11 இளைஞர்கள் கடத்தல் : வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு!

கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கப்பம் பெறும் நோக்கத்தில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கியமை  தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையையும்  மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொண்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா (தலைவர்) நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2030 இனுள் இலங்கை இராணுவத்தை பாதியாகக் குறைக்க கொள்கை ரீதியில் தீர்மானம்

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கை இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போது இரண்டு இலட்சத்தைத் தாண்டியிருக்கும் இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை பாதியாகக் குறைப்பதே அரசின் இலக்கு.

2030 ஆம் ஆண்டுக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க உத்தேசித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் சிறிலங்கா அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே திண்டாடி வருகிறது.

அதிலிருந்து ஓரவுக்கேனும் மீளும் வகையில் முப்படையிலிருந்து ஆளணி வளத்தை குறைக்க முடிவு செய்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

மண்டைதீவில் கடற்படையினரின் காணி சுவீகரிப்புக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை(12) காலை 7.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் நகர்ந்து சென்று வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது கடற்படை முகாம் முன்பாக பொலிஸார் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கலகமடக்கும் கடற்படையினர் தயார் நிலையில் இருந்ததுடன் கடற்படையினர் போராட்டகாரர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தின் நிறைவில் போராட்டகாரர்களுக்கு பிஸ்கட் குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினருக்கு பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது “எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ பிஸ்கட் சாப்பிடுவோம்” என கடற்படை அதிகாரியை பார்த்து காணி உரிமையாளர் பேசினார்.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்திய நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் வாஹிருடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் விசேட யோகா நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தின் 9வது பதிப்பை முன்னிட்டு இந்திய உயர் ஸ்தானிகராலயமும் உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையமும் ஒன்றிணைந்து புதன்கிழமை 21ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்தில் விசேட யோகா நிகழ்வொன்றினை ஒழுங்கமைத்திருந்தது.

யோகா தினத்தினை அனுஸ்டிப்பதற்காக 19 இந்திய கடற்படைக் கப்பல்கள் உலகளாவிய ரீதியில் பணிநிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 2023 சர்வதேச யோகா தினத்தினைக் குறிக்கும் தனித்துவமிக்க முயற்சியான பூகோள சமுத்திர வளையத்துடன் கொழும்பையும் இணைக்கும் முகமாக, இந்திய நீர்மூழ்கிக் கப்பலான வாஹிரிலும் அதற்கருகிலும் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னே, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, மேற்கு கடல் பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் பி.எஸ்.டி.சில்வா, இலங்கை கடற்படையினர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பணியாளர்கள், ஐ.என்.எஸ் வாஹிர் மாலுமிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் ஒன்றிணைந்திருந்தனர்.

இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர், இந்தியா – இலங்கை இடையிலான பொதுவான பாரம்பரியமாகக் காணப்படும் யோகாவின் நிலைமாற்று சக்தி தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் உள்ள யோகா நிறுவனங்கள் மற்றும் யோகா ஆர்வலர்களின் வலுவான ஆதரவு மற்றும் உத்வேகத்துடன் கடந்த 50 நாட்களும் இந்திய உயர் ஸ்தானிகராலயமும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையமும் இணைந்து நாடளாவிய ரீதியில் 100க்கும் அதிகமான யோகா சார்ந்த நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்ததாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

மேலும், 2023 சர்வதேச யோகா தினத்தை அனுஸ்டிப்பதற்காக ஐ என் எஸ் வாஹிர் இலங்கைக்கு மேற்கொண்டிருக்கும் விஜயம் மூலமாக நல்லெண்ணம் நட்புறவு மற்றும் தோழமையின் செய்தி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய கடற்படையின் கல்வாரி ரகத்தைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் வாஹிர் அண்மையில் சேவையில் இணைக்கப்பட்டிருந்ததுடன் முதற்தடவையாக வெளிநாடொன்றின் துறைமுகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

2023 ஜூன் 19 முதல் 22 வரை இந்தக் கப்பல் கொழும்பில் தரித்து நின்ற காலப்பகுதியில் பாடசாலை மாணவர்கள், சாரணர்கள், தேசிய காலாட்படையினர், இலங்கை கடற்படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இக்கப்பலுக்குள் விஜயம்செய்து பார்வையிட்டிருந்தனர்.

