பெரும்பான்மைச் சமூகம் தமிழர்களின் இருப்பையும் வாழ்வையும் கேள்விக் குறியாக்கியே வந்திருக்கிறது – ஜனா எம்.பி

தமிழின அழிப்பினை காலங்காலமாக நிகழ்த்தி வருகின்ற பெரும்பான்மைச் சமூகம் தமிழர்களின் இருப்பையும் வாழ்வையும் கேள்விக்குறியாக்கியே வந்திருக்கிறது எனவும் அண்மைய காலங்களில் நடைபெற்று வருகின்ற அத்தனை சம்பவங்களும் இதனை மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றன என றாடாளுமன்ற உறுப்பினரும், நாயகம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

நேற்று (24.04.2023) விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்டபட்டுள்ளதாவது,

”பயங்கரவாதத்தடைச் சட்டமே வேண்டாமென்கிற நிலையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை ஏற்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் முனைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தின் மூலமாக தமிழ் பேசும் மக்களின் அத்தனை உரிமைகளையும் பறித்தெடுக்கவே அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இனப்பிரச்சினையின் காலான முரண்பாட்டினால் உருவான யுத்தம் மௌனிக்கப்பட்டு 14 வருடங்கள் கடந்தும் தமிழர்களுடைய பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு அரசு தயாராக இல்லை. யுத்தம் மௌனிக்கப்பட்டு 4 ஜனாதிபதிகள் 6 பிரதமர்கள் மாறியுள்ளனர். அதே போன்றே அரசாங்கங்களும் மாறிவிட்டன.

இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் ஏன் என்பதற்கான கேள்வியே இப்போதைக்கு சாதாரணமானதாகி விட்டது. நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை அரசாங்கம் கணக்கிலெடுப்பதாகவே தெரியவிலலை.

இவ்வாறான நிலையில் நடைபெறுகின்ற அடக்குமுறைகளுக்கெதிராக தமிழ் பேசும் மக்களாகிய நாம் போராடவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு மாறாக தமிழ் மக்களுக்கெதிரான தொல்பொருள் செயலணி, இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளும், பௌத்தமயமாக்கல் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், இயற்கை வளங்களை சூறையாடுதல், வன வளத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் காணி பகிர்ந்தளிப்பு, காணாமலாக்கப்பட்டோர் விடயம், மனித உரிமை மீறல்கள், தொல்பொருள் ஆராய்ச்சி என்னும் போர்வையில் சிங்கள மயமாக்கல், மதவழிபாட்டுக்கு தடை விதித்தல், பௌத்த விகாரை அமைத்தல் போன்ற செயற்பாடுகள் திட்டமிட்டவாறு விரைவாகவும், சிறப்பாகவும் நடைபெறுகின்றன.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனால் உருவான அரச எதிர்ப்புப் போராட்டங்கள் நாட்டையே புரட்டிப் போட்டன. ஆனாலும் எதுவும் நடைபெறாதது போலும், ஏதும் அறியாதது போலும் அரசாங்கம் மேற்கொள்ளகின்ற ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை இல்லாதொழிக்கவேண்டியது மக்களாகிய நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டமே நாளை நடைபெறவுள்ள நிர்வாக முடக்கலாகும். இத் தினத்தில் சந்தைகளை மூடி, கடைகளை அடைத்து போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஒத்துழையுங்கள்.

அத்தோடு அரச அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்புகளை மேற்கொண்டு நிர்வாக முடக்கலுக்கு ஆதரவு வழங்குங்கள். சிறுபான்மை இனங்கள், அரசாங்கத்திடம் சரணாகதியடைந்து உரிமைகளைத் துறந்து, நடந்தவைகளை மறந்து நடப்பவைகளை காணாது வாழப் பழகிக்கொள்ளல் இந் நாட்டில் சிறப்பானதொரு வாழ்க்கைக்கான வழி என்பதே சிங்கள அரசுகளின் எண்ணமாக இருக்கிறது.

அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக ஒன்றுதிரள்வோம். அரசின் கடும்போக்கை அடக்குவோம். நாட்டைக் குட்டிச்சுவராக்கும் மக்களது உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடுகளைக் களைந்தெறிவோம்‘‘ என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

25 ஏப்ரல் 2023 செவ்வாய்கிழமை அன்று சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் பொது வேலைநிறுத்தத்திற்கு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் ஆதரவு

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் 25 ஏப்ரல் 2023 செவ்வாய்க்கிழமை அன்று இடம்பெறவுள்ள பொது வேலைநிறுத்தத்திற்கு (ஹர்த்தாலுக்கு) புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களான நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் கருத்து வேறுபாடுகளைக் களைந்து பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க அனைத்து புலம்பெயர் அமைப்புகளையும் அன்புடன் அழைக்கிறோம்.

