குரங்கம்மை நோய் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவுரை

நாட்டில் முதன் முறையாக குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து கடந்த முதலாம் திகதி நாட்டுக்கு வருகை தந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு குரங்கம்மை நோய்க்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

தோலில் பழுக்கள் மற்றும் சோர்வு உள்ளிட்ட நோய் அறிகுறிகள் ஏற்பட்டமையால் , சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த இளைஞன் தேசிய பாலியல் நோய் சிகிச்சை பிரிவிற்குச் சென்றுள்ளார். இதன் போது இளைஞனுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் , அவரது மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனைகளில் இளைஞன் குரங்கம்மை நோய்க்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் சிகிச்சைகளுக்காக தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு முதலாவது குரங்கம்மை நோயாளர் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் துரிதமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவிக்கையில்,

‘குரங்கம்மை நோய்க்கு உள்ளாகியுள்ள ஒருவருடன் நேரடியாக ஸ்பரிச தொடர்பினை பேணுவதால் மாத்திரமே , இந்நோய் ஏனையோருக்கு பரவும். நோய்க்கு உள்ளானவரின் தோல் பகுதியில் ஏற்படும் பழுக்களிலிருந்து வெளியேறும் திரவம் நோய் பரவுவதற்கு ஏதுவாக அமையும் காரணியாகும். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு காய்ச்சலுடன் உடலில் பழுக்கள் போன்ற அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் துரிதமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்துகின்றோம்.

குறிப்பாக தமது இனப்பெருக்க உறுப்புக்களை அண்மித்த பகுதிகளில் இவ்வாறான பழுக்கள் ஏற்பட்டால் , விரைவில் சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும். இந்நோய்க்கு உள்ளாகுபவர்கள் நோயிலிருந்து முற்றாக குணமடையும் வரை பாலியல் உறவுகளை தவிர்ப்பது அவசியம். எவ்வாறிருப்பினும் இந்நோய் குணப்படுத்தக் கூடியதாகும். இந்நோய் தொடர்பில் நாடு என்ற ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து தொழிநுட்பரீதியில் தீர்மானங்களை எடுக்கப்படும் வரை அநாவசியமாக யாரும் கலவரமடையத் தேவையில்லை.’ என்றார்.

குரங்கம்மை நோய் அறிகுறிகளாக ஆரம்பகட்டத்தில் காய்ச்சலும் , பின்னர் உடற் தோல் பகுதியில் படர் தடிப்புக்கள் என்பன ஏற்படும். இவை இலகுவில் இனங்காணப்படக் கூடிய அறிகுறிகளாகும். இரு பிரதான பிறழ்வுகள் மூலம் இந்த நோய் பரவுகின்றது. குறித்த பிறழ்வுகள் 10 சதவீதம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியவை. இவற்றை பி.சி.ஆர். பரிசோதனை ஊடாக இனங்காண முடியும். அதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏனைய ஆய்வு கூடங்களிலும் காணப்படுகின்றன.

கொவிட் வைரசுடன் ஒப்பிடும் போது , குரங்கு அம்மை வைரஸ் 50 ஆண்டுகள் பழமையானதாகும். எனினும் இது கொவிட் தொற்றை விட குறைவான வேகத்திலேயே பரவக்கூடியது. இதற்கான மருந்துகள் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சின்னம்மை நோய்க்காக பயன்படுத்தப்படும் தடுப்பூசியானது, குரங்கு அம்மை நோய்க்கு எதிராக 85 சதவீதம் சாதகமாக பலன் தரக்கூடியது.

ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளமையின் காரணமாகவே, ஏனைய நாடுகளை பாதுகாப்பு முன்னாயத்தங்களை மேற்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசர சுகாதார நிலைமை கடந்த ஜூலை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடலட்டை பண்ணைகளால் வடக்கு மீனவர்கள் பாதிப்பு

போரின் பின்னர் வடக்கு பகுதிகளில் அரச அனுசரணையுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றபோதிலும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் எந்தளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது குறித்து அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.

