சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது – சுனில் ஹந்துனெத்தி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர்.

சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது.

பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால் எங்கும் மீண்டுள்ளதா?

நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார்.

IMF உதவி இலங்கைக்கான நிரந்தர ‘பிணையெடுப்பு’ அல்ல – பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டு

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம் ஒரு ‘பிணையெடுப்பு’ (பெயில்-அவுட்) அல்ல. இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படுமே தவிர, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு வழங்கப்படமாட்டாது.

எனவே, நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இந்த உதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளியல் நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கைக்கான 3 பில்லியன் டொலர் உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளியல் அமைப்புக்களும், பொருளாதார நிபுணர்களும் இதுபற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

‘அட்வகாட்டா’ அமைப்பு

இலங்கைக்கான 17ஆவது உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை வழங்கியுள்ள அனுமதி வெறும் ஆரம்பம் மாத்திரமேயாகும். கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் அல்லது மந்தகதியிலான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக கையிருப்பு பற்றாக்குறை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகளுக்கு உதவுவதே நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச் செயற்றிட்டம் ஒரு ‘பிணையெடுப்பு’ (பெயில்-அவுட்) அல்ல. மாறாக இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படும். இது இலங்கை இருதரப்பு, பல்தரப்பு மற்றும் நிதியியல் சந்தைகளை நாடுவதற்கு உதவும்.

எது எவ்வாறிருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம், இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வினை வழங்காது.

ஆகவே, தற்போது சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைத் தொடர்ந்து முதலாவது கட்டமாக இலங்கைக்கு 333 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும். அதனையடுத்து கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான மதிப்பீடு மற்றும் சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்றிட்ட நிபந்தனைகள் என்பன பகிரங்கப்படுத்தப்படும். எஞ்சிய நிதி சுமார் 4 வருடகாலத்தில் வழங்கப்படும்.

இருப்பினும், அது நாணய நிதியத்தின் நிபந்தனைகள் உரியவாறு நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருக்கிறது. இருப்பினும், இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதைத் தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இவ்வுதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும் என்று ‘அட்வகாட்டா இன்ஸ்டியூட்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பு

வழமையாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்கள் பிரச்சினையின் அறிகுறிகளை தணிப்பதற்கு ஏற்ற வகையிலேயே வடிவமைக்கப்படும். மாறாக, அது அப்பிரச்சினைக்கான அடிப்படை காரணத்துக்கு தீர்வினை வழங்காது. அதேபோன்று இலங்கையை பொறுத்தமட்டில், இங்கு அடிப்படை பிரச்சினை நிர்வாகத்திலும், ஊழல் மோசடிகளிலுமே இருக்கின்றது என்பது தற்போது சர்வதேச நாணய நிதியத்துக்கும் ஏனைய அனைத்து தரப்பினருக்கும் தெளிவாக புரிந்திருக்கிறது.

இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய செயற்றிட்டம் இப்பிரச்சினையை கையாள்வதற்கு தவறியிருக்கிறது என்று ‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஷான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளியலாளர் ஸேர்கி லேனோ

இலங்கைக்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருப்பதுடன், முதற்கட்டமாக சுமார் 330 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்கியுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு நாணய மாற்றுக்கையிருப்பில் 15 சதவீத அதிகரிப்பு ஏற்படுவதுடன் அது அத்தியாவசிய பொருட்களின் உயர்வான இறக்குமதிக்கும், அதனைத் தொடர்ந்து மீட்சிக்கும் பங்களிப்பு செய்யும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பொருளியலாளர் ஸேர்கி லேனோ தெரிவித்துள்ளார்.

பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க்

இலங்கைக்கு அடுத்துவரும் 4 வருட காலத்தில் 3 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருக்கிறது.

கடந்த 1965ஆம் ஆண்டிலிருந்து இலங்கை 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கிறது. அவை அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன.

இலங்கைக்கு மீண்டுமொரு கடன் தேவையில்லை. மாறாக, கடந்த 1884 – 1950 வரையான காலப்பகுதியில் நடைமுறையில் இருந்ததைப் போன்ற ‘நாணயச்சபை’ முறைமையே இலங்கையின் தற்போதைய தேவை என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க் தெரிவித்துள்ளார்.

வரிச்சீர்திருத்தங்களில் தலையிடப் போவதில்லை – சர்வதேச நாணய நிதியம்

அரசாங்க வருமானம் பாதிக்கப்படாத வகையில் வரி மாற்றங்களில் தலையிடப்போவதில்லை என சர்வதேச நாணய நிதியம், இந்நாட்டின் தொழில் நிபுணர்களுக்கு உறுதியளித்துள்ளது.

வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதி தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் இலங்கையின் தொழிற்சங்கங்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

வரி சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களை தொடர்வது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்

மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்காமல் நாணய நிதிய கடனுதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – சபா குகதாஸ்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயம் இல்லை காரணம் ஐெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து பிரேமதாச ,சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச போன்ற ஐனாதிபதிகளின் காலத்திலும் கிடைத்தது ஆனால் அவ் உதவி மூலம் நாடு வளர்வதற்கு பதிலாக ஊழல்ப் பெருச்சாளிகளே வளர்ந்தன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை  உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை கிடைத்த உதவியை விட பெருந் தொகையான உதவி இம்முறை கிடைக்கவுள்ளது.

இவ் உதவி பல கடிமான நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் தான் இலங்கைக்கு கிடைக்கின்றது இதனால் சிறிது காலம செல்ல நிபந்தனைகளின் பாதிப்பை பொது மக்கள் எதிர் நோக்க வேண்டியுள்ளதை புரியாது பாராட்டுக்களும் வெடி வெடிப்புக்களும் நடைபெறுவதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

மனிதவுரிமை மீறல்களுக்கான நீதி கொடுக்கப்படாமல் உள் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நாணய நிதியத்தின் கடன் உதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சாத்தியமானது இல்லை.

ஆகவே, கிடைக்கும் கடன் உதவி ஊழல் வாதிகளை பாதுகாக்கவே பயன்பட போகிறது என்ற கசப்பான உண்மையை நாட்டு மக்கள் வெகு விரைவில் உணர்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாணய நிதியத்திடம் கடன் வாங்கி இந்தியாவிடம் பெற்ற கடனின் ஒரு பகுதியை செலுத்திய இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட கடனில் ஒரு பகுதி இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கடன் தொகையில் 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட 330 மில்லியன் டொலர்கள், நிதி அமைச்சின் பிரதிச் செயலாளரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி இந்தியாவின் கடனுக்கான செலுத்தப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான கூடுதல் சுயாட்சியை IMF நிபந்தனையாக விதித்திருக்க வேண்டும்

இலங்கைக்கு நிதியை வழங்குவதற்கு முன்னர் தமிழ் சிறுபான்மையினருக்கு கூடுதல் சுயாட்சி என்ற விடயத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) நிபந்தனையாக விதித்திருக்க வேண்டும் என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

எனினும் அவரது கருத்துக்கள் கனேடிய கொள்கையை பிரதிபலிக்கின்றனவா என்பது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி எதனையும் கூறவில்லை.

எந்தவிதமான அளவீட்டின்படியும், இலங்கை தோல்வியுற்ற மற்றும் வங்குரோத்து நாடாகும்.

அத்துடன் நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிசெய்யும் அரசியல் மற்றும் பொருளாதாரத் தலைமை இல்லாத நாடு என்றும் ஹரி ஆனந்த சங்கரி கூறியுள்ளர்.

எனவே, சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களின் மொத்த மற்றும் கடுமையான மீறல்களில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் தமிழ் பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்த வேண்டும் என்று ஹரி ஆனந்த சங்கரி கோரியுள்ளார்.

ஐ.எம்.எவ் உதவியை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள் – சம்பிக்க

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) வின் இலங்கைக்கான கடன் உதவியை யாரும் எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் நாட்டின் எதிரிகள் எனத் எதிர்க்கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை மீதான 2ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐ.எம்.எஃப்.இன் நிபந்தனை மிகவும் கடினமானது குறிப்பாக 2026ஆம் ஆண்டாகும் போது எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 15.3 வரை அதிகரிக்க வேண்டும். அப்படியானால் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டி ஏற்படுகிறது. அதற்காக அரசாங்கம் கட்டண அதிகரிப்புகளுக்கு செல்லவேண்டி ஏற்படும் என அவர் மேலும் கூறினார்.

கடன் வாங்கி இளைஞர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி பெறப்பட்டமை இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் நாட்டை மேம்படுத்துவதற்கும் ஒரு படியாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், 4 வருடங்களில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி பெறுவதாகவும், இதன் முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்படும் எனவும் தெரிவித்தார்.

“கூடுதலாக, நாடு மற்ற தரப்புக்களிடமிருந்து விரைவான கடன் ஆதரவில் சுமார் 7 பில்லியன் டொலர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறது. சிலர் நாணய நிதியத்தின் கடன் வசதியை மற்றொரு கடனாகக் கருதுகின்றனர். அதே சமயம் மற்றொரு தரப்பினர் நாட்டின் மொத்தக் கடனையும் பெற்ற தொகையைக் கொண்டு அடைக்க முடியாது என்று கூறுகின்றனர்.

இந்த அறிக்கைகள் அறியாமையை அல்லது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விருப்பத்தை காட்டுகின்றன என்றார்.

பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“எதிர்கால செலவு மதிப்பீட்டை கணக்கில் கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் சரி செய்யப்படுகிறது. பணவீக்க விகிதத்தை 6-4 சதவீதம் என்ற நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட, கடன் வாங்கி வருமானம் ஈட்ட வேண்டும்“ என்றார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கான நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்க வேண்டும் – செல்வம் எம்.பி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நாட்டில் நீண்ட காலம் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் நாடாளுமன்றத்தில்தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு கடன் உதவியை வழங்குவதாக அதிபர் தெரிவித்துள்ளார். இந்த நிதி எமது ஏழை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்கும் அத்துடன் வைத்தியசாலைகள், பாடசாலைகளின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவும் வேண்டும்.

அதேவேளை, நாட்டில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்ச்சியாக ஏமாற்றமாகவே காணப்படுகிறது. அதன் முக்கியத்துவம் உணரப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளில் அதுவும் ஒரு அம்சமாக அமைய வேண்டியது அவசியம்.இந்த எமது கோரிக்கையையும் அதில் உள்ளடக்குமாறு நாம் சர்வதேச நாணய நிதியத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை, ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. ஆட்சியாளர்கள் ஊழல்களுக்கு முக்கியம் கொடுத்து செயற்பட்டமையே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டமைக்கான காரணமாகும். ஊழல்களைத் தடுப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் நீதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் அதிபரைக் கேட்டுக்கொள்கின்றோம். ஊழலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து நாடு செழிப்புள்ளதாக மாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான 10 நிபந்தனைகளுக்கு இணக்கம்

சர்வதேச நாணய நிதியத்துடனான 10 நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 10 நிபந்தனைகள் பின்வருமாறு.

1. ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வழங்குதல்.
2. ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
3. அரசின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிவிதிப்பு.
5. 2025 இல் செல்வ வரி மற்றும் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம்.
6. 2023 இறுதிக்குள் பணவீக்கத்தை 12% – 18% ஆகக் குறைத்தல்.
7. 2023 ஜூன் இல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்குதல்.
8. அதிக மாற்று விகித நெகிழ்வுத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும்.
9. மத்திய வங்கி மேலும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.
10. வலுவான சமூக பாதுகாப்பு வலை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

Posted in Uncategorized