பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியொதுக்கீடு – 8 தமிழ் எம்.பிக்கள் மட்டும் எதி்ர்ப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 68 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 142 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதம் இடம்பெற்றது.

விவாத முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீது வாக்கெடுப்பைக் கோரினார்.

இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 68 மேலதிக வாக்குகளினால் ஒதுக்கீடு நிறை வேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அரச தரப்பினர் வாக்களித்திருந்த நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன், ஆகியோர் வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும்,மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

Posted in Uncategorized

வரவு செலவுத் திட்டம் “தம்பி கால்நடை, பேச்சு பல்லக்கு’’ என்பதை நினைவுபடுத்துகிறது – ஜனா எம்.பி

“தம்பி கால்நடை பேச்சு பல்லக்கு” என்பதை போலத்தான் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அடைய முடியாத இலக்குகளை வரவு செலவு திட்டத்தில் எடுத்துரைத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்துள்ளார் எமது நிதி அமைச்சர் என தெரிவித்துள்ளார் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்.

இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மரம் ஓய்வெடுக்க விரும்பினாலும் காற்று ஓய்வெடுக்க விடுவதில்லை என்றார் தோழர் மாவோ. மௌனமாக இருக்கத்தான் நான் முயன்றாலும் காற்று மரத்தை அலைக்கழிப்பதைப்போல இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பாக நானும் அலைக்கழிக்கப்படுகின்றேன். இந்தக் காற்றசைவில் நான் இசையாவிட்டால் எம் மக்கள் பிரதிநிதியாக இப் பாராளுமன்றத்தில் இருப்பதில் பயன் என்ன?

இந்த வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுவது வழமையான சம்பிரதாய பூர்வமான நிகழ்வேயொழிய, ஆக்க பூர்வமான நிகழ்வொன்றல்ல என்பதையே இந்த வரவுசெலவுத்திட்ட விவாத உரைகள் சுட்டி நிற்கிறது.

ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் என்பது வெறுமனே இலக்கங்களுக்கும் வார்த்தை ஜாலங்களுக்கும் மட்டுப்பட்டதல்ல. மாறாக நாட்டின் எதிர்காலம் தொடர்பான, நாட்டின் ஆக்கபூர்வமான, அறிவு பூர்வமான, விஞ்ஞான பூர்வமான, அடையக் கூடியதான ஏற்கத் தக்கதான, ஏற்புடைத்தான, முன்மொழிவுகளை எடுத்தியம்பவேண்டும். அது நம்பகத்தன்மைகொண்டதாக இருக்க வேண்டும். வெறுமனே விலைவாசி உயர்வைப் பிரகடனப்படுத்துவதாகவோ, நிவாரணங்களை எடுத்துரைப்பதாகவோ இருக்கக் கூடாது. ஆனால், கடந்த பல தசாப்தங்களாக எம் ஆட்சியாளர்கள். வரவு செலவுத்திட்டத்திற்கு பிழையான வரைவிலக்கணத்தை மக்கள் நம்பும் படி வளர்த்துவிட்டார்கள். அத்தகைய பிழையான வரைவிலக்கணத்துக்குட்பட்ட வரவுசெலவுத்திட்டமே இந்த வரவுசெலவுத்திட்டம் என்பது என்கருத்தாகும்.

ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் அந்த நாட்டின் அடுத்த வருடத்துக்கான வருமான மூலங்கள் பெறும் வழிகள், பெறத்தக்க மூலகங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து, பெறத்தக்க தொகைகள் எவ்வளவு வரி வருமானங்களிலிருந்து பெறத்தக்க வருமானங்கள் எவ்வளவு, வெளிநாட்டு உதவிகள் ஊடாக பெறுபவைகள் எவ்வளவு, உள்நாட்டு வருமான மூலங்களிலிருந்து பெறப்படுபவைகள் எவ்வளவு என்று பிற வருமான மூலங்களிலிருந்து பெறுபவற்றை தெளிவாக எடுத்துரைப்பதோடு, நாட்டின் அடுத்த வருட செலவீனங்கள் தொடர்பாக மூலதனச் செலவு மீண்டெழும் செலவு இவையாவும் துறை ரீதியாக அலசி அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து அதை வெளிக் கொணர வேண்டும். வருமானத்துக்கும் செலவீனத்துக்குமான துண்டுவிழும் தொகை எவ்வளவு. துண்டு விழும் தொகை எவ்வாறு சீர் செய்யப்படும் என்பதெல்லாம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் எடுத்தியம்பப்பட வேண்டும்.