விவசாயிகள், மீனவர்கள் உட்பட சிறு கைத்தொழில்களில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் பற்றியும், அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை என்பதே பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அண்மைக்காலமாக வடக்கில் மீனவர்கள் கடலட்டை பண்ணைகளால் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அரச கட்டமைப்புகளில் முறைப்பாடு அளித்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வடக்கு மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வடக்கில் உள்ள கடலட்டை பண்ணைகளால் உள்ளூர் மீனவர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. மாறாக, அந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அங்குள்ள கடலட்டை பண்ணைகளின் பின்னணியில் சீனர்கள் இருப்பதாகவும், அவர்கள் இந்த கடலட்டை பண்ணைகளின் விருத்திக்காக நிதியுதவி செய்வதாகவும் மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அந்த பண்ணைகளில் உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தாமல், வெளியூர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்தப் பண்ணைகள் வழங்கப்படுகின்றன.

அது மாத்திரமன்றி, கடலட்டை பண்ணைகள் அமைந்துள்ள கடல் பகுதிகளுக்கு பிரதேச மீனவர்களை கூட அனுமதிப்பதில்லை எனவும் அப்பகுதி மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அனுமதியற்ற கடலட்டை பண்ணைகளால் அப்பிரதேசத்தில் வாழும் மீனவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், நலிவடைந்துள்ள மீனவர்களுக்கு மென்மேலும் இடையூறுகளை ஏற்படுத்தும் விடயங்களை தடுத்து நிறுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்தீவில் அண்ணளவாக 50 ஏக்கர் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் பவளப்பாறைகள், மீன் இனப்பெருக்கம் செய்யும் இயற்கை வளங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. அப்பிரதேசத்தை விட்டு அங்கு வாழும் மீனவர்களும் வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“இப்பிரதேசத்தில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டால், சிறு மீன்பிடி தொழிலாளர்களாகிய நாம் பிரதேசத்தை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, இப்பிரதேசத்தின் பூர்வீக தொழிலான கடற்றொழிலை மேற்கொண்டு, வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான உரிமையை எமக்கு பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2023 இற்கு முன்னர் காணாமல்போனோர் விசாரணைகள் நிறைவடையும் – நீதியமைச்சர்

அடுத்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிக்கப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் நேற்று நீதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது, அவர் இதனை தெரவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையும், சட்ட முறைமையை புதுப்பிப்பதற்கு பல புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையும் தூதுவர் பாராட்டினார்.

இலங்கையில் ஊழலைத் தடுப்பதற்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அமெரிக்க தூதுவர் பாராட்டினார். இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன், இலங்கையில் புதிய அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காகவும், இது தொடர்பில் அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காகவும் அமைச்சருக்கு தூதுவர் தனது நன்றியை தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாடும் சேவைகள் உள்ளிட்ட நலன்புரி திட்டங்களுக்கும் தூதுவர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதன்போது காணாமல் போனவர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிக்கப்படும் என்று நீதியமைச்சர் அமைச்சர், அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

இலங்கையில் முதலாவது குரங்கு அம்மைத் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த முதலாம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கை வந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள நபர் களனி பிரதேசத்தைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் குறித்த முழுமையான விபரங்களை அடுத்த சில நாட்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன வெளியிடுவார்

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்,குறிப்பிட்ட பகுதியில் சோதனையை மேற்கொண்டவேளை இது உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் பிற்போட முயற்சிக்கும் ரணில் – திஸ்ஸ விதாரண

மாகாண சபை தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டுள்ளதை போன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் பிற்போட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.

திட்டமிட்ட வகையில் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லாவிடின் நீதிமன்றம் செல்வோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தியுள்ளமை அவதானத்திற்குரியது. மாகாண சபைகள் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும். மாகாண சபைகள் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை 2018 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 139 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளுராட்சிமன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பதவி வகித்த பைஸர் முஸ்தப்பா அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து, அவரும் அறிக்கைக்கு எதிராகவே வாக்களித்தார். இதனை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்லை நிர்ணய மீளாய்வு குழுவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமித்தார்.