பொது வேலைநிறுத்தத்தின் நோக்கங்கள்:

•சிறிலங்கா பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது. ஏனெனில் இது தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட மோசமானது.
•ஒரு திட்டமிட்ட கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையை செய்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் பின் வரும் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காக:
o நில அபகரிப்பு
o தமிழர் தாயகத்தில் தெற்கிலிருந்து சிங்கள மக்களை குடியேற்றம் செய்வதன் மூலம் தீவின் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் குடித்தொகையை சிதைத்தல்
o தமிழ் மரபுச் சான்றுகளை அழித்தல்
o வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோவில்களை இடித்து, அதற்குப் பதிலாக புத்த விகாரைகள் அமைத்தல்.
இவை யாவும் தீவின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் நீண்ட வரலாற்றை திரித்து மறுப்பதை நோக்கமாக கொண்டது.

இந்த பொது வேலைநிறுத்தத்தினை ஆரம்பித்து நடாத்தும் அனைத்து அரசியல் கட்சிகள், மத நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புக்களுக்கு எமது மனமார்ந்த நன்றியையும் நேசத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எதிர்காலத்திலும் இது போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தொடர ஊக்குவிக்கிறோம்.

இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைந்து இந்த பொது வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு சிங்கள பௌத்த அரசிற்கும் பெரும்பாண்மை சிங்கள மக்களுக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும் எமது ஒற்றுமையின் பலத்தை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

On behalf of:
• Australian Tamil Congress (ATC): +61300660629, mano_manics@hotmail.com
• British Tamils Forum (BTF): +447814486087, info@britishtamilsforum.org
• Center for the Protection for the rights of Tamil People (CPTR – France): 0033652100400, Selvan.cptr@gmail.com
• Irish Tamils Forum (ITF): 0035389959270, irishtamilsforum@gmail.com
• Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa): padayacheepregasen@gmail.com
• Swiss Tamil Action Group (STAG): +41764450642, swisstamilag@gmail.com
• United States Tamil Action Group (USTAG): +12025953123, info@theustag.org

பிரித்தானியாவில் முக்கியமான அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் தமிழ் அமைப்புகள் ஹர்த்தாலுக்கு ஆதரவு

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் கோரி முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கத்தை ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டாளர்களுக்கு, பிரித்தானியாவில் முக்கியமான அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் தமிழ் அமைப்புகள் பூரண ஆதரவை வழங்கியுள்ளன.

தமிழ் அமைப்புகள் ஆதரவு

பிரித்தானிய தமிழ் கன்சர்வேடிவ் அமைப்பு,லிபரல் ஜனநாயக கட்சியின் தமிழ் நண்பர்கள் அமைப்பு மற்றும் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பு என்பன நாளை(25.04.2023) நடைபெறவுள்ள பொது முடக்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கில் நிர்வாக முடக்கல்

அறிக்கை ஒன்றின் ஊடாக குறித்த தமிழ் அமைப்புகள் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சர்வதேச சமூகத்தினால் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்பவற்றிற்கு எதிராக இலங்கை செயற்பட்டு வருகின்றது.

தமிழர்களின் தாயக பூமியில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் கடுமையான இராணுவ பிரசன்னத்தை பேணி வருகின்றது.

இராணுவத் தலையீடு

சிவில் விவகாரங்களில் அடிக்கடி இராணுவத் தலையீடு மேற்கொள்ளப்படுவதுடன், தீவில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தவும், அடி பணியச் செய்யவும் தொடர்ச்சியாக பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் வடக்கு-கிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது முடக்கத்திற்கு பூரண ஆதரவு வழங்குகின்றோம் என்பதுடன் அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், வடக்கு கிழக்கு வாழ் மக்கள் அனைவரும் இந்த பொது முடக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கோருகின்றோம்.

இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு வலுவான செய்தியை வெளிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery

ஹர்த்தாலுக்கு ஆதரவு தருக!

