சீனத் தூதுவரின் சர்ச்சைக் கருத்துக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம்

இலங்கைக்கான சீனத் தூதுவர் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்குப் பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். இந்நிலையில் இந்தச் செயற்பாடு மிகவும் வருந்தத்தக்க ஒன்று என்பதுடன் இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (30.8.2022) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் பல்வேறு அநீதிகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக் கூட்டத் தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இதுதொடர்பில் நாங்கள் பல்வேறு சிவில், பொது அமைப்புக்களுடன் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கிறோம் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை, இலங்கைக்கான சீனத் தூதுவரின் கருத்துக்களுக்கு கண்டனம் வெளியிடும் வகையிலான முழுமையான ஊடக அறிக்கையை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜெயராம் றாபின் முழுமையாக வாசித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் அவசர கடனுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கான 200 மில்லியன் டொலர் அவசரகால உதவிக் கடனை வழங்க தீர்மானித்துள்ளது. உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உணவுப் பாதுகாப்பின்மை இலங்கை மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்நிலையில் வழங்கப்படவுள்ள கடனுதவி வருமையானோர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு நேரடி நிதியுதவியை விரிவுபடுத்தும்.

அத்தோடு வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பாலூட்டும் தாய்மாருக்கான உணவுக்கான கொடுப்பனவு என்பவையும் இதனுள் உள்ளடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடைக்கால வரவு செலவுத் திட்டம்: ஜனாதிபதி அறிவித்த முக்கிய விடயங்கள்!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

வரி அதிகரிப்பை மேற்கொண்டு அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வற் வரியை 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி அறிவித்த முக்கிய விடயங்கள்

*பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

*சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்

*அரச சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

*அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும். தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும்

*பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

*சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்.

*அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும். தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும்.

Posted in Uncategorized

ஆர்ப்பாட்டப் பேரணியில் 25 பேர் கைது!

அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.

இதன்போது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இவ்வேளையில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்ட நிலையில், அதன்போது அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 25 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஆற்றல் – உண்மைதானா?

யதீந்திரா
ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில தனிநபர்கள் மீதான தடையை நீக்கியிருக்கின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இது தொடர்பில் நான் முன்னரே குறிப்பிட்டிருக்கின்றேன். இதனை வெறுமனே பொருளாதார நெருக்கடியின் விளைவாக மட்டும் நோக்கினால், அது முழுமையான பார்வையாக இருக்காது. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் சிலர் மீதான தடைநீக்கப்பட்டது. கோட்;டபாய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்ததை தொடர்ந்து மீளவும் தடைவிதிக்கப்பட்டது. இப்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதை தொடர்ந்து மீளவும் தடைநீக்கப்பட்டிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் புலம்பெயர் சமூகத்தினுடான ஊடாட்டங்களை அதிகரிக்க விரும்புகின்றது. அதற்கான கதவுகளை திறந்து வைக்க விரும்புகின்றது. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் இதற்கான பகுதியளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதில் சில வெற்றிகளையும் அரசாங்கம் எட்டியிருந்தது. தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பகுதியினர் கொழும்புடன் உரையாடுவதற்கு இணங்கியிருந்தனர்.

இதன் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை ஒரு புதிய விடயமும் இடம்பெறவுள்ளது. அதாவது புலம்பெயர் அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதனையும் வெறுமனே பொருளாதார நெருக்கடியை கையாளுவதற்கான ஒரு தந்திரோபாயமாக மட்டுமே நோக்குதல் சரியல்ல. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புலம்பெயர் சமூகத்தை ஒரு தரப்பாக அணுக விளைகின்றது. இதில் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு. தமிழ் புலம்பெயர் சமூகம் தாயகத்தின் சமூக பொருளாதார அரசியல் விடயங்களில் உத்தியோகபூர்வமாக தலையீடு செய்வதற்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. ஆனால் மறுபுறம் புலம்பெயர் சமூகத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு பிரத்தியேக இடத்தை வழங்குகின்ற போது, தாயகத்திலுள்ள அரசியல் தரப்புக்களும் புலம்பெயர் அமைப்புக்களும் ஒரு புள்ளியில் சந்தி;க்காதுவிட்டால், அது இறுதியில் தாயக அரசியலை பலவீனப்படுத்தவே பயன்படும். இந்த விடயத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் மிகுந்த நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் அரசாங்கம் ஒரு தந்திரோபாய நகர்வை மேற்கொள்ளுகின்றது. அதனை எதிர்கொள்ள வேண்டுமாயின் எதிர்-தந்திரோபாயங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