அதுமாத்திரமல்லாமல் வெளிக்கள நிகழ்வுகளாக கொழும்பைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களைச் சந்தித்திருந்த ஐ என் எஸ் வாஹிர் நீர்மூழ்கியின் மாலுமிகள், சில பாடசாலைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாஹர் கோட்பாடு மற்றும் அயலுறவுக்கு முதலிடம் ஆகிய இந்திய கொள்கைகளின் அடிப்படையில் இரு அயல் நாடுகளினதும் கடற்படைகள் இடையிலான சகோதரத்துவம் மற்றும் ஒன்றிணைவினை இந்த விஜயம் மேலும் வலுவாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

PNS SHAHJAHAN எனும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கடற்படைக கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

PNS SHAHJAHAN என்பது 134.1 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது 169 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுவதோடு இதற்கு கேப்டன் Adnan Laghari TI தலைமை தாங்குகின்றார்.

இரு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் வகையில் குறித்த கப்பல் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளது.

அத்துடன் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, குறித்த கப்பல் எதிர்வரும் 04 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறை துறைமுகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கடற்படை

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நடவடிக்கை பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தம்பாட்டி இறங்குதுறை காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஊர்காவற்துறை மீனவர்களுக்கு சொந்தமான தம்பாட்டி இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடற்படையினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் குறித்த அரச காணியிலிருந்து கடற்படையினர் வெளியேறாத நிலையில், நில அளவை திணைக்களத்தினர் அந்த காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு சென்ற நிலையில் மக்கள் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிராந்தியத்தின் பாதுகாப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம் – அமெரிக்கத் தூதுவர்

“தரையிலும் கடலிலும் இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையில் இரு நாட்டு படைகளுக்கு இடையில் இடம்பெற்ற பயிற்சியின் வெற்றியானது, 75 ஆண்டுகளாக வலுவான அமெரிக்க – இலங்கை இருதரப்பு உறவின் ஆழத்திற்கு ஒரு சான்றாகும்” என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

அத்துடன் “இப்பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்றுவதற்காக இப்பங்காண்மையினை மேலும் அதிகரிப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

எட்டு நாட்களாக நேரடியாகவும் மற்றும் கடலிலும் நடைபெற்ற, இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவத்தினரிடையே ஒத்துழைபை மேம்படுத்திய Cooperation Afloat Readiness and Training (CARAT)/Marine Exercise (MAREX) Sri Lanka 2023 பயிற்சியானது ஜனவரி 26ஆம் திகதி கொழும்பில் நிறைவடைந்தது.

இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்கத்தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பிலும், திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இலங்கை கடற்படை (SLN) தளங்களிலும், மற்றும் லட்சத்தீவு கடலிலும் ஜனவரி 19-26 வரை CARAT/MAREX Sri Lanka பயிற்சி நடைபெற்றது.

மனிதாபிமான உதவி, அனர்த்த நிவாரணம் (HADR) மற்றும் கடல்சார் பாதுகாப்பு திறன்கள் ஆகிய விடயங்களில் நிபுணத்துவத்தை அதிகரிப்பதில் இப்பயிற்சியானது கவனம் செலுத்தியது.

“எமது செழிப்பிற்காக கடலை நம்பியிருப்பதும், அனைத்து இறையாண்மை கொண்ட அரசுகளும் ஒன்றுக்கொன்று அமைதியான முறையில் தொடர்பு கொள்ளவும், விதிகள் அடிப்படையிலான ஒரு ஒழுங்கினைப் பின்பற்றவும் கூடிய ஒரு உலகத்தைப் பற்றிய எமது பொதுவான தொலைநோக்கும் எமது கடல்சார் வேர்களில் இருந்து வருகிறது” என அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் துணைக் கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் ஜொக்கின் ஜே. மார்டினெஸ் டி பினிலோஸ் கூறினார்.

“இந்தப் பயிற்சியும், அதை நிஜத்தில் மேற்கொள்வதற்கு உதவிய அனைவரின் முயற்சிகளும், எமக்குப் பொதுவான அந்தத் தொலைநோக்கினை அடைவதில் அமெரிக்காவும் இலங்கையும் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கான ஒரு சான்றாக விளங்குகின்றன.”

இலங்கை கடற்படையின் கடலோர ரோந்துக் கப்பல்களான SLNS கஜபாஹு (P 626) மற்றும் SLNS விஜயபாஹு (P 627) என்பன 13ஆவது Marine Expeditionary Unit (MEU) உடன் நிலம் மற்றும் நீர் இரண்டிலும் இயங்கக்கூடிய போக்குவரத்து கலத்துறை மேடையான USS Anchorage (LPD 23) இனைக் கடலில் சந்தித்தன.

இவ்வருட பயிற்சியில் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றின் பங்கேற்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இரண்டு USN தரையிறங்கும்கலன்கள் முள்ளிகுளத்தின் ஒரு கடற்கரைப் பகுதிக்கு துருப்புக்கள், பொருட்கள் மற்றும் வாகனங்களை HADR பயிற்சிக்காக கரைக்கு இடம்மாற்றின. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பயிற்சிகள், ஒரு உருவகப்படுத்தப்பட்ட அனர்த்த சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கும் தொடர்பாடலை மேற்கொள்வதற்குமான பங்காளர்களின் திறனை பரீட்சித்து அதை மேம்படுத்தியது.

“இந்தப் பயிற்சியில் பங்குபற்றிய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்கு நான் நன்றி கூறுவதுடன், எதிர்பார்ப்புகளையும் தாண்டி சிறப்பாக இப்பயிற்சியை நடாத்துவதற்காக கடந்த சில நாட்களாக வெளிப்படுத்தப்பட்ட அனைத்து கடின உழைப்பு மற்றும் தொழில்வாண்மைத்துவம் ஆகியவற்றை நான் மிகவும் பாராட்டுகிறேன்” என இலங்கை கடற்படையின் கட்டளைத்தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

“எம்மனைவருக்கும் பொதுவான நலன்களை திறம்பட கையாளுவதற்காக நாம் பேணிவரும் வலுவான உறவுகளைப் பேணிக்காப்பதற்காக இலங்கை, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையேயான இந்த நல்லுறவானது எதிர்காலத்தில் மென்மேலும் தொடரும் என நான் நம்புகிறேன்.” எனவும் அவர் தெரிவித்தார்.

கடலில் நடத்தப்பட்ட மேலதிக பயிற்சிகளுள் பிரிவு தந்திரோபாயங்கள், பார்வையிடல், ஏறுதல், தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் (VBSS), கடலில் வைத்து மீள்நிரப்புதல் தொடர்பான அணுகுமுறைகள் மற்றும் உளவு மற்றும் துப்பாக்கிப் பயிற்சிகள் ஆகியவை உள்ளடங்குகின்றன.

VBSS பயிற்சிகள், இப்பயிற்சியின் கடலில் நடைபெற்ற பகுதியில் பங்கெடுத்த SLN கப்பல்களின் தளங்களில் துருப்புகள் மற்றும் பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் போன்ற பயிற்சிகளை Anchorage மேலிருந்த உலங்குவானூர்திகள் வெற்றிகரமாக மேற்கொண்டன.


கரையில் நடைபெற்ற விடயங்களுள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அவர்களால் நடாத்தப்பட்ட இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவங்களின் உறுப்பினர்களுடனான பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒரு வட்டமேசை மாநாடு, இரு நாட்டு கடற்படை வாத்தியக்குழுக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள், ஒரு விளையாட்டு தினம் மற்றும் ஒரு தொடர்ச்சியான சமூக சேவை நடவடிக்கைகள் என்பன உள்ளடங்கியிருந்தன.

“இந்த ஐந்தாவது CARAT/MAREX Sri Lanka பயிற்சியின்போது, எமது இரு நாடுகளுக்கும் செயன்முறைப் பிரயோகத்துடன் கூடிய அறிவுப் பரிமாற்றங்களை நடாத்த முடிந்தது,” என 13ஆவது MEU இன் படைப்புரிவுகளை தரையிறக்கும் அணி 2/4 இன் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்னல் ஜாரெட் ரெட்டிங்கர் கூறினார். “அவ்வாறு செய்வதன் மூலம், நாங்கள் எங்களது திறன்களைக் கூர்மைப்படுத்தினோம், இணைந்து செயற்படும் திறனை மேம்படுத்தினோம், மற்றும் ஒரு சுதந்திர மற்றும் திறந்த இந்தோ- பசிபிக்கிற்கான ஒரு பரஸ்பர தொலைநோக்கிற்காக இணைந்து பணியாற்றினோம்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கரையில் நடைபெற்ற பயிற்சிகள் சுழியோடுதல் மற்றும் நீருக்கடியிலான கட்டுமானம், மருத்துவ உதவி மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு போன்ற விடயங்கள் தொடர்பான விடய நிபுணத்துவ பரிமாற்றங்களைக் கொண்டிருந்தன. மேலதிகமாகப் பங்குபற்றிய அமெரிக்க அலுவலர்கள் மற்றும் கப்பல்களுள் U.S. 7ஆவது கப்பற்படையின் ஒரு P-8A Poseidon கப்பல் மற்றும் அதன் அதிகாரிகள், (CTF) 72, CTF 73, CTF 76/3, DESRON 7 படையணியின் கட்டளைத்தளபதி மற்றும் Amphibious Squadron 7 என்பன உள்ளடங்கியிருந்தன.

CARAT/MAREX Sri Lanka என்பது, பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணங்களை வழங்குதல் போன்ற விடயங்களைப் பயிற்சி செய்தல், கடல்சார் புரிதல், பங்காண்மைகள் மற்றும் இணைந்து செயற்படும் திறன் ஆகியவற்றை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்ட இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு இருதரப்பு பயிற்சியாகும்.

CARAT தொடரானது அதன் 28ஆவது வருடத்தில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்புச் சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவும் அதன் பங்காளர் படைகளும் இணைந்து செயற்படுவதற்கான அவற்றின் திறன்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பன்னாட்டுப் பயிற்சிகளை கொண்டுள்ளது.

யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பலின் இலங்கை வருகை முக்கியமானது – அமெரிக்க பிரதி தூதுவர் டொக்ளஸ் இ.சோனெக்

இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையில் இரு நாட்டு படைகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி திட்டமானது 2023 ஆம் ஆண்டில் முக்கியமானதாகவே கருதப்பட வேண்டும். ஏனெனில் இரு நாடுகளுக்கு இடையிலான 75 வருட கால இராஜதந்திர உறவினை நினைவுக்கூறும் இத்தருணத்தில் இருதரப்பு பல்துறைசார் உறவுகள் மற்றும் பேரிடரின் போது மனிதாபிமான ஒத்துழைப்புகள் போன்ற துறைகளை வலுப்படுத்தும் வகையில் ஆர்வத்துடன் இந்த கூட்டுப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பிரதி தூதுவர் டொக்ளஸ் இ. சோனெக் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள கூட்டு பயிற்சிகளில் பங்கேற்க வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படையின் 7 ஆவது படைப்பிரிவை சேர்ந்த யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பல் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே பிரதி தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமெரிக்க கடற்படையின் 7 ஆவது படைப்பிரிவை சேர்ந்த யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைகளுடன் ஒருவாரக்கால கூட்டுப்பயிற்சிகளை முன்னெடுக்கும் வகையில் இந்த கப்பல் கொழும்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய கடற்பகுதிகளிலும் இந்த போர் கப்பல் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுப்பட உள்ளது.

CARAT/MAREX என்பது கொழும்பு, திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய கடற்படை தளங்களில் முன்னெடுக்க கூடிய இருதரப்பு கடல்சார் பயிற்சியாகும். விசேடமாக இம்முறை ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையினரும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் கூட்டாண்மையின் 75 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இந்த கூட்டுப்பயிற்சி திட்டங்களுக்கு அப்பால் கலை, கலாசார நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையின் யோசனைகள் மற்றும் தந்திரோபாயங்களை பரிமாறிக்கொள்ளும் வகையிலும் நவீன உத்திகளில் போர் மூலோபாயங்களை பயிலும் வகையில் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பலின் துணை கட்டளையதிகரி கெப்டன் சீன் லூயிஸ் தெரிவித்தார்.

யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பலானது கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுப்பட கூடியதாகவும் அதனுடன் தொடர்புப்பட்ட பயிற்சி நடவடிக்கைகளை ஈடுப்பட கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் உட்பட போர் வாகனங்களை தாங்கி செல்ல கூடிய வல்லமை இந்த கப்பலுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் மற்றும் வான் பாதுகாப்பு, சிறிய படகு செயல்பாடுகள் மற்றும் கடல் பாதுகாப்பு அணுகுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த ஒருவார கால பயிற்சி திட்டம் அமையும் எனவும் கூறினார்.

ஒவ்வொரு பயிற்சிகளும் படைகளுக்கு இடையிலான சிறந்த ஒத்துழைப்பை மிகச்சரியாக பிரதிபலிக்கிறது என்றும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல், அறிவு, திறன் மற்றும் இலக்குகள், கலாச்சாரங்கள் மற்றும் இலட்சியங்கள் பற்றிய புரிதலை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் இருதரப்பு பங்காளித்துவத்தை வலியுறுத்தும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி, பிரதமரை சந்தித்தார் இந்திய கடற்படைத் தளபதி

இருதரப்பு உறவுகளை வலுவாக்க இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த திங்களன்று கொழும்பை வந்தடைந்த இந்திய கடற்படை தளபதி நேற்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது , பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதியினை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தினை வழிநடத்திச்செல்வதில் இலங்கையின் வகிபாகமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , இந்திய கடற்படைத் தளபதி பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் சந்தித்ததோடு , அவருடனான சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கை இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் இரு நாடுகளினதும் பாதுகாப்பு படையினரிடையில் தற்போதுள்ள உறவினை மேலும் வலுவாக்குவதற்கான மார்க்கங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.