தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை இன்றைய ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து மாகாண, மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தலைமையில் முன்னாள் கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவருமான இரா.துரைரெத்தினம், முன்னாள் மண்முனை மேற்குப் பிரதேசசபை பிரதித் தவிசாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவருமான பொ.கேசவன் செல்லத்துரை, ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், முன்னாள் போரதீவுப் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் யோ.ரஜனி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மாகாண, மாவட்ட ரீதியிலான பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தீர்வு காணப்படக் கூடிய விடயங்களுக்கு உடன் தீர்வினை வழங்குவதற்கான வாக்குறுதிகளும் வழங்கப்பட்டிருந்தன.

அந்த அடிப்படையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதனம் மிகக் குறைந்தளவில் வழங்கப்படுகின்ற விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் செயலாளரூடாக மற்றயை மாகாணங்களில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எந்தளவிலான வேதனம் கொடுக்கப்படுகின்றது என்பதை அறிந்து எந்த மாகாணத்தில் கூடுதலான வேதனம் கொடுக்கப்படுகின்றதோ அதே அளவிலான வேதனத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களிலும் ஏனைய திணைக்களங்களிலும் பதில், அமைய அடிப்படையிலான ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது, அரசாங்கத்தின் தற்போதைய நிலையில் புதிய நியமனங்கள் எதுவும் வழங்கப்படுவதற்கான ஏதுக்கள் இல்லை. அவ்வாறு நியமனங்கள் வழங்கப்படுகின்ற வேளையில் பதில், அமைய ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்கரையில் இருந்து படுவான்கரைப் பிரதேசங்களுக்கான ஆற்றுவழி பாதைப் பயணத்திற்காக கடந்த சில மாதங்களாக கட்டண அறிவீடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் அன்றாடம் இதில் பயணிக்கும் மாணவர்கள், அரச ஊழியர்கள், ஏனைய தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரும் அசௌகரியத்தினை அடைகின்றனர். அதிலும் தற்போதைய பொருளாதார நிலையில் இவ்விடயமானது மக்களை மேலும் கஸ்டப்படுத்துவதாக அமைகின்றது என்ற விடயம் சுட்டிக் காட்டப்பட்டது.

இது தொடர்பில் முதற் கட்டமாக பாடசாலை மாணவர்களுக்கும், அரசாங்க ஊழியர்களுக்குமான கட்டண அறவீட்டினை நிறுத்தவும், ஏனையவர்களுக்கான கட்டண அறவீட்டினைப் படிப்படியாக நிறுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்டகால முக்கிய பிரச்சனையாக இருக்கின்றன மேய்ச்சற்தரைப் பிரச்சனை குறித்து ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக மயிலத்தமடு, மாதவணை பாரம்பரிய மேய்ச்சற்தரைகளில் வெளி மாவட்டத்தவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளும் உரிய திணைக்கள அதிகாரிகளின் கண்டுகொள்ளாத நிலைப்பாடுகளும், அங்கு பண்ணையாளர்களினால் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் சுடப்படுவதும், அபகரிக்கப்படுகின்றதுமான விடயங்கள் இடம்பெறுவதுடன் பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுவதான செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

இவ்விடயம் சம்மந்தமாக அரசாங்க அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு ஊடாக விபரங்களைத் திரட்டி அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையையும், வலயத்திற்கு வலயம் அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும் ஆசிரியர்களை சமப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் இரண்டு மாதங்களுக்குள் வலயங்களுக்கிடையிலான ஆசிரியர் சமப்படுத்தலைச் செய்வதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க இருப்பதாகவும், ஆசிரியர் பற்றாக்குறை சம்மந்தாக கல்வி அமைச்சருடன் கதைத்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் வெளியேறும் ஆசிரியர்களை மாகாணத்திற்கு பெற்றுக் கொள்வதற்கும், திணைக்களங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருக்கும் பட்டதாரிகளில் ஒரு பகுதியினரை ஆசிரியர் நியமனத்திற்குள் உள்வாங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மூவின மக்களும் வாழும் இந்த மாகாணத்தில் உயர் பதவிகள், துறைசார்ந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகளை நியமிக்கும் போது கடந்த காலங்களைப் போலல்லாமல் பாகுபாடு பார்க்காமல் நீதியாகச் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த விடயத்தினையும் கருத்திற் கொண்டு, திறமையையும், துறைசாந்த நிபுனத்துவத்தையும் அப்படையாக வைத்து குறித்த விடயத்திற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் இணையத்தளம் ஊடாக கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் அல்லது ஜூன் முதலாம் திகதி முதல் தமது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு செல்லாமல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இ-பாஸ்போர்ட் நடைமுறைப்படுத்துவது குறித்தும் குழு ஆலோசித்ததுடன், இந்த செயல்முறையை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