முதலாவது தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது முற்றிலும் தமிழ் புலம்பெயர் சமூகத்தை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல. புலம்பெயர் அலுவலகம் என்பது, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை அணுகுதல் என்னும் இலக்கையே கொண்டிருக்கின்றது. சிறி.நரேந்திரமோடி பிரதமரானதைத் தொடர்ந்து, இந்திய புலம்பெயர் சமூகத்துடன் ஊடாடும் நிகழ்சிதிட்டமொன்றை அவர் முன்னெடுத்திருந்தார். கிட்டத்தட்ட இதுவும் அவ்வாறான ஒன்றுதான். ஜரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் இலங்கையர்களை, தங்களது சொந்த நாட்டின் வளர்ச்சியின் மீது ஈடுபாடுள்ளவர்களாக மாற்றுவதும், அவர்கள் இலங்கையின் சமூக பொருளாதார அரசியல் விடயங்களில் ஊடாடுவதற்கான சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதுமே புலம்பெயர் அலுவலகத்தின் பிரதான இலக்காக இருக்கப் போகின்றது. இதில் தமிழர்கள் பிரதானமாக நோக்கப்படுவர் ஏனெனில் ஒப்பீட்டடிப்படையில் தமிழ் புலம்பெயர் சமூகமளவிற்கு சிங்கள சமூகம் வளர்சியடைந்திருக்கவில்லை.

இதனை நமது புலம்பெயர் சமூக அமைப்புக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? வழமைபோல் சாதாரணமாக எதிர்த்துவிட்டு, கடந்து போகும் அணுகுமுறையை கைக் கொள்ளப் போகின்றோமா அல்லது, ஒரு எதிர்-தந்திரோபாய அடிப்படையில் கையாளப் போகின்றோமா? ஒரு விடயத்தை தெளிவாக குறித்துக் கொள்ள வேண்டும். அதாவது, நமது புலம்பெயர் அமைப்புக்கள் இதனை நிராகரிக்கலாம் ஆனால், உடன்பட்டுச் செல்பவர்களுடன் ஊடாடுவதன் மூலம், புலம்பெயர் அலுவலகத்தை இயக்க முடியும். குறிப்பாக ஜரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் சிங்களவர்கள் இதற்கு பெருமளவில் ஆதரவை வழங்குவர். ஆனால் பொதுவாக புலம்பெயர் சமூகத்துடனான ஊடாட்டமாகவே இது காட்சிப்படுத்தப்படும்.

யூத டயஸ்போறா போன்ற நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லாவிட்டாலும் கூட, கருத்தில்கொள்ளத்தக்க ஒரு டயஸ்போறாவாக, புலம்பெயர் ஈழத் தமிழர்கள் திரட்சிபெற்றிருக்கின்றனர். காலப் போக்கில் இந்த நிலையில் மேலும் வளர்சியேற்படலாம். ஆனால் அந்த வளர்ச்சியென்பது தாயகத்தில் வாழும் மக்களுக்கு பயன்படவில்லையாயின், புலம்பெயர் சமூகமென்பது பயனற்ற ஒன்றாகிவிடும் ஆபத்துண்டு. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், ஈழத் தமிழர் புலம்பெயர் சமூகம் பெருமளவு திரட்சிபெற்ற சமூகமாக இருந்தது. தாயகம் தொடர்பான ஈடுபாடும் அர்ப்பணிப்பும் மேலோங்கியிருந்தது. 2009இற்கு பின்னர் இந்த நிலைமை பெருமளவு வீழ்சியடைந்துவிட்டது. பொதுவாக தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் என்று கூறிக்கொண்டாலும் கூட, இதில் பல பிரிவுகளும் பார்வைகளும் உண்டு. இந்த நிலையில்தான், கொழும்பு, புலம்பெயர் சமூகத்தை ஒரு தரப்பாக அணுகும் தந்திரோபாயமொன்றை முன்னெடுக்க முயல்கின்றது.