3 மாத காலத்திற்குள் மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. மாகாண சபை தேர்தலை நடத்தாமலிருக்க நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த சூழ்ச்சி வெற்றிப்பெற்றது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கத்திற்கமைய மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு எவ்வித தடைகளும் கிடையாது.எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

இவரது கருத்திற்கமைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபிக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கிடையாது.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழு தொகுதிவாரி முறைமையிலான தேர்தல் முறைமை சிறந்தது என அறிக்கை சமர்ப்பித்துள்ளது,தேர்தல் முறைமையில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கிடையாது,பிரதமர் தினேஷ் குணவர்தன

கடன்களின் ஸ்திரத்தன்மை குறித்த உத்தரவாதத்தை விரைந்து பெறும் முனைப்பில் இலங்கை

பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மை குறித்த நிதியியல் உத்தரவாதத்தை விரைவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இருதரப்புக்கடன் வழங்குனர்களுக்கு இடையிலான தனித்துவமான ஒருங்கிணைவொன்று ஏற்படுத்தப்படுவதைத் தாம் ஊக்குவிப்பதாகத் தெரிவித்திருக்கும் நிதியமைச்சு, தமக்கிடையிலான (இருதரப்புக்கடன் வழங்குனர்களுக்கு இடையிலான) கலந்துரையாடல்கள் மற்றும் தர்க்கங்களைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கூட்டிணைந்த உத்தரவாதத்தை வழங்குவதற்கு ஏதுவான வாய்ப்பை இருதரப்புக்கடன் வழங்குனர்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கம் என்று விளக்கமளித்திருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்ட நிலையில், அதன்மூலமான நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வது அவசியமாகும்.

அதற்கமைய கடன்களின் ஸ்திரத்தன்மை தொடர்பில் கடன்வழங்குனர்களிடமிருந்து உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்வதும், கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதும் இன்றியமையாதவையாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையகால நுண்பாகப்பொருளாதார நிலைவரம், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் மறுசீரமைப்புக்கள், கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி இலங்கை அதன் வெளியகக் கடன்வழங்குனர்களுக்கு விளக்கமளித்திருந்தது.

அதன்போது காண்பிக்கப்பட்ட சுருக்க விளக்கப்படம், கடன்வழங்குனர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் என்பன நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் இலங்கைக்கு பெருமளவான கடன்களை வழங்கிய முதல் 10 நாடுகளின் பட்டியலில் சீனா, ஜப்பான், இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, கொரியா, ஜேர்மனி, பிரிட்டன், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் காணப்படுவதுடன் மொத்தக்கடன்களில் அவை முறையே (சதவீதங்களில்) 52.0, 19.5, 12.0, 2.9, 2.4, 2.2, 1.4, 1.4, 1.0, 0.9 சதவீதமான கடன்களை வழங்கியிருக்கின்றன.

இக்கணிப்பீட்டின்படி இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு மொத்தமாக 14.1 பில்லியன் டொலர்களை இலங்கை மீளச்செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் கடன்கள் ஸ்திரமற்றநிலையில் காணப்படும் நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்காது என்று வெளியகக்கடன்வழங்குனர்களிடம் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை, எனவே ‘பொதுகடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இருதரப்புக்கடன்வழங்குனர்கள் ஆதரவளிப்பர்’ என்ற நம்பிக்கையை சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கக்கூடியவாறான நிதியியல் உத்தரவாதத்தை வழங்கமுன்வரவேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருக்கின்றது.

அதுமாத்திரமன்றி இத்தகைய நிதியியல் உத்தரவாதத்தை விரைவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு இடையிலான தனித்துவமான ஒருங்கிணைவொன்று ஏற்படுத்தப்படுவதைத் தாம் ஊக்குவிப்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கை, தமக்கிடையிலான (இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு இடையிலான) கலந்துரையாடல்கள் மற்றும் தர்க்கங்களைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கூட்டிணைந்த உத்தரவாதத்தை வழங்குவதற்கு ஏதுவான வாய்ப்பை இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கம் என்றும் விளக்கமளித்திருக்கின்றது.

அத்தோடு இந்த உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமது அனைத்து இருதரப்புக்கடன்வழங்குனர்களுடனும் சர்வதேச நிதிவழங்கல் கட்டமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதாகவும் இலங்கை தெரிவித்திருக்கின்றது.

