முல்லைத்தீவில் ஓ.எம்.பி அலுவலகம் விசாரணையை முன்னெடுக்க முடிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள காணாமல் போனாருக்கான அலுவலகம், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 244 பேருக்கு விசாரணைக்கான அழைப்பையும் விடுத்துள்ளது. எதிர்வரும் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் விசாரணைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்புக்கு சீனா பச்சைக்கொடி -கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் நிவாரண வேலைத்திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான வாய்ப்புகள் குறித்து கடந்த வாரம் சீனாவுடன் அவர் பேச்சு நடத்தியிருந்தார்.

ஆகவே குறித்த நாடுகள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சினைகளை கையாளமுடியும் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும் ஜி20 கட்டமைப்பின் கீழ் நிவாரணம் வழங்குவதில், சீனாவின் வகிபாகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரில் சரணடைந்த எழிலனை மன்றில் முன்னிலைப்படுத்துக: இராணுவத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் எழிலனை (சசிதரன்) அடுத்த வழக்கு விசாரணையின்போது மன்றில் முன்னிலைப் படுத்த வேண்டும் அல்லது அவரை முன்னிலைப்படுத்த முடியாமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என்று வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இறுதிப் போர் நடவடிக்கை யின்போது இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் உள்ளிட்ட 12 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றன. விசாரணைகளின் நிறைவில், அந்த நீதிமன்றம் வவுனியா மேல் நீதிமன்றுக்கு ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த
அறிக்கை மீதான மேல் நீதிமன்றின் தீர்ப்பு நேற்று வழங்குதவாக இருந்தது. இந்நிலையில், அந்தத் தீர்ப்பு தயாரித்து முடிக்கப்படாத நிலையில் தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, நேற்று நடைபெற்ற வழக்குகளில் 5 வழக்குகளின் விசாரணைகளில் முதலாவதில், குறிப்பிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பான மனுதாரரின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பில் இராணுவத்தினர் திருப்திகரமான பதிலை முன்வைக்கவில்லை என்று தெரிவித்தது. மனுதாரர் முன்வைத்த விடயங்களின் அடிப்படையில், காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதனை மறுப்பதற்கான விடயங்களை இராணுவத்தினர் மன்றில் இன்று (நேற்று) முன்வைக்கவில்லை என மனுதாரர் சார்பில் வாதாடிய சட்டத்தரணி கே. எஸ். ரட்ணவேல் தெரிவித்தார். எனவே, மனுதாரரின் வேண்டுகோளின் பிரகாரம், ஆட்கொணர்வு மனுவின் எழுத்தாணையை அனுமதித்த நீதிமன்றம், அடுத்த தவணையில் காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான காரணங்களை விளக்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனிடையே, மற்றைய வழக்கில் மனுதாரர் போதுமான ஆவணங்களை மன்றில் சமர்ப்பிக்காதமையால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஏனைய மூன்று வழக்குகள் மீதான தீர்ப்புகளையும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அறிவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே. எஸ். ரட்ணவேல் மேலும் தெரிவித்தார்.

சுயாதீன நிறுவனமொன்றை நிறுவுவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் கூடிய சிரேஷ்ட அதிகாரிகளின் குழு

தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கான, சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் முதலாவது கூட்டம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இக்கூட்டத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் நிதி ஆணைக்குழுவின் தலைவர் சுமித் அபேசிங்க ஆகியோரும் பங்கேற்றனர்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் பிரகாரம், தேசிய கொள்கைகளை திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் தேசிய சபையொன்று நியமிக்கப்பட்டதாகவும், அதன் கீழ் 02 உபகுழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க இங்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று செயற்படும்.

அதன் கீழ், நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை உருவாக்குவதற்கு அவசியமான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்காக தேசிய சபை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த உபகுழு கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதற்தடவையாக கூடியபோதே, “தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கான சிரேஷ்ட அதிகாரிகள் குழு” நியமிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு முதல் அடுத்த 25 வருடங்களுக்கான தேசியக் கொள்கையை உருவாக்குதல் எனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் நோக்கை நிறைவேற்றம் பொறுப்பு இக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதிய தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை டிசம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்புமாறு ஜனாதிபதியின் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் இதன்போது நாட்டில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய கொள்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் விளக்கினார்.

புதிய தேசியக் கொள்கையின் வரைவு 27.12.2022 ஆம் திகதிக்குள் தயாரிக்கப்பட்டு, குழு உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டு இறுதி அறிக்கை 15.01.2023 ஆம் திகதிக்குள் சட்ட மூலமாக தயாரிப்பதற்காக, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்தா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் வலுசக்தித் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல்

வலுசக்தி துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது ‘இலங்கையின் எரிசக்தி துறையின் தேவைகளான எரிபொருள், சுத்திகரிப்பு நடவடிக்கைகள், நிலக்கரி வழங்கல் மற்றும் அணுசக்தியில் ஒத்துழைப்பு போன்றவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு தேவையான நிலக்கரி மற்றும் எரிபொருளை வாங்குவதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் கால்நடைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானம்

வடக்கு மாகாணத்தில் உள்ள கால்நடைப்  பண்ணைகளை ஒழுங்குபடுத்துவற்கு சில சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் வசீகரன்  தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் சுமார் 80 வீத கால் நடைகள் திறந்த வெளிகளிலேயே வளர்க்கப்படுகிறது. இவை உற்பத்தி திறன் குறைந்தவையாக காணப்படுகின்றன. வடக்கில் 4 இலட்சம் மாடுகள், 10 ஆயிரம் எருமை மாடுகள், 3 இலட்சம் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் 3 இலட்சம் மாடுகள் பால் உற்பத்திக்காக  திறந்த வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. இவை நாட்டு இன மாடுகாளாக காணப்படுகின்றன.

அத்துடன் நாட்டின் மொத்த இறைச்சித் தேவையில் 30 வீதத்தை வடக்கு மாகாணம் பூர்த்தி செய்கிறது. இதனால் வருமானமும் அதிகரிக்கிறது. எனினும் விவசாயத்தின் முக்கியத்துவம் தற்போது அதிகமாக காணப்படுகின்றன. இதனால் வயல் நிலங்களை நாசம் செய்துவிடும் என்ற காரணத்தால், கால்நடைகள் பொருத்தம் இல்லாத இடங்களுக்கு மேய்ச்சலுக்காக விடப்படுகின்றன. இதனால் கால்நடைகள் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

சுமார் 30 ஆண்களுக்குப் பின்னர் வடக்கில் ஒரு துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கோடை காலத்தில் நீர் இல்லாமலும், மழை காலத்தில் வெள்ளத்தாலும் மாடுகள் இறப்பது வழமை. ஆனால் இப்போது முதல் தடவையாக குளிரால் மாடுகள் அதிகளவில் சில தினங்களுக்கு முன்னர் இறந்துள்ளன.

இதற்கு காரணம் மாடுகளில்  கொழுப்புப் படை இன்மையே ஆகும். 90 வீத மாடுகளுக்கு கொழுப்புப் படை இல்லை.இந்த பெரும் போக காலத்தில் அவைகளுக்கு  தீவனம் இல்லை. இம்முறை தான் இந்தப் குளிர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை நாம் கவனமாக அணுக வேண்டும்.

திறந்த வெளிகளில் மாடுகளை வளர்ப்பவர்கள் அலட்சியமாக உள்ளனர்.பண்ணைகளைப்  பதிவு செய்வதில்லை. மாடுகளின் இலக்கங்களை பெறுவதில்லை. உரிய காலத்தில் தடுப்பூசிகளை பெறுவதில்லை. இவ்வாறு அவர்கள் எமக்கு ஒத்துழைப்பை வழங்குவதில்லை. கால் நடைகளுக்கான பராமரிப்பு போதியளவு இல்லை.

ஆகவே கால் நடைகளின் இறப்புகளை தவிர்ப்பதற்கு சில நடவடிக்கைளை, சில சட்டங்களை பிறப்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நடைமுறைப் படுத்த எண்ணியுள்ளோம். முறையான பதிவு மூலம் பண்ணைகளை நடாத்தி, அந்த கால்நடைகள் உயிரிழந்திருந்தால் ,அரசாங்கம் நட்ட ஈடு வழங்கும் பட்சத்தில்  நாம் பண்ணையாளர்களுக்கு வழங்குவோம் என்றார்.

குளிர்காரணமாக கிளிநொச்சியில் 529 மாடுகளும் முல்லைத்தீவில் 524 மாடுகளும் வவுனியாவில் 28 மாடுகளும் உயிரிழந்துள்ளன. இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் மாடொன்று உயிரிழந்துள்ளது.

அத்துடன், குளிர் காரணமாக  கிளிநொச்சியில் 266 ஆடுகளும்  முல்லைத்தீவில் 199 ஆடுகளும் வவுனியாவில் 52 ஆடுகளும் உயிரிழந்துள்ளன என்றார்.

நிதி இன்மையால் வட, கிழக்கில் வீதி அபிவிருத்திப் பணிகள் இடை நிறுத்தம்

வட, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட கொழும்பு,  ஊவா ஆகிய நான்கு மாகாணங்களில் தொடர்ந்து வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியவில்லை.

இவ்வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சில வீதிகளை போக்குவரத்து மேற்கொள்வதற்கு ஏற்றது போல அபிவிருத்திக்கு மேற்கொள்ளவதாகவும் ஐரோட் திட்டப்பணிகள் சிலவற்றை முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஆசிய அபிவிருத்தியின் கடன் நிதியானது சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்தும் உடன்பாடு உறுதியாக கிடைக்கும் வரை அந்நிதி மூலம் நடைபெற்ற ஐரோட் திட்ட வீதி புனரமைப்புப்பணிகள் சிலவற்றை இடை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சில வீதிகள் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் மாத்திரம் சீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

இத்திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள உடன்படிக்கை பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி மீள வழங்க உடன்பாடு காலத்தை பொறுத்துத் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிய வருகின்றது.

ரோட்டரியும் யுனிசெப்பும் 47 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் கையளிப்பு

ரோட்டரி இன்டர்நெசனலின் தலைவர் ஜெனிபர் ஜோன்சும் யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் கூக்கும் இணைந்து லைவ்லைன் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலயிடம் 47 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்களை கையளித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு மருத்துவ பொருட்களிற்கு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டிற்கு உதவுவதற்காக இந்த மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரோட்டரி கழக வலையமைப்பு முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இணையத்தள நன்கொடை தளம் மூலம் திரட்டிய நிதியை கொண்டு யுனிசெவ் கொள்வனவு செய்த 130 000 டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களே சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.

முதலாவது தொகுதி மருந்துகளை இலங்கை சுகாதார அமைச்சரிடம் கையளிப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். இதன் மூலம் மக்களிற்கு சேவையாற்றலாம் என ரோட்டரி இன்டநசனலின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

விசேடமான இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்து ரொட்டரி வழிவகைகளை கண்டறியும் உங்கள் நாடு சிரிக்கும் அற்புதமான மக்களை கொண்டுள்ளது. இந்த சிரிப்பை நாங்கள் எதிர்காலத்திற்கு சேமிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையை பிரசவித்துள்ள பெண்கள் வலிநிவாரணம் உட்பட பல்வேறு மருந்துகளிற்கு இந்த மருந்துகள் உதவும்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் நீடித்த நிலைமை சமூகசேவை சுகாதாரம் கல்வி போன்றவற்றின் ஊடாக நீடிக்கின்றதுஎன யுனிசெவ்வின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் கூக் தெரிவித்துள்ளார்.

யுனிசெப் அதன் கொள்முதல் மற்றும் தளவாட நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் குடும்பங்களுக்கு உயிர்காக்கும் பொருட்களை வழங்க அதன் கூட்டாண்மைகளைப் பயன்படுத்துகிறது” என்று யுனிசெப் இலங்கையின் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் கூறினார்.

“இலங்கையின் பொருளாதார நிலையில் சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் தேவைகள் கடுமையாகவே உள்ளன மேலும் எங்களது உதவியை நிலைநிறுத்தவும் அதிகரிக்கவும் பல பங்குதாரர்களின் ஆதரவை நாங்கள் நாடுகிறோம்” என்று அவர் கூறினார்.

ரோட்டரி இன்டர்நேஷனல் முன்னாள் தலைவர் கே.ஆர். ரவீந்திரன் இலங்கை ரோட்டரி ஆளுநர் புபுது டி சொய்சா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த முயற்சி குறித்து தெளிவுபடுத்திய ரோட்டரி இன்டர்நெசனலின் முன்னாள் தலைவர் கே.ஆர். ரவீந்திரன்,

“ எங்களின் மருத்துவ விநியோகங்களின் 80 வீதம் இறக்குமதி செய்யப்படுகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக எங்களின் வெளிநாட்டு கையிருப்பு குறைவாக உள்ளதால் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

எங்கள் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது உயிர்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.

சத்திர கிசிச்சைகள் பிற்போடப்படுகின்றன. சிறுவர்களும் கர்ப்பிணிகளும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதுவே யதார்த்தம் நாங்கள் இதனை ஏற்றுக்கொண்டு இலங்கைக்கு உதவுவதற்கான வழிவகைகளை கண்டறிய வேண்டும் சர்வதேச தலைவர் இலங்கைக்கு மருந்துப்பொருட்களை கையளிக்க வந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ரோட்டரி இன்டர்நெசனலும் யுனிசெப்பும் இணைந்து நாடாளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளிற்கு உயிர்காக்கும் மருந்துகளையும் சுத்தமான குடிநீர் ஏனைய முக்கிய வசதிகளையும் வழங்குவதற்கான நிதியை திரட்டியிருந்தன .

இலங்கையின் நெருக்கடிக்கு உடனடி தீர்வை காண்பது அனைவரின் நலனிற்கு உகந்தது – பிரான்ஸ் தூதுவர்

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்காக இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன்  பிரான்ஸ் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கொய்ஸ் பக்டெட் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு உடனடி தீர்வை காண்பது இலங்கை உட்பட அனைவரினதும் நலனிற்கு உகந்த விடயம் என  தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது வெளிநாட்டுக்கடனை திருப்பி செலுத்தாதன் காரணமாக பிரான்சிலிருந்து இலங்கைக்கான கடன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை தனது நெருக்கடிகளிற்கு தீர்வை கண்டதும் கடன்களை வழங்குவது திருப்பி முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் முதல்  பாரிஸ் கிளப் இலங்கை விவகாரத்தில் தீவிரமாக செயற்படுகின்றது இன்றும் இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் கிளப் ஏனைய கடன் வழங்குநர்களுடன் விடயங்களை பரிமாறிக்கொள்கின்றது எனவும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடன்வழங்குவதை பத்து வருடங்களிற்கு ஒத்திவைக்கும் யோசனையை பாரிஸ் கிளப் முன்னெடுத்துள்ளது,இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக 15 கடன் மறுசீரமைப்பு யோசனையை முன்வைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இடைக்காலத்தில் பிரான்ஸ் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிதொகைகளை வழங்கிவருகின்றது என தூதுவர் தெரிவித்துள்ளார்.

இவை சிறிய தொகை என்றாலும் இலங்கைக்கு முக்கிய உதவியாக உள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என அறியும் உரிமை அவர்களது உறவுகளுக்கு உண்டு – திஸ்ஸ விதாரண

”அரசியல் தீர்வுக்கு நான் தயாராக இருந்தேன். தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதற்கு இடமளிக்கவில்லை” என சர்வதேசத்திற்கு தெரிவிக்கும் முயற்சியில் ஜனாதிபதி அரசியல் தீர்வு விவகாரத்தை கையாளுகிறார்.

அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.

இரு தரப்பிலும் இனவாதிகள் உள்ளார்கள் என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

பாராளுமன்றத்திலும் பொது இடங்களிலும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் கருத்துரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் சமஷ்டி தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

காணி பிரச்சினைக்கு தீர்வு, பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைகைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு தீர்வு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச நிர்வாக கட்டமைப்பில் தமிழ் மொழி பேசுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கல், முறையான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

முப்படைகளில் பெரும்பாலானோர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்கள். 30 வருடகால யுத்த சூழலில் இருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் யுத்தம் நிறைவடைந்த பிறகும் படையினரின் அதிகபடியான பங்குப்பற்றலுடன் இருப்பது பொருத்தமற்றது. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைகைதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும்.

யுத்தத்தில் காணாமல்போனோருக்கு நேர்ந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை அவர்களின் உறவுகளுக்கு உண்டு. ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டு உறுதியான இறுதி தீர்வை எட்ட வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் சர்வக்கட்சி தலைவர் கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தை அடிப்படையாக கொண்டு தீர்வு வழங்கும் வகையில் 3 வருடங்களாக பல்வேறு தரப்பினருடன் 128 கூட்டங்கள் நடத்தப்பட்டன. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நான் முன்வைத்த திட்டங்களை தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பினர் ஏற்றுக்கொண்டார்கள்.

இவ்வாறான பின்னணியில் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.சுதந்திர தினத்திற்கு இன்னும் 51 நாட்களே உள்ளன.

அரசியல் தீர்வு வழங்க நான் தயாராக இருந்தேன். ஆனால் அதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என சர்வதேசத்திற்கு காண்பிக்கும் முயற்சியை ஜனாதிபதி தற்போது கையாளுகிறார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு வழங்குவது சாத்தியமற்றதானால் இனங்களுக்கிடையில் மீண்டும் வெறுப்பு நிலை ஏற்படும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் சிங்கள இனம் எமக்கு தீர்வு வழங்க விரும்பவில்லை என்று தமிழ் சமூகம் கருதும் நிலை ஏற்படும்.

அது உண்மையான இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இரு தரப்பிலும் இனவாதிகள் உள்ளார்கள் என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என்றார்.