அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை – இந்தியா கைச்சாத்து

ஒரு வருட காலத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைசாத்திட்டமையே உறுதிப்படுத்தினார்.

இதற்கான ஆரம்ப ஒப்பந்தம் மார்ச் 2023 இல் கைச்சாத்திடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் இருந்து 576.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பயன்படுத்தியுள்ளது.

எஞ்சியுள்ள 423.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலும் ஒரு வருடத்திற்கு இலங்கை பயன்படுத்த அனுமதிப்பது இன்றைய உடன்படிக்கையாகும்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை முன்னுரிமை அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பைப் பதிவு செய்ய கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் அலி சப்ரி அழைப்பு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை தொடர்பில் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

‘இலங்கையில் இனப்படுகொலை’ நடந்தது என கனடா பிரதமர் வெளிப்படுத்தியது தொடர்பாக எதிர்ப்புப் பதிவு செய்ய கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் அலி சப்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று (மே 18) கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரிப்பதாக கூறியது. அதில் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.

கனேடியப் பிரதமரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இலங்கை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு தேசத்தின் தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் துருவமுனைப்பு அறிவிப்புகள் கனடாவிலும் இலங்கையிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக வேற்றுமையையும் வெறுப்பையும் வளர்க்கிறது என்று அமைச்சு மேலும் கூறியது.

கனடா மற்றும் அதன் தலைவர்கள் வெறுப்பு, தவறான தகவல் மற்றும் தீவிரவாத கருத்துக்களை ஊக்குவிக்கும் வகையில் கனடாவில் இருந்து அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும், திரிபுபடுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் இலங்கை மீதான உதவியற்ற கவனத்தை நிறுத்துமாறும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.

எனினும், இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதில் கனடா உறுதியாக உள்ளது. இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சுக்கு கனடா தகவல் வழங்கியது. இனப்படுகொலை தகவலை நீக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளை கனடா கண்டுகொள்ளவில்லை.

இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் தொடர்பில் மீளாய்வுக் கூட்டம்

மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி, சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் முன்னெடுப்பது தொடர்பான மீளாய்வு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இன்று (19) வெள்ளிக்கிழமை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களில் மீள்புதுப்பிக்கத்தக்க உட்கட்டமைப்பு மற்றும் விநியோகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உமா ஓயா அனல்மின் நிலையத்தின் முதல் பாகத்தின் நிர்மாணப் பணிகள் ஆகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் பாகம் செப்டெம்பர் மாதத்திலும் நிறைவடையும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தின் நிர்மாண நிறுவனமான ‘ஃபராப்’ நிறுவனத்துக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாகவும், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டங்களின் கீழ் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் சேர்க்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு திட்ட நிர்மாண நிறுவனமான ‘ஃபராப்’ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி அலி வக்கிலி, உமா ஓயா திட்ட முகாமையாளர் மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் இது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது..

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் சமூக-பொருளாதார கட்டமைப்பை மீட்டெடுக்க உதவி

ஐரோப்பிய ஒன்றியம் அதன் அமுலாக்கப்பங்காளியான ‘வேல்ட் விஷன்’ உடன் இணைந்து பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் சமூக – பொருளாதாரக்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தின் 18 மாதகாலத்துக்கான 2 மில்லியன் யூரோ நிதியுதவியின்கீழ் ‘கிரேஸ்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ‘கீழ்மட்ட மோதல் தடுப்பு’ செயற்திட்டம் வத்தளை பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக கற்பிட்டி, நவகத்தேகம, முந்தல் மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளிலும் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தினால் சமூக – பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய விரிவான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ‘கிரேஸ்’ செயற்திட்டத்தின் ஊடாக சுமார் 130,000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்செயற்திட்டத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் டெனிஸ் சைபி, ‘இலங்கை பாரிய நெருக்கடிக்கு மத்தியில் இருப்பதுடன், இது இலங்கையர்கள் பலரை மிகமோசமாகப் பாதித்துள்ளது. எனவே வெகுவாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரை அடையாளங்காணும் நோக்கிலேயே நாம் ‘வேல்ட் விஷன்’ அமைப்புடன் இணைந்து பணியாற்றிவருகின்றோம். அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரில் பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் தொடர்பில் நாம் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை விரைவில் பொருளாதார மீட்சியை எட்டும். – இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு மன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது திறைசேரியின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு மன்ற இம்முயற்சியினை பாராட்டிய பிரதி உயர் ஸ்தானிகர்,

இவ்வாறான அமர்வுகளை 6 மாதங்களுக்கு ஒரு தடவை ஒழுங்கமைக்கவேண்டுமென்ற முன்மொழிவுக்கு தனது ஆதரவினையும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியம் குறித்த விவகாரங்களில் இலங்கை மக்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவினை வழங்கியதாக தெரிவித்த அவர்,

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஒப்புதல்

இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

இதன்படி, எரிசக்தி துறை ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அதன்படி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து பணியாற்றவுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் செயற்படுத்தப்படும் சூரிய சக்தி, காற்றாலை திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

சிறுவர்களுக்காக ஜப்பான் 1.8 மில்லியன் நன்கொடை

இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறுவர்களுக்கு உதவுவதற்காக யுனிசெப் நிறுவனத்திடம் ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதனூடாக 6 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர், கனடியத் தூதுவர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை ஆகிய மூன்று தூண்களிலும் நிலவும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் செயல்முறையை ஜனநாயகமயமாக்கல் போன்ற விடயங்களும் இதன்போது கருத்தில்கொள்ளப்பட்டன.

இங்கிலாந்திற்கும் இலங்கைக்கும் இடையே உறவுகளை வலுப்படுத்த தீர்மானம்

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செயற்படுவதற்கு இலங்கையும் பிரித்தானியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்கச் செயலாளரை லண்டனில் சந்தித்து பேசிய போதே இதுதொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை மற்றும் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கும் இரு தரப்பினரும் இச்சந்திப்பின் போது இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

22வது கொமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அலி சப்ரி லண்டன் சென்றுள்ளார்.

இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லை –

இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மை அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்தில் குறித்த குழு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்தோடு அரச அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் கொண்டிருந்த நிபுணத்துவத்தின் அடிப்படையில் அதற்கு தகுதி பெற்றிருந்தார்கள் என்றும் ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

மேலும் பாலின சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் உள்ளிட்ட பல அபிவிருத்திகள் இலங்கைக்குள் இடம்பெற்றுள்ளதாகவும் அனைத்து மக்களுக்குமான மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

21 ஆவது திருத்தும் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனநாயக ஆட்சி, முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வை, அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் அமைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.