செயற்பாடுகளின்றி இருக்கும் பொருளாதார மத்திய நிலையங்களை செயற்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை பிரதேச விவசாயிகளும் மக்களும் நன்மையடையும் வகையில் செயற்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தினை இன்று (03.11.2022) மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் தொடர்புபட்ட அதிகாரிகளுடன் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் புதிதாக 200 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள 20 கடைகளைக் கொண்ட பொருளாதார மத்திய நிலையத்திற்கான நிர்வாகத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் உருவாக்குவதுடன், எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிக்கைக்கான வியாபார செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் அதனைத் திறந்து வைப்பதற்கு தீர்மானிக்கப்ட்டுள்ளதுடன், அதற்கு முன்னர் பூரணப்படுத்தப்பட வேண்டிய வேலைகளையும் பூர்த்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர், சந்தையின் தற்போதைய நிலைவரங்கள் நேரடியாக பார்வையிட்டனர்.

அதன்பின்னர், குறித்த சந்தைத் தொகுதியை சிறப்பாக செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கிராமிய பொருளாதார அமைச்சும் கரைச்சி பிரதேச சபையும் இணைந்து அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான, பொறிமுறையை வகுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கரைச்சி பிரதேச சபையின் எதிர்பார்ப்புக்களை ஒருவார காலத்தினுள் சமர்ப்பிப்பதற்கு பிரதேச சபையின் தலைவர் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு வாரங்களில் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை செயற்படுத்துவதற்கான தீர்மானகரமான கூட்டத்தை கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையமானது 40 கடைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் சந்தையின் அமைவிடம், போக்குவரத்து குறைபாடு, பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தையில் மொத்த வியாபாரமும் மேற்கொள்ளப்படுகின்றமை உட்பட பல்வேறு காரணங்களினால், பொருளாதார மத்திய நிலையத்தினால் உரிய பலனை பெறமுடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.  இந்நிலையிலேயே இன்றைய கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் குழப்பகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்-கவிஞர் காசி. ஆனந்தன்

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்த பின் இலங்கை அரசாலும் அதனோடு சேர்ந்தியங்கும் தமிழ் அரசியலாளர்கள் மற்றும் இலங்கை அரச புலனாய்வாளர்களுடன் சேர்ந்தியங்கி வருபவர்களாலும் மக்கள் பல குழப்பகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவரும் உணர்ச்சி கவிஞருமான காசி. ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை,

 

புலிகள் எங்களிடம் சரணடையவில்லை – இலங்கை இராணுவம்

இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தமிழ் அச்சுப் பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் தகவலரியும் ஆணைக் குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு சற்றுமுன்னர் (03) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியது.

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகின்றனர்

பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கத்தின் இரட்டைவேட நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பெரிய அளவில் பிரசாரம் செய்யப்படுகின்றதே தவிர, நடைமுறையில் எதுவும் பயனுள்ளதாகத் தெரியவில்லை. சிங்கள மக்களைத் தவறாக வழிநடத்தி, தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்த நிலைமைகளில் சிறிய மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. இந்த மாற்றத்தின் பின்னரும்கூட சுய அரசியல் இலாப நோக்கிலான கபடத்தனமான அரசியல் செயற்பாடுகளுக்கு முடிவேற்பட்டதாகத் தெரியவில்லை. அந்தப் போக்கில் இருந்து பேரின அரசியல்வாதிகள் தடம் மாறுவதாகவும் தெரியவில்லை.

அரசியல் இலாபத்திற்கும் அதிகாரப் பேராசைக்கும் இனவாத வெறியூட்டி சிங்கள மக்களை உசுப்பேற்றி, அதில் அரசியல் குளிர்காய்ந்த ஆட்சியாளர்களுக்கு அரகலய – போராட்டக்காரர்கள் சரியான பாடம் புகட்டினர். பொருளதார நெருக்கடியினால் எழுந்த பிரச்சினைகளின் தாக்கத்தில் உயிர்ப்பு பெற்ற சிங்கள மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஏமாற்றத்தின் விளைவாக தன்னெழுச்சி பெற்று கொதித்தெழுந்த மக்கள் பேரலைக்கு முகம் கொடுக்க முடியாத ஜனாதிபதியும் பிரதமருமாகிய ராஜபக்ச சகோதரர்கள் பதவிகளைத் துறந்தார்கள். கோத்ட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டே ஓடித்தப்பினார்.