வரவு செலவுத்திட்டம் ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்குகள் எவ்வாறு அடையப்பட வேண்டும். சிற்றினப் பொருளாதாரம் பேரினப் பொருளாதார கொள்கைகள் இக்காலத்தில் எவ்வாறு கையாளப்பட வேண்டும். அவற்றை அடைவதிலுள்ள சவால்கள் சிக்கல்கள், அதை எதிர்நோக்கி மீண்டெழும் திட்டங்கள் யாவும் உள்ளடக்கப்படவேண்டும். அது மட்டுமல்ல அவை நடைமுறைக்கு சாத்தியமானதாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

எமது நிதியமைச்சரால் முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் உத்தேச வருமான இலக்கு 4ஆயிரத்து 127 பில்லியன் ரூபா, உத்தேச செலவீனம் 6ஆயிரத்து தொள்ளாயிரத்து 78 பில்லியன் ரூபா, வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை 2ஆயிரத்து எண்ணுற்றி 51 பில்லியன் ரூபா. ஒரு நாட்டின் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையில் இத்தகையதொரு பாரிய பற்றாக்குறை பொருளாதார அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத தொகையாகவே நான் கருதுகின்றேன். இத்தகைய வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையை வைத்துக் கொண்டு நிதியமைச்சர் முன்மொழிந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் இலக்குகளை அடைய முடியுமா என்பது தொடர்பாக, எனது கருத்து நமது நாட்டுக்கு அலாவுதீனின் அற்புத விளக்கொன்றே தேவையாகும். அலாவுதீனின் அற்புத விளக்கொன்று இல்லாவிட்டால் இந்த வரவு செலவுத்திட்ட இலக்குகளை எம்மால் அடையும் இயலுமை உள்ளதா என்பதை எனது பொருளியல் அறிவு என்னைக் கேள்விக்குட்படுத்துகிறது.

இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை எதிர்க்கட்சியினர் விமர்சித்தால் அதைக் காழ்ப்புணர்வு எனக் கூறி கடந்து விடலாம். ஜே.வி.பி. யினர் விமர்சித்தால் ‘ஏக்கத்தமாய் மூ’ எனக் கூறித் தப்பிக்கலாம். தமிழ்த் தேசியக் கட்சிகள் விமர்சித்தால் ‘அற கொட்டியாலா மேக்கத் தமாய் கியனவா’ எனக் கூறிக் கடந்துவிடலாம். ஆனால், வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் முடிந்த கையோடு இந்த வரவு செலவுத்திட்டத்தை எதிர்க் கட்சியினர் விமர்சிக்க முன்னர் அதிகம் விமர்சித்த பிரமுகர்கள் ஆளும் பொது ஜன பெரமுன கட்சியினரே. பொது ஜன பெரமுன கட்சியின் முக்கிய பிரமுகர் நாமல் ராஜபக்ச அவர்கள் இந்த வரவு செலவுத்திட்டமானது பொது ஜன பெரமுன கொள்கைக்கு ஏற்புடையதல்ல என்றார். இது தொடர்பாக நாம் ஆலோசிப்போம் என்றார். அப்படியானால் இந்த வரவு செலவுத்திட்டம் ஆளும் கட்சியினுடைய வரவு செலவுத்திட்டமா இல்லை, ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டமா?

ஆட்சியாளர்களுக்குள்ளேயே இத்தனை குழறுபடியெனில் எதிர்க்கட்சிகள் எப்படி ஆதரிக்கும் என நிதி அமைச்சரும் ஆளும் கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர்?

எமது நிதி அமைச்சரே ஜனாதிபதியாகவும் உள்ளார். இந்த நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளில் குறுகிய காலத்தில் கூடிய தடவைகள் பாராளுமன்றத்தில் உரையாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். அவரது அறிவு, ஞானம், புத்தி கூர்மை, தர்க்க வாதத்திறன், சர்வதேச அறிவு, சட்ட அறிவு பற்றி நான் நன்கு அறிந்தவன். அதை ஏற்றுக் கொள்பவன். ஆனால் அவர் பாடசாலை மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது போல் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதை மட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

எமது ஜனாதிபதி அவர்கள் இன்னும் பழைய புண்ணைப் பிச்சைக்காரன் தோண்டுவதைப்போல வங்குரோத்தான நாட்டை நான் பாரமெடுத்தேன். அழைப்பு விடுத்த எவரும் நாட்டைப் பாரமெடுக்க முன்வராத போது நான் நாட்டைப் பாரமெடுத்தேன். அன்று வரிசை யுகம் இருந்தது. மின்சாரமில்லை. இருண்ட யுகத்துக்குள் நாடு இருந்தது. போதிய மருந்தில்லை. சுகாதாரக் கட்டமைப்பு சீரழிந்திருந்தது என்று இது போல பண்டைக் கதைகள் பேசுவதில் இனிப் பயனில்லை. எவரும் இத்தகைய சவால் மிக்க நிலையில் நாட்டை ஏற்க முன்வராத போது இத்தகைய சவால்களைச் சமாளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் அரசியலமைப்பின் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப நீங்கள் ஜனாதிபதி ஆகியுள்ளீர்கள். எனவே இன்று உங்கள் முன்புள்ள முக்கிய கடமை பண்டைப் பழங்கதைகள் பேசுவதல்ல. உங்கள் முன்னுள்ள சவால்களை வெற்றி கொண்டு காட்டுவதேயாகும்.

இன்று நம் நாட்டின் யதார்த்த நிலை ஆளும் கட்சியினரே ஆட்சி மீது அதிருப்தி, எதிர்க்கட்சிகள் ஆட்சி மீது அதிருப்தி, தமிழத் தேசியக் கட்சிகள் ஆட்சி மீது அதிருப்தி, அரச உத்தியோகத்தர்கள், தொழில்சார் நிபுணர்கள் ஆட்சி மீது அதிருப்தி, புத்திஜீவிகள் ஆட்சி மீத அதிருப்தி, பொது மக்கள் ஆட்சி மீது அதிருப்தி, எங்கெங்கு நோக்கினும் அரச கட்டமைப்பில் ஊழல் இதனால் அனைவரும் அதிருப்தி. இப்படி நாட்டில் எட்டுத் திசையும் ஆட்சி மீது அதிருப்தி எனில் எம் நாடு எப்படி வளம் பெறும்.

