கோட்டாவை ஜனாதிபதியாக்கிய முடிவு தவறானது – ரோஹித அபேகுணவர்த்தன

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிக்க எடுத்த முடிவு மிகத் தவறானது என்று ராஜபக்சக்களின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன பகிரங்கமாகத் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதிப் பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவை நியமிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த முடிவு சரியானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த முடிவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

நாடு வங்குரோத்து நிலையடைந்தமைக்கு ராஜபக்‌ஷ குடும்பமே காரணம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

ராஜபக்ஷ குடும்பம் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்ததால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் இன்று சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள். நாட்டின் இன்றைய அவல நிலையினால் மன வேதனைக்குள்ளாகியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மதுகம நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நவ லங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் இன்றைய அவல நிலையை கண்டு மன வேதனையடைகிறேன். முழு உலகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த இலங்கை இன்று ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் மோசடியினால் வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் தற்போது சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளதை பொருளாதார பாதிப்பு என்ற வரையறைக்குள் மாத்திரம் வைத்து மதிப்பிட முடியாது.பொருளாதார பாதிப்பினால் சமூக கலாசாரம்,நல்லிணக்கம்,தேசிய பாதுகாப்பு,கருணை,பிறருக்கு உதவி செய்தல் என அனைத்து நல்ல விடயங்களும் சீரழிந்து விட்டது.பொருளாதார பாதிப்பினால் நாடு சீரழிந்து விட்டது.

எனது 11 வருட ஆட்சிகாலத்தில் யுத்தத்துடன் போராடினேன்.ஒரு யுத்தத்தை புரிந்துகொண்டு மறுபுறம் நாட்டை அபிவிருத்தி செய்தேன்.பதவி காலம் முடிந்த பிறகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆட்சியை ஒப்படைக்கும் போது நாட்டில் ரூபாவும் இருந்தது,டொலரும் இருந்தது,

ராஜபக்ஷ குடும்பம் மக்களாணை என குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள்.ஒரு குடும்பம் முழு நாட்டையும் சூறையாடியது. வரையறையற்ற அரச முறை கடன்களினாலும் ,அனைத்து அபிவிருத்திகளிலும் மேற்கொள்ளப்பட்ட மோசடியாலும் நாடு பாரிய கடன் சுமையை எதிர்கொண்டது.

ராஜபக்ஷ குடும்பமும்,அவர்களை சார்ந்தோரும் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்தார்கள். ஊழல் மோசடி தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தவில்லை,அகப்படாத வகையில் ஊழல் மோசடிகளை செய்யுங்கள் என அவர் அவரது சகாக்களுக்கு ஆலோசனை வழங்கினார். இறுதியில் நேர்ந்தது என்ன பொருளாதார பாதிப்பு முழு நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஆட்சியை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் அரசியல் செய்கிறார்கள்.நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் நலனை  கருத்திற் கொண்டு மிகுதியாக இருக்கும் வளங்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ஷர்கள் கௌரவமாக அரசியலில் இருந்து விலக வேண்டும். அதுவே நாட்டுக்கு செய்யும் அளப்பரிய சேவையாக காணப்படும் என்றார்.

கோட்டாபயவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் 3 மணிநேர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபாய் பணம் தொடர்பிலேயே இதன்போது வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானிலுள்ள இல்லத்திற்குச் சென்று வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

மகிந்த, கோட்டாபயவுக்கு ஏனைய நாடுகளும் தடை விதிக்க வேண்டும்! – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் ஒரு முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் கடற்படை அதிகாரி மீது தடை விதித்து கனடா மேற்கொண்டுள்ள நட வடிக்கைகளை ஏனைய அரசாங்கங்களும் பின்பற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண் காணிப்பு அமைப்பின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார் மனித உரிமைகளைப் பாதுகாக்க ஒரு நாடு எடுத்த சக்தி வாய்ந்த முடிவு இது என்று தெரிவித் துள்ள மீனாட்சி கங்குலி, உலகின் மற்ற பெரிய நாடுகளும் இதே போன்ற நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

1983 முதல் 2009 வரை இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரின் போது செய்யப்பட்ட “மொத்த மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில்” அனைவரும் சம்பந்தப்பட்டவர்கள் – என்று அவர் கூறுகிறார்

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:- கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, கனடா “சர்வதேச சட் டத்தை மீறுபவர்களுக்கு எதிரான சர்வ தேச தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார். இதில் பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் ஆகியவை அடங்கும்.

