அதிகாரங்களை பிரதி முதல்வருடன் பகிர மறுக்கும் மணிவண்ணன் – பிரதி முதல்வர் ஈசன் குற்றச்சாட்டு

யாழ் மாநகரசபைக்கென இதுவரையில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூட இது வரையில் பயன்படுத்தப்படவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பிரதித் தலைவரும் யாழ் மாவட்ட துணை முதல்வருமான துரைராசா ஈசன் தொலைக் காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாநகர சபையில் பிரதி முதல்வருக்கு அதிகாரங்களை தற்போதை முதல்வர் மணிவண்ணன் தரவில்லை. வடகிழக்கிலுள்ள ஏனைய சபைகளில் முதல்வர்கள் அதிகாரங்களை பகிர்ந்து பிரதி முதல்வருக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளார்கள். ஆனால் யாழ் மாநகரசபையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை.

யாழ் மாநகரசபையில் உள்ள நான்கு குழுக்களில் ஒரு குழுவில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளவில்லை. 22 ஆசனங்களில் 14 ஆசனங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சொந்தமானது. 50% வீதத்திற்கு மேற்பட்ட ஆசனங்களைக் கொண்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களை அங்கத்துவர்களாகக் கூட இணைத்து கொள்ளவில்லை. முதல்வர் திட்டமிட்ட வகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (ஈ.பி.டி.பி) இணைந்து கூட்டமைப்பை புறக்கணித்து வருகிறார்.

ஒரு வட்டாரத்துக்கு 5 மில்லியன் என 135 மில்லியன் ரூபா யாழ் மாநகரசபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சதத்தை கூட இது வரையில் பயன்படுத்தப்படவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் கூட எம்முடன் இது வரையில் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஆனால் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) மூன்று உறுப்பினர்களை சந்தித்து முதல்வர் மணிவண்ணன் கலந்துரையாடியுள்ளார் என தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத வீட்டுத்திட்டங்கள் அமைச்சர்களால் திறந்து வைப்பு

கடந்த (6) திகதி ஞாயிற்றுகிழமை குவைத் நாட்டின் ஸகாத் ஹவுஸின் (zakath house) நிதியுதவியுடன் ISRC நிறுவனத்தின் அனுசரணையில் எருக்கலம்பிட்டி ஸகாத் பவுண்டேசனின் (zakath foundation ) பூரண ஒத்துழைப்புடனும் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி கிராமத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 200 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்ட செயற்றிட்டத்திற்கு அமைய முதற்கட்டமாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள 75 வீடுகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து உத்தியோகப்பூர்வமாக பயனாளர்களுக்கு கையளித்தனர்.

எனினும், இந்த வீட்டுத்திட்டத்திற்கு உரிய அனுமதிகளோ, பிரதேச சபையின் நிர்மாண நடைமுறைகளோ பின்பற்றப்படவில்லை என்று மன்னார் பிரதேசசபை தெரிவித்துள்ளது.

பல இலட்சம் ரூபா வருமான இழப்பு

அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் யுத்ததினால் இடம் பெயர்ந்த முஸ்லீம் மக்களின் நலன்கருதி மத்தியகிழக்கு நாடுகளின் நிதியுதவியில் அமைக்கப்படும் வீட்டுதிட்டங்களுக்கு உரியவாறு பிரதேச சபையிடமோ சம்மந்தப்பட்ட திணைக்களங்களிடமோ அனுமதி பெறப்படுவதில்லை எனவும் மன்னார் பிரதேச சபையின் கணக்காய்வு ஆவணங்கள் ஊடாக தெரியவந்துள்ளது.

2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்சியாக அனுமதி இன்றி மேற்கொள்ளப்படும் இவ்வீட்டு திட்டங்களால் மன்னார் பிரதேச சபைக்கு பல இலட்சம் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளமை மன்னார் பிரதேச சபையின் வருமானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு தேடலில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உள்நாட்டு யுத்ததின் காரணமாக 1990 ஆண்டு முஸ்லிம் மக்கள் வடபகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தநிலையில் 2009ஆண்டு யுத்தம் நிறைவுற்ற பின்னர் அவர்கள் தங்கள் சொந்த இடங்களில் படிப்படியாக மீளக்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்படுவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்குமாக மத்திய கிழக்கு நாடுகளான குவைத்,கட்டார்,ஓமான்,டுபாய் போன்ற நாடுகள் பல கோடி ரூபா நிதி உதவிகளைச் செய்துவருகின்றன

ஆனாலும் அந்த நிதிகள் சில திட்டமிடப்படாத செயற்பாடுகளினால் பயன்பாடு இன்றியும் அதே நேரம் அதன்மூலம் வருமானத்தை பெற்று கொள்ள வேண்டிய உள்ளூராட்சி மன்றங்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.