இப்படியொரு நாட்டில் ஆட்சி மீது சகல பிரிவினரும் அதிருப்தி கொண்டுள்ளார்கள் என்று உரையாற்றும் போது அன்று நான் பாடசாலையில் ஐரோப்பிய வரலாறு கற்ற அனுபவம் ஒன்று ஞாபகம் வருகிறது. அதுவும் உலக வரலாற்றைப் புரட்டிப்போட்ட முக்கிய ஆண்டான 1789ஆம் ஆண்டு எனக்கு ஞாபகம் வருகிறது. அதுதான் மாபெரும் பிரஞ்சியப் புரட்சி. அன்றைய பிரஞ்சியப் புரட்சியை ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் பிரான்சில் அத்தகைய புரட்சி ஏற்படுவதற்குக் காரணம் அந்த நாட்டின் அனைத்துப் பிரிவினரும் அதிருப்தியில் இருந்தார்கள். அதுதான் புரட்சிக்கான கருவினை விதைத்தது. குறிப்பாக பிரபுக்கள், மேன் மக்கள், மத்திய தர வர்க்கத்தினர், உழைப்பாளர்கள், புத்திஜீவிகள் என்று இவர்கள் மத்தியில் தோன்றிய அதிருப்தியே பிரஞ்சியப் புரட்சிக்கு வழி கோலியது. பிரான்சில் ஏற்றத்தாழ்வு மறைந்து சமத்துவம், சகோதரத்துவம் மிளிர வழி சமைத்தது.

அந்தப் பிரஞ்சுப் புரட்சியின் குழந்தையே மாவீரன் நெப்போலியன். பிரான்ஸ்சின் “அரகலய“விலிருந்து நெப்போலியன் தோன்றியதைப் போல நமது நாட்டின் சகல பிரிவினரதும் அதிருப்தி ஏற்படுத்திய அரகலயவின் குழந்தையாக நீங்கள் ஜனாதிபதியாகியுள்ளீர்கள். இன்னுமொரு புதிய அரகலயவில் நீங்கள் புதையக் கூடாது என்பது என் அவா. உங்கள் புத்தி ஜீவித் தனத்தை சொற்பொழிவுக்குள் மட்டும் மட்டுப்படுத்தாது உங்கள் அறிவு ஞானத்தை, வாத விவாதத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தாது நாட்டின் அபிவிருத்திக்கு அர்ப்பணியுங்கள். நாட்டில் எங்கும் எதிலும் புரையோடிப் போயுள்ள ஊழல்களைக் களைய உங்கள் அறிவு ஞானத்தைப் பயன்படுத்துங்கள். நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வைக் கொண்டுவருவதற்கு உங்கள் அறிவு ஞானத்தைப் பயன்படுத்துங்கள்.

நமது நிதியமைச்சர் வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பிக்கும் போது கௌதம புத்தரின் ‘சம்ஜீவி கதா,” அதாவது கௌதம புத்தர் அவர்களின் சமநிலை வாழ்க்கைச் சூத்திரத்தை எடுத்துரைத்தார். இடையிடையே மக்களின் வாழ்வு இன்பம், துன்பம், இயலுமை, இயலாமை, வறுமை, செல்வம், தொடர்பான பல கௌதம புத்தரின் சூத்திரங்களையும் எடுத்துரைத்தார்.

பாராளுமன்றத்தில் நிதியமைச்சரால் நிகழ்த்தப்பட்ட வரவு செலவுத்திட்ட உரையின் பெரும்பாலான இடங்களில் கௌதம புத்தர் அவர்களின் சூத்திரங்கள், எடுகோளாக மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டது. அச் சூத்திரங்களின் கருவும் உருவும் கௌதம புத்தரின் ஜீவ அணுவும் இந்து மதத்திலிருந்தே உருவானது. இந்து மதத்தின் கருத்தியலிலிருந்து பெறப்பட்டது வரவு செலவுத்திட்டத்துக்காக கௌதம புத்தர் அவர்களின் சூத்திரங்களை நாடும் நம் ஜனாதிபதி அவர் மூப்பு, பிணி, சாக்காடு கண்டு மக்களின் துன்ப நிவர்த்திக்காக குரல் கொடுத்து, மானிடத்தைப் பேணி, உலக வாழ் உயிர்கள் மீது அவர் கொண்ட கருணையினை தன் பாராளுமன்ற உரையில் என்றாவது வெளிப்படுத்தியிருந்தால் அவர் மீது இன்னும் என் மதிப்பு அதிகரித்திருக்கும்.

இந்த வரவு செலவுத்திட்டம் கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் தொடர்ச்சி. கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் மறு பதிப்பு என்று எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியினர் எடுத்துரைத்துள்ளனர். இது தொடர்பாக எமது நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் அமைச்சர் உரையாற்றும் போது ஆங்கில இலக்கிய வித்தகர் சேக்ஷ்பியர் நூலின் மறுபதிப்பு சிங்கள இலக்கிய வித்தகர் மாட்டின் விக்கிரம சிங்கவின் நூலின் மறுபதிப்பு, எவ்வளவு முக்கியம், எவ்வளவு சிறப்பு அது போலத்தான் இந்த வரவு செலவுத்திட்டமும் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மறு பதிப்பென்றால் அத்தகைய நூலாசிரியர்களின் நூல்களின் மறுபதிப்புக்குள்ள பெருமை போல இந்த வரவு செலவுத்திட்ட மறுபதிப்புக்கும் பெருமைதானே என்றுரைத்தார்.