இந்த மக்கள் எழுச்சியின் மூலம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் பிரசார அரசியல் போக்கிலேயே சென்று கொண்டிரக்கின்றது. கடன் தொல்லையில் இருந்தும் வங்குரோத்து நிலையில் இருந்தும் நாட்டை மீட்டெடுக்கப் போவதாக சூளுரைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலில் அகலக் கால்வைத்து முனைப்பாகச் செயற்பட முற்பட்டிருக்கின்றார். அவருடைய அரசியல் அகலக்கால் வெளிப்படுத்துவதைப் போன்று பெரிய வெற்றியை ஈட்டித் தரும் என்று கூறுவதற்கில்லை.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கூட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளை ஆதரித்து வாக்களித்த அதே அரசியல்வாதிகளாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே கூட்டப்பட்ட அதிகாரங்களைக் குறைப்பதற்கும் பின்னர் மீண்டும் அவற்றைக் கூட்டுவதற்கும் வாக்களித்திருந்தார்கள். அதே அரசியல்வாதிகளே ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் வேறு நோக்கங்களுக்காகவும் கொண்டு வரப்பட்ட 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கும் ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள்.

இது, நாட்டை ஆள்கின்ற அரசியல்வாதிகளின் அப்பட்டமான சுய அரசியல் இலாப நோக்கத்தையும் அதிகாரப் பேராசையையும் வெளிப்படுத்துவனவாகவே இருக்கின்றது. மக்களின் நலன்களை மேம்படுத்தவும் நாட்டை முன்னோக்கி முன்னேற்றிச் செல்வதற்குரிய செயற்பாடாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சூட்டோடு சூடாக அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டிருந்த தன்னெழுச்சி பெற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர்களை அதிகாரப் பிடிகொண்டு அடக்கினார். அவரது நீண்டகால ஜனாதிபதி பதவி ஆசையைப் பூர்த்தி செய்வதற்கு கோட்டாபய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருந்த போராட்டமே உந்து சக்தியாக அமைந்திருந்தது. ஆனால் அந்தப் போராட்டத்தை அதிகார பலம் கொண்டு அவர் அடக்கினார். அதன் மூலம் மக்கள் அனைவரும் தனது பிடியின் கீழ் அடங்கி இருக்க வேண்டும் என்ற அதிகார மேலாண்மையை அவர் புலப்படுத்தி இருக்கின்றார்.

பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டிருந்த எரிபொருள் பற்றாக்குறை உணவுப் பொருள் பற்றாக்குறை போன்றவற்றில் அவர் சிறு தளர்வை ஏற்படுத்தி உள்ளார். அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் பொருட்களின் விலையேற்றம், அதிகரிக்கப்பட்டுள்ள வரிச்சுமைகள், கட்டுப்பாடின்றி வீங்கிச் செல்கின்ற பணவீக்கம் என்பவற்றைக் கட்டுப்படுத்துவதில் அவர் இன்னும் வெற்றி காணவில்லை. சிறிய அளவில்கூட முன்னேற்றம் காணவில்லை.

இதற்கிடையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்ற பாரிய முக்கியத்துவம் மிக்க நடவடிக்கைகளிலும் அவர் தீவிர கவனம் செலுத்தியிருப்பதாகக் காட்டியிருக்கின்றார். அரசாங்கத் தரப்பினால் கொண்டு வரப்படுகின்ற – 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் உள்ளிட்ட தீரமானங்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவு கிட்டியுள்ள போதிலும், நாட்டில் அரசியல் உறுதித்தன்மை இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.

கடன் சுமைகளும், கட்டுப்படுத்த முடியாமல் எகிறிச் செல்கின்ற பண வீக்கமும் நாட்டின் பொருளதார உறுதிப்பாட்டைக் குலைத்திருக்கின்றன. பொருளாதார நிலைமையை உறுதி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ள போதிலும், அந்த நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் அரசு நிலைதடுமாறி நிற்கின்றது.