வடக்கு, கிழக்கில் நாளை 25 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு அம்பாறை மாவட்ட தமிழ் – முஸ்லிம் மக்கள் முழு ஆதரவையும் வழங்க முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனைப் பிராந்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், ரெலோ அமைப்பின் உப தலைவரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஹென்ரி மகேந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இதனை வலியுறுத்தியுள்ளதுடன், குறிப்பாக தமிழ் மக்களுடன் இணைந்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களும், வர்த்தகர்களும் இந்த ஹர்த்தால் கடையடைப்பு வெற்றி பெற ஆதரவு தர வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகளும், பொது அமைப்புக்களும் மற்றும் தொழிற் சங்கங்களும் இணைந்து மேற்படி பூரண ஹர்த்தால், மற்றும் முழுக் கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன.

அனைத்து இன மக்களையும் வதைக்கக் கூடிய படுமோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் நாளை (25) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட விருப்பதை ஆட்சேபிக்கும் பிரதான விடயம் உட்பட பல்வேறு அரசின் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான அடக்கு முறைகள், உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டித்தும் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ஹர்த்தால், கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவுகோரி அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நேற்று (23) உப தலைவர் ஹென்ரி மகேந்திரன் தலைமையிலான குழுவினர் பரப்புரைகளை முன்னெடுத்தனர்.
இதனோடு ஹென்ரி மகேந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

“1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் தமிழ், முஸ்லிம் மக்களை வதைத்து வரும் நிலையில் தற்போதய ரணில் தலைமையிலான அரசு அதைவிடவும் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முனைந்துள்ளது.

தமிழ் மக்கள் மட்டுமன்றி சகல இன மக்களதும் அடிப்படை உரிமைகளைக் கேள்விக் குறியாக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை, ஊடகங்களின் குரலை நசுக்கி, அடிப்படை உரிமைகளை மறுதலிக்கும் அச்சட்டத்தை வடக்கு, கிழக்கு மக்கள் முற்றாக நிராகரிக்கின்றோமென்பதை அரசிற்கு வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை பௌத்த, சிங்கள, இராணுவமயமாக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலை உடன் நிறுத்தக்கோரியும்,
இனப்பிரச்சினை மற்றும் எம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென வலியுறுத்தியும் நாளைய ஹர்த்தால் கடையடைப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

எனவே, அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல தமிழ், முஸ்லிம் மக்களும் வர்த்தகர்களும் இதில் இணைந்து ஆதரவு நல்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகளை மூடியும், கடைகளை அடைப்பதுடன், போக்குவரத்து சேவைகளை நிறுத்துமாறும் கோருகின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தனியார் ஊழியர்கள் எவரும் நாளை பணிக்கு செல்ல தேவையில்லை – வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம்

வடக்கு மாகாணத்தை சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) பணிக்கு செல்ல தேவையில்லை என வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளைய பொது முடக்கம் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி இன்றைய தினம் (திங்கட்கிழமை) வவுனியா நகர் பகுதியில் தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் வவுனியா நகரிற்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், எமது இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்,

எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட, இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்க்க நாளைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் செயலாளர் ந.கருணாநிதி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குகன், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நி.பிரதீபன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆதரவு கோரி 6 கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய இந்துக் கோயில்கள் சங்கம் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பிரித்தானிய இந்துக் கோயில்கள் சங்கம் தனது பூரண ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரித்தானிய இந்துக் கோயில்கள் சங்கங்கள் ஆகிய நாம், எதிர்வரும் செவ்வாய்கிழமை 25 ஏப்ரல் 2023ல் வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு எமது பூரண ஆதரவை தெரிவித்து கொள்வதுடன், மற்றைய புலம்பெயர் அமைப்புக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி, இவ் ஹர்த்தாலுக்கு உங்கள் முழு ஆதரவை தெரிவிக்குமாறு மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

இவ் ஹர்த்தாலை முன்னின்று நடத்தும் அத்தனை கட்சிகள், சங்கங்கள் யாவருக்கும் எமது சிநேகபூர்மான நட்பையும் ஆதரவையும் தெரிவிக்கும் அதேவேளை, உங்கள் இது போன்ற பணிகள் தொடர வேண்டுமென தாழ்மையாக வேண்டி கொள்கிறோம்.