நீதியமைச்சர் அவர்களே வில்லியம் சேக்ஷ்பியர் உலகளாவிய மதிப்புறு படைப்பாளி மார்டின் விக்கிரமசிங்க நம் நாட்டின் மதிப்புறு படைப்பாளி அவர்களது படைப்பொன்றும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு ஒப்பானதல்ல.

அவற்றின் மறுபதிப்பு மாண்புறுவது, சிறப்புறுவது. ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டத்தின் மறுபதிப்பென்பது அந்நாட்டின் நிதி முகாமைத்துவத்தின் நிருவாக கட்டமைப்பின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களின் ஆட்சியாளர்களின் சீரழிவைக் குறித்து நிற்பது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடைவை தேக்கத்துக்குட்படுத்துவது. நீங்கள் கடந்த கால வரவு செலவுத்திட்டத்தின் மறுபதிப்பாக இந்த வருட வரவு செலவுத்திட்டத்தினை நோக்குவதன் மூலம் இதனை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

இந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலமான எனது ஒட்டு மொத்த சுருக்கமான கணிப்பு எங்கள் தமிழ் மொழியில் கூறுவார்கள் “தம்பி கால்நடை பேச்சு பல்லக்கு” அது போலத்தான் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அடைய முடியாத இலக்குகளை எடுத்துரைத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்துள்ளார் எமது நிதி அமைச்சர்.

எனக்கு பழைய சிங்கள யாதகக் கதையொன்று இந்த வரவு செலவுத் திட்ட உரையை முடித்து வைக்கும் போது ஞாபகம் வருகிறது.

“ஒரு கொடுங்கோல் மன்னன் ஒரு நாட்டை ஆட்சி புரிந்தானாம். இன்றைய நமது நாட்டு ஆட்சியாளர்கள் போல அவன் சொல்வதே வேதவாக்காகும். ஒரு நாள் அவனுக்கோர் விசித்திரமான ஆசை வந்ததாம் உலகில் எவரும் அணியாத ஆடையொன்றை தான் அணிந்து அரச அவையையும் நாட்டு மக்களையும் மகிழ்விக்க வேண்டுமென்று, இதை மன்னன் அரசவையில் அறிவிக்க அரசவையும் உடனே முரசறைந்து இதுவரை எந்த அரசர்களும் அணியாத ஆடையை நம் மன்னர் அணிய வேண்டும். இதனை ஆடை தயாரிப்பவர்கள் தயாரிக்க வேண்டுமென்று அறிவித்தார்களாம்.

எவருக்குமே இதைத் தயாரிக்க முடியவில்லை. ஆனால், அந் நாட்டிலிருந்த என் போன்ற எதிர்க்கட்சி புத்தி ஜீவி ஆடை தயாரிப்பாளன் அன்று, இல்லாத ஆடையொன்றை எடுத்துச் செல்வது போல் பாவனை செய்து அரண்மனை சென்று அந்த ஆடையை அணிவிப்பது போல் அபிநயம் செய்து, மன்னரே இந்த ஆடை உங்களுக்கு எவ்வளவு அலங்காரமாக இருக்கிறது. இதுவரை எந்த ஒரு மன்னனும் இவ்வாறான ஆடை அணிந்ததில்லை என்று கூற அரசனும் அக மகிழ்வு கொண்டு, தன் அமைச்சர் குழாமிடம் எப்படி இந்த ஆடையென்று கேட்டானாம். அதற்கோ அமைச்சர்கள் ஐயோ அபாரம், அற்புதம் இத்தகைய ஆடையொன்றை நாம் கண்டதில்லை என்று புகழ்ந்தார்களாம். அந்தப் புகழ்ச்சியில் மகிழ்ந்த மன்னன் மக்களுக்கு தன் ஆடையின் மதிப்பைக் காட்ட நகர் வலம் வந்தானாம். மன்னனைப் பற்றியறிந்த மக்களோ அணியாத நிர்வாண ஆடையினை புகழ்ந்து மகிழ்ந்தார்களாம். அப்போது ஓடிவந்த சிறுவன் ஒருவன் ஐயோ! அரசே அம்மணமாக வருகின்றீர்களே! உங்களுக்கு ஆடையில்லையா? என்று தன்னுடையைக் கொடுத்தானாம். அப்போதுதான் மன்னன் தன் அம்மணம் உணர்ந்தானாம். இதுதான் இந்த வரவு செலவுத்திட்டம் மீதான என்பார்வை.

சுற்றியிருப்பவர்கள் அறிவுரை சொல்பவர்கள் பதவி அனுபவிப்போர், பதவிக்காய் காத்திருப்போர், உங்கள் அம்மணத்தைக் காண்பிக்க மாட்டார்கள். நீங்கள் இளைஞர் விவகார அமைச்சராக இருந்த காலத்திலிருந்து இளைஞர் கழக அங்கத்தவராக இருந்து உங்களுடன் பழகியவன், அறிந்தவன் என்ற வகையில் அந்த அரசனின் அம்மணத்தைச் சுட்டிக்காட்டிய சிறுவனாக உங்கள் வரவு செலவுத்திட்டத்தின் அம்மணத்தை விமர்சிக்கின்றேன். இது விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டது. நம் நாடு தொடர்பானது.

இப்போது எனக்கு பிரபலமான சினிமாப் பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது. காதலியை நோக்கி காதலன் பாடுகின்றான். உன்னைவிட்டால் யாருமில்லை என் கண்மணியே என் கையணைக்க என்று.

எம் நாட்டை நினைத்து இன்றைய நிலையில் நான் பாடுகின்றேன் உங்களை நோக்கி, உம்மைவிட்டால் யாருமில்லை எம் நாட்டை இன்று மீட்பதற்கென்று. மீட்பீர்களா? மீட்பீர்கள் என்ற நம்பிக்கையில் என்னுரையை முடிக்கின்றேன் என்றார்.

வரவு செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் பதிவாகின.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (22) முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை அரசாங்கத்தின் புதிய பட்ஜெட் ஒரு அழகான காகித பூ போன்றது – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள பட்ஜட் என்பது  பார்வைக்கு நன்றாகவும் அழகாக இருந்தாலும் அது எங்களுடைய மக்களை சென்றடையுமா? ஒழுங்காக நடைமுறைக்கு வருமா போன்ற பல்வேறு கேள்விகள் எங்கள் மத்தியில் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (17) மன்னார் ரெலோ அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னை பொருத்த மட்டில் வரவு செலவு திட்டம் என்பது இப்போது வாசிக்கப்பட்டிருக்கிறது அதிலே சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் அரச ஊழியர்களுக்கு விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு ஒட்டுமொத்தமாக  எல்லாருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்த முக்கியமான விடயம் மாகாண சபைகள் பல்கலைக்கழகங்களை உருவாக்கலாம் என்ற விடயமும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு மிகச் சிறந்த  தீர்மானம். ஆனால் இது ஒரு காகித பூவாகத்தான் நான் பார்கின்றேன்.

ஏன் என்றால்  பொருளாதார ரீதியிலே பின்தங்கி இருக்கிற ஒரு நாட்டிலே இந்த பத்தாயிரம் கொடுப்பனவு என்பதை பார்க்கின்ற போது வரி விதிப்பு என்பது ஜனவரி மாதமே வர இருக்கிறது ஆகவே அவர்களுடைய சம்பள உயர்வு என்பது நான் நினைக்கின்றேன் மார்ச் மாதத்துக்கு பின்னரே கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது ஆகவே இந்த வரியை கட்டுவதற்கு இந்த பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே செலுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை மாகாண சபைகளுக்களுக்கு  பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான அதிகாரம் தொடர்பில்  சொல்லப்பட்டிருக்கின்றது.

காணாமல் போன உறவுகளுக்கு  கொடுக்கின்ற தொகை உயர்த்தப்பட்டிருக்கின்றது என்று அன்றைக்கு ஜனாதிபதி வாசித்தார் என்னை பொருத்தமட்டிலே அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால் அந்த மக்கள்   போரிலே தங்களுடைய உறவுகளை கண்முன்னாலே ஒப்படைத்து நியாயம் கேட்கின்ற,பல வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கின்ற மக்களாக இருக்கிறார்கள்.

அந்த மக்களின் பிரச்சினைகளை நிவாரணத்தின் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்பது  ஏற்றுக்கொள்ள முடியாது ஆகவே சலுகைகள் என்பது என்னும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாற்கான வாய்ப்புகள் என்னை பொருத்தவரை குறைவாக தான் இருக்கின்றது.

அந்தந்த நேரத்திலே வாசிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற போது முக்கியமாக விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு மக்களுக்கு இன்னும் அரசு ஊழியர்களுக்கு இப்படியான சலுகைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பட்சத்தில் நாங்கள் அதை வரவேற்க முடியும்.

அது நடைமுறைபடுத்தும் வரையில் எங்களா கருத்துக்கள் தெரிவிக்க முடியாது இருப்பினும் என்னை பொருத்தவரையில் இந்த வரவு செலவு திட்டம் என்பது என்னை   பார்வைக்கு நன்றாக இருந்தாலும் அழகாக இருந்தாலும் அது எங்கள் மக்களை சென்றடையுமா அல்லது இந்த பத்தாயிரம் வரிகட்டுவதற்கே சரியாகிவிடுமா என்ற கேள்விகள் இருப்பதாகவும் மொத்ததில் இந்த பட்ஜட் ஒரு அழகான காகித பூ மாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு மிட்டாய் போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத பல்கலைக்கழகம் காட்டுகிறார் ரணில் – சபா குகதாஸ்