 

மற்றவர்கள் எங்களை நோக்கி வருகின்ற போது, அதனை எதிர்கொள்ளாமல் விலகிக் கொள்வது ஒன்று. இரண்டு அதனை எதிர்கொண்டு, அவர்கள் திறக்கும் கதவுகளால் சென்று, அதனை கையாள முற்படுவது என்பது இன்னொன்று. ஆனால் இந்த விடயத்தில் விலகிக் கொள்வது புத்திசாதுர்யமான அணுகுமுறையாக இருக்க முடியுமா?

தமிழ் புலம்பெயர் சமூக அமைப்புக்கள் தங்களை ஒரு பலமாக முன்னிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பு நமது கதவை தட்டுகின்றது. இதனை எவ்வாறு கையாளலாம்? இதனை கையாளுவதற்கு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் ஒரு வேலைத்திட்டத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். குறுகிய கால நிபந்தனைகளின் அடிப்படையில் விடயங்களை கையாள முற்படலாம். தாயகத்திலுள்ளவர்களும், புலம்பெயர் அமைப்புக்களும் இணைந்து குறித்த குறுகியகால நிபந்தனைகளை திட்டமிடலாம். புலம்பெயர் அலுவலகம் என்பது அடிப்படையில் மத்திய அரசின் கீழுள்ள கட்டமைப்பாகவே இருக்கும். தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் தமிழர் தாயகத்துடன் நேரடியாக ஊடாடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. மாகாண சபைகள் இயங்குமாக இருந்தால் அதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்கும்.

இவ்வாறானதொரு பின்னணியில் புலம்பெயர் அலுவலகத்துடன் தமிழ் புலம்பெயர் சமூகம் எவ்வாறு இணைந்து செயற்பட முடியும்? இந்த இடத்தில் தமிழ் புலம்பெயர் சமூகம் ஒரு நிபந்தனையை முன்வைக்க முடியும். அதாவது, வடக்கு கிழக்கிலுள்ள சுயாதீன அமைப்புக்களுடன் இணைந்து தடையற்ற வகையில் செயற்படுவதற்கான சந்தர்பங்களை புலம்பெயர் அலுவலகம் ஏற்டுபடுத்த வேண்டும். தேசிய பாதுகாப்பு கருதி சில கண்காணிப்புக்கள் (மறைமுகமாக) இருந்தாலும் கூட, தமிழ் புலம்பெயர் சமூகத்தின் தாயக செயற்பாடுகளில் எவ்வித இடையூறுகளும் இருக்கக் கூடாது. இதற்கான உத்தரவாதங்களை புலம்பெயர் அலுவலகம் உறுதிப்படுத்த வேண்டும். இப்படியான கோரிக்கைகளை முன்வைக்கலாம்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்று சாத்தியப்படும் வரையில், தமிழ் புலம்பெயர் சமூகம் மத்திய அரசின் அங்கங்களோடு இணைந்து செயற்பட முடியாதென்னும் நிபந்தனையை முன்வைக்கலாம். இதனை நிராகரிப்பதற்கான வாய்ப்புக்கள் தற்போதைய சூழலில் இல்லை. ஒரேயடியாக நிராகரித்துவிட்டுச் செல்வதற்கு பதிலாக, இவ்வாறான அணுகுமுறையின் மூலம் ஊடாடுவது, ஒரு தந்திரோபாய அணுகுமுறையாக இருக்கின்ற அதே வேளை, புலம்பெயர்; சமூகம், தாயகத்திலுள்ள அமைப்புக்களுடன் இணைந்து, இயங்குவதற்கான வாய்ப்பும் உருவாகும் ஒரு வேளை ஒரு கட்டத்தில் இது தோல்வியுற்றாலும் கூட, தமிழ் புலம்பெயர் சமூகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே செய்யப்பட்ட பணிகளால் தாயக மக்கள் நன்மடைந்திருப்பர்.

