் மனித உரிமை பேரவை என்பவற்றில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களாக, ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அக்கறை கொண்டவர்களாகவும் முன் நின்று செயல்படுபவர்களாகவும், பல சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நமது பங்களிப்பை வழங்கியதோடு அது பற்றிய அனுபவம் உள்ளவர்களாகவும், இலங்கை அரசாங்கத்தின் மீது பொருளாதார ரீதியாகத் தாக்கத்தை செலுத்தக் கூடியவர்களாகவும், மற்றைய நாடுகளையும் தங்கள் பின் அணி திரட்டக் கூடிய வல்லமை கொண்டவர்களாகவும் இருப்பதானாலே இவர்கள் பங்களிப்பு அவசியமானது. குறிப்பாக பிரித்தானியா இலங்கையை காலனித்துவ ஆட்சியில் வைத்திருந்த நாடாகவும் இங்கு நிலவியிருந்த சமஸ்டி ஆட்சி முறையை ஒற்றையாட்சி முறைமைக்கு மாற்றியவர்களும் அதனால் தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறுவதற்கு கடமைப்பட்டவர்களாகவும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐநாவின் பிரதிநிதித்துவம்

ஐநாவின் பிரதிநிதித்துவம் இந்த பொறிமுறையில் அவசியமாகிறது. பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களை தாண்டி தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை என்பன மீள நிகழாமையை உறுதிப்படுத்துவது நிரந்தரமான அரசியல் தீர்வு ஆகும். மேலும் உலக நாடுகளில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளை ஆணைக்குழுக்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் நிபுணர் குழுவின் மூலம் தீர்த்து வைத்த அனுபவமும் வரலாற்றையும் கொண்டது ஐநா.

நிபுணர்கள் குழு உருவாக்கம்

மேற்கூறிய பிராந்திய சர்வதேச வல்லரசுகளின் நிபுணர்களும் ஐநாவின் நிபுணர்களும் தமிழ் மக்கள் தரப்பில் அரசியல் யாப்பு தயாரிப்பு சம்பந்தமான நிபுணர்களும் எல்லைகள் மீள் நிர்ணயம் நிர்வாகம் மற்றும் நிதிய ஆளுமை சம்பந்தமான நிபுணர்களும் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும். இந்த குழுவில் தமிழ் மக்கள் சார்பில் புலம் பெயர் உறவுகளில் இருந்து நிபுணர்களும் இடம் பெறுவர். தவிர ஆலோசனை வழங்கவும் நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவும் உருவாக்கப் பட வேண்டும்.

புலம்பெயர் உறவுகள் ஒருங்கிணைப்பு

தமிழ் தேசியத் தரப்பினரும் புலம்பெயர் உறவுகளும் ஒருமித்து, இந்த நிபுணர் குழுவினருக்கான செயல்பாட்டை உறுதி செய்யவும், ஏதுவான அரசியல் சூழ்நிலைகளை உரிய தரப்புகளுடன் இணைந்து ஏற்படுத்துவதும் முக்கியமானதாகும். இந்த அடிப்படையிலான பங்களிப்புடனும் வழிகாட்டுதலுடனும் அரசியல் தீர்வு எட்டப்படுதல் வேண்டும். அதற்கான தொடர்ச்சியான செயல்பாடும் அவசியமாகும்.

அரசியல் தீர்வானது இந்த நிபுணர் குழுவினர்கள் வழிகாட்டுதலிலே முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்தப்படும் வரை நாங்கள் பரிந்துரைத்த பொறிமுறை செயற்பாட்டில் இருக்க வேண்டும். முற்று முழுதான அதிகார பகிர்வு முறைமையை எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி நடைமுறைப்படுத்துவது, எப்படி முற்றுப் பெற வைப்பது என்பதை இந்தப் பொறிமுறையின் வழிகாட்டுதலுடன் தமிழ் தலைவர்கள் ஒப்பேற்ற வேண்டும்.

தீர்வு நடைமுறைப் படுத்தும் வரையான செயல்பாடு

கடந்த காலங்களில் அதிகாரப் பகிர்வு முறைமை அரசியல் யாப்பிலே உருவாக்கப்பட்டு இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் வெற்றுக் காகிதங்களாகவே அமைந்துள்ளன. அப்படியல்லாமல் நியாயமான அரசியல் தீர்வை எட்டுவதும் அதனூடான அதிகார பகிர்வினை உறுதி செய்து நடைமுறைப் படுத்தும் வரை இந்தப் பொறிமுறையை தொடர்ச்சியான செயல்பாட்டில் வைத்திருப்பது அவசியமானது. தமிழ் மக்களுடைய நிரந்தரமான அரசியல் விடிவை எட்டுவதற்கு அனைத்து தமிழ் தேசிய தரப்பினரும் நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

அரசுடனான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து இறுதி இலக்கை எட்டும் வரைக்குமான விடயங்களை அரசியல் மாற்றங்களைத் தாண்டி தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பொறிமுறையை நாங்கள் முன்மொழிந்திருக்கிறோம். தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றும் அனைத்து தரப்பினரும் இந்தப் பொறிமுறையை மேலும் செழுமைப்படுத்த உங்கள் பங்களிப்பை கோரி நிற்கிறோம். குறை குற்றம் கூறி, ஒருவர் மீது ஒருவர் சேறு வாரி வீசிக் காலத்தை வீணடிக்கும் வெட்டி விவாதங்களை தவித்துக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுகிறோம்.

உங்கள் பரிபூரண ஆதரவுடன் மேற் குறிப்பிட்ட பொறிமுறையின் உருவாக்கம், நடைமுறை, மற்றும் செயற்பாட்டை முன்னெடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். தமிழ் தேசிய இனத்தின் இறுதி இலக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான இந்த அரிய சந்தர்ப்பத்தை ஒருமித்து பயன்படுத்துவோமாக.

குருசுவாமி சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் – சமந்தா பவர்

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என USAID நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தவேளை சமந்தா பவர் இதனை தெரிவித்துள்ளார் என USAID பேச்சாளர் ஜெசிகா ஜெனிங்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான சீர்திருத்தங்கள் குறித்து ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மீட்சி வளர்ச்சிக்கு யுஎஸ்எயிட் எவ்வாறு உதவலாம் என்பது குறித்து இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சமந்தா பவர் இலங்கையின் மிகவும் நலிந்த நிலையில் உள்ளவர்கள் ஒதுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களின் அவசரதேவைகள் உட்பட இலங்கை எதிர்கொண்டுள்ள குழப்பமான நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்கான யுஎஸ்எயிட்டின் அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களையும் இணைந்து முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தையும் சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழர் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு – ஐனாதிபதி

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வு காண முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாகவும், எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்களே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இழுத்தடிப்பு செய்து வந்துள்ளன- ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் அரசியல் தீர்வு விடயமாக இழுத்தடிப்புச் செய்து வந்துள்ளன. பிரேமதாஸவின் காலத்தில்கூட 1989, 1990களில் தமிழீழ விடுதலைப் புலிகளும். சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றியிருந்தார்கள். அந்த நேரத்தில் இறுதியில் பிரேமதாஸவால் கூறப்பட்டது தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒருமித்து ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்தால் அதனைப் பரிசீலிக்கின்றேன் என தெரிவித்திருந்தார். தற்போது அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அவர்களும் அதே கருத்தாக சமஸ்ட்டி தீர்வைத் தருவதற்கு முன்னர் தமிழ் மக்கள் ஒன்றாக வேண்டும் என கூறியிருக்கின்றார்.

என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பெரியகல்லாறு முகத்துவாரம் வெட்டப்படும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(06) இடம்பெற்றது. இதனைப் பார்வையிட வந்திருந்த மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரிடம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வுத்திட்டம் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தமிழ் மக்களுக்குத் தீர்வைக் கொடுப்பதற்கு சிங்களக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும், சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மனமாற்றம் ஏற்படல் வேண்டும், என்பதை நான் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அவர்களுக்குக் கூறிக் கொள்கின்றேன். இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைக்கு இனப்பிரச்சனைதான் முக்கியமான காரணமாகும். அதற்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வைக் கொடுக்க வேண்டும் என சிங்கள மக்கள் மனம்மாறிக் கொள்ள வேண்டும். தமிழர்களும் இந்த நாட்டுப்பிரஜைகள், அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் எனவும் சிங்கள மக்கள் நினைக்க வேண்டும்.

புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருடத்தினுள் இனப்பிரச்சனைக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கப்படும் என புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். அதபோன்று நீதி அமைச்சரும் புதிய அரசியலமைப்பினூடாக அரசியல் தீர்வைக் கொடுப்போம் எனக் கூறியிருக்கின்றார். கடந்த நாடாளுமன்றத்திலே 21வது திருத்த சட்டம் நிறைவேறியிருக்கின்றது. அதற்குக்கூட சில இனவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் ஆளும், எதிர்க்கட்சி, மற்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட 179 வாக்குகளை அளித்து அதனை நிறைவேற்றியிரக்கின்றார்கள். அதபோன்று இனப்பிரச்சனைக்குரிய தீர்வு கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். ஏனெனில் அரசாங்கம் இனைப்பிரச்சனைக்குத் தீர்வு வழங்கினால்தான் சர்வதேசம் தமக்கு அழுத்தங்களைக் கொடுக்காமல் உதவிகளைச் செய்யும் என்ற நிலைப்பாட்டுக்கு அரசாங்கம் வந்துள்ளது. இதற்காக வேண்டி புலம்பெயர் மக்களும் அந்த அந்த நாடுகளிலுள்ள அரசாங்கங்களுக்கு அளுத்தங்களைக் கொடுத்து வருகின்றார்கள்.

பிரித்தானியாவினால் ஐ.நா வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இரண்டு பிரேரணைகளுக்கும் எமது புலம்பெயர் தேசத்து தமிழர்களின் வேண்டுகோளின் பெயரில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இலங்கைக்கு ஒரு இக்கட்டான நிலமையைக் கொண்டு வருகின்றது. இதிலிருந்து இலங்கை விடுபட வேண்டுமானால் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வைக் காணவேண்டியுள்ளது. அதனை இந்த அரசு உணர்ந்திருக்கின்றது. எதிர்காலத்தில் சுபீட்சமான நாடாக இலங்கை திகழ வேண்டுமானால் இனப்பிரச்சனைக்குரிய தீர்வை அரசு முன் வைக்க வேண்டும். அது நிறைவேறினால் இந்நாட்டில் அனைத்து மக்களும் சந்தோசமாக வாழ்வார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.