2024 ஆண்டுக்கான 78 வது பாதீட்டில் வடக்கு , கிழக்கு மாகாணசபைகளுக்கு பல்கலைக்கழகங்கள் மாகாணசபை அதிகாரங்களுடன் அமைப்பதற்கான முன் மொழிவு ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. வேடிக்கை என்னவென்றால் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை பகிர்வதற்கான கோரிக்கைகளை பல தடவை தமிழர் தரப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் முன் வைத்தும் ஏமாற்றி வரும் சம நேரம் குழந்தைகளுக்கு மிட்டாய் காட்டுவது போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத மாகாணசபைக்குள் பல்கலைக்கழகம் கொண்டுவருவதாக மிட்டாய் காட்டுகிறார் இதற்கு இனவாதி சரத் வீரசேகர கொம்புக்கு மண் எடுப்பது போல இனவாதத்தை தூண்டி தன்னுடைய அரசியலை நடத்துகின்றார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த கால வரவு செலவுத் திட்டங்களில் தமிழர்கள் சார்ந்து கொண்டுவரப்பட்ட பல முன்மொழிவுகள் கடதாசிகளில் மட்டுமே இருந்தன நடைமுறைப்படுத்தப்பட

வில்லை அதே போன்று இம்முறையும் பல முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வலிந்து காணாமல் ஆக்கப்டோரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இச் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவதற்கு பதிலாக குற்றவாளிகளைக் காப்பாற்றும் செயற்பாடாகும் உண்மையாக முதலாவது பொறுப்புக் கூறலின் ஊாடாக பக்க சார்பற்ற சுயாதீன விசாரணை அதன் பின்னர் தான் பரிகார நீதி இவ்வாறான ஒழங்கு முறை மூலமே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் இதுவே பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையும் ஆகும்.

கடற்தொழில் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு என்பது மிகப் பெரும் ஏமாற்று காரணம் வடக்கு கடற்தொழிலாளர்கள் தொடர்ந்து எதிர் நோக்கும் சட்டவிரோத மீன்பிடி மற்றும் கடல் அட்டைப் பண்ணை விவகாரம் போன்ற பிரச்சினைகளுக்கு ஐனாதிபதி இதுவரை அவர்களை சந்தித்து ஆக்கபூர்வமான முடிவை எடுக்காமல் பிரச்சினைகளை கண்டும் காணாதவர் போல இருந்து கொண்டு கடல்வள அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்வது வேடிக்கையாக உள்ளது என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் – நாமல் ராஜபக்ச

சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்கட்சியினர் வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க தெரிந்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்களால் வரவு செலவு திட்டத்தில் இருக்கும் பிழைகளை மாத்திரமே சுட்டிக்காட்ட முடியும்.

அதனை தோற்கடிப்பதற்கான உரிமை எதிர்கட்சியினருக்கே இருக்கின்றது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் போது உரம் தொடர்பான விடயத்தில் வாயை மூடிக்கொண்டு இருந்ததால் இறுதியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதேவேளை வரவு செலவு திட்டத்தில் இருக்கும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதாரத்தை மீட்டமையை போன்று கிரிக்கட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் – ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில்

இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டுவர விரும்புவதாகவும், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட் விளையாட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

இவ்வருட வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலை மாற்றியமைக்கும் வரவு செலவுத் திட்டமாகும்.வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் இலக்கை ஏற்கனவே தான் நெருங்கிவிட்டதாகவும், அரசியல் நோக்கின்றி அந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் தேர்தலை இலக்கு வைத்து செயற்பட்டாலும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே தனது முதல் கடமையாகும் எனவும் அதன் பின்னர் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் 2024 வரவு செலவுத் திட்டம் மற்றும் அதன் அடிப்படை குறித்து இங்கு நீண்ட விளக்கமளித்தனர்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

ஒரு நாடாக முன்னோக்கிச் செல்லும்போது அரசாங்கச் செலவுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

மேலும், மத்திய வங்கியின் சட்டத்தின்படி இப்போது எமக்கு பணத்தை அச்சிடவோ வங்கிகளிடம் கடன் பெறவோ முடியாது. மேலும், அரசாங்கத்திற்கு பெறக்கூடிய கடன்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது நாம் பெருமளவு தொகை கடன்கள் செலுத்தவேண்டியுள்ளது.

குறிப்பாக, பௌத்த பொருளாதார தத்துவத்தின்படி அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்போது வருவாயை உருவாக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும். இதுவரை நம் நாட்டில் இருந்த பொருளாதார முறைமை வெற்றிபெறவில்லை. 1972 இல் முழுமையான சோசலிசப் பொருளாதாரம் பின்பற்றப்பட்டதோடு 1977 இல் பொருளாதாரத்தின் ஒரு பகுதி திறந்து விடப்பட்டது.பொருளாதாரத்தை திறந்து அரச நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் இதை அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

இன்று சிங்கப்பூர், மலேசியா போன்ற முன்னேறிய நாடுகளின் பொருளாதாரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் இலங்கையில் மிகப்பெரிய தனியார்மயத்தை மேற்கொண்டு வருகின்றோம். அதாவது காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்திய விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு முழு உரிமையை வழங்க வேண்டும். மேலும் குறிப்பாக அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் அந்த உரிமை வழங்கப்படும்.

நாட்டின் பொருளாதாரத்திற்காக 500 பில்லியன் முதல் 1 டிரில்லியன் ரூபாய் வரை சொத்துக்களை உள்ளடக்கியுள்ளோம். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸினை விற்றாலும் இந்தச் சேவைகள் அனைத்தையும் சேர்த்தாலும் இந்தத் தொகை கிடைக்காது. இவற்றின் உற்பத்தியை இப்போது அதிகரிக்கலாம். நாங்கள் எடுத்துள்ள ஒரு பாரிய நடவடிக்கையாக நான் பார்க்கிறேன். இது இலங்கையின் மிகப்பெரிய தனியார்மயமாக்கலாகும்.