நாட்டில் வாழும் எமது உறவுகளை எந்த பாகுபாடுமின்றி இவ் ஹர்த்தாலில் பங்கு கொண்டு இதனை முன்னெடுத்து மிக வெற்றியை சிங்கள பெளத்த அரசிற்கு காண்பிக்குமாறு உங்களை உரிமையுடன் வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தாயக மக்கள் அனைவரும் ஹர்த்தாலில் பங்கெடுத்து வெற்றியை சிங்கள பெளத்த அரசிற்கு காண்பிக்க வேண்டும்

பிரான்ஸ் தமிழர் உரிமை மையம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலிற்கு பூரண ஆதரவினை வழங்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் (Tamil Centre for Human Rights – TCHR, Est.1990) ஆகிய நாம், எதிர்வரும் செவ்வாய்கிழமை 25 ஏப்ரல் 2023ல் வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு எமது பூரண ஆதரவை தெரிவித்து கொள்வதுடன், மற்றைய புலம்பெயர் அமைப்புக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி, இவ் ஹர்த்தாலிற்கு உங்கள் முழு ஆதரவை தெரிவிக்குமாறு மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

இவ் ஹர்த்தாலை முன்னின்று நடத்து அத்தனை கட்சிகள், சங்கங்கள் யாவருக்கும் எமது சிநேகபூரமான நட்பையும் ஆதரவையும் தெரிவிக்கும் அதேவேளை, உங்கள் இது போன்ற பணிகள் தொடர வேண்டுமென தாழ்மையாக வேண்டி கொள்கிறோம்.

நாட்டில் வாழும் எமது உறவுகளை எந்த பாகுபாடுமின்றி இவ் ஹர்த்தாலில் பங்கு கொண்டு முன்னெடுத்து மிக வெற்றியை சிங்கள பெளத்த அரசிற்கு காண்பிக்குமாறு உங்களை உரிமையுடன் வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வட-கிழக்குத் தழுவிய பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து மன்னாரில் அழைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

இந்த நிலையில் குறித்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ),ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகியவை இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை 11 மணியளவில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளருமான டானியல் வசந்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் , ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அ.ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

குறிப்பாக வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவ மயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கமானது எமது மக்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி ஏற்கனவே அடக்குமுறைக்கு உள்ளாக்கி இருக்கின்ற எமது மக்களை மீண்டும் மீண்டும் அடக்கி ஆழ் வதற்கான ஒரு புதிய சட்டத்தை உருவாக்குகின்றது.
இதற்கு எதிராக நாங்கள் அனைவரும் கிளர்ந்து எழுந்து இந்த சட்டத்தை இந்த நாட்டிலிருந்து துடைத்து எடுப்பதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினூடாக அரசாங்கத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் சிறிய கருத்தை பதிவிட்டாலே அவர்களை கைது செய்து சிறை படுத்துவதற்கான அதிகாரம் இந்த ஆயுதப் படைகளுக்கு வழங்கப்படுகின்றது.

ஏற்கனவே இந்த ஆயுதப் படைகளுக்கு இலங்கையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டம் அதே போன்று அவசர கால தடைச் சட்டம் ஊடாக பல அடக்குமுறை அதிகாரங்கள் வழங்கி இருக்கிறது.

உதாரணத்திற்கு எமது கலாச்சார விழுமியங்களை அழிப்பதற்கான அதிகாரம் எமது நிலங்களை கைப்பற்றுவதற்கான அதிகாரம் மற்றும் கேள்வி கணக்கின்றி எமது இளைஞர்கள் யுவதிகளை சிறை படுத்துவதற்கான அதிகாரம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கான அதிகாரம் என்று பல அதிகாரங்களை வழங்கி இந்த நாடு எமது மக்களை அடக்கி ஆள்கிறது.

மீண்டும் மீண்டும் எமது மக்களை ஒரு திறந்தவெளி சிறைச்சாலைக்குள் வைப்பதற்கான புதிய சட்டத்தை நாட்டிலே இந்த அரசாங்கம் உருவாக்குகின்றது.
அது தான்சட்டம் எனவே இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இந்த நாட்டில் கொண்டு வராத வகையில் போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்த சட்டமானது தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த விடயத்தில் முஸ்லிம் சிங்கள மக்களின் பிரதிநிதிகளாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 25ம் திகதி பாராளுமன்றத்தில் இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கட்டாயம் எதிர்க்க வேண்டும் என்பதுடன் எதிர் வரும் 25ஆம் தேதி வடக்கு கிழக்கு தழுவிய அனைத்து மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அன்றைய தருணம் வர்த்தக நிலையங்களை மூடி அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் முச்சக்கர வண்டிகள் அரச தனியார் பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதோடு இளைஞர், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மனித நேயச் செயற்பாட்டாளர்கள் என்று பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு பாரிய எதிர்ப்பை காட்டுமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தலைமையில் மாற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதாக அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் அறிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைவராக கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திய போதிலும், அவர் பங்கேற்க மறுத்துவிட்டார்.

Posted in Uncategorized