குறுகிய கால நிபந்தனைகளை அரசாங்கம் எவ்வாறு நிறைவேற்றுகின்றது என்பதற்கு அமைவாக, தமிழ் புலம்பெயர் சமூகம் அதன் ஊடாட்டத்தை அதிகரிக்கலாம். தமிழ் புலம்பெயர் சமூகம் ஒரு பலமாக திரட்சிபெற்றிருக்கின்றது என்பதை நிரூபிப்பதற்கான தருணமிது. ஆனால் இதனை போதிய தயாரிப்புடனும் தந்திரோபாயத்துடனும் அணுக வேண்டும். உணர்சிவசப்பட்டும் அணுகக் கூடாது அதே வேளை, வழமையான எதிர்பரசியல் அணுகுமுறையின் ஊடாகவும் அணுகக் கூடாது. அத்துடன் போதிய வெளிப்படைத் தன்மையில்லாமல், ஒவ்வொருவரும் தங்களுக்கிருக்கும் தொடர்புகளின் வழியாகவும் அணுகக் கூடாது. இது தொடர்பில் விரிவான கலந்தாலோசனைகள் அவசியம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் இனப்பாகுபாடு இடம்பெறுவது உகந்ததல்ல – பா.உ ஜனா

2002ம் ஆண்டு உருவாக்கப்படட சாய்ந்தமருது பிரதேச செயலகம் 2006ம் ஆண்டு முழுமையான பிரதேச செயலகமாக இயங்கிக் முடியுமாயின் 33 வருடங்களாக இயங்கும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் மாத்திரம் ஏன் தரமுயர்த்தப்பட முடியாது. இனப்பாகுபாட்டுடன் செயற்பாடுகள் நடைபெறுவது இந்த நாட்டிற்கு உகந்ததல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜ)னா தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய விவாதத்திலே எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலே 20 நிமிடங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒதுக்கப்பட்டிருந்தும். எமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பேசிய பிற்பாடு என்னுடைய பேச்சுக்காக நான் காத்திருக்கும் போது எனது பெயர் அறிவிக்கப்படதமையால் நான் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியிடம் வாக்குவாதப் பட வேண்டியதாக இருந்தது. ஏதிர்க்கட்சிகளின் கொறடா அவர்கள் எங்களது அனுமதி இல்லாமல் என்னுடைய பெயரை எவ்வாறு நீக்கலாம் எங்களது நேரத்தை அவர்கள் எவ்வாறு எடுக்கலாம். இது ஒரு பாராளுமன்ற ஜனநாய முறைக்கு எதிரானது என்பதை எதிர்க்கட்சிகளின் கொறடாவான லக்ஸஸ்மன் கிரியல்ல அவர்களுக்கு எனது கண்டனமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மின்சாரக் கட்டண அதிகிப்பு சம்மந்தாமான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மிகவும் துடிப்பானவர் மிகவும் நன்றாக இந்த அமைச்சைச் செயற்படுத்துவதாக அறியக் கிடைத்தது. அந்த வகையில் கியூ.ஆர் முறையைக் கொண்டுவந்து எரிபொருள் மாபியாக்களை ஒடுக்கியிருக்கின்றார். வரிசை நிலைமை சற்றுக் குறைந்திருந்தாலும் இம்முறையிலே சில குறைகள் காணப்படுகின்றன. இந்த முறைமை மூலம் தொழில் ரீதியாக வாடகை வாகனம் ஓட்டுபவர்களுக்கான எரிபொருள் குறைவாகக் கிடைப்பதன் காரணமாக கூடிய பணத்தைக் கொடுத்து மக்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. இது தொடர்பில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு என்பது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம் காரணமாக ஏற்பட்டிருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டாலும் 75 வீதமிருந்து 275 வீதம் வரை கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மக்கள் தற்போது பொருளதார நெருக்கடியில் மிகவும் கஸ்டமான நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தனிமனித வருமானம் எந்தவகையிலும் அதிகரிக்கப்படவில்லை. அரச உத்தியோகத்தர்கள் கூட தங்கள் கடமைகளை மேற்கொள்வதற்கான எரிபொருளுக்கே அவர்களது வேதனம் போதாமல் இருக்கின்றது. இதனைக் கருத்திற்கொண்டு இந்த அரசு தனிமனித வருமானத்தையும் கூட்டுவதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும்.