சாதாரண மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் நில உரிமையை வழங்கவில்லை. ஷங்ரில்லா ஹோட்டலுக்கு நில உரிமையை வழங்கினோம். ஆனால் இது சாதாரண மக்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த காணிகளை மக்களுக்கு வழங்குவதற்காகவே மகவெலி ஆரம்பிக்கப்பட்டது. சீ மற்றும் எச் வலயங்களில் உள்ள நிலம் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இப்போது இவை அனைத்தும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம். எங்களுக்கு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரம் மற்றும் சந்தை தேவை என்பதால், RCEP அமைப்பைப் போன்றே இந்தியா மற்றும் பங்களாதேஷ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் எங்கள் சந்தையை விரிவுபடுத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நாம் ஒரு போட்டி பொருளாதாரமாக மாற வேண்டும். போட்டியற்ற வணிகங்கள் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும். அதற்காக நாம் தனியான உதவிகளை வழங்குகிறோம்.பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் குறுகிய கால திட்டங்களாக விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை நவீனமயமாக்கல் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். விவசாயத்தை நவீனமயமாக்கினால், நாட்டில் பாரிய விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

சுற்றுலாத்துறையின் ஊடாகக் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கவும் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 05 மில்லியன்களாக அதிகரிக்கவும் எதிர்பார்த்திருப்பதோடு, டிஜிட்டல் பொருளாதார முயற்சிகளையும் அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவுடன் முன்னோக்கிச் செல்லவும் எதிர்பார்க்கிறோம். இதுவரையில் அதுபற்றி கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

அதற்கான மனித வளமும் அவசியப்படுகிறது. கல்வி முறையில் மாற்றம் செய்து அந்த தேவையை பூர்த்தி செய்துகொள்ள எதிர்பார்க்கிறோம். அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை புதிதாக ஆரம்பிப்பதற்கு அவசியமான சட்டங்கள் உருவாக்கப்படும்.

பல்கலைக்கழங்களில் கட்டணம் அறவிடப்படும் பட்சத்தில் அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு கடன் தொகையும் வழங்கப்படும். அதேபோல் தொழிற் பயிற்சித் துறையை மறுசீரமைத்து மாகாண சபைகளின் கீழ் நடத்திச் செல்ல எதிர்பார்க்கிறோம்.

மாகாண சபைகளுக்கு ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு காணப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் வாய்ப்புக்களும் வருமான வழிமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும். அந்த பணிகளை 2030க்குள் செய்து முடிக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டில் நாம் புதிய பொருளாதார வேலைத்திட்டங்களை ஆரம்பிப்போம்.

அதேபோல் 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஆணைக்குழுக்கள், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பல்வேறு அறிக்கைகள் எனக்கு கிடைத்துள்ளன. அதனால், நிறைவேற்று அதிகாரத்தின் செயற்பாடுகளுக்கு பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பும் கிடைக்கிறது.

ஊழல் ஒழிப்புக்கான சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டுள்ள அதேநேரம், தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்த்து அரசியலமைப்புச் சபையினால் அதற்கான அங்கத்தவர்கள் நியமிக்கப்படும் வரையில் காத்திருக்கிறோம்.

சர்வதேச நாணய நிதியத்துனான பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக “அரச நிர்வாக பகுப்பாய்வு” செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கை சிங்களம் – தமிழ் மொழிகளில் கிடைத்தவுடன் அதனை செயற்படுத்துமாறு அறிவிப்போம்.

அதனை மேற்பார்வை செய்வதற்கான பாராளுமன்றத்தில் மேற்பார்வைக் குழுவொன்றை நிறுவ உள்ளோம். மோசடி தொடர்பில் தேடியறிந்து அதனை கட்டுப்படுத்துவதே எமகு நோக்கமாகும்.

ஐக்கிய இராஜ்ஜியத்தில் செய்யப்பட்டதை போன்று பாராளுமன்ற தரநிலை தொடர்பான வரைபை முன்வைக்க எதிர்பார்க்கிறோம்.

அதனால், நாட்டில் காணப்படும் அரசியல் முறையை தொடர்ந்தும் முன்னெடுப்பதா அல்லது மாற்றங்கள் அவசியமா என்பதை தேடியறிவதற்கான ஆணைக்குழு ஒன்றினை நியமித்துள்ளோம்.

அரசியல் கட்சிகள் உரிய வகையில் செயற்படாவிட்டால் ஜனநாயகம் இருக்காது. எனவே அரசியல் கட்சிகளை நிர்வகிப்பது எப்படி, தேர்தல் சட்டம் மற்றும் செலவீனங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தேடிப்பார்க்க வேண்டியது அவசியமாகும்.

அதேபோல், ஜனசபை முறைமையை ஏற்படுத்தவும் எதிர்பார்க்கிறோம். ஒரு வருடத்திற்கும் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த சூழலிலேயே தற்போதைய வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எச்.சமரதுங்க குறிப்பிட்டதாவது.