இவ்வாறிருக்கையில், குறித்த 200 வீட்டு திட்டத்திற்கென மன்னார் பிரதேச சபையிடம் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்பதுடன் பிரதேச சபையின் வீட்டுத்திட்டங்களுக்கான நிர்மாண நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

சட்டவிரோத கட்டட நிர்மாணங்கள்

இவ்வாறு மன்னார் பிரதேச சபையிடம் உரியவாறு அனுமதி பெறபடாமையினால் மன்னார் பிரதேச சபைக்கு “குவைத் விலேஜ்” வீட்டுத்திட்டத்தினால் கிடைக்க வேண்டிய ஏழுலட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கு அதிகமான வருமானம் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

2019 ஆண்டு மன்னார் பிரதேச சபையின் மாகாண கணக்காய்வு அறிக்கையின் படி மன்னார் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டட நிர்மாணங்கள், கடைகள், வீடுகளின் நிர்மாணங்கள் அதிகரித்துள்ளதாகவும் பிரதேச சபை இவ்வாறான சட்ட விரோத கட்டட நிர்மாணங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதில்லை எனவும் கணக்காய்வு அறிக்கை சுட்டி காட்டியிருந்தது

மேலும் கட்டடங்கள் அமைக்கும் போது அனுமதி பெறுதல் கட்டாயம் எனவும் உபபிரிவிடுகை, நில அளவை வரைபடம் என்பன கட்டாயம் எனவும் 2021 ஆம் ஆண்டு முன்னைய அனுமதி பெறாத திட்டங்கள் தொடர்பாக மன்னார் பிரதேச சபைக்கு உள்ளூராட்சி திணைக்களம் கடிதம் மூலம் அறிவித்திருந்த போதும் முன்னதாக அமைக்கப்பட்ட கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதிலும் புதிதாக கட்டடங்களை அமைக்கும் போது அனுமதி வழங்குவதிலும் உள்ளூராட்சி திணைக்களத்தின் எழுத்து மூல அறிவித்தலை மன்னார் பிரதேச சபை நடைமுறைப்படுத்தாத நிலையே காணப்படுவதாக கூறப்படுகின்றது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக மன்னார் பிரதேச சபையிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சபையின் அனுமதி பெறாமல் கடந்தகாலங்களில் முடிவுறுத்தப்பட்ட 716 வீடுகள் உள்ளடங்கிய வீட்டத்திட்டங்கள் தொடர்பில் சபைக்கு கிடைக்க வேண்டிய அனுமதிகட்டண வருமானம் தொன்னூற்று ஐந்து லட்சத்து இருபத்தென்னாயிரத்து ஐனூற்று பதினொரு ரூபா பணம் கிடைக்கப்பெறாததினால் மன்னார் பிரதேச சபைக்கு வருமானமிழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச சபை தகவல் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தற்போது திறக்கப்பட்டுள்ள “குவைத் விலேஜ்” வீட்டத்திட்டமும் அனுமதி பெறப்படாமையினால் ஒட்டு மொத்தமாக மன்னார் பிரதேச சபைக்கு சட்ட விரோத கட்டட நிர்மாணங்களால் ஒரு கோடியே 2 லட்சத்து முப்பத்து ஆறாயிரத்து ஐனூற்று பதினொரு ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான சட்டவிரோத வீட்டுதிட்ட நிர்மாண நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச சபை வழங்கியுள்ள ஆவணத்தில் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளின் ஊடாக கிடைத்த நிதியை பயன்படுத்தி அமைக்கப்பட்ட வீட்டு திட்டங்களே அதிகம் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக தலைமன்னார் பகுதியில் காணி சீர்திருந்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட றிசாட்சிற்றி 400 வீடுகளினால் பதின்னான்கு லட்சத்து பதினாறாயிரம் ரூபா கிடைக்கபெறவில்லை, மேலும் பெரிய கரிசல் பகுதியில் அரச காணியில் அமைக்கப்பட்ட 100 வீட்டு திட்டம் பெரிய கரிசல் 50 வீட்டு திட்டம் பேசாலை 25 வீட்டு திட்டம் மற்றும் சயிட் சிட்டி வீட்டு திட்டம் போன்றன உரிய அனுமதி இன்றி அமைக்கப்பட்டமையினால் பத்துலட்சத்து நாப்பத்து நாளாயிரத்து முன்னூறு ரூபா இதுவரை பிரதேச சபைக்கு கிடைக்கபெறவில்லை எனவும் கூறப்படுகின்றது.