அத்துடன் உணவில்லாமலும் இருந்து விடலாம் ஆனால் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது. குடிநீருக்கான கட்டணமும் 75 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவைகளெல்லாம் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போன்று நொந்து போயிருக்கும் எமது மக்களின் தோள்களிலே மேலும் மேலும் சுமைகளை ஏற்றுவதாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாது மண்ணெண்ணையின் விலை 253 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. மண்ணெண்ணையை நம்பி விவசாயம் மீன்பிடி தொழில் செய்வோர் மிகவும் வாழ்வாதாரம் இழந்த நிலையில் கஸ்டப்படுகிறார்கள். எனவே இந்த நாட்டிலே விவசாயம் மீன்பிடியைத் தொழிலாகச் செய்பவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு மண்ணெண்ணையின் விலையைக் குறைக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு மானியம் வழங்குவதற்கு முன்வர வேண்டும். ஏனெனில் பெற்றோல் டீசலை விட மண்ணெண்ணைய் என்பது இந்த நாட்டின் அடிமட்ட மக்களுக்கு தேவையான விடயமாக இருக்கின்றது.

யுத்தம் முடிந்து தற்போது பொருளாதார ரீதியில் கஸ்டப்படும் எமது தமிழ் மக்கள் குறிப்பாக கிழக்குத் தமிழ் மக்கள் தமிழ் பேசும் இனமெனக் கூறப்படும் இன்னுமொரு இனத்தினால் அரசியல் ரீதியில் அடக்க நினைக்கும் நிலைமைகள் காணப்படுகின்றது. இன்று கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயம் ஒரு பேசு பொருளாகக் காணப்படுகின்றது.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவானது 1989ம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாகத் தாபிக்கப்பட்டு பின்னர் 1993ம் ஆண்டு அமைச்சரவை அனுமதியுடன் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டது. இருந்தபோதிலும் பல்வேறு அரசியற் தலையீடுகள் காரணமாக அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படாமல் மறுக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த முப்பது வருடத்திற்கு மேலாகப் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு முப்பது வருடங்களுக்கு மேலாகச் செயற்பட்டு வருகின்ற கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து தற்போது அகற்றப்பட்டு அதன் 29 கிராம சேவகர் பிரிவுகளும் கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. 2002ம் ஆண்டு உருவாக்கப்படட சாய்ந்தமருது பிரதேச செயலகம் 2006ம் ஆண்டு வர்த்தமானிபடுத்தப்பட்டு இன்று ஒரு முழுமையான பிரதேச செயலகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. முப்பது வருட காலமாக கல்முனை பிரதேசத்தில் இருந்து கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பிரிக்கப்பட்டிருந்தும் இன்னும் அது முழு அதிகாரம் பெறாமல் இருக்கும் போது 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சாய்தமருது பிரதேச செயலகம் முழு அதிகாரத்துடன் இயங்குவது எவ்வாறு சாத்தியம். அது நூறு வீதம் முஸ்லீம் பிரதேச செயலகமாக இயங்குவதாலா அவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது?

அதேபோல் ஓட்டமாவடி பிரதேச செயலகம் வெறுமனே ஏழு கிராம சேவகர் பிரிவுகளை மாத்திரம் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பிரதேச செயலகமாகச் செயற்படுகின்றது. ஆனால் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் ஒரு கணக்காளர் இல்லாமல் அந்த பிரதேச செயலகத்தின் செயலாளர் தன்னுடைய வாகனத்திற்கு டயர் மாற்ற வேண்டுமென்றாலும் இன்னுமொரு பிரதேச செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது. இவ்வாறு இனப்பாகுபாட்டுடன் செயற்பாடுகள் நடைபெறுவது இந்த நாட்டிற்கு உகந்ததல்ல என்று தெரிவித்தார்.

நீதிக்காக இன்னும் எத்தனை நாட்களுக்குப் போராடுவது? – பி.மாணிக்கவாசகம்

இலங்கையில் வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ஓர் எரியும் பிரச்சினையாக சுமார் 40 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நோக்கத்துடன் 1983 ஆம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறைகளில் இருந்து நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது.dissapear tamil நீதிக்காக இன்னும் எத்தனை நாட்களுக்குப் போராடுவது? – பி.மாணிக்கவாசகம்குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காகத் தலையெடுத்த ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதற்காக ஆட்களைக் காணாமல் செய்வதை ஒரு தாக்குதல் உத்தியாக ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தில் தீவிர பங்கேற்கின்ற கிராமிய மற்றும் பிரதேச மட்டத்திலான குடிநிலைசார் தலைவர்கள் முக்கியஸ்தர்களுடன் முக்கியமாக இளைஞர் யுவதிகளும் முதலில் இலக்கு வைக்கப்பட்டனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடத்தப்பட்டார்கள். பின்னர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இதனைவிட விபரம் அறிய முடியாத முறையில் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பொதுமன்னிப்பளிக்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் இராணுவத்திடம் சரணடையுமாறு அரசாங்கம் ஒலிபெருக்கிகள் மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று சரணடைந்த நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகளும் காணாமல் போயுள்ளார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிவிப்பதற்கு ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டும் கடத்திச் செல்லப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பற்றிய விபரங்கள் ஆதாரங்களாக இருந்த போதிலும், அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசுகள் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

