சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை வருகை

நாட்டின் சமகால பொருளாதார நிலைவரம் தொடர்பில் மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

நாட்டின் அண்மையகால பொருளாதார நிலைவரம் குறித்தும், சர்வதேச நாணய நிதியத்தினால் வலியுறுத்தப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டங்களின் அடைவுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்தும் மதிப்பீடு செய்வதற்காகவே இக்குழு வருகைதரவிருப்பதாக நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு கடந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதலளித்தது. அதன்பிரகாரம் முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் கடன்நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட முதலாம் கட்டளமதிப்பீட்டுக்கு கடந்த மாதம் 12 ஆம் திகதி அனுமதி வழங்கிய நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை, அதன்மூலம் இரண்டாம் கட்டமாக 337 மில்லியன் டொலர் நிதியை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான இரண்டாம் கட்ட மதிப்பீட்டை இவ்வருடத்தின் முதல் அரையாண்டுக்குள் நிறைவுசெய்வதற்கு உத்தேசித்திருக்கும் நிலையில், எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கின்றது.

அதேவேளை இரண்டாம் கட்ட மதிப்பீட்டுக்கு முன்பதாக இலங்கை அதன் உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன்வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டவேண்டியது அவசியமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் அடுத்த வாரம் பெற்றுக் கொள்ள முடியும் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால், அன்றைய தினமே இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (06) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அன்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால் அன்றைய தினமே இரண்டாம் கட்ட கடன் தொகையையும் பெற்றுக் கொள்ள முடியும். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எம்மிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டாம் கட்ட கடன் தொகையும் கிடைக்காது, கடன் மறுசீரமைப்பையும் மேற்கொள்ள முடியாது என்று பரவலாகப் பேசப்பட்டது. எனினும் இது பொய்யாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் கிடைக்கும் என்று நம்புகின்றோம். சீனா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளன என்றார்.

Posted in Uncategorized

முதலாம் கட்ட மதிப்பீட்டுக்கு சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபை ஒப்புதல்

விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் இலங்கை தொடர்பான முதலாம் கட்ட மதிப்பீட்டுக்கு நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், இரண்டாம் கட்டமாக 330 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்கு வழங்கப்படுமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

அதேவேளை கடன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவாக கடன்மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாடு வெகுவிரைவில் எட்டப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ள நாணய நிதியம், அதில் ஏற்படும் தாமதம் இலங்கையின் பொருளாதார நிலைவரம் மோசமடைவதற்கும், நிதியியல் இடைவெளி அதிகரிப்பதற்கும், நிலைபேறான பொருளாதார வளர்ச்சி பாதிப்படைவதற்கும் வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் 48 மாதகாலத்தில் சுமார் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கான உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்டது. அதன்படி அக்கடன்தொகையில் முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் கடன்நிதி கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இலங்கைக்குக் கடனுதவியை வழங்குவதற்கு ஈடாக சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றியிருக்கின்றதா எனக் கண்காணிக்கும் நோக்கிலான முதலாம் கட்ட மதிப்பீடு  கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்றது. இருப்பினும் அம்மதிப்பீட்டின் இறுதியில் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் எட்டப்படாததன் காரணமாக இரண்டாம் கட்ட கடன்நிதி விடுவிக்கப்படும் காலப்பகுதியை உறுதிபடக் கூறமுடியாது என சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் அறிவித்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட தொடர் பேச்சுவார்த்தைகளின் விளைவாக முதலாம் கட்ட மதிப்பீடு தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

 இலங்கை அதிகாரிகளுடன் கொழும்பிலும், மொரோக்கோவின் மரகேச்சிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து எட்டப்பட்டுள்ள இந்த இணக்கப்பாடு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் மற்றும் பிரதித்தலைவர் கற்ஸியரினா ஸ்விரிட்ஸென்கா ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின் கீழ் இலங்கை தொடர்பான முதலாம் கட்ட மதிப்பீடு குறித்து சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.

 அரசாங்கத்தினால் முற்கூட்டியே அமுல்படுத்தப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நிதியியல் உத்தரவாதம் தொடர்பான தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்தல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையினால் இதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிதியியல் உத்தரவாதமானது கடன்மறுசீரமைப்பு செயன்முறை உரிய காலப்பகுதியில், கடன்சார் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யக்கூடியவகையில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை அளிக்கப்படுதலையும் உள்ளடக்கியிருக்கின்றது.

அதன்படி தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையினால் வழங்கப்பட்டுள்ள அனுமதியின் பிரகாரம் இலங்கைக்கு இரண்டாம் கட்டமாக 330 மில்லியன் டொலர் கடன்நிதி வழங்கப்படும். அதன்மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் இதுவரையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்நிதியின் பெறுமதி 660 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை இலங்கை அதிகாரிகள் கொண்டிருக்கும் அதேவேளை, பணவீக்க வீழ்ச்சி மற்றும் இவ்வருட இறுதியில் எதிர்பார்க்கப்படும் குறிப்பிடத்தக்களவிலான நிதியியல் சீராக்கம் என்பன உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும்.

கடந்த ஜுன்மாத இறுதியில் செயற்திட்ட அமுலாக்கம் திருப்திகரமானதாக அமைந்திருப்பதுடன் ஜுன் இறுதியில் செலவின நிலுவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து எண்கணியம் சார்ந்த தேவைப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. அதேபோன்று வரிவருமானம் தவிர்ந்த ஏனைய அனைத்து குறிக்கப்பட்ட இலக்குகளும் அடையப்பட்டுள்ளன. கடந்த செப்டெம்பர்மாத இறுதியில் மிகமுக்கிய கட்டமைப்பு மறுசீரமைப்புக்கள் அடையப்பட்டிருக்கின்றன அல்லது தாமதமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அத்தோடு இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் ஆட்சியியல் ஆய்வு அறிக்கை உரிய காலப்பகுதியில் வெளியிடப்பட்டதுடன், ஆசியப்பிராந்தியத்தின் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட முதலாவது நாடு இலங்கையாகும். 2024 ஆம் ஆண்டில் நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு அமைவாக எட்டப்படவேண்டிய நிதியியல் அடைவுகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலான வருமானம்சார் மறுசீரமைப்புக்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

 நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைவதற்கான தற்காலிக சமிக்ஞைகள் தென்படுகின்றன. கடந்த ஆண்டு செப்டெம்பரில் 70 சதவீதம் எனும் மிக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்ட பணவீக்கம், இவ்வாண்டு செப்டெம்பரில் 1.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இவ்வாண்டு மார்ச் – ஜுன் மாதத்துக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மொத்த வெளிநாட்டுக்கையிருப்பு 1.5 பில்லியன் டொலர்களால் அதிகரித்ததுடன், அத்தியாவசியப்பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாடு சீரமைக்கப்பட்டது.

ஸ்திரநிலைக்கான இத்தகைய ஆரம்பக் குறிகாட்டிகள் தென்பட்ட போதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னமும் அடையப்படவில்லை. கடன்மறுசீரமைப்பு தொடர்பான நீண்டகால கலந்துரையாடல்கள் மற்றும் அண்மைய சில மாதங்களில் இருப்பு திரட்சி மிதமடைந்தமை ஆகியவற்றின் விளைவாக இலங்கையின் வெளியக நிலைவரம் வலுவிழந்துள்ளது. எனவே கடன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தக் கூடியவாறான கடன்மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் வெகுவிரைவில் இணக்கம் காண்பது இலங்கையின் வணிக செயற்பாடுகள் மற்றும் வெளியக நிதியிடல் என்பவற்றில் நிலவும் நிலையற்ற தன்மைக்கான தீர்வை வழங்கும்.

நாட்டின் பொருளாதாரத்தை நிலையான மீட்சி, ஸ்திரத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை நோக்கிக் கொண்டுசெல்வதற்கு நிலையான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும். வருமானத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாடு மற்றும் அவசியமான வரி அறவீடு, வரி நிர்வாக வலுவாக்கம், வரி ஏய்ப்புக்களை இல்லாதொழித்தல் ஆகியவற்றின் மூலம் ஆட்சியியல் மேம்பாட்டை அடைவதற்கான நடவடிக்கைகள் என்பவற்றை வரவேற்கின்றோம்.

எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கு செலவினங்களை ஈடுசெய்யும் வகையிலான விலையிடல் முறைமையைப் பின்பற்றுவதன் மூலம் அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புக்கள் முகங்கொடுக்கக்கூடிய நிதியியல் அச்சுறுத்தல்களைக் குறைத்துக் கொள்ள முடியும்.

அதேவேளை வறிய மற்றும் நலிவுற்ற மக்களைப் பாதுகாப்பதற்கு ஏதுவான சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் உள்ளகக் கடன்மறுசீரமைப்பின் அடுத்தகட்டமாக உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டவேண்டும். இலங்கைக்கும் சீன ஏற்றுமதி – இறக்குமதி வங்கிக்கும் இடையில் எட்டப்பட்டிருக்கும் இணக்கப்பாடு தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருப்பதுடன், அதுகுறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றதுடன் அதனை ஆராய்வதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.

அதேபோன்று வர்த்தகக் கடன் வழங்குனர்களுடன் இலங்கை முன்னெடுத்துவரும் கலந்துரையாடல்கள் தொடர்பில் நாம் அறிந்திருக்கின்றோம்.

இவற்றில் ஏற்படக்கூடிய தாமதம் இலங்கையின் பொருளாதார நிலைவரம் மோசமடைவதற்கும், நிதியியல் இடைவெளி அதிகரிப்பதற்கும், நிலைபேறான பொருளாதார வளர்ச்சி பாதிப்படைவதற்கும் வழிவகுக்கும்.

அண்மையில் வெளியிடப்பட்ட ஆட்சியியல் ஆய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளமை வரவேற்கத்தக்க நகர்வாகும். ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதும், பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதும் பொருளாதாரம் சார்ந்த நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாததாகும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் குறைந்த அளவு பற்றாக்குறையை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியம்

உறுதியான வரவு செலவுத் திட்டம் மற்றும் குறைந்த அளவிலான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை ஆகியவற்றையே இலங்கையிடம் சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக ரொய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினுடைய நிகழ்நிலைச் சந்திப்பொன்று வொஷிங்டனில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பினை மேற்கோள் காண்பித்து ரொய்ட்டஸ் செய்திச் சேவை விடுத்துள்ள செய்தியில்,

இலங்கையின் வரவு,செலவுத்திட்டம் இந்த ஆண்டின் இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை 15 சதவீதமாகக் காணப்படுமென்ற கணிப்புக்கள் எமக்குள்ளன. அத்தோடு எதிர்வரும் ஆண்டில் வரவு,செலவுத்திட்டப் பற்றாக்குறை ஏற்படாமலிருப்பதை உறுதி செய்யவேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளது.

அத்துடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதத்தை விடவும் அதிகமான அரசாங்கத்தினது வருமானம் காணப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் வருமானப் பற்றாக்குறைக்கான இடைவெளி குறைக்கப்படும் பட்சத்தில், எஞ்சியுள்ள இடைவெளியை நிரப்புவதற்கு விரும்பும் கடன் வழங்குநர்களிடம் இருந்து அதனை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான நிலைமகள் ஏற்படும்.

இதேவேளை, இலங்கை கடந்த ஏழு தசாப்தங்களில் காண்டிருக்காத அளவிற்கு பொருளாதார நெருக்கடியினைச் சந்தித்திருந்த நிலையில் அதிலிருந்து மீள்வதற்கான சர்வதேச நாணய நிதியம் நீடிக்கப்பட்ட கடன்வசதி திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது.

இந்த நீடிக்கப்பட்ட கடன்வசதியின் இரண்டாவது தவணைக்கான கொடுப்பனவான 330 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கான ஊழியர்கள் மட்ட இணக்கப்பாட்டை சர்வதேச நாணயநிதியம் இலங்கை அரசாங்கத்துடன் எட்டிக்கொண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இலங்கை – ஐ.எம்.எப் முதல் மதிப்பாய்வில் பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டப்பட்டது

இலங்கை-ஐ.எம்.எப் முதல் மதிப்பாய்வில் பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டப்பட்டது

சர்வதேச நாணய நிதியமும், இலங்கையும் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஆதரவு வேலைத்திட்டத்தின் முதல் மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் மதிப்பாய்வுக்கு அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

இலங்கை நோக்கங்களை நிறைவேற்ற தவறியுள்ளதால் இரண்டாம் தவணைக்கடன் தாமதமாகலாம் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் இரண்டாம் தவணைக்கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

.இலங்கை தனது திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறியுள்ளதால் சர்வதேச நாணயநிதியத்தின் இரண்டாம் தவணைக்கடன் தாமதமாகலாம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது

இரண்டாவது தவணைக்கடன் எப்போதும் வழங்கப்படும என்பது குறித்து நிலையான காலஅட்டவணை எதனையும் தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணயநிதியத்தின் அதிகாரியொருவர் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இரண்டாம் தவணைக்கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணயநிதியத்தின் ஆசிய பசுபசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஸ்ட தூதுக்குழுவின் தலைவர் பீற்றர் புருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இரண்டு முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் திருப்தியடைவதற்கு இரண்டு விடயங்கள் அவசியம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் கொள்கைள் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் நாங்கள் இணக்கப்பாட்டினை எட்டவேண்டும் அதுவே நாங்கள் முன்னேறிச் செல்ல உதவும் அதன் மூலமே நாங்கள் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே ஒருவிடயத்தில் ஒரு வருடத்தில் குறைபாடுகள் உள்ளதை நாங்கள் காணமுடிகின்றது அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயல்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைளில் 35 வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் 35 வீதத்தை மாத்திரமே இலங்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் பகுப்பாய்வு செய்வதற்காக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் அறிமுகப்படுத்திய வேலைத்திட்டத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் 57 வீதமான நிபந்தனைகள் இந்த வருடம் ஜுலை மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில் 35 வீதமான நிபந்தனைகள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தைகளுக்கு அமைய இலங்கை தமது நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பரில் இடம்பெறவுள்ள முதல் மறுபரிசீலனைக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் 71 வீத நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

இருப்பினும், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 18 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வெரிட்டி ரிசேர்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், அடுத்த மாதம் 14ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிலையில், குறித்த குழுவினர், செப்டெம்பர் 27ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வுக்காகவே இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

IMF இன் மேலும் எட்டு நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிய இலங்கை அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த 33 நிபந்தனைகளை ஜூன் இறுதிக்குள் நிறைவேற்றியுள்ள இலங்கை அரசாங்கம் மேலும் எட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.

‘IMF Tracker’ எனும் இணையக் கருவி மூலம் இலங்கையின் செயல்திறனைக் கண்காணித்து வரும் வெரிடே ரிசர்ச் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் நான்காக இருந்த நிறைவேற்றப்படாத நிபந்தனைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, ஜூன் எட்டாக அதிகரித்துள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுதல், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுதல் என்பனவும் இதில் அடங்கும்.

மேலும் 2022 ஆம் ஆண்டிற்கான அனைத்து 52 முக்கிய அரச நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளை வெளியிடுதல் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கான திட்டத்தைத் தயாரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

பந்தயம் மற்றும் கேமிங் வரிகளின் திருத்தம், இலங்கை மத்திய வங்கி சட்டம் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டங்களை இயற்றுவதற்கு உறுதியளித்திருந்த போதும் இந்த வரைவுகள் இன்னும் நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்படாமை காரணமாக மேலும் தாமதமாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது – ஹர்ஷ

கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.

பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று பொறுப்பில் இருந்து விலகும் வகையில்  கருத்துரைக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின்  நிபந்தனைகளுக்கு அமைய  தேசிய கடன் மறுசீரமைக்கப்படவுள்ளதாக

குறிப்பிடப்படுவது அடிப்படையற்றதாகும். ஒட்டுமொத்த கடன்களையும் மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டது.

தேசிய கடன்களை மறுசீரமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மார்ச் மாதம்  06 ஆம் திகி சர்வதேச நாணய நிதியத்துக்கு நிதியமைச்சர் என்ற ரீதியில்  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

2048 ஆம் ஆண்டு நாட்டை  அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.பொருளாதார விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

2022 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் தனிநபர் ஒருவரின் வருமானம் 3400 டொலராக குறைவடைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருட ஆட்சி காலத்தில் நாடு 09 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.

2048 ஆம் ஆண்டு நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆகவே பொருளாதார முன்னேற்றத்தை அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு குறிப்பிட முடியாது என்றார்.

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவு – சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடனிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான தனது சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜோர்ஜீவா உறுதியளித்துள்ளார்.

‘தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் வலுவான முன்னெடுப்புக்கள் வரவேற்கத்தக்கன. இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்திற்கான உலகத் தலைவர் உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில்  புதன்கிழமை (21) பரிஸ் சென்றடைந்தார்.

நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இலங்கையின் அனுபவம் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியுடன் சர்வதேச நிதி நிறுவனங்களை கையாள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த மாநாட்டின் பக்க அம்சமாக ,  பல அரச தலைவர்கள் மற்றும் பலதரப்பு இராஜதந்திர தலைவர்களை சந்தித்து பொருத்தமான விடயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார்.