இதன் பொது ஒன்லைனில் விசா விண்ணப்பத்தில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேற்கூறிய நோக்கத்திற்காக, வெளிநாட்டவர்கள் சிரமமின்றி விசாவைப் பெறுவதற்குத் தேவையான பொறிமுறையை விரைவாகத் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும், இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டினருக்கான வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஐரோப்பா போன்ற அதிக வருமானம் ஈட்டும் நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதன் முக்கியத்துவம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறும் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

குழுவின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா, எஸ்.எம்.எம்.முஷாரப், சாகர காரியவசம், யதாமினி குணவர்தன, ஹரிணி அமரசூரிய ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்ட அதேநேரம் குழுவின் தலைவரின் அனுமதியுடன் சந்திம விரக்கொடி கலந்துகொண்டார்.

வெளிவிவகார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இவர் இலங்கையின் வெளிவிவகார செயலாளருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான 12ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணைத் தலைமை தாங்குவதற்காகவே இலங்கை வந்துள்ளார்.

இந்த ஆலோசனைகள் நேற்று (29.05.2023) ஆரம்பித்துள்ள நிலையில் ஜூன் 01 வரை நடைபெறவுள்ளன.

இரு நாடுகளும் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார ஒத்துழைப்பை உள்ளடக்கிய இருதரப்பு உறவுகளின் நிலையை மதிப்பிடுவதற்கு இந்த கலந்துரையாடல் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, சீன வெளிவிவகார பிரதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை – இந்தியா கைச்சாத்து

ஒரு வருட காலத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைசாத்திட்டமையே உறுதிப்படுத்தினார்.

இதற்கான ஆரம்ப ஒப்பந்தம் மார்ச் 2023 இல் கைச்சாத்திடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் இருந்து 576.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பயன்படுத்தியுள்ளது.

எஞ்சியுள்ள 423.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலும் ஒரு வருடத்திற்கு இலங்கை பயன்படுத்த அனுமதிப்பது இன்றைய உடன்படிக்கையாகும்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை முன்னுரிமை அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் போராட்டத்தை கேவலப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கத்தின் பொது தூபி – சுரேஷ் பிரேமசந்திரன்

விடுதலை போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களை, கொன்றவர்களையும் ஒன்றாக இணைத்து நினைவு தூபி அமைப்பது என்பது தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தினை கேவலப்படுத்துவது போன்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

பொது தூபி அமைப்பது தொடர்பில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

அண்மையில் ஜனாதிபதி யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறும் முகமாக ஒரு தூபியினை கட்டுவதாகவும், அதற்காக முடிவெடுத்துள்ளார் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.

அதையடுத்து தமிழ், சிங்கள சமூகங்களிற்கிடையே இது பற்றிய பேச்சுக்கள் எழுந்தன.

தமிழர்களை பொறுத்த வரை விடுதலைக்காக போராடிய இனமே எம் இனம். அவ்வாறான போராட்டத்திற்கு அடக்கு முறையும், ஆட்சியாளர்களும் மூலகாரணம்.

அதிகளவான பொதுமக்கள் , போராளிகள் என்று பலர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் விடுதலைக்காக போராடிய ஒரே ஒரு காரணத்தாலே இடம்பெற்றது.

இவ்வாறாக கொல்லப்பட்டவர்களை, சுட்டு கொன்றவர்களையும் ஒன்றாக இணைத்து பொது தூபி என்ற பெயரினையும் வைத்து அதனை நாம் கொண்டாடுவோம் என்று கருதுவது எமது விடுதலை போராட்டத்தினை கேவலப்படுத்த கூடிய ஒரு செயற்பாடே. அதனால், இவ்வாறான பொது ஏற்பாடு என்பது தேவையற்றது.

ஆனாலும் யுத்தத்தில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களிற்காக பொது விழாக்கள் மேற்கொள்ளப்படுகின்றது. அதனை அவர்கள் தொடர்ந்தும் செய்யலாம்.

அதே போன்று யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகள் ,போராளிகள் மற்றும் தமிழ் மக்களிற்காக அஞ்சலி செலுத்த வேண்டியது தமிழர்களின் கடமையும் தேவையுமாக காணப்படுகின்றது. அதனால் அதற்கான ஏற்பாடுகளை தமிழ் மக்கள் முன்னெடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

சிங்களவர்களை பொறுத்த மட்டில் இது பயங்கரவாதிகளின் போராட்டமாக இருக்கலாம் ஆனால் எம்மை பொறுத்த மட்டில் இது விடுதலை போராட்டம்.