‘வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்குகின்ற செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். ஆட்களை வலிந்து காணாமல் ஆக்குகின்ற குற்றச் செயல்கள் இனிமேல் தொடராமல் தடுக்க வேண்டும்’ என்று இலங்கையின் பொறுப்பு கூறுகின்ற கடப்பாடு தொடர்பில் ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30 –1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

‘மனித உரிமை மற்றும் மனிதாபிமான மீறல்களுக்கு எதிராக வெளிநாட்டு நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட நீதிமன்றத்தை உள்நாட்டில் அமைக்க வேண்டும். அதனடிப்படையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மைகளைக் கண்டறியவும் இக்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவும் சுதந்திரமாகச் செயற்படுகின்ற விசேட நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். இந்தக் குற்றங்களுக்கான நீதி விசாரணைகள் 1983ஆம் ஆண்டிலிருந்து 2014 வரையான காலகட்டத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, இந்த விசேட நீதிமன்றம் அமைத்தல் வேண்டும்’ என ஐநா மன்றத் தீர்மானம் வலியுறுத்தி இருக்கின்றது. இந்தத் தீர்மானத்தின் பரிந்துரைகளை ஏற்று, அவற்றை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் அந்தத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி உறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த உறுதி இன்னுமே நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தையே காணாமல் ஆக்குவதற்கான முயற்சிகளிலேயே ஆட்சியாளர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள். ஐநா மனித உரிமைகள் பேரவையாகிய சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிக்கமைய நிலைமாறு கால நீதியை நிலைநிறுத்துவதற்கான பொறிமுறைகளில்; ஒன்றாக காணாமல் போனோருக்கான அலுவலகமும் காலம் கடந்த நிலையிலே உருவாக்கப்பட்டது. அந்தப் பொறிமுறை வடிவமைக்கப்பட்ட போதிலும், அந்த அலுவலகம் இடம் குறித்து உடனடியாக அமைக்கப்படவில்லை. அத்துடன் அந்த அலுவலகத்திற்கான ஆளணிகளை நியமிப்பதையும் ஆட்சியாளர்கள் இழுத்தடித்திருந்தார்கள்.

காணாமல் போனோருக்கான அலுவலக உருவாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும். அவர்களின் பங்களிப்பும் முக்கியமாக இருக்க வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனாhல் அந்த நிபந்தனையை அரசாங்கம் முறையாகக் கவனத்தில் எடுத்துச் செயற்டவில்லை.

அது மட்டுமல்லாமல் அந்த அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள், அதன் மூலம் திரட்டப்படுகின்ற விபரங்கள் வெளியிடப்படமாட்டாது. விசாரணைகளில் கண்டறியப்படுகின்ற விடயங்கள் நீதிமன்றங்களின் சட்ட நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்படவும் மாட்டாது. அத்துடன் அந்த விடயங்களை முன்னிறுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவும் மாட்டாது என்றவாறான விடயங்களை உள்ளடக்கி காணாமல் போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, அவர்களை யார் கொண்டு சென்றார்கள், எங்கு, ஏன் அவர்களை மறைத்து வைத்திருந்தார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது போன்ற விபரங்கள் கண்டறியப்பட்டு, குற்றவாளிகளை சட்டடத்தின் முன் நிறுத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்;டவர்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு வழங்கி, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் இனிமேலும் இடம்பெறாத வகையில் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது கருத்து. உறுதியான நிலைப்பாடு. ஆனால் இதற்கு நேர்மாறாகவே காணாமல் போனோருக்கான அலுவலகத்தை அரசு உருவாக்கியது.