மகிந்த ராஜபக்ஷ 2005-2015 வரை ஜனாதிபதியாக இருந்தார், உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்கள் உட்பட, இலங்கை இராணுவப் படைகள் ஏராள மான போர்க்குற்றங்களை இழைத்துள்ளன. இராணுவம் மருத்துவமனைகள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று காயப்படுத்தியது. பல போராளிகள் மற்றும் பொதுமக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளனர் . ஐக்கிய நாடுகள் சபை, ஊடகங்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பிற குழுக்கள் அரசாங்கப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகளின் விரிவான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச போரின் இறுதிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். போர்க்குற்றங்களை தவிர, ஊடகவியலாளர்கள் மற்றும் செயல்பாட் டாளர்களின் கடத்தல் மற்றும் கொலை செய்ததில் தொடர்புடையவராக கருதப் படுகிறார் . அவர் 2019 இல் ஜனாதிபதி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதாரத்தை அவர் தவறாகக் கையாண்டதால் தூண்டப்பட்ட வெகுஜன எதிர்ப்புகள் அவரை ஜூலை 2022 இல் இராஜிநாமா செய்யவைத்தன.

உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட ‘மொத்த மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில்’ சம்பந் தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு முன்னாள் இராணுவத்தினருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடுத்த கோரிக்கைகள் நீண்டகாலமாக கவனிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன. மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஆணையர் “மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் நம்பகத் தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மேலும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை ஆராயுமாறு” அரசாங்கங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

கனடாவின் பொருளாதாரத் தடை கள் முக்கியமானவை, ஏனெனில் – முதல் முறையாக – அவை குற்றங்கள் செய்யப் பட்டபோது ஒட்டுமொத்த கட்டளையில் இருந்தவர்களை குறிவைக்கின்றன. இதை மற்ற அரசுகளும் பின்பற்ற வேண்டும். பாரதூரமான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை அவர்களின் தலைமைப் பாத்திரம் எதுவாக இருந்தா லும் அவர்களைக் கணக்குப் போட்டு நீதியை உறுதிப்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது – என்றும் கூறியுள்ளார்

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸ் விசேட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபாய் பணம் தொடர்பிலேயே   வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பொலிஸ் விசேட குற்றப் பிரிவிற்கு  கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு தடை விதிக்க பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு எதிராக கனடா தடைவிதித்துள்ள நிலையில், பிரிட்டனின் பழமைவாதக்கட்சி அமைச்சர்கள் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து மறுத்துவருவது குறித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் கரெத் தோமஸ் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

மிகமோசமான மனித உரிமை மீறல் குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகிய நால்வருக்கு எதிராக விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் தடைவிதிப்பதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டும் என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்திவரும் பின்னணியில், கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே கரெத் தோமஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் தடைவிதித்திருக்கின்றது.

ஆனால் இங்குள்ள பழமைவாதக்கட்சி அமைச்சர்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு உதவும் வகையில் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து மறுத்துவருகின்றார்கள்’ என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

தனிநபர்களை தடை செய்வதுமாத்திரம் போதாது- சர்வதேச நீதி பொறிமுறை அவசியம் – புலம்பெயர் செயற்பாட்டாளர்

தனிநபர்களை தடை செய்வது மாத்திரம் போதாது  குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தும் சர்வதேச பொறிமுறை அவசியம் என இலங்கையின் நீதி மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பின் ஆலோசகர் மரியோ அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

தடை ராஜபக்ச சகோதரர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அமெரிக்க கனடா இங்கிலாந்து போன்ற நாடுகளிடமிருந்து பல வருடங்களாக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது இலங்கை தான் தொடர்ச்சியாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது, எனவும் மரியோ அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு பின்னர் கனடா தடைகளை அறிவித்துள்ளமை தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள்  இலங்கையை துரத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தனிநபர்களை தடை செய்வது மாத்திரம் போதாது  குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தும் சர்வதேச பொறிமுறை அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் நாடு திரும்பவுள்ள கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற விண்ணப்பித்துள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் கடந்த  ஜூலையில் நாட்டை விட்டு வெளியேறி  சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர்  நாடு திரும்பினார்.

பின்னர் அவர் சமீபத்தில் டுபாய் நாட்டுக்குச்  சென்றுள்ள  நிலையில், குடியுரிமை தொடர்பான அவரது கோரிக்கையை அமெரிக்கா  இதுவரை பரிசீலிக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவிக்கையில்,

‘முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெறுவதற்கான எந்தக்   கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. கோட்டாபய ராஜபக்க்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் டுபாய் சென்றுள்ளார். இந்நிலையில்    இம்மாதம் 6 அல்லது 7 ஆம் திகதி அவர்  நாடு திரும்புவார்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறிய கோத்தபாய ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினர்கள்திங்கட்கிழமை (டிச. 26) அதிகாலை 2.55 மணிக்கு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய் நோக்கி சென்றதாகவும் அவர்கள் டுபாயிலிருந்து அமரிக்கா செல்ல உள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர்களோடு மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ, பேரப் பிள்ளையான டி.எச்.ராஜபக்ஷ ஆகியோரும் பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

Posted in Uncategorized

சீனி வரி மோசடி தொடர்பில் கோத்தாவை விசாரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு திட்டம்

சீனி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த வரியை 50 ரூபாவிலிருந்து 25 சதமாக குறைத்து இலங்கை அரசுக்கு கிடைக்க வேண்டிய 1,600 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரி வருமானத்தை இழக்கச் செய்து பாரிய நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட பண்ட வரி 25 சதமாக குறைக்கப்பட்டது.

இந்த வரிக்குறைப்பிற்கு 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட பண்ட வரி சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு நிதி அமைச்சின்  அதிகாரிகளிடம் விசாரணை நடாத்திய போது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபயவின் ஆலோசனைக்கமைய வரிக் குறைப்பு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த வரிக் குறைப்பு அப்போதைய வர்த்தகத்துறை அமைச்சரான தனக்கே தெரியாமல் செய்யப்பட்டது எனவும், அரச அதிகாரிகள் சிலர் அது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றில் குரிப்பிட்டிருந்தார்.

இந் நிலையில், குறித்த வரி மோசடி தொடர்பில் விடயங்களை தெரிந்தோரின் வாக்கு மூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஓர் அங்கமாக  கடந்த 19ஆம் திகதி திங்களன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் ஆஜராக அமைச்சர் பந்துலவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும்  அன்றைய தினம் ஆஜராகாத அவர் பிரிதொரு திகதியை கோரியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி நடந்த அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு (கோபா) கூட்டத்தின் பின்னர் அரசின் உத்தரவிற்கமைய,  நிதி,பொருளாதார ஸ்திரம் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன செய்த முறைப்பாட்டை மையப்படுத்தி,  பாரிய அளவில் வரி குறைப்பின் ஊடாக கிடைக்கப்பெற்ற  பிரதிபலன் நுகர்வோரை சென்றடையாது வேறு தரப்பொன்று கொள்ளை இலாபம் ஈட்டியுள்ளதா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதிக்குற்ற விசாரணை பிரிவு முதலாம் இலக்க விசாரணை அறை ஊடாகவும் விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.