இவ்வாறாக எமது மக்களையும் போராளிகளையும் நாம் கௌரவப்படுத்துவதை தடை செய்ய கூடாது. அதற்கான உரிமை சர்வதேச ரீதியில் அவர்களிற்கு கிடையாது.

அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதுடன், லட்ச கணக்கான எமது மக்களை கொன்று குவித்து விட்டு அதற்காக ஆதங்கப்பட்டு ஒன்றாக இணைத்து தூபி கட்டுவது என்பது தேவையில்லாத வேலை. மாறாக யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளிற்காகவும், போராளிகளிற்காகவும் தூபி கட்டுவதற்கு தமிழ் மக்களிற்கு வழி விடுங்கள்.

அதை விடுத்து இணைத்து தூபி கட்ட நடவடிக்கை எடுத்தால் அதனை தமிழ் மக்கள் ஏற்றக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

பொது நினைவுத் தூபி அமைப்பது ஒரு போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாட்டாது

பொது நினைவு தூபி என்பது மேலும் முரண்பாடுகளை வலுப்படுத்தும் எனவும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த மாட்டாது எனவும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சமூகம் ஊடகத்திற்கு தொலைபேசி மூலம் வழங்கிய ஒலிப்பதிவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிங்கள தமிழ் மக்களிற்கு பொது நினைவு தூபி அமைத்தல் தொடர்பாக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக உங்கள் கருத்து யாது? என எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,

அவர் பதிலளிக்கையில்,

பொது நினைவு தூபி என்பது மாறுபட்ட பிரச்சினைகளை உடையவர்களிற்கு தீர்வாக செய்வது.

மேலும் முரண்பாடுகளை வலுப்படுத்துமே தவிர அது நிச்சயமாக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கோ அல்லது வேறு ஒரு விடயத்திற்கோ  உதவமாட்டாது.

மேலும், நினைவு தூபியில் பெரும்பாலான சிங்களவர்களும் , படை வீரர்களுமே அஞ்சலி செலுத்த முடியும்.

மாறாக போரிலே பாதிக்கப்பட்ட எமது மக்களிற்காக அஞ்சலி செலுத்த முற்படின் முள்ளிவாய்க்கால் விடயங்களையே நினைவுபடுத்தும்.

இவ்வாறாக பொது நினைவு தூபி என்பது இன பிரச்சினையை மூடி மறைப்பதற்காக அமைக்கப்படும் ஒன்றாகவே இதனைபார்க்க முடியும்.

மாறாக தமிழ் மக்கள் வேறு எந்த வழியிலும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உணவு பாதுகாப்பின்மை இன்னமும் உயர்மட்டத்தில் உள்ளது- ஐ.நா

இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் உணவுப்பாதுகாப்பில் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளதாக உலக உணவுதிட்டமும் ஐக்கியநாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனமும் தெரிவித்துள்ளன.

2023 பெப்ரவரி மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட உணவு பயிர் பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐநாவின் அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன.

இலங்கையில்தற்போது 3.9 மில்லியன் மக்கள் ( 17 வீதமானவர்கள்) மிதமான மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள ஐநா அமைப்புகள் கடந்த வருடம் ஜூன் ஜூலை மாதங்களில் இது 40 வீதமாக காணப்பட்டது என தெரிவித்துள்ளன.

கடந்தவருடம் 60,000 மக்கள் மிகவும் மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்தனர் தற்போது அது பத்தாயிரமாக குறைவடைந்துள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவி;த்துள்ளன.

உணவுநுகர்வில் ஏற்பட்ட முன்னேற்றமே உணவுபாதுகாப்பில் ஏறபட்ட முன்னேற்றத்திற்கு காரணம் என தெரிவித்துள்ள ஐநாவின் அமைப்புகள் உணவுவிலைகள் குறைவடைந்துள்ளமையும்,அறுவடை காலத்தில் விவசாய சமூகத்தினர் மத்தியில் காணப்பட்ட முன்னேற்றமும் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளன.

