ரணிலின் தவறான கோரிக்கைக்கு ஒத்துழைக்க முடியாது – சுரேஷ் பிரமச்சந்திரன்

IMF இன் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் ரணில் விக்கிரமசிங்க அதற்காக தவறான பொருளாதாரக் கொள்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரமசிங்க இப்பொழுது ஒரு கோரிக்கை முன்வைத்திருக்கிறார். எல்லோரும் இணைந்து இந்த IMF னுடைய கோரிக்கைகள் பூர்த்தி செய்யவேண்டும், எதிர்க்கட்சிகள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எல்லோரையும் இணைத்து போவது போன்ற ஒரு பாவனையை ஜனாதிபதி முன் வைத்திருக்கின்றார்.

உண்மையாகவே IMF இனுடைய கோரிக்கைகள் என்று சொன்ன அடிப்படையில் நாட்டு மக்கள் மீது மிகப்பெருமளவிலான வரிச்சுமைகள் சுமத்தப்பட்டிருக்கின்றது. அந்த சுமைகளை தாங்க முடியாத நிலைக்குத்தான் மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுகின்றது. 3 நேரம் சாப்பிட்டவர்கள் எல்லாம் ஒரு நேர சாப்பாட்டுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். எல்லோருக்குமே பல்வேறு பட்ட பிரச்சினைகள் தோன்றி இருக்கின்றது.

இவ்வாறனதொரு சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பொருளாதார பிரச்சினையை சந்தித்து கொண்டிருக்கிற ஒரு சூழ் நிலையில் வெறுமனே IMF னுடைய நிபந்தனையை மாத்திரமே செய்கின்ற கோணத்திலிருந்து அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். அதாவது அவர்கள் எடுக்க கூடிய தவறான முடிவுகளுக்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது முதலாவது தவறான விடயம்.

இரண்டாவதாக அவர் ஒரு ஜனாதிபதி தேர்தலை முகம் கொடுக்க கூடிய சூழ்நிலையில் அவர் சுமக்க கூடிய சகல பிரச்சினைகளையும் ஏனையோரும் சேர்ந்து சுமக்க வேண்டும் என அவர் எதிர் பார்க்கின்றார். ஆகவேதான் அவர் ஏனைய கட்சிகளை தம்முடன் இணைந்து இந்த பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமாவது மாகாண சபைத் தேர்தலை நடாத்திக் காட்டுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜனாதிபதிக்குச் சவால்

13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக கருத்துக்களை வெளியிட்டுவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முதலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமாவது தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சாவால் விடுப்பதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களை முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் தமிழர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதோடு தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றும் வகையில் கருத்துக்களை பகிர்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், 13ஆவது திருத்தச்சட்டமானது பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கு போதுமானது என்றும், புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை செய்வதற்கு வருகை தரவேண்டுமென்றும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் கூறுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடமாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு விடயங்களை கூறுகின்றார். அவருடைய கூற்றுக்களும், செயற்பாடுகளும் அவர் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது பிரசாரத்தின் ஆரம்பத்தை வடக்கிலிருந்து தொடங்குகின்றார் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இதேநேரம், ஜனாதிபதி பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் போதுமானவை என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது இந்தக் கருத்து அடிப்படையற்றதாகும். நாட்டின் நீடித்த இனமுரண்பாடுகளை அடுத்தே இந்திய, இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது என்பது வரலாறு. அவ்வாறான நிலையில், குறித்த திருத்தச்சட்டம் பொருளாதார அபிவிருத்திக்கானது என்று ஜனாதிபதி அர்த்தப்படுத்த முனைவது தவறானதாகும்.

அதேநேரம், மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்து ஐந்தாண்டுகளுக்கும் அதிகமான காலம் கடந்த நிலையில் இன்னமும் தேர்தல் நடத்தப்படாது தாமதிக்கப்படுகின்றது. முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபைகள் இயங்க வேண்டும். அப்போதுதான் மாகாண சபைகள் தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியும்.

அதேநேரம், கடந்த காலங்களில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பல்வேறு வழிகளில் மத்திய அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்டுள்ளது. ஆகவே அந்த அதிகாரங்களை மீள வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையில் பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு மாகாண சபைகளின் நிருவாகத்தினால் முன்னெடுக்க முடியும் என்ற கேள்விகள் காணப்படுகின்றன.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்களை முதலீடுகளைச் செய்யுமாறு அழைப்பு விடுகின்றார். புலம்பெயர் தமிழர்கள் தமது மாகாணங்களில் முதலீடுகளைச் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை முதலில் உருவாக்கி அந்த அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும்.

அவ்வாறில்லாது, புலம்பெயர் தமிழர்கள் தென்னிலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு முன்வரமாட்டார்கள். ஏனென்றால் 1983ஆம் ஆண்டு தமிழர்களையும் அதற்குப் பின்னர் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களையும் இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அந்தந்த இனங்களில் பிரபல்யமான வர்த்தகர்களின் நிலைமைகள் எவ்வாறு மோசமடைந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஆகவே, இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்படுவது இங்கே முக்கியமானதாகின்றது. இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு காணப்படாத வரையில் தமிழர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தென்னிலங்கையில் இல்லை. கடந்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு இன்னமும் பொறுப்புக்கூறப்படாத நிலைமைகளும் நீடிக்கின்றன.