மக்களுடைய எதிர்பார்ப்பும், ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மான வரையறைகளும் காணாமல் போனோருக்கான அலுவலக உருவாக்கத்தில் அரசாங்கத்தினால் உரிய முறையில் கவனத்திற் கொள்ளப்படவில்லை. இது பாதிக்கப்பட்ட மக்களைப் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. அத்துடன் காணாமல் போனோரைக் கண்டு பிடிப்பதற்கும், அந்த விடயத்தில் நீதியை நிலைநிறுத்துவதற்கும் காணாமல் போனோருக்கான அலுவலகம்; ஒருபோதும் உதவமாட்டாது என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த அலுவலக உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக உருவாக்கத்திலும், அதனைச் செயற்படுத்துவதிலும் பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் கொழும்பிலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும் அந்த அலுவலகங்கள் திறக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இரகசியமாகவும், நேரம் கெட்ட வேளையாகிய அதிகாலையிலும் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன. அலுவலகங்கள் திறக்கப்பட்ட போதிலும் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றை நாடிச் செல்லவில்லை. இதனால் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக உருவாக்கம் அமைந்துவிட்டது,

ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவதென்பது மிக மோசமானதொரு குற்றச் செயலாகும். இது கொலைக்குற்றத்தைவிட மோசமானது. கொலை செய்யப்படும்போது இறந்தவருடைய சடலம் கிடைக்கின்றது. ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற காரணம் முழுமையாகத் தெரியவராத போதிலும் அவர் இறந்துவிட்டார் என்பது உறுதியாகின்றது. குற்றச் செயல் நடைபெற்றிருக்கினற்து என்பதும் வெளிப்படையாகின்றது.

ஆனால் காணாமல் ஆக்கப்படுவதில் காணாமல் போயிருப்பவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பது தெரியாமல் போகின்றது. யார் அவரைக் காணாமல் ஆக்கியது என்பதும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. மேலும் காணாமல் போனவருடைய குடும்பத்தினர் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கும் மன ஏக்கங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளாகின்றார்கள். இது ஒருவகையில் அவர்களை உளவியல் ரீதியாக சித்திரவதை செய்வதற்கு ஒப்பானதாகும்.

இதனாற்தான் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், ஐநா மன்றமும் அதனை ஒரு குற்றச் செயலாக வரையறை செய்திருக்கின்றது. அத்துடன் அதுவொரு மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடு என்றும் பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்றது. உண்மையில் இது ஓர் இன அழிப்பு நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. உலகில் வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள இலங்கை அது குறித்து இன்னுமே அலட்டிக் கொள்ளாத கல்லுளி மங்கன் போக்கிலேயே சென்று கொண்ருக்கின்றது.

இந்த நிலையில்தான் பல்வேறு அச்சுறுத்தல்கள் நெருக்குதல்களுக்கு மத்தியில் காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான போராட்டம் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் 2000 நாட்களைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நீதியைத் தேடும் அந்தப் போராட்டம் இன்னும் எத்தனை ஆயிரம் நாட்களைக் கடக்க வேண்டி இருக்குமோ தெரியவில்லை.

Posted in Uncategorized

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமான சேவை நிறுவனத்தை தனியார்மயப்படுத்த நடவடிக்கை; 49 % பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளருக்கு!

இலங்கையின் தேசிய விமான சேவைகள் நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தை தனியார்மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமே இருக்கும். ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தொடர்ந்தும் நட்டம் ஈட்டும் நிறுவனமாக இருந்து வருகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்தக் கடன் 1.126 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், இது ஏறக்குறைய 401 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அண்மையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனம் உள்ளிட்ட சில அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஐநா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் – மனு கையளிப்பு

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படும் விதத்தை ஐநா கண்காணிக்கவேண்டும் என அரகலய பிரஜைகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான இரண்டு கடிதங்களை அரகலய பிரஜைகள் அமைப்பு கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தில் கையளித்துள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்;டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் என கோரிஅரகலய பிரஜைகள் அமைப்பினர் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஐநா தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் கடிதத்தை அவர்கள் சமர்ப்பித்தனர்.

கடந்த மாதம் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகச்செய்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்தமைக்காக அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது.

Posted in Uncategorized

SLPP தலைவர்கள் அனைவரும் கொழும்பிற்கு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து மாவட்டத் தலைவர்களையும் இன்று (29) கொழும்புக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிரகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்கு கட்சியின் அனைத்து மாவட்ட தலைவர்களையும் வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized