2026 வரை இலங்கையின் வறுமை விகிதம் அதிகரித்த மட்ட்த்தில் காணப்படும் – உலக வங்கி

2026 ஆம் ஆண்டு வரை இலங்கையில் வறுமை விகிதம் இருபத்தி இரண்டு சதவீதத்தை விட உயர் மட்டத்திலிருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

உலக வங்கியின் அறிக்கைகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 வீத மிதமான வளர்ச்சியைக் கணித்துள்ளது.

எவ்வாறாயினும், 2022 இல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டினாலும், நாடு இன்னும் அதிகளவிலான வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை எதிர்கொள்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் 25.9 வீதமான மக்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 வரை நாட்டின் வறுமை விகிதம் 22 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்குமென்று உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான பாதையில் சென்றாலும், வலுவான மற்றும் நம்பகமான கட்டமைப்பு சீர்திருத்தங்களின் தொடர்ச்சியுடன் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை, ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான தாக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் மிகவும் முக்கியமானவை என உலக வங்கியின் பணிப்பாளர் எச்.பரிஸ் குறிப்பிடுகிறார்.

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 150 மில்லியன் கடனுதவி

நிதித்துறை பாதுகாப்பு வலையை வலுப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியளிப்பதற்காக உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தில் கவனம் செலுத்தி,

இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பு வலையின் நிதி மற்றும் நிறுவனத் திறனை வலுப்படுத்த இந்தத் தொகை வழங்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் நிதித்துறைக்கு ஆதரவளிப்பதற்கு வலுவான பாதுகாப்பு வலைகள் தேவைப்படுவதாகவும்,

பொருளாதாரத்திற்கு நிலையான மற்றும் நம்பகமான வங்கித்துறை அவசியமானது என்றும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

உலக வங்கியினால் 500 மில்லியன் டொலர் இரண்டாம் கட்டமாக விடுவிப்பு

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து இலங்கைக்கான நிதியுதவியில் இரண்டாம் கட்டமாக 500 மில்லியன் டொலர்களை உலகவங்கி விடுவித்துள்ளது.

இலங்கையின் வரவு, செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்கக்கூடிய ‘மீளெழுச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான அபிவிருத்தி கொள்கை செயற்திட்டத்துக்கு’ கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி உலகவங்கி அனுமதியளித்தது.

நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், வறிய மற்றும் நலிவுற்ற சமூகங்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்தல், அனைவரையும் உள்ளடக்கிய தனியார்துறை மீட்சிக்கு ஒத்துழைத்தல் ஆகியவற்றுக்கு உதவக்கூடியவகையிலான தொடர் உதவித்திட்டங்களில் முதலாவது திட்டம் இதுவாகும்.

இத்திட்டமானது வழங்குவதாக இணக்கப்பாடு எட்டப்பட்ட நிதி விடுவிக்கப்படுவதற்கு முன்பதாக நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகள் மற்றும் அடையப்படவேண்டிய இலக்குகளைக் கொண்டிருக்கின்றது.

அதன்படி இத்திட்டத்தின் கீழான முதற்கட்ட நிதியாக 250 மில்லியன் டொலர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் திருப்திகரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட பரந்துபட்ட மறுசீரமைப்புக்கள் பற்றிய மதிப்பீட்டை அடுத்து இரண்டாம் கட்டமாக 500 மில்லியன் டொலர் நிதியை உலகவங்கி விடுவித்திருக்கின்றது.

‘பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கு மாத்திரமன்றி, தனியார்துறை வளர்ச்சி மற்றும் நிலைமாற்றம் ஆகியவற்றுக்கும் பொருளாதார மற்றும் கட்டமைப்பு ரீதியான தொடர் மறுசீரமைப்புக்கள் இன்றியமையாதவையாகும்.

அதன்படி உலகவங்கியின் இந்த உதவி செயற்திட்டமானது பொருளாதாரத்தின் முழுமையான மீட்சியை உறுதிப்படுத்தல், பொருளாதார வளர்ச்சி இயலுமையை மேம்படுத்தல், தனியார்துறை முதலீடுகளை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதில் அரசாங்கத்துக்கு உதவுகின்றது’ என உலகவங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் எச்.ஹடாட்-ஸேர்வோஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைளில் 35 வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் 35 வீதத்தை மாத்திரமே இலங்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் பகுப்பாய்வு செய்வதற்காக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் அறிமுகப்படுத்திய வேலைத்திட்டத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் 57 வீதமான நிபந்தனைகள் இந்த வருடம் ஜுலை மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில் 35 வீதமான நிபந்தனைகள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தைகளுக்கு அமைய இலங்கை தமது நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பரில் இடம்பெறவுள்ள முதல் மறுபரிசீலனைக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் 71 வீத நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

இருப்பினும், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 18 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வெரிட்டி ரிசேர்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், அடுத்த மாதம் 14ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிலையில், குறித்த குழுவினர், செப்டெம்பர் 27ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வுக்காகவே இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ள உலக வங்கி

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் கூட்டத்தில் இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் டொலர்களை உலக வங்கி அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கிடைக்கும் மிகப்பெரிய நிதி இதுவென ரொய்ட்டர்ஸ், செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிதியில், 500 மில்லியன் டொலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காகவும் 250 மில்லியன் டொலர்கள் இரண்டு தவணைகளில் கிடைக்கும் என்றும் உலக வங்கி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வு ஆகியவற்றை உலக வங்கி அவதானித்து வருகின்றது.

இதனை அடுத்து நிர்வாகக் கூட்டத்தில்அனுமதி கிடைத்தவுடன் முதல் தவணை இலங்கைக்கு உடனடியாக வழங்கப்படலாம் என உலக வங்கி வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்க தீர்மானம்

பணவீக்கத்தால் பாதிக்கப்படும் நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு தீர்மானம்

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.

உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது.

பணவீக்கம் குறைந்து வருவதால் இலங்கையை இந்த சுட்டெண்ணில் இருந்து நீக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

கடந்தாண்டு முதல் இலங்கை இந்த சுட்டெண்ணில் இணைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் அறிக்கைக்கு அமைய, குறியீட்டில் முதல் இடம் லெபனான் காணப்படுவதோடு, அதன் பணவீக்கம் 261 சதவீதம் ஆகும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே சிம்பாம்வே மற்றும் ஆர்ஜென்டினா பிடித்துள்ளன.

உலக வங்கி 18 மாதங்களுக்கு விவசாயத்துறைக்கான உதவியை நீடித்தது

நாட்டின் விவசாயத்துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான உதவியை, மேலும் 18 மாதங்களுக்கு நீடிக்க உலக வங்கி இணங்கியுள்ளது.

அண்மையில் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் பிரதிநிதிகள், அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்தபோது, இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதல், 18 மாதங்களுக்கு இந்தத் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக, 30 மில்லியன் டொலர் நிதியை வழங்க உலக வங்கியின் பிரதிநிதிகள் இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் – உலக வங்கி

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை வரவேற்பதாகவும் அதற்காக தாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவிலேயே உலக வங்கியின் பிரதி தலைவர் மார்ட்டின் ரைசர் இதனைப் தெரிவித்துள்ளார்.

மக்களை பாதுகாப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்பதற்குமான முக்கிய சீர்திருத்தங்களை செயற்படுத்த தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் 2023 மேலும் வீழ்ச்சியடையும் – உலக வங்கி

இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் மீண்டும் வீழ்ச்சியடையும் என உலக வங்கிதெரிவித்துள்ளது.

உணவு மற்றும் எரிபொருளிற்கு செலுத்துவதற்கான அந்நிய செலாவணி இல்லாமல் போனதால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்தன இதன் காரணமாக இலங்கையின் உற்பத்தி 2022 இல் 9.2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என மதிப்பிடப்படுவதாக உலகவங்கி தெரிவித்துள்ளது.

2023 ம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையிலேயே உலக வங்கி இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் அதிகாரிகள் ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை உணவு மருந்து எரிபொருள் தட்டுப்பாடுகளை மக்கள் எதிர்நோக்குவது குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.

நெருக்கடி மற்றும் அதன் விளைவுகள் வறுமையை அதிகரித்துள்ளதுடன் கடந்த தசாப்த காலத்தில் பெறப்பட்ட பலாபலன்களை இல்லாமல் செய்துள்ளன எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த வருடம் 4.3 வீதத்தினால் வீழ்ச்சியடையும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தொடரும் அந்நியசெலாவணி பிரச்சினைகள் உயர் பணவீக்கத்தின் தாக்கம் முக்கிய வர்த்தக  சகாக்களின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி காரணமாக  2023ம் ஆண்டு குறித்து முன்னர் எதிர்வுகூறப்பட்டவற்றை மாற்றவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தென்னாசிய குறித்து தெரிவித்துள்ள உலக வங்கி உக்ரைன் யுத்தத்தின் தாக்கங்களை இந்த பிராந்தியம் தொடந்தும் அதிகரிக்கின்றது என தெரிவித்துள்ளது.

தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி 2023 இல் 5.3 வீதமாக காணப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

சீனா, இந்தியா கடன் மறுசீரமைப்பு உத்தரவாத கடிதங்களை இது வரையில் வழங்கவில்லை – அலி சப்ரி

சர்வதேச நாணய நிதியத்திற்கும் எங்கள் பன்னாட்டு சகாக்களுக்கும் எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துள்ளோம் என அலி சப்ரி ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்
இலங்கையர்களின் நன்மைக்கும் உலக பொருளாதாரத்தின் நன்மைக்கும் இது அவசரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிக்கு அப்பால் அடுத்த வருடம் சர்வதேச அமைப்புகளிடம் இருந்து 5 பில்லியன் டொலர் கடன்களை எதிபார்க்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டருக்கு வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசசொத்துக்களை மறுசீரமைப்பிற்கு உட்படுத்துவதன் மூலம் 3 பில்லியன் டொலர் வரை திரட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏழு தசாப்தங்களில் இலங்கை சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி எரிபொருள் உணவு தட்டு;ப்பாடுகளிற்கு வழிவகுத்ததன் காரணமாக பரந்துபட்ட அமைதியின்மை ஏற்பட்டதை தொடர்ந்து ஜூலை மாதம் கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

40.6 பில்லியன் டொலர் வெளிநாட்டுக்கடனில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு மேலதிக நிதி உதவி அவசரமாக தேவைப்படுகின்றது. இலங்கை தனது கடனில் 22 வீதத்தினை சீனாவிற்கு செலுத்தவேண்டியுள்ளது.
செப்டம்பரில் இலங்கை 2.9 மில்லியன் டொலர் நிதியுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டினை எட்டியது. அடுத்த வருடம் இந்த நிதி உதவி கிடைக்கலாம்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இருந்து கிடைக்கும் நிதி உதவிக்கு அப்பால் நாங்கள் ஏனையவர்களிடமிருந்து நிதி உதவியை எதிர்பார்க்கின்றோம்,பன்னாட்டு தரப்புகளிடமிருந்து நான்கு ஐந்து பில்லியன் டொலர்களை எதிர்பார்க்கின்றோம் என அலி சப்ரி ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி நாட்டின் சில அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்து ஆர்வமாக உள்ளார்,அதன் மூலம் இரண்டு அல்லது மூன்று பில்லியன் டொலரை திரட்டமுடியும்,என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் இதன் மூலம் திறைசேரியையும்,அந்நிய செலாவணி கையிருப்பையும் வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்திற்கான கடனிற்கு அதன் நிறைவேற்று சபை டிசம்பர் மாதத்திற்குள் அங்கீகாரமளிக்கும் என இலங்கை எதிர்பார்த்தது,எனினும் இது ஜனவரியிலேயே சாத்தியமாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தனக்கு அதிகளவு கடன்களை வழங்கிய சீனா ஜப்பான் இந்தியா போன்ற நாடுகளிடமிருந்தும் தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்தும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உத்தரவாதங்களை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அதிகளவு கடனை வழங்கிய சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து உத்தரவாத கடிதங்களிற்காக இலங்கை காத்திருக்கின்றது என அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த இரு நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளிற்கு ஆதரவளித்துள்ளன இலங்கை அவர்களுடன் தரவுகள் மற்றும் ஆவணங்களை பகிர்ந்துகொண்டுள்ளது எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் எங்கள் பன்னாட்டு சகாக்களுக்கும் எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துள்ளோம் என அலி சப்ரி ரொய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களின் நன்மைக்கும் உலக பொருளாதாரத்தின் நன்மைக்கும் இது அவசரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எரிபொருள் உணவு போன்ற அத்தியாவசிய இறக்குமதிகள் தொடர்ச்சியாக கிடைக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னர் 70வீதமாக காணப்பட்ட பணவீக்கம் நவம்பரில் 61 வீதமாக காணப்பட்டது ஆனால் பொருளாதாரம் இந்த வருடம் 8.7 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்திரதன்மை ஏற்படுகின்றது இதன் பின்னர் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டினை சர்வதேச நாணய நிதியத்தினதும் பன்னாட்டு அமைப்புகளினதும் கடன் உதவிகளுடனும் ஆரம்பிக்கவேண்டும் ஆனால் 2024லேயே பொருளாதார வளர்ச்சி ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.