இவ்வாறான நிலையில், புலம்பெயர் முதலீட்டாளர்கள் எவ்வாறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு வருகை தருவார்கள் என்பதை ஜனாதிபதி சிந்திக்க வேண்டும். ஆகவே, ஜனாதிபதி உண்மையில் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளையும், மாகாண சபைகளின் ஊடான அபிவிருத்தியையும் விரும்புபவராக இருந்தால் ஆகக்குறைந்தது வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்காகவாவது தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளைப் பெற மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குங்கள் – சுரேஷ் பிரேமஷ்சந்திரன்

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளைக் கோரிநிற்கும் ஜனாதிபதி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமையாக வழங்குவதற்கு முன்வரவேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்ற போர்வையிலேயே மாகாணசபைகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அரசியல் சாசனத்திற்கான பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

மகிந்த ராஜபக்சவிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவரை பதின்மூன்றாவது திருத்தத்திற்கு மேலதிகமாகச் சென்று அதிகாரங்களை வழங்குவோம் என்றும் மாகாணசபைகளை சரியான முறைகளில் நடைமுறைப்படுத்துவோம் என்றும் ஐ.நா. செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் இந்திய தலைவர்களுக்கும் பல்வேறுபட்ட உறுதிமொழிகளைக் கொடுத்தபொழுதிலும்கூட கடந்த ஐந்து வருடங்களாக மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில்கூட மாகாணசபைகள் இயங்குமா என்ற கேள்வியும் எழக்கூடிய சூழ்நிலை இன்று தோன்றியிருக்கின்றது.

ஜனாதிபதியும் ஆளும் கட்சியினரும் அடுத்த வருடத்தை தேர்தல் ஆண்டாக குறிப்பாக பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறுமென்று கூறிவருகின்றனர்.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெறாத மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்பொழுது நடைபெறும் என்பது குறித்து எவ்வித அறிவித்தல்களும் இல்லை. இது உலக நாடுகளையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும்.

இப்பொழுது புதிய வரவு- செலவுத்திட்டத்திற்கான பிரேரணைகளை முன்மொழிந்த ஜனாதிபதி அவர்கள் நாட்டில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க புலம்பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதுடன் தனியார் மற்றும் தனி நிறுவனங்களும் மாகாணசபைகளும் புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியுமென்றும் கூறியுள்ளார்.

இன்றைய சூழலில் பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்கள் ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் வாழ்கின்றனர் என்பதும் பொருளாதாரத்தில் கனிசமான முன்னேற்றத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள் என்பதும் வெளிப்படையான விடயமாகும்.

தாம் பிறந்து வளர்ந்த வடக்கு-கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய அவர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவ்வாறு தாம் விரும்பிய வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு முதலீடுகளைக் கொண்டுவருதவற்கு மாகாணசபைகளுக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இதுவரை கிடையாது.

ஆகவேதான் இலங்கை திவாலான நாடாக அறிவிக்கப்பட்ட காலத்திலும்கூட, இலங்கையைப் பொருளாதார ரீதியாக மீட்சியடைய வைக்க வேண்டுமாக இருந்தால், சர்வதேச முதலீடுகளை இலங்கை உள்வாங்க தேவை இருப்பதாகவும் அதில் புலம்பெயர் மக்களின் கனிசமாக இருக்க முடியுமென்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வந்துள்ளது.

அவ்வாறு புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீடுகளை உள்வாங்குவதாக இருந்தால், சர்வதேச முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்க வேண்டுமென்பது முதன்மையானது.

அதுமாத்திரமல்லாமல், ஜனாதிபதி கூறுவது போன்று, பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான நிலங்களைப் பகிர்ந்தளிப்பது தொடக்கம், முதலீடு செய்ய முன்வருபவர்களுக்கான சகல சலுகைகளையும் வழஙகக்கூடிய அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு இருந்தாக வேண்டும்.

ஜனாதிபதி தொடர்ச்சியாக புலம்பெயர் மக்களின் முதலீடுகளைக் கோரி நிற்கின்றார். ஆனால் புலம்பெயர் தமிழ் மக்கள் தமது முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான அதிகாரங்களை ஆக்கபூர்வமான வகையில் மாகாணங்களுக்குக் கொடுப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவது மாத்திரம் போதாது. மாறாக, பொருளாதார நலன்களை மேம்படுத்துவதற்கு சர்வதேச முதலீடுகளை உள்வாங்குவதற்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். குறிப்பாக மாகாணங்களுக்கு அத்தகைய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகள் என்று சொல்கின்றபொழுது வெறுமனே பல்கலைக்கழகங்களில் மாத்திரமல்லாமல், சர்வதேச தரம் வாய்ந்த வைத்தியசாலைகள், விவசாயம் மற்றும் கடல் வளங்களை உள்ளடக்கிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான வலுவான திட்டங்கள் உற்பத்திசார் தொழிற்சாலைகள் போன்றவற்றைச் செயற்படுத்துவதற்கும் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும்.

இவை நடைபெற வேண்டுமாயின் உடனடியாக மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

எல்லா மாகாணசபைத் தேர்தல்களையும் நடாத்துவதில் நெருக்கடிகள் காணப்படுமாயின், குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்களாவது நடாத்தப்படவேண்டும்.

பொருளாதாரத்தை வளப்படுத்த, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஒரு தார்மீக சமுதாயம் ஒன்றை உருவாக்கக்கூடிய வகையில் முடிவெடுத்து செயற்படக்கூடிய அதிகராங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும்.

இவற்றை விடுத்து வெற்று வார்த்தைகளும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் முடிவுகளுக்கு அடங்கிப் போவதுமாக இருந்தால் இந்த நாட்டில் எதனையும் சாதிக்க முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவையும் சீனாவையும் இராஜதந்திரரீதியில் ஏமாற்றும் இலங்கை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இப்பொழுது இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு ஒரு முகத்தையும் இந்தியாவுக்கு ஒரு முகத்தையும் காட்டி சில காரியங்களை சாதித்து வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற யாழில் இடம்பெற்ற ஓடாக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீனா  தொடர்பாக இலங்கையில் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பல்வேறு பட்ட சிக்கல்கள் கருத்துக்கள் கூறப்பட்டு வந்துகொண்டிருக்கிறது. இந்தியா தன்னுடைய பாதுகாப்பு நலன்களிலிருந்து சீனா இலங்கையில் நிலை கொள்வது என்பது தங்களுக்கு ஒரு பாதுகாப்பு குந்தகம் என்பதாக  கூறி  வருகின்றது.  இலங்கையை  தனது கைவசம் வைத்திருப்பதற்காகவும்  இலங்கையின் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட பொழுது பல பில்லியன் டொலர்களை இந்தியா இலங்கைக்கு உதவிக்கரமாக வழங்கி வந்திருக்கின்றது. அது மாத்திரமல்லாமல் இலங்கையில் எப்பொழுது ஒரு அனர்த்தம் பாரிய இழப்புக்கள், பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட பொழுதும் உடனடியாக இந்தியா முன்வந்து பல விஷயங்களை செய்திருக்கின்றது.

இப்பொழுது இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு ஒரு முகத்தையும் இந்தியாவுக்கு ஒரு முகத்தையும் காட்டி சில காரியங்களை சாதிக்கின்றது. முக்கியமாக சீனாவினுடைய யுத்தக்கப்பல்கள் அல்லது ஆய்வுக்கப்பல்கள் என்ரா அடிப்படையில் கப்பல்கள்  இங்கு வருவதும் இல்ங்கை கடல் பரப்புக்குள் அவர்களை ஆய்வுகளை மேற்கொள்வது என்பதுவும் அந்த ஆய்வுகள் என்பது வெறுமனே என்ன காரணத்துக்காக இலங்கையினுடைய கடல் பரப்புக்குள் சீனா ஆய்வுகளை செய்ய வேண்டும் என்ற கேள்வி ஆகவே இவை எல்லாவற்றையம் பார்க்கின்ற பொழுது சீனா ஒரு பொருளாதார நலன்களின் அடிப்படையில் செய்வதாக எங்களுக்கு தெரியவில்லை.

மாறாக சீனாவை பொறுத்தவரையில் அமெரிக்காவுக்கு மாற்றீடாக  உலகத்தினுடைய ஒரு பொலிஸ்காரனாக  வரவேண்டும் என்பதில் அது குறியாக இருக்கின்றது. அந்த வகையில் தான்  அம்பாந்தோட்டை துறைமுகத்தியும் 99 வருட குத்தகைக்கு  அது எடுத்திருக்கிறது.

இப்பொழுது ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கின்ற ஒரு பல்கலைக்கழகம் அடுத்ததாக இலங்கையில் தான் சீனா தனது கடல் படையை உருவாக்க இருக்கின்றது என்ற ஒரு கருத்தையும் கூறி இருக்கின்றது. இப்பொழுது பெண்டகன் கூட சொல்கிறது அடுத்த இராணுவ தளமாகவோ, கடல் படை தளமாகவோ அம்பாதோட்டை மாற்றப்படுவதற்கான முழு வாய்ப்புக்கள்  இருக்கிறது என்பதுவும் கூறப்பட்டிருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி சீனாவுக்கு போய் வந்ததை தொடர்ந்து சீனாவினுடைய ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வந்திருக்கின்றது. இலங்கையின் கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு  அனுமதியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இவை எல்லாம் இலங்கையில் ஒரு அரசியல் சூறாவளியை உருவாக்கக்கூடிய காரணிகளாக இவை அமைந்து வருகின்றது.

தொடர்ச்சியாக பல்வேறு பட்ட தரப்பட்ட தரப்புகளிலிருந்தும் இவை கூறப்பட்டு முன்வக்கப்பட்டு வந்த பொழுதும் கூட இலங்கை அரசாங்கம் தனது வளங்களை பெருக்கிக்கொள்வதற்கு பதிலாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒரு மூலோபாய புள்ளியில் இலங்கை தேவை என்பதி அமைந்திருப்பதை காரணமாக கொண்டு அது இந்தியாவிடமும் சீனாவிடமும்  தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள முயல்கிறதே தவிர ஆனால் இரு தரப்பையும் அது ஏமாற்றி தான் வருகின்றது.

அந்த ஏமாற்றமென்பது இலங்கை தனது இராஜத ந்தந்திரமாக கருதுவது எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஒருதரப்பில் இந்திய அரசாங்கம் ஏமாற்றப்படுகிறது மறுதரப்பில் சீனா அரசாங்கம் என்பது ஏமாறப்படுகிறது.

இவை மாத்திரமல்லாமல் சீனாவுக்கு மிகப்பெருமளவில் இலங்கையில் தனது நடவடிக்கைக்கு இடம் கொடுத்து வருவதென்பதுவும் ஒரு ஏற்புடைய விஷயமாக இல்லை. இலங்கை  என்பது ஒரு கடலால் சூழப்பட்ட ஒரு நாடு. இலங்கை  மீனை ஏற்றுமதி செய்ய வேண்டிய ஒரு நாடு. அவ்வாறான  ஒரு சூழ்நிலை இருக்கையில் அண்மையில் சீனாவிலிருந்து இலங்கைக்கு மீன் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. 140 கோடி மக்களைக்கொண்ட சீனா தனக்கு தேவையான மீன்வளத்தை பிடிப்பது மாத்திரமல்லாமல் மீனை ஏற்றுமதி செய்கிற ஒரு நிலையில் இருக்கிறது.

ஆனால் 2அரைகோடி  சனம் இல்லாத இலங்கையில் சுற்றி வர கடலை வைத்துக்கொண்டு 100 கிலோமீற்றர் கடல் அளவுக்கான எல்லைகளை வைத்துக்கொண்டு இலங்கை வந்து சீனாவிலிருந்து மீனை இறக்குமதி செய்வது ஒரு கேலிக்குரிய நகைப்புக்குரிய ஒரு விடயமாக இருக்கிறது. ஆகவே இந்த இறக்குமதி என்பது இலங்கையில் இருக்கிற மீனவர்களை எவ்வளவு தூரம் பாதிக்கப் போகிறது என்பதுவும் மிக மிக முக்கியமான விடயம். அது வடக்கு கிழக்கு மாத்திரமல்ல ஒட்டு மொத இலங்கையிலும் மீன்பிடி என்பது பாதிக்கப்படும். அமைச்சர் சொல்லலாம் இலங்கையில்  பிடிபடாத மீன்களை அங்கிருந்து இறக்குமதி செய்கிறோம் என்று.

எங்களுக்கு இந்த நாட்டில் பல்வேறுபட்ட வகையான நூற்றுக்கணக்கான மீன்கள் இங்கே சுற்றி வருகின்ற கடலில்  இருக்கின்றது. ஆகவே அந்த மீன்கள் இலங்கை மக்களுக்கு தாராளமாக போதுமானது. அவை ஏற்றுமதி செய்வதற்கு மேலதிகமாகவே இருக்கின்றது. ஆகவே இவற்றை எவ்வாறு செய்வது என்பதை விடுத்து   மீனை இறக்குமதி செய்வதில் அமைச்சர் அதற்கான முக்கியத்துவத்தை கொடுப்பதும் என்னும் சொல்ல போனால் எந்த விதமான வரையறைகள், எந்த விதமான வரிகள் இவை எல்லாம் கூட வெளிப்படையாக யாருக்கும் தெரியாது. எவ்வளவு தூரம் இதற்கான வரி விதிக்கப்படுகிறது? சந்தையில் மீன் என்ன விலை விற்கப்படப்போக்கிறது?  போன்ற எந்த விஷயங்களும் தெரியாது. ஆகவே வெளிப்படைத்தன்மை அற்று மிக இரகசியமான முறையில் இந்த மீனை இறக்குமதி செய்வது போகின்ற நிலைமைகள் தான் தோற்று விக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இதனால்  இலாபமடையப்போகிறது வெறுமனே அமைச்சராகத்தான் இருக்கப்போவது தவிர இங்கிருக்கூடிய  மீனவர்கள் அல்ல. குறிப்பாக சொல்வதென்றால் வட கிழக்கு மீனவர்கள் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே கட்லட்டை பண்ணை என்ற வகையிலும் மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது என்பது  மீனவர்களுக்கு இன்னும் பாரிய அழிவுகளை உருவாக்கும்.ஆகவே அரசாங்கமும் சரி அமைச்சரும் சரி இவற்றை ஒரு மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தலை உடன் நடாத்தி ஜனநாயக மரபைக் காக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தி நாட்டின் ஜனநாயக மரபைக் காக்குமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

அதாவது 2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அநேகமாக அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்கு முன்பாக ஜனாபதித் தேர்தல் நடைபெறும் என்றும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

வருகிற 2024ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திலும் தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஏற்கனவே வேட்பு மனுக்கள் கோரப்பட்டு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பலகோடி நிதியை வேட்புமனு தாக்கலுக்காக கட்டியுள்ளனர்.

ஆனால், தேர்தலுக்கு நிதி இல்லை என்று அரசாங்கம் சாக்குபோக்கு சொல்லி குறித்த தேர்தல் எப்பொழுது நடைபெறும் என்பது தெரியாத நிலையில் உள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படலாம் என்றும் அதற்கான சட்டதிருத்தம் கொண்டுவரப்படும் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆகவே, மாகாண தேர்தல் சட்டதிட்டங்களுக்கு இணங்க மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும்படி தமிழர் தரப்பு கோரிய பொழுதும் அதற்கான எத்தகைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

மாறாக, வடக்கு-கிழக்கில் தான் விரும்பிய ஆளுநர்களை நியமித்து, தான்தோன்றித்தனமான முறையில் பௌத்த பிக்குகளும் இராணுவமும் பொலிஸாரும் கூட்டாக காணிகளைக் சுவிகரித்து, அத்தகைய இடங்களில் புதிது புதிதாக புத்த கோயில்களைக் கட்டுவதும் எங்கோ தூரப்பிரதேசங்களில் உள்ள சிங்கள மக்களைக் கொண்டுவந்து இங்கு குடியேற்றுவதுமாக அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்கின்றது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சி முறைக்குள் அதிகார பரவலாக்கத்தின் ஊடாக மாகாணசபை முறைமை ஒன்று உருவாக்கப்பட்டது.

வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறைமை இல்லாவிட்டாலும் கூட, அதுவே இந்த அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகவும் இருக்கின்றது. அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்காக அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

மாகாணசபை அதிகாரத்தில் இல்லாத காலத்தில் பாராளுமன்றத்தின் ஊடாகவும் ஏனைய வழிமுறைகளிலும் மாகாணத்திற்கு உரித்தான பல அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பறித்துக்கொண்டது. இன்றும் அது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதனூடாக மாகாணசபை ஒரு அர்த்தமற்ற நிர்வாக அலகாக மாற்றப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, வாழ்வுரிமை மறுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் தமது இருப்பைப் பாதுகாத்துக்கொண்டு கௌரவமாக வாழ வேண்டுமென்ற அடிப்படையிலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதுடன், பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

ஆகவே, ஏனைய தேர்தல்களுக்கு முன்பாக குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களையாவது உடனடியாக நடத்த முன்வரவேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கத்தைக் கோருகின்றோம்.” என்றும் குறித்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதிபதி சரவணராஜா விவகாரம் – குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை முற்றிலும் பொய்யானது

குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். அவர்கள் சரியான விசாரணையை செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஹர்த்தால் தொடர்பான முன்னாயர்த்தக் கலந்துரையாடல் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில் இடம் பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நீதிபதி சரவணராஜாவுக்கு இருந்த அச்சுறுத்தல் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை வெறுமனே ஒரு நீதிபதிக்கான அச்சுறுத்தலாக பார்க்க முடியாது.

நீதித்துறை என்பது எவ்வளவு தூரம் இந்த சிங்கள அரசாலும், அரச இயந்திரத்தாலும், அவமதிக்கப்படுகின்றது என்ற விடயத்தையே எடுத்துக் காட்டுகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகவே குற்றப்புலனாய்வுப் பிரிவின் அறிக்கைகள் காலாகாலமாக வெளி வந்ததுள்ளது.

அதுபோல் தான் நீதிபதி சரவணராஜா பற்றிய அறிக்கையும் முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். சரியான விசாரணையை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த அறிக்கையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.

மேலும், தற்பொழுது கொழும்பில் இருக்கக் கூடிய இராஜதந்திரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன.

இது தொடர்பான நடவடிக்கைகளை அடுத்தடுத்த தினங்களில் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

நீதிபதி வெளியேறியமைக்கான சூழலை அறிந்து நீதியமைச்சர் கருத்து தெரிவிக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு வெளியேறிய சூழலை உணர்ந்து, அவரது நிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்து கருத்திடுவது அமைச்சருக்கு நல்லது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நீதிபதி திரு. ரி. சரவணராஜா தனது பதவிகளைத் துறந்து வெளியேறியது தொடர்பில் நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி திரு. ரி. சரவணராஜா அவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கபட்டு தனது நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறியிருக்கின்றார். இலங்கையில் நீதிபதி ஒருவர் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அடிப்படையில் நாட்டைவிட்டு வெளியேறியது இதுவே முதல் முறையாகும்.

நீதிபதி திரு. ரி. சரவணராஜா அவர்கள் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பாக இலங்கையின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தீர்ப்புக்களை வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாத சிங்கள பௌத்த இனவாத சக்திகள் அவருக்கு எதிராக பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் அவரை அச்சுறுத்தும் தொனியில் பேசியதுடன், பௌத்த நிறுவனங்கள் அவருக்கு எதிராக சில வழக்குகளையும் தாக்கல் செய்திருந்தன. இதுமாத்திரமல்லாமல், புலனாய்வுப் பிரிவினிருடைய தொடர்ச்சியான கண்காணிப்பு வலயத்திற்குள்ளும் அவர் உட்பட்டிருந்ததாகவும் அவரே தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்தே அவர் வெளிநாடு சென்றிருப்பதாகத் தோன்றுகின்றது.

இலங்கையின் நீதித்துறையில் ஒரு தமிழ் நீதிபதி ஏற்படுத்தக்கூடிய தீர்ப்புகளை ஏற்றுக்கொள்ள பௌத்த பிக்குகளோ, சிங்கள பௌத்த இனவாதிகளோ தயாராக இல்லை என்பதை குருந்தூர்மலை போன்ற அண்மைய சம்பவங்கள் வெளிக்காட்டி நிற்கின்றன. மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்சம் இலங்கையின் நீதித்துறையினூடாக எத்தகைய நீதி நியாயங்களையும் எதிர்பார்க்க முடியாது என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறிருக்கையில், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அவர்கள் அவரது பாராளுமன்ற உரையின்போது நீதிபதி அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தால் அல்லது அவர்மீது கண்காணிப்புகள் ஏதாவது ஏற்பட்டிருந்தால் அவர் உனடியாகவே சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்யும்படி ஆணையிட்டிருக்க முடியும் என்பதுடன் நீதித்துறை என்பது சுதந்திரமானது என்பதுடன் அது நீதிச்சேவை ஆணைக்குழுவிற்குக் கட்டுப்பட்டது என்றும் இதில் அரசாங்கத்தின் மேல் குற்றஞ்சாட்டுவதில் எந்தவித அர்த்தமுமில்லை என்றும் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

ஒருவிடயத்தை நீதியமைச்சருக்கு முன்வைக்க விரும்புகின்றோம். இலங்கையின் நீதித்துறை என்பதும் பொலிஸ் என்பதும், இராணுவம் என்பதும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டதாகவே இருக்கின்றது. குருந்தூர்மலையில் எந்தவித கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என இவருக்கு முன்னர் பதவியிலிருந்த நீதிபதி லெனின்குமார் ஒரு கட்டளையைப் பிறப்பித்திருந்தார்.

ஆனால் அந்தக் கட்டளை மீறப்பட்டு பௌத்தபிக்குகள் இராணுவத்தினரதும் பொலிசாரினதும் ஆதரவுடன் அங்கு ஒரு புதிய பௌத்த கோயிலை கட்டி முடித்திருக்கின்றனர். இது நீதிமன்றத்தீர்ப்பை அவமதிக்கும் ஒரு செயற்பாடு. இதற்கு எதிராக நீதி அமைச்சோ அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவோ மேற்படி சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையையும் எடுப்பதற்குத் தயாராக இல்லை.

பொலிசாரோ இராணுவத்தினரோ தமிழ் நீதிபதிகளின் ஆணைகளை கட்டளைகளை மதித்து நடப்பதாகவும் தெரியவில்லை. இவ்வறான சூழ்நிலையில், திரு. சரவணராஜாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நீதிபதி ஆணையைப் பிறப்பித்திருக்கலாம்இ கைது செய்திருக்கலாம் என்பதெல்லாம் போலியானதும் அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கருத்தாகவே இருக்கின்றது.

இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், உயிருக்கு உத்தரவாதம் இருக்கின்றது என்று நம்பினால் மட்டுமே அவர் கட்டளைகளையோ ஆணைகளையோ பிறப்பிக்க முடியும். அவரது உயிருக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள பொழுது அவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்காது. அதைத்தான் சரவணராஜாவும் செய்திருக்கிறார் என்பதை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச புரிந்துகொண்டால் நல்லது.

இதுவெறும் சரணவராஜா என்ற நீதிபதி தொடர்பான விடயம் மாத்திரம் அல்ல. இலங்கையின் தமிழ் நீதிபதிகளின் தீர்ப்பை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர்களது நடவடிக்கைகள் வெளிக்காட்டி நிற்பதுடன்இ இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் தமிழர்களுக்கு சார்பாக அமைந்துவிட்டால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனோநிலைகூட அவர்களுக்கு இல்லை என்பதையும் வெளிக்காட்டி நிற்கிறது. இவ்வாறான நிலையில், இலங்கையின் நீதித்துறையிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கை சிதறடிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் நீதித்துறைமீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழப்பதற்கான காரணிகளுக்கு இது மேலும் வலுவூட்டியுள்ளது.

அதுமாத்திரமல்லாமல்,மூதூர் குமாரபுரம் கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டது தொடர்பாக திருகோணமலையில் நடைபெற்ற வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றி, சிங்கள ஜூரிகளைக் கொண்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர்.

மீசாலையில் தமது சொந்தக் காணிகளைப் பார்வையிடச் சென்ற 8க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டு மலசலக்கூடக் குழிக்குள் புதைக்கப்பட்டனர். இந்தக் கொலையுடன் தொடர்புடைய ஒரு இராணுவ சிப்பாய்க்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியது. இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதிசெய்திருந்தது. ஆனால், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி ஆனதும் அவர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.

சிங்கள இராணுவத்தினரோ அல்லது உயர் பதவிகளில் உள்ளவர்களோ வடக்கு-கிழக்கு நீதிமன்றங்களில் அவர்களது வழக்குகள் விசாரிக்கப்படும்பொழுது தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று காரணம்கூறி அவற்றை சிங்களப் பிரதேசங்களுக்கு மாற்றிக்கொள்கின்றனர். ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் தமது வழக்குகளை வடக்கு-கிழக்கு மேல் நீதிமன்றங்களுக்கு மாற்றுமாறு கோரியபொழுது அவை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டே வந்திருக்கின்றது.

இலங்கையில் நடந்துமுடிந்த யுத்தக்குற்றங்கள் தொடர்பாக தமிழ் மக்கள் ஒரு சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தார்கள். அது அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. தங்களது இராணுவம் புனிதமானது, அவர்கள் எந்தக் குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்று அரசாங்கம் கடப நாடகம் ஆடியது. பின்னர் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சர்வதேச சுற்றுலா பயணிகள் உட்ப 269க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதன் சூத்திரதாரிகள் யாரென பிரித்தானியாவின் சானல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இதற்கு ஒரு சர்வதேச விசாரணை தேவையென கர்தினால் மல்கம் ரஞ்சித், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்ற அரசியல் மற்றும் சமய முக்கியஸ்தர்கள் குரல் கொடுத்தார்கள்.

அவ்வாறு சர்வதேச விசாரணை ஒன்று ஏற்படுத்தப்பட்டால் தமிழ் மக்களின் கோரிக்கையான யுத்தக்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே அதனைக் கைவிடும்படி பிரதி வெளிவிவகார அமைச்சர் கோரியிருந்தார். இதற்கமைய மேற்படி சர்வதேச விசாரணையைக் கோரியோர் தங்களது கோரிக்கையிலிருந்து பின்வாங்கியிருக்கின்றனர்.

அதாவது தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடாது என்பதில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எல்லோரும் மிகத்தெளிவாக இருப்பதையே இது காட்டுகின்றது. இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு நீதியமைச்சர் பேசுவது நல்லது என்று கருதுகின்றோம்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் இலங்கையில் அச்சமின்றி வாழ்வதற்கு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் விளக்கும் அளிக்கும் வகையில் சர்வதேச சமூகம் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நடைபெற்ற பொழுது தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்குவதற்கு தயாராக இருந்தவர்கள் யுத்தம் முடிந்த பிறகு எதனையுமே கொடுக்கக்கூடாது என்ற நிலைக்கு வருவதாக இருந்தால், அவ்வாறானவர்களுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை என தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை அரசியல் தலைமைகளிடையே உள்ள முரண்பாடான நிலைமைகளை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வடக்கிற்கு பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்களை கொடுத்தால் நாடே பிளவுபடும் எனும் பிழையான இனவாத கருத்துகள் மீண்டும் மீண்டும் திணிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், நாட்டில் நிரந்தரமான ஒரு பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதை கண்காணிக்க இந்தியா ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசாங்கம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு தரப்பு என்ற அடிப்படையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கு முழுமையான தார்மீக உரிமை இருக்கிறது என்பதை இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

எமது கடிதத்தில் தெரிவித்திருந்ததைப் போன்றே இந்தியப் பிரதமர் திரு. மோடி அவர்களும் இலங்கை ஜனாதிபதிக்கு மேற்கண்ட விடயங்களைத் தெளிவாக எடுத்துரைத்திருந்தது மாத்திரமல்லாமல், இலங்கை தமிழ் மக்கள் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு அவர்களது அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும்.

அதற்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாணசபை தேர்தல்களை நடாத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதுடன் அதனை இலங்கை அரசு செய்யும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையின் பாதுகாப்பு என்பவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது என்றும் இந்துமகா சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கும் அது முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்கு இந்திய அரசு தொடர்ந்தும் உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 36 வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலையிலும் அதில் அடங்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலையிலேயே இந்தியா இருக்கிறது என்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக டெல்லியில் ஒப்புக்கொண்டாலும் மாறிமாறி ஆட்சி செய்யும் இலங்கை அரசாங்கங்கள் அதனை இழுத்தடித்து வருவதையே நாங்கள் பல காலமாகப் பார்த்து வருகிறோம்.

பல்வேறு காரணங்களைக் கூறி அதை நடைமுறைப்படுத்துவதிலிருந்து தப்பித்து வருவதையும் பார்த்திருக்கின்றோம். இந்த முறையும் அவ்வாறில்லாமல், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு இந்தியா ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன், குறிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் நாம் கோருகிறோம்.

மலையக தமிழ் மக்கள் இந்த மண்ணில் குடியேறி 200 வருடங்கள் முடிவடையும் இன்றைய காலகட்டத்தில் சரியான ஊதியமில்லாமல், வாழ்விடங்களில்லாமல் இன்னமும் லயன்களில் அடிமைகளாக வாழ்கின்ற சூழ்நிலையில் அவர்களுடைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 75 கோடி ரூபாய்களை வழங்குவது வரவேற்பிற்குரியதும் பாராட்டுக்குரியதுமாகும்.

மலையக மக்கள் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உதவிகளையும் ஒத்தாசைகளையும் இந்தியா தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை ஜனாதிபதியும் தமிழ் மக்களுக்கும் இந்திய அரசுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை காலம் கடத்தாது முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கிறோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பனையை தெரியாதவர் பனை அபிவிருத்தி சபை தலைவர்; கொழும்பிலிருந்து இயங்கும் அலுவலர்கள் – சுரேஷ் க. பிரேமச்சந்திரன்

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வரும் பனை அபிவிருத்திச் சபையின் நிர்வாகச் சீர்கேட்டையும் முறையற்ற நியமனங்களையும் நிறுத்தி, பனை அபிவிருத்தி சபையை வினைதிறன் மிக்கதாகச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு.

பனை அபிவிருத்திச் சபையானது 1978ஆம் ஆண்டு தென்னை அபிவிருத்திச் சட்டத்தின்கீழ், யாழ்ப்பாணத்தை தலைமை அலுவலகமாகக் கொண்டு, பனையை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் பனை வளம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் எனவும் உருவாக்கப்பட்ட ஒரு சபையாகும்.

இலங்கையின் பனை வளமானது முழுமையாக வடககு-கிழக்கையே சார்ந்துள்ளது. ஏறத்தாழ 11இலட்சம் பனை வளம் இங்கு இருப்பதாக அறியப்படுகிறது. ஆனால், இதைக் கொண்டு நடத்தும் பனை அபிவிருத்திச் சபையானது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இதனால் சங்கங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு பனை வளத்தினை நம்பி வாழும் குடும்ங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பனைவள அபிவிருத்தியும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.

பனைவள உற்பத்தி மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி மட்டங்கள் ஒப்பீட்டளவில் கடந்த காலங்களைவிட மிகவும் குறைவாகவே காணப்படுவதுடன், பனைவளத்தினைக் கொண்டு பல்வேறு வகையான உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்தும் அவற்றின் உற்பத்தி ஊக்குவிக்கப்படுவதில்லை.

முதலாவதாக, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் இதன் தலைமைச்செயலகம் இருந்தபோதிலும்கூட, பல இலட்ச ரூபாய் வாடகையில் கொழும்பில் இன்னொரு தலைமைச் சங்கம் இயங்கிவருகிறது. இதன் காரணமாக, மிகப்பெருமளவிலான பனை வளத்தினை வடமாகாணம் கொண்டிருந்த போதிலும்கூட, அதன் பலன் மக்களைச் சென்றடையவில்லை.

பனை மரத்தைப் பற்றியோ அதன் பயன்பாடு பற்றியோ அறியாத சிங்கள மொழிபேசும் தென்பகுதியைச் சார்ந்த ஒருவரை பனை அபிவிருத்திசபையின் தலைவராக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நியமித்தமை தவறானது. அவர் தென்பகுதியைச் சார்ந்தவராக இருப்பதால், தேவைக்கு மேலதிகமான வாடகையைக் கொடுத்து கொழும்பிலே நிர்வாகத்தை நடாத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

நாடு இன்று எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தேவையற்ற செலவானது நாட்டின் பொருளாதார சீர்கேட்டிற்கு மேலும் உரமூட்டுவதுடன், பனைத்தொழிலை நம்பி வாழும் வடக்கு-கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. வடக்கு-கிழக்கில் பனை வளத்துடன் ஈடுபாடுகொண்ட படித்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் யுவதிகள் ஆயிரக்கணக்கில் இருக்கையில் இந்தத் துறையுடன் தொடர்பில்லாத 250ற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர் யுவதிகளை பனை அபிவித்திச்சபை உள்வாங்கியிருப்பதும் இவர்களும் பெருமளவில் கொழும்பை மையமாகக் கொண்டு பணியாற்றி வருவதும் பனை அபிவிருத்திசபை கீழ்நோக்கிச் செல்வதற்குக் காரணமாக அமைகின்றது.

பனை அபிவிருத்தி சபையானது கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, பருத்தித்துறை, திக்கம் பிரதேசத்தில் ஒரு வடிசாலையை நடத்தி வந்தது. மிகவும் இலாபகரமாக இயங்கிவந்த இந்த வடிசாலையினால் 3000 தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தார்கள். இந்த வடிசாலையானது பல்வேறு சந்தர்ப்பங்களில் வடக்கில் பொறுப்பாக இருந்த அமைச்சர்களினால் சூரையாடப்பட்டது. இவ்வளவு கொள்ளைகளும் சூரையாடல்களும் இடம்பெற்ற பின்னரும்கூட அது தொடர்ந்தும் இலாபத்திலேயே இயங்கி வந்தது.

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக வடிசாலை மூடப்பட்டதன் காரணத்தினால் இந்த வடிசாலைக்கு கள்ளை விநியோகித்து வந்த தொழிலாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரைகாலமும் திக்கம் வடிசாலையை பனை அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் நடத்தி வந்தது. வடிசாலைக்கான உரிமம், பனம் சாராயத்தை உற்பத்தி செய்வதற்கான உரிமம், அவற்றைக் களஞ்சியப்படுத்துவதற்கும் விற்பதற்குமான உரிமம் அனைத்தும் பனை அபிவிருத்திச் சபையின் பெயரில் சமாசங்களிடமே இருந்தது. ஆனால் இப்பொழுது இருக்கின்ற பனை அபிவிருத்திச் சபையின் தலைவரான சிங்களப் பெருமகன், இந்த உரிமங்களை சிங்கள நபர் ஒருவருக்கு அளித்துள்ளதாக அறியமுடிகிறது. இதனால் பனை வளச் சங்கங்கள் சமாசங்கள், அதன் கூட்டுறவு நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்படுவதுடன் இந்த சகல வருமானங்களையும் ஒரு தனிநபருக்கு அளிக்க முற்பட்டமையானது ஒட்டுமொத்த பனை அபிவிருத்தி முயற்சியையும் சீர்குலைக்கும் செயற்பாடாகும்.

இந்த நடவடிக்கைகளின் காரணமாக, பனம்பொருள் உற்பத்தியும் அதன் ஏற்றுமதியும் மிக மோசமாகப் பாதிப்படைந்திருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்கும் பங்களித்துள்ளது.

அமைச்சர்களின் அற்பத்தனமான, முன்யோசனையற்ற பதவி வழங்கல்களானது பனைவள அபிவிருத்தியை எவ்வளவுதூரம் பாதித்திருக்கிறது என்பதை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் ரீதியான முறையற்ற முகாமைத்துவமும், சீரற்ற நிர்வாக முகாமைத்துவமும் இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்திருக்கிறது என்பதை கடந்த இரண்டு வருடங்களாக நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், பனைவள அபிவிருத்திச் சபைக்கான அதனை திறம்பட நடாத்துவதற்கான இலாபமீட்டும் ஒரு துறையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.

1. வடக்கு மாகாணத்தின் தலைமைச்செயலகத்தை வினைதிறனாக இயங்க வைப்பதுடன் பல இலட்சங்களை வாடகையாக விழுங்கி ஏப்பம்விடும் கொழும்பு செயலகம் மூடப்படுவதுடன் அங்குள்ள அனைத்து கட்டமைப்புகளும் ஏற்கனவே உள்ள அரச ஆணைகளுக்கிணங்க, யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட வேண்டும்.

2. பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக பனை வளத்தில் பரிச்சியமும் அத்துறையை அபிவிருத்தி செய்வதில் ஊக்கமும் அனுபவமும் கொண்ட சரியான நபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

3. பனைவள கூட்டுறவு சபைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் பனை வளத்தை அடிப்படையாகக் கொண்ட சங்கங்கள், சமாசங்கள் அதற்கென வழங்கிவரும் உதவிகள் ஒத்தாசைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

4. திக்கம் வடிசாலைக்குரித்தான அனைத்து உரிமங்களும் வழங்கப்பட்டு முன்னர் இதனை இயக்கிவந்த சமாசங்களுக்கே இவற்றைத் தொடர்ந்தும் இயக்குவதற்கான அனுமதி அளிக்கப்படவேண்டும்.

5. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் அதிகளவு அக்கறை கொண்டுள்ளதாகக் கூறிக்கொள்ளும் ஜனாதிபதியும் அமைச்சர்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு கோருகின்றோம்.

6. தனியாரை ஊக்குவித்து கூட்டுறவுத்துறையை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, கூட்டுறவுத்துறையை ஊக்குவித்து அவற்றை ஏற்கனவே இருந்ததுபோல் இலாபமீட்டும் துறையாகவும் வினைதிறன் மிக்கதாகவும் செயற்படுவதற்கு உதவுமாறு சகலரையும் கோருகிறோம்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized