டிஜிட்டல் கட்டண முறை (UPI) மூலம் இந்திய சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறையில் (UPI) QR குறியீட்டை பயன்படுத்தி ஒன்லைனில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

NPCI International Payments Limited மற்றும் இலங்கையில் LankaPay Pvt Ltd நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் 10,000 வணிக நிறுவனங்கள் தம்மை இந்த முறையில் பதிவு செய்துள்ளன.

மேலும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் தடையற்ற கொடுப்பனவு வசதிகளுக்காக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கையை 65,000 வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

UPI பணப்பரிமாற்ற முறையை ஒன்லைன் மூலம் அறிமுகம் செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்,

இது எங்களிற்கு மிகவும் முக்கியமான தருணம். இந்திய பிரதமர் மோடி அவர்களே இது உங்களிற்கு இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த தருணம். இராமர் கோயிலை திறந்துவைத்தமைக்காக நான் உங்களை பாராட்டவேண்டும்.

எங்கள் இரு நாடுகளிற்கும் இடையில் பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் தொடர்புகள் பிணைப்புகள் உள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் இருநாடுகளிற்கும் இடையில் பணப்பரிமாற்றம் இருந்து வந்துள்ளது. அதிஸ்டவசமாக அவ்வேளை மத்திய வங்கி என்ற ஒன்று இருக்கவில்லை.

இலங்கையின் உலர்வலயங்களின் கிராமங்களில் ஆயிரக்கணக்கான வருடங்களிற்கு முற்பட்ட – தென் இந்திய காலத்து நாணயங்கள் காணப்பட்டமை இலங்கை தென் இந்திய ஒத்துழைப்புகள் மிகவும் வலுவாக காணப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளன.

ஆகவே, நாங்கள் இன்று என்ன செய்கின்றோம் என்றால் அவற்றை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துகின்றோம்.

இலங்கைக்கு அதிகளவு இந்திய சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் நிலையேற்படும்போது எங்களின் அனைத்து கிராமங்களிலும் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை அதிகளவிற்கு பயன்படுத்தப்படும்.

“தமது இந்திய விஜயத்தின் “தொலைநோக்கு அறிக்கை”யின் பிரகாரம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறை, சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இதன்மூலம் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை தொடர்புகளை ஏற்படுத்தும் எனவும் இதனால் 400,000 வர்த்தகர்கள் பயனடைவார்கள்.

இந்திய வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தை நம்பிக்கைக்குரிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகவும் மொரீஷியஸுடனான ஒத்துழைப்பு புதிய தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சியை மேலும் உறுதிசெய்யும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்,

இந்தியாவும் மொறிசீயசும் வலுவான பொருளாதார கலாச்சார தொடர்புகளை கொண்டுள்ளன. இன்று நாங்கள் இந்த உறவுகளிற்கு மேலுமொரு புதிய பரிமாணத்தை வழங்குகின்றோம் என்றார்.

இதன்போது உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி,

ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும்முறையினால் இலங்கையிலும் மொறீசியசிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் நன்மையடைவார்கள்.

ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை காரணமாக இந்த இரு நாடுகளிலும் துரிதமாகவும் இலகுவாகவும் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடலாம் என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை உலகின் தென்பகுதி நாடுகள் மத்தியிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்துகின்றது. எங்கள் உறவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த பத்து வருடங்களில் சவாலான தருணங்களில் இந்தியா தனது அயல்நாடுகளில் எவ்வளவு தூரம் ஆதரவாக உள்ளது என்பதை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.