தாழ்வுபாடு துருக்கி சிட்டி 100 வீடு குடியிருப்பு

இதே போன்று தாழ்வுபாடு துருக்கி சிட்டி 100 வீடுகளை கொண்ட குடியிருப்பும் உரிய அனுமதி இன்றி அமைக்கப்படமையினால் அனுமதி கட்டணம் ஊடாக பெறப்படவேண்டிய பாரிய நிதி பல வருடங்களாக கிடைக்க பெறாமல் உள்ளது. அதே நேரம் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட கட்டிடங்களுக்கான அனுமதியை பெறுவதில் குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்களும் அவ் வீட்டு திட்டங்களில் வசிக்கும் மக்களும் அக்கறை செலுத்தவில்லை என்பது பிரதேச சபையின் ஆண்டு அறிக்கையின் ஊடாக தெளிவாக தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஒரு கட்டட தொகுதியை இலங்கையின் நகரதிட்டமிடல் மற்றும் வீடமைப்பு அமைச்சர்,பிரதேச சபை தவிசாளர், மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலர் இணைந்து திறந்து வைத்துள்ளமை மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்சியாக இவ்வாறு அனுமதி இன்றி வீட்டு திட்டங்கள் அமைக்கப்படுகின்றமையினால் பாரிய அளவு பிரதேச சபைக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கப்பெறாமல் உள்ளது அது மாத்திரம் இல்லாமல் இவ்வாறான தொடர் சட்டவிரோத கட்டுமானங்கள் இடம் பெற்று வரும் போதும் அவற்றை தடுத்து நிறுத்துவதில் மன்னார் பிரதேச சபை அக்கறையீனமாக செயற்படுவதாகவும் 1978 ஆம் ஆண்டு 41 இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் சட்டவிரோத கட்டுமாணங்களுக்கான தண்டப்பணம் பெறுவதற்கும் அல்லது 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் சட்டவிரோத கட்டடங்களை இடித்தழிப்பதற்கும் பிரதேச சபைக்கு அதிகாரம் காணப்படுக்கின்ற போது அவற்றை செய்வதில் பிரதேச சபை கவனம் செலுத்தவில்லை என பிரதேசசபையின் 2018,2019 கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.

இதே போல் மத்திய கிழக்கு நாடு ஒன்றின் நிதி உதவியுடன் மன்னார் பேசாலை பிரதான வீதியில் கரிசல் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டமானது மன்னார் பிரதேச சபையின் உரிய அனுமதி இன்றியும் பிரதேச சபையின் ஆலோசனை எவையும் பெறப்படாமல் அமைக்கப்பட்டதுடன் அதில் தற்போது மனிதர்கள் வசிக்க முடியாத நிலை காணப்படுவதுடன் வெள்ள நீரில் அக்கிராமம் முழுவதும் நீரில் மூழ்கி காணப்படுகின்றது.

இதனால் பெரும் நிதி வீண்விரயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019,2020 ஆண்டு காலப்பகுதியில் முன்னால் வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் கலாச்சார அமைச்சினால் மன்னார் மாவட்டத்தில் 3000 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பகுதி அளவிலும் அத்திவார அளவிலும் வீடுகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பல ஆயிரக்கனக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நிதி எப்போது விடுவிக்கப்படும் என அவர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கும் நிலையில் இவ்வாறு முஸ்லிம் அரச சார்பற்ற நிறுவனங்களின் பாரிய நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை பகுதிகளில் அமைக்கப்பட்ட பல வீட்டு திட்டங்களும் பல வீடுகளும் மக்கள் குடியேராத நிலையில் காணப்படுவதாகவும் சிலருக்கு இரண்டு வீடுகள் காணப்படுவதாகவும் பலர் வீட்டு திட்டங்களுக்கு அருகில் அத்தியாவசிய சேவைகள் எவையும் இன்மையால் புத்தளத்தில் வசிப்பதுடன் இப் பகுதிக்கு நீண்ட விடுமுறை நாட்களில் மாத்திரமே வருவதாகவும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் கதிகாமநாதன் தெரிவிக்கின்றார்.

அனுமதி பெறுவதற்கான நினைவூட்டல் கடிதம்

மேலும் பிரதேச சபை தீர்மானத்தின் ஊடாக இவ்வாறான அனுமதி பெறாத வீட்டு திட்டங்களுக்கான பிரதேச சபையின் அனைத்து விதமான சேவைகளையும் நிறுத்துவதற்கான செயற்பட்டை முன்னெடுக்கவுள்ளதாகவும் அனுமதி பெறுவதற்கான நினைவூட்டல் கடிதங்களை அவ் வீடுகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பிவத்கற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதாவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெரும்பாலும் அமைக்கப்படும் வீட்டு திட்டங்கள் தொடர்பில் மாவட்ட செயலகத்திலோ பிரதேச செயலகங்களிலோ பிரதேச சபைகளிலோ எந்த ஒரு பதிவுகளும், ஆவணங்களும் பெரும்பாலும் காணப்படுவதில்லை என்பது குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.

இவ்வாறான நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு எனும் நல் நோக்கத்துக்கு கிடைக்கும் இவ்வாறான உதவிகளை நாங்கள் எப்போதும் வரவேற்கின்றோம். ஆனாலும் முஸ்லிம் மக்களை காரணம் காட்டி பணத்தை பெற்று தங்களின் அரசியல் இலாபத்திற்காக மக்கள் வசிக்க முடியாத இடங்களிலும் அதே நேரம் பிரதேசபையிடம் உரிய அனுமதி பெறாமல் இவ்வாறு வீடுகளை அமைத்து அதில் சுயலாபமும் அதே நேரம் அதிகார துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதை நாங்கள் ஒரு போதும் ஏற்கபோவதில்லை என மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அந்தோனி தற்குரூஸ் லுஸ்ரின் தெரிவிக்கின்றார்.

மன்னார் மாவட்டத்தில் இவ்வாறு உரிய அனுமதிகள் இன்றி தொழில்நுட்ப ஆலோசனைகள் பெறாது அரச அமைச்சுக்களிலும் அரச கட்சியிலும் அங்கத்துவம் உண்டு என்ற ஒரே காரணத்தினால் அதிகாரத்தை கையில் எடுக்கும் ஒரு சில அரசியல் வாதிகளாலும் அவர்களின் உள்ளூர் நிர்வாகிகளாலும் இடைத்தரகர்களாலும் பொது மக்களின் நன்மைக்கு என நன்கொடையாக வழங்கப்படும் பல இலட்சம் ரூபா வீடுகளில் தற்போது கழுதைகளும் மாடுகளும் அடைக்கலம் புகும் நிலையே காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான பின்னனியிலேயே மீளவும் பிரதேச சபையிடம் உரிய அனுமதி பெறாது மத்திய கிழக்கு முஸ்லீம் நாடான குவைத்தின் நிதியை பெற்று எருக்கலம் பிட்டி பகுதியில் யுத்தத்திற்கு பிற்பாடு மீளக்குடியேறியுள்ள மக்களுக்கென அமைக்கப்பட்ட மேற்படி “குவைத் விலேஜ்” வீட்டுத்திட்டமானது மின் இணைப்பு , நீர் இணைப்பு,வீதி,வடிகால் அமைப்பு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் ஒழுங்கான முறையில் பூரணப்படுத்தப்படாத நிலையில் அவசர அவசரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் உத்தியோக பூர்வமாக அங்குராட்பணம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தந்திரம் செய் – நிலாந்தன்

ரணில்+ ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு தமிழ்க் கட்சிகளோடு பேசப்போவதாக கடந்த வாரம் அறிவித்திருக்கிறது. பன்னாட்டு நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கும் ஐநாவை சமாளிப்பதற்கும் இது போன்ற அறிவிப்புகள் தேவை. அல்லது தமிழ் மக்களின் தலையில் ஏதாவது ஒரு அரைகுறைத் தீர்வை கட்டி விடுவதற்கு இது உகந்த தருணம் என்று ரணில் சிந்திக்கிறாரா?

ஏனெனில் 2015 ஆம் ஆண்டில் ரணில்+மைத்திரி அரசாங்கம் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு புதிய யாப்பை உருவாக்க முற்பட்டது.அந்த யாப்புருவாக்கச் செய்முறைகள் இடைக்கால வரைபுவரை முன்னேறின.ஆனால் இடையே மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் குழப்பினார்.அதனால் யாப்புருவாக்க முயற்சிகள் இடையில் நின்று போயின. அதன்பின் ஆட்சிக்கு வந்த கோத்தாபய ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக கூறிக்கொண்டு ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். இப்பொழுது ரணில் மீண்டும் வந்து விட்டார் அவர் 2018 இல் விட்ட இடத்திலிருந்து ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது அதே பழைய முயற்சிக்கு ஒரு புதிய லேபலை ஒட்டி அதைத் தொடரப் போகிறாரா?அல்லது முற்றிலும் புதிதாக ஒரு முயற்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது பன்னாட்டு நாணய நிதியம் ஐநா போன்றவற்றைத் திசை திருப்புவதற்குத் தமிழ் மக்களையும் பங்காளிகளாக்கும் ஒரு தந்திரமா ? என்ற கேள்விகளை தமக்குள் எழுப்பி தமிழ்த் தரப்பு ரணிலை எதிர் கொள்ள வேண்டும்.

அவ்வாறு தமிழ்த் தரப்பு ரணிலை எதிர்கொள்வதற்காக தங்களுக்கிடையே கலந்து பேசி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று கூறி கடந்த வாரம் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எனைய கட்சித் தலைவர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.அதில் அவர் சமஸ்ரிதான் தமிழ் மக்கள் கேட்கும் தீர்வு என்ற அடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து அந்தக் கோரிக்கையை முன்வைக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அது தொடர்பில் அவர் தனது சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடுகூட உரையாடவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. அவருடைய அழைப்பை, கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகள் பொருட்படுத்தவில்லை. கூட்டமைப்புக்கு வெளியே உள்ள கட்சிகளும் அந்த அழைப்பை பொருட்படுத்தவில்லை.சம்பந்தர் அழைத்தால் மேசைக்கு வரலாம் என்ற நிலைப்பாட்டை ஏனைய கட்சிகள் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால் சுமந்திரனின் அழைப்பு வெற்றி பெறவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை சம்மந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெறவிருந்த அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.அதாவது பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக தமிழ்த்தரப்பு தங்களிடையே பேசவேண்டிய விடயங்கள் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முயற்சி சறுக்கிவிட்டது.

அப்படி ஒரு முயற்சி அவசியமானது. அதை கட்சிகள் தங்களுக்கிடையே தாங்களாக செய்ய வேண்டும். அல்லது குடிமக்கள் சமூகங்கள் அதை நோக்கி கட்சிகளை உந்தித்தள்ள வேண்டும்.ஏனென்றால் தமிழ்த்தரப்பு என்ன கேட்கின்றது என்பதனை ஒரே குரலில் சொன்னால் அதற்குப் பலம் அதிகம் என்று அபிப்பிராயம் பெரும்பாலான வெளிநாட்டுத் தூதரகங்கள் மத்தியில் உண்டு. தமிழ் குடிமக்கள் சமூகங்களை சந்திக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அதை வலியுறுத்திப் பேசுவதுண்டு. தமிழ்மக்கள் மத்தியில் இருக்கும் பிரதான பலவீனமாக அதைச் சுட்டிக்காட்டிப் பேசும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் உண்டு.இப்படிப்பட்டதோர் பின்னணியில் தமிழ்த்தரப்பு தான் எதைக் கேட்கிறது என்பதனை ஒரே குரலில் முன்வைக்க வேண்டிய ஒரு கட்டாயத் தேவை உண்டு.

தமிழ் கட்சிகள் என்ன கேட்கின்றன ?இதுவரையிலும் தமிழ்த் தரப்பு முன்வைத்த தீர்வு முன்மொழிவுகளை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளுமே,எல்லாக் குடிமக்கள் சமூகங்களுமே ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றன.அவை கூட்டாட்சிப் பண்புடைய -சமஸ்ரிப் பண்புடைய தீர்வைத்தான் – கேட்கின்றன.

இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் தமிழ்த்தரப்பு அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்த ஒரு காலகட்டம் எதுவென்றால் கடந்த ஆறு ஆண்டுகாலப் பகுதிதான்.2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 ஐநா தீர்மானத்தின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் நாடாளுமன்றத்தை சாசனப் பேரவையாக மாற்றினார். அதாவது ஒரு புதிய யாப்பை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமன்றம் சாசன பேரவையாக மாற்றப்பட்டது.அதிலிருந்து தொடங்கி கோத்தாபயவின் யாப்புருவாக்கத்திற்கான நிபுணர்குழு வரையிலும் தமிழ்த்தரப்பு தனது முன்மொழிவுகளை முன்வைத்து வருகிறது.இதில் தமிழ்க்கட்சிகள்,தமிழ் குடிமக்கள் சமூகங்கள்,தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்புக்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் அமைப்புகள் போன்ற பல்வேறு தரப்புகளும் கடந்த 6 ஆண்டு கால பகுதிக்குள் அதிகளவு முன்மொழிவுகளை வைத்திருக்கின்றன.

இதில் குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை முன்வைத்தது ஒரு சமஸ்ரி முன்மொழிவு.அதுபோலவே வட மாகாண சபை முன் வைத்ததும் ஒரு சமஸ்ரி முன்மொழிவு.விக்னேஸ்வரனின் கட்சி கொன்பெடரேஷனை கேட்கின்றது.அதுவும் உயர்வான ஒரு சமஸ்ரிதான்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு சமஸ்ரிக் கட்டமைப்பைக் கேட்கிறது.அரசாங்கம் ஒற்றை ஆட்சி முறைமையை மாற்றி கூட்டாட்சிக்குத் தயார் என்று அறிவித்தால் தாம் ரணிலுடன் பேசத்தயார் என்று அக்கட்சி கூறுகிறது.

இதில் கூட்டமைப்பு ரணிலோடு இணைந்து உருவாக்க முயன்ற யாப்பைக் குறித்து விமர்சனங்கள் உண்டு.தமிழ் மக்களின் பங்களிப்போடு முன்னெடுக்கப்படும் முதலாவது யாப்புருவாக்க முயற்சி அதுவென்று சம்பந்தர் சொன்னார். கூட்டமைப்பு அதை சமஸ்ரிப் பண்புடையது என்று கூறியது. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய அமைச்சர்களும் அது ஒற்றை ஆட்சிதான் என்று சொன்னார்கள்.சம்பந்தர் “பிரிக்கப்படமுடியாத, பிளவுபடாத இலங்கைத் தீவு” என்று திரும்பத் திரும்ப ஒரு மந்திரம் போல சொல்லிக் கொண்டிருந்தார்.சமஸ்ரி என்று வெளிப்படையாக லேபலை ஒட்டினால் அதைச் சிங்கள மக்கள் எதிர்பார்கள் என்றும் காரணம் கூறப்பட்டது. அதாவது நடைமுறையில் அந்தத் தீர்வு முயற்சியை அவர்கள் சிங்கள மக்களுக்கு ஒற்றை ஆட்சி என்று வியாக்கியானம் செய்தார்கள். தமிழ் மக்களுக்கு அது கூட்டாட்சி என்று வியாக்கியானம் செய்தார்கள். ஆனால் இப்பொழுது சுமந்திரன் கூறுகிறார் ஒரு சமஸ்ரித் தீர்வை நோக்கி எல்லாக் கட்சிகளும் ஒரு குரலில் பேச வேண்டும் என்று.

அவர் ஏனைய கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறப்பட்டபடி சமஸ்ரிதான் தீர்வு என்பதனை தமிழரசுக்கட்சி உறுதியாகவும் வெளிப்படையாகவும் விட்டுக்கொடுப்பின்றியும் கூறுமாயிருந்தால் ஏனைய கட்சிகளும் அவர்களோடு இணைந்து ஒரே குரலில் அந்தக் கோரிக்கையை முன்வைக்கலாம். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைய மறுத்தால் அதுவும் நல்லதே.அக்கட்சி வெளியில் நின்று கொண்டு ஏனைய கட்சிகளை கண்காணித்துக் கொண்டிருக்கும். எனைய கட்சிகள் தமது கோரிக்கைகளில் இருந்து இறங்கினால் அவற்றை முன்னணி அம்பலப்படுத்தும். எனவே ஒரு கட்சி எதிர் நிலையில் நிற்பதும் நல்லது.

ரணில் இனப்பிரச்சினையை சர்வதேசமயநீக்கம் செய்ய முற்படுகிறார்.வெளியாரின் தலையீடின்றி பிரச்சினையைத் தீர்க்க வருமாறு தமிழர்களை அழைத்திருக்கிறரார்.போரில் வெல்வதற்கு அவர்களுக்கு வெளி நாடுகளின் ஆயுதமும் உதவிகளும் தேவை.ஆனால் சமாதானத்துக்கு அது தேவையில்லையாம்.தமிழ்த் தரப்பு அதை ஏற்கக்கூடாது.இந்தியாவையும் உள்ளடக்கிய ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தைக் கேட்க வேண்டும்.அந்த மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தின்கீழ் சிங்கள-தமிழ்-முஸ்லீம் மக்கள் கூட்டாட்சிக்கான ஓர் அரசியல் உடன்படிக்கையை எழுதுவதற்காகப் பேச வேண்டும்.

மேலும் இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்க முயலும் ஐ.எம்.எப் போன்ற அனைத்துலக அமைப்புக்களிடம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்பதை பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு முன்நிபந்தனையாக வைக்குமாறு நிர்பந்திக்க வேண்டும்

ரணில் இப்பொழுது நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி.தந்திரமும் நிறைவேற்று அதிகாரமும் ஒன்று சேர்ந்திருக்கின்றன.ரணில் ஒரு நரி.அவர் தந்திரங்கள் செய்வார் என்று தமிழ்த்தரப்பு தங்களுக்குள் புறுபுறுத்துக் கொண்டிருக்க முடியாது.தமிழ்மக்கள் தாங்களும் புத்திசாலிகள் என்பதனை நிரூபிக்க வேண்டிய ஆகப்பிந்திய தருணம் இது.

– நிலாந்தன்

அறிவுள்ளவர்கள் நிர்வகித்திருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது – மத்திய வங்கி ஆளுநர்

நாட்டின் பொருளாதாரத்தை அறிவுள்ளவர்கள் நிர்வகித்திருந்தால் நாடு இவ்வாறான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்காது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (19) மாத்தறை ராகுல கல்லூரியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டபோதே இந்த கருத்தினை முன்வைத்திருந்தார்.

மேலும் அவர் “தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் கடினமான தீர்மானங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் கூட, முடிவெடுப்பவர்களும், கொள்கை வகுப்பாளர்களும் சரியான திறன்களைக் கொண்ட சரியான நபர் நீண்ட காலமாக அந்த பதவிகளில் பணியாற்றியிருந்தால், நாம் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டோம்.

தகுதியானவர்களுக்கு சரியான இடம் கிடைத்தால்தான் வளர்ந்த நாடுகள் வளரும்.

இல்லாவிட்டால், தனக்கு உரிய இடம் கிடைக்காத திறமைசாலி, தன் திறமைக்கேற்ப போட்டி போட்டு முன்னேற முடியாத சமூகத்தில் இருந்தால் அது வெற்றியாக கருதமுடியாது.

மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். நாங்கள் மிகவும் கடினமான காலங்களில் இருக்கிறோம். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது எளிதல்ல. இதற்கு கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்”என தெரிவித்திருந்தார்.

தலைமன்னார் இறங்குதுறையை பார்வையிட்டார் ரணில்

புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை குறைப்பதற்காக வடமாகாணத்தில் பாரிய பசுமை ஹைட்ரஜன் திட்டம், மேம்படுத்தப்பட்ட நீர் முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் மீள் காடுவளர்ப்புத் திட்டம் என்பவற்றை ஆரம்பிப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

மன்னார்,தம்பபவனி காற்றாலை மின்உற்பத்தி நிலையத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, இந்நாட்டு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் இதற்குப் பொறுப்பான நிறுவனமான இலங்கை மின்சார சபை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அதிகார சபையுடனான கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டங்கள் மற்றும் ஹைட்ரஜன் திட்டங்களுக்கு விரைவாக மாற வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி, இங்கு வலியுறுத்தினார்.

கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை எதிர்காலத்தில் முன்னெடுக்கவும் மீன்பிடி படகுகளுக்கான பசுமை ஹைட்ரஜன் வலுசக்தி முறையை உடனடியாக அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திலும் வடக்கின் பொருளாதாரத்திலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வட மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடல்நீர் சுத்திகரிக்கும் திட்டம் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. இதன் ஊடாக எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய வரட்சியான காலநிலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் வன வளம் மற்றும் நீர் மூலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

சிறிய நீர்மின் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிறிய நீர்மின் திட்டங்களாக மாற்றக்கூடிய நீர்ப்பாசனக் கால்வாய்களை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை இதன் மூலம் குறைத்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மொரட்டுவை மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் வலுசக்தி துறையில் எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை அடையாளம் காணுதல் மற்றும் ஆராய்ச்சி செய்வது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு கப்பல்கள்,விமானங்கள் இலங்கையினுள் உள்நுழைய புதிய நடைமுறை

வெளிநாட்டு கப்பல்கள் விவகாரத்தை கையாள்வதற்காக அரசாங்கம் புதிய பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளது.

இலங்கைக்குள் நுழைகின்ற கப்பல்கள் விமானங்களிற்கு அனுமதி வழங்குகின்றமை குறித்து தீர்மானிப்பதற்காஅரசாங்கம் அதன் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் புதிய பொறிமுறையை உருவாக்கவுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகளில் பாதுகாப்பு அமைச்சும் சட்டமா அதிபர் திணைக்களமும் ஈடுபட்டுள்ளன.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகரகாரியவசத்தின் மேற்பார்வையின் கீழ் கப்பல்கள் விமானங்களிற்கு அனுமதி வழங்குவது தொடர்பிலான புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய நடைமுறைகளை அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளது.

சீன கப்பலின் விஜயம் தொடர்பில் உருவான இராஜதந்திர நெருக்கடியை தொடர்ந்தே அரசாங்கம் புதிய பொறிமுறையை உருவாக்கியுள்ளது.

வடக்கு ஆளுநரை சந்தித்த ஐ.நா பிரதிநிதிகள்

யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட  ஐ.நாவுக்கான சிறப்பு அதிகாரிகள் நேற்று (19) குழு வட மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன் போது எதிர்கால வடக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன் வடக்கு அபிவிருத்திக்கு தமது தொடர்ச்சியான பங்களிப்பு இருக்கும் என ஐ.நா நிறுவனப் பிரதிநிதிகள் ஆளுநருக்கு தெரிவித்தனர்

குறித்த சந்திப்பில் ஐ.நாவின் ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி பீட்டர் நிக்கோலஸ் டியு, மற்றும் இலங்கைக்கான ஐ.நா  பதிவிட பிரதிநிதி ஹான சிங்கர் மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவன அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கிளைபோசேட் தடை நீக்கம்

ஏழு வருடங்களின் பின்னர் கிளைபோசெட் தடையை நீக்குவது தொடர்பான வர்த்தமானி, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கையொப்பத்துடன் அரசாங்க அச்சகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விவசாயப் பிரதிநிதிகள், விவசாய நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் இந்தத் தடையை நீக்க அமைச்சர் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களை ஒட்ட சுரண்டி, பிழிந்தெடுக்கும் ரணில் அரசு- சோசலிச இளைஞர் சங்கம் குற்றச்சாட்டு

இந்த நாட்டில் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என்பவற்றை விதைத்து சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையகம் என்ற அனைத்து மக்களிடையேயும் முரண்பாடுகளை ஏற்படுத்தி, பிரித்து, வன்முறைகளை தூண்டி, இந்த அரசாங்கம் ஆட்சியினை தக்க வைத்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் சதீஷ் செல்வராஜ் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இளைஞர்களை அணி திரட்டுவதும், அவர்களை தெளிவுபடுத்துவதும் எங்களின் கடப்பாடாக இருக்கின்ற காரணத்தினால், நாங்கள் நாட்டிலுள்ள அனைத்து தமிழ், சிங்கள, முஸ்லீம், மலையகம் என்ற பேதம் இல்லாமல் எல்லா இளைஞர்களும் அணிதிரண்டு நாட்டினை கட்டியெழுப்புவதற்காக ஒரு சக்தியினை வழங்குவதற்காக அணி திரள வேண்டும் என்பதற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கிறோம்.

பொருளாதார ரீதியாக எமது நாடு பாரிய வீழ்ச்சியை கண்டிருக்கிறது. அதீத வட்டி, அதீத வரி, அதேவேளை மக்கள் நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையை இந்த ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

இந்த, நாட்டில் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என்பவற்றை விதைத்து சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையகம் என்ற அனைத்து மக்களிடையேயும் முரண்பாடுகளை ஏற்படுத்தி, பிரித்து, வன்முறைகளை தூண்டி அவர்கள் தங்களுடைய ஆட்சியினை தக்க வைத்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்கள்.

அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தினை பார்ப்போமாக இருந்தால், 3,456 பில்லியன் ரூபா வருமானமாக கொள்ளப்படுகிறது. செலுத்தப்பட வேண்டிய கடன் உட்பட நாட்டினுடைய மொத்த செலவு 7,879 பில்லியன் ரூபா, அதிகமாக காணப்படுகிறது. வருடத்திற்ககான கடன் தேவை 4,979 பில்லியன் ரூபாவுக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. கடன் மொத்த செலவில் கடன் வட்டிக்கு மாத்திரம் 53.53 சதவீதம் பங்கினை இங்கு ஒதுக்க வேண்டிய நிலைமைக்கு இந்த நாடு தள்ளப்பட்டிருக்கிறது.

வருமானத்தை எடுத்துக்கொண்டால் மறைமுக வட்டி, விலையேற்றம் போன்ற வட்டி மூலம் வருமானத்தை திரட்டிக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதே தவிர நாட்டில் விழுந்து கிடக்கும் உற்பத்தி பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையிலும் இந்த அரசாங்கம் ஈடுபடாது. மேலும் நாட்டு மக்களை ஒட்ட சுரண்டி, பிழிந்தெடுக்கிற வேலையில் ரணில் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

கூலித்தொழில் செய்ய முடியாத நிலைக்கு இன்றை தொழிலார்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு விவசாயிகள் மிகவும் பாரியளவில் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து இருக்கிறார்கள். நாட்டினுடைய விவசாய துறை சீரழிந்து வீழ்ந்து இருக்கிறது.

யூரியா, இரசாயனப்பசளை பிரச்சினைகள், இது போன்று மீன்பிடிக்கு பெற்றோல், டீசல் பிரச்சினைகள், இதனை மேம்படுத்துவதற்காக முறையான திட்டமின்மை காரணமாக மீன்பிடி பாரியளவு வீழ்ச்சி கண்டிருக்கிறது. இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகமாக இருக்கிற இந்த நேரத்தில் இதற்கு தீர்வு இல்லாமல் இருக்கிறார்கள். எங்களுடைய கடல் வளம் வெளிநாட்டு கம்பனிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது.

இந்த  இனவாத ஆட்சியாளர்களை விரட்டியடிக்க தேசிய ஒற்றுமையினை முன்னிறுத்தி இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற இந்த வேளையில் எமது நிலம், எமது உரிமை, எமது மக்கள் என இந்த ஊழல்வாதிகளை, இனவாத ஆட்சியாளர்களை விரட்டியடித்து தேசிய ஒற்றுமையினை கட்டியெழுப்புவதன் ஊடாக எல்லா இன மக்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்வதற்கு கட்டியெழுப்பவது நம் எல்லோரினதும் கடமையாகும். – என்றார்.

மாற்றத்தை ஏற்படுத்த பஸில் ஞானி இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச நாடு திரும்பினார் என்பதற்காக நாட்டில் புதிதாக ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர் ஒன்றும் ஞானி கிடையாது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ச ஒன்றரை மாதங்களின் பின்னர் இன்று (20) நாடு திரும்பியமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் பஸில் ராஜபக்சவின் வருகையை ‘மொட்டு’க் கட்சியின் உறுப்பினர்கள் ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

அவர் வருகை தந்தால் நாடு பிரகாசிக்கும் என்றார்கள். இறுதியில் என்ன நடந்தது?

அவர் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். நாடு வங்குரோத்து அடைந்தது.

எனவே, பஸில் ராஜபக்ச நாடு திரும்பியதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர் ஒன்றும் ஞானி கிடையாது.

நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான பொறுப்பை அவர் மீளவும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் நிதி அமைச்சர் என்ற முறையில் அவரது செயற்பாடுகள், நடவடிக்கைகள் என்பன நாடு வங்குரோத்து அடைவதற்கு மற்றுமொரு காரணியாக அமைந்திருந்தது.

இந்த அரசைக் கொண்டு நடத்துபவர் பஸில் ராஜபக்ச என்பது தற்போது தெளிவாகின்றது.

அமைச்சுகளுக்கும் பதவிகளுக்கும் நபர்களைப் பரிந்துரைக்கும் பொறுப்பை அவர் திரைமறைவிலிருந்து செயற்படுத்தி வருகின்றார்.

அரசையும் ஜனாதிபதியையும் இயக்கும் நபராகப் பஸில் ராஜபக்ச திறைமறைவிலிருந்து செயற்பட்டு வருகின்றார்” – என்றார்.