அதேவேளை, மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதிலும், பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றுவதிலும், ஜனநாயத்தை முறையாகப் பேணுவதிலும் அரசாங்கம் இன்னும் முன்னேற்றத்தைக் காட்டவில்லை. இதனால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களினதும் இலங்கைக்கான உதவிகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜனாதிபதி அகலக்கால் வைத்து பல்வேறு விடயங்களில் நாட்டு மக்களினதும், சர்வதேசத்தினதும் நன்மதிப்பைப் பெறுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றியளிக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் (ஓ.எம்.பி), இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பவற்றின் செயற்பாடுகளை முன்னேற்றகரமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவில்லை. அவர்கள் எதிர்பார்க்கின்ற வகையில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை அந்த முயற்சிகள் கொண்டிருக்கவில்லை. இதனால் அவற்றுக்கு எதிரான போராட்டங்களே எதிர்வினையாக கிளர்ந்திருக்கின்றன.

காணாமல் போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றின் நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக காணாமல் போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அமைந்திருக்கின்றது. ஆனால் அந்த ஆணைக்குழு முன்னிலையில் தோன்றி சாட்சியமளிக்க முடியாது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்கள். அந்த ஆணைக்குழுவின் அமர்வுகைளயும் அவர்கள் புறக்கணித்துள்ளார்கள். அத்துடன் இழப்பீடாக 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பையும் அவர்கள் உதாசீனம் செய்துள்ளார்கள். தங்களுக்கு இழப்பீட்டுப் பணம் தேவையில்லை. நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையே அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

அதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதங்களை வவுனியவைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் எரியூட்டியிருக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரியாகிய டொக் ஸொனெக்கிடம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் (ஓ.எம்.பி) இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு வடக்கு கிழக்குப் பிரதேச காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்கள்.

பொறுப்பு கூறும் கடப்பாட்டை நிறைவு செய்வதற்கு உள்ளகப் பொறிமுறையின் கீழ் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக எடுக்கப்படுகின்றது என சர்வதேசத்துக்குக் காண்பிக்கவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கின்றது. ஆனால் அதற்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அரசின் முயற்சிகளை ஆட்டம் காணச் செய்துள்ளது என்றே கூற வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்குத் தீர்வு காண்பதற்காக அதற்கென அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் (ஓ.எம்.பி) செயற்பாடுகளுக்கு அரசு ஊக்கமளித்திருக்கின்றது. ஆனால் அந்த அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுந்தல பாதிக்கப்பட்டவர்களை சீற்றமடையச் செய்யும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர், (இராணுவத்திடம்) சரணடைந்து காணாமல் போனவர்கள் என்று எவரும் கிடையாது எனக் கூறியிருக்கின்றார். அதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என தெரிவித்துள்ள அவர் காணாமல் ஆக்கப்பட்டோரில் பெரும்பாலானவர்களை எல்ரீரீயினரே கடத்திச் சென்றனர் என்றும் ஏனைய குழுக்களும் அவர்களைக் கடத்திச் சென்றிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இராணுவத்திடம் விடுதலைப்புலி உறுப்பினர்களே சரணடைந்தனர். அதுவும் யுத்த முடிவில் பாதுகாப்பளிக்கப்படும். பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசு அளித்த உத்தரவாதத்துக்கமைவாகவே அவர்கள் சரணடைந்தனர். இந்தச் சம்பவம் இரகசியமாக நடைபெறவில்லை. பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் அவர்களின் கண்முன்னால்தான் நடைபெற்றது. குடும்பம் குடும்பமாக வந்தவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்தார்கள். இதற்கு ஏகப்பட்ட சாட்சிகள் இருக்கின்றன.

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்குகளில், வவுனியா மேல் நீதிமன்றத்தின் அறிவித்தலுக்கமைய முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்ப விசாரணைகளில் இது தொடர்பில் கண்கண்ட சாட்சிகள் போதிய அளவில் சாட்சியமளித்திருக்கின்றனர். இத்தகைய ஒரு நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுந்தல சரணடைந்தவர்கள் காணாமல் போனதற்கான சாட்சிகள் இல்லையென கூறியிருப்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற நடவடிக்கையாகும்.

அதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு உள்ளகப் பொறிமுறையின் கீழ் பொறுப்பு கூறுவதற்கு அரசாங்கம் முயற்சிகள் எடுத்துள்ள நிலையில் அவர் வெளியட்டுள்ள கருத்துக்கள் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகின்ற நிலைமையே வெளிப்படுத்தி இருக்கின்றன.

– பி.மாணிக்கவாசகம்