இந்த சாதகமான மாற்றம் தென்படுகின்ற போதிலும் கிளிநொச்சி நுவரேலியா மன்னார் மட்டக்களப்பு வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உணவுப்பாதுகாப்பின்மை இன்னமும் உயர்மட்டத்திலேயே உள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியிலேயே அதிகளவு உணவுப்பாதுகாப்பின்மை காணப்படுகின்றது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கு மேலும் கடன் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக 350 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கை அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கிலும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும்  வகையில் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து கவலையடைவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்களே சிறுவர்களிடத்தில் வன்முறையை தூண்டுகின்றன – டயானா கமகே

தமிழ் திரைப்படங்கள் சிறுவர்கள் மத்தியில் வன்முறைகளை தூண்டுவதாக பாராளுமன்றத்தில் வெகுஜென ஊடக அமைச்சின் ஆலோசனை செயற்குழு கூட்டத்தின் போது இராஜங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.

அத்துடன் டயானா கமகே தனது கூற்றை மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவத்தினரின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், செய்தி பிரிவின் பிரதானிகள், அமைச்சின் அதிகாரிகள், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஊடகங்கள் பின்பற்றும் நடைமுறைகள் மற்றும் அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு கருத்து வெளியிட்ட சுற்றுலா இராஜாங்க அமைச்சர் பயாணா கமகே,

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தமிழ் திரைப்படங்கள் வன்முறைகளை தூண்டுவதாக அமைவதால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சிங்கள தொலைக்காட்சிகளில் தமிழ் படங்களை டப் செய்து ஒளிபரப்புவதாகவும், தமிழ் படங்களில் வன்முறை, களியாட்டம் அதிகம் என்றார்.

குறிப்பாக கொலை செய்தல், வெட்டுக் குத்து காயங்கள் வெளிப்படையாக வழங்கப்படும். தண்டனைகள் ஆகிய சிறுவர்கள் மத்தியில் மாறுபட்ட சிந்தனையை தூண்டுவதாக அமர் கூறினார்.

இதன்போது குறிப்பிட்ட மனோ கணேசன் எம்பி, டயானாவின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும், தமிழ் தமிழ் என கத்த வேண்டாம் என்றும், அது இங்கு வேறு அர்த்தம் தருவதாகவும், பொதுவாக இந்திய திரைப்படங்கள் என பயன்படுத்த வேண்டுமே தவிர தமிழ் திரைப்படங்கள் என இன ரீதியாக பார்க்க கூடாது என தெரிவித்தார்.

இதனால் இதுவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஏற்பட்டது. வன்முறை காட்சிகள் அனைத்து மொழி திரைப்படங்களிலும் இடம் பெறுகின்றன. தமிழ் திரைப்படங்களினாலே மக்கள் உள ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மனோ கணேசன் தெரிவித்தார்.

கூட்டத்துக்கு தலைமை தாங்கி அமைச்சர் பந்துல நிலைமையை சுமுகமாக்க முயன்றார்.

இதன் பின்னர், அனைத்து மொழி திரைப்படங்களிலும் அவ்வாறான காட்சிகள் இடம்பெறுகின்றன என்று வைத்துக் கொள்வோம்.

இந்த விடயத்தில் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டு ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்த வேண்டுமென டயானா குறிப்பிட்டார்.

நகைச்சுவைக்கு கைதட்டி சிரித்தவர்களை கைது செய்யவுள்ள இலங்கை பொலிஸார் !

நகைச்சுவை கலைஞர் நடாஷா எதிரிசூரிய வெளியிட்ட அவதூறான கருத்துக்களைப் பாராட்டிய நபர்களை அடையாளம் காண இலங்கை காவல்துறைவிசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின செய்தித்தாள் கூறுகிறது.

பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக நடாஷா எதிரிசூரிய நேற்று கைது செய்யப்பட்டு ஜூன் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

31 வயதான நடாஷா, கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரதான கத்தோலிக்க பெண்கள் பாடசாலை மண்டபத்தில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

பௌத்த பெண்கள் பாடசாலைகளையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

திவயின அறிக்கையின்படி, அவரது அறிக்கைகளுக்கு கைதட்டி சிரித்தவர்களை கைது செய்ய போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வெறுப்பு பேச்சு வேண்டுமென்றே செய்யப்பட்டவை என்று சுட்டிக்காட்டிய காவல்துறை, இந்த விஷயத்தில் நகைச்சுவை நடிகருக்கு அறிவுரை வழங்கிய நபரை அடையாளம் காண்பது குறித்தும் விசாரணை கவனம் செலுத்தும் என்று கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எதிர்காலத்தில் மேலும் கைதுகள் இடம்பெறலாம் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

நிகழ்ச்சியின் போது சிரித்து பேசியவர்களை எந்த சட்டத்தின் கீழ் போலீசார் விசாரிக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்படக்கூடியவர்கள் தொடர்பான திவயின செய்தியை பொலிசார் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.