இலங்கைப் பொருளாதாரத்தின் முழுமையான தரவுகள் எம்மிடம் இல்லை. 2022 இல் நாட்டின் பொருளாதார மந்தநிலை பற்றிய தரவுகளே எங்களிடம் உள்ளன. கடந்த வருடம் நாட்டின் பொருளாதாரம் 7.3 சதவீதமாக முடங்கியது. இந்த வருடத்திலும் பொருளாதாரம் 2% ஆக முடங்கியது.

ஆனால், 2024 பொருளாதாரம் வளர்ச்சி காணும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அந்த வகையில், 1.8% நேர் பெறுமதியிலான வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டு வந்துள்ளோம் என்பதை புள்ளி விவரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

2022 ஏப்ரல் மாதமளவில் நாட்டின் கையிருப்பு 24 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது. தற்போதைய அரசாங்கம் அதனை 3.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கச் செய்துள்ளது. அடுத்த வருடம் அடிப்படைக் கணக்கில் அதிகரிப்பை காண முடியும் என எதிர்பார்க்கப்படுவதோடு. கடன் மீள் செலுத்துகையின் போது அடிப்படை கணக்கு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

வாகன இறக்குமதி தவிர்ந்த ஏனைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு கையிருப்பும் வரையறுக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட 2023 உடன்படிக்கையின் படி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ளது. இது வரையிலான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றியளித்துள்ளன.

இருதரப்பு கடன்கள் மற்றும் இறையாண்மை பத்திர கடன்கள் கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கத்தால் செலுத்தப்படவில்லை. வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடம் பெற்ற கடன்கள் தொடர்ந்து திருப்பிச் செலுத்தப்பட்டன. செலுத்தப்படாத தொகை எஞ்சியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டின் பின்னர் மேற்படி கடன் தொகையை செலுத்த முடியும்.

அடுத்த வருடம் 4127 பில்லியன் வருமானம் அரசாங்கத்திற்கு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவு 6978 பில்லியன் ரூபாகவும் பட்ஜெட் இடைவெளி 8% என்ற குறைந்த அளவில் உள்ளது. பணம் அச்சிடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளது. அரச வங்கிகளின் கடன் வழங்களுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு பணத்தை தேட வேண்டிய அவசியம் ஏற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கத்துக்கமைய கடன் பெறுதலின் போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அரசாங்கத்தின் செலவீனங்களுக்கு ஏற்றவாறு பணத்தை ஈட்டிக்கொள்ள வேண்டிய தேவை உருவாகும்.

சர்வதேச நிதியத்தின் 4 வருட வேலைத்திட்டத்திலும் வரவு செலவு திட்டத்திலும் அதற்கு அவசியமான யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. வரவும் செலவும் ஒரே அளவில் காணப்படுவதால், பெருமளவான மாற்று திட்டங்களுக்கு செல்ல முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்கு அமைய அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க சர்வதேச கடன் வழங்குநர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்

அந்த வேலைத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமாயின், சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இது சாதாரண காலத்தில் இடம்பெற்ற வேலைத்திட்டம் அல்ல. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னரே சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகளை எட்டினோம். எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு வெளியே அரசாங்கம் செயல்பட முடியாது. பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அது அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ஒரு வேலைத்திட்டமாகும். சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் பணியே இடம்பெறுகின்றது. கடந்த 16 மாதங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் 85 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் ஊடாக பொருளாதாரத்தை துரிதப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். புதிய பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் புதிய சட்டங்களை தயாரிக்கவும் அதில் முன்மொழியப்பட்டுள்ளது. உற்பத்திச் சந்தையில் உள்ள குறைபாடுகளுக்கு, புதிய முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தொழிலாளர் சந்தையை வலுப்படுத்துவது குறித்தும் பட்ஜெட் மூலம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் சந்தைகள் மற்றும் நிலம் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் உள்ளன.

ஜனாதிபதி குறிப்பிட்டது போன்று நீண்டகாலமாக தீர்க்கப்படாத காணிகளின் உரிமையை மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்கள் வாடகை செலுத்த வேண்டியதில்லை. அதற்கான கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறோம். அந்த இரண்டு திட்டங்களின் நிதி ப் பெறுமதி சுமார் இரண்டு டிரில்லியன் ரூபாய். அந்த சொத்துக்கள் நாட்டின் சந்தையில் இணைக்கப்படுகிறது என்றார்.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் வழங்கினார்.

கேள்வி:கிரிக்கெட் அபிவிருத்திக்காக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1.4 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது, விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மீதான தடையை நீக்க உங்களிடம் ஏதேனும் வேலைத்திட்டம் உள்ளதா?

பதில்: சர்வதேச கிரிக்கெட் பேரவையுடனான கலந்துரையாடலை நடத்த கிரிக்கட் தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாம் இழந்த போட்டிகளை எப்படியாவது பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் வகையில் கிரிக்கெட்டுக்காக 1.4 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் அவ்வாறான பிரச்சினைகள் இல்லை. ஏனைய பிரதேசங்களிலும் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும். 2030ஆம் ஆண்டு வரை இவ்வாறு பணம் ஒதுக்க எதிர்பார்க்கிறோம். அப்போது நாம் உலகில் முதல் இடத்தை அடைய முடியும்.

காமினி திசாநாயக்க முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் காரணமாகவே 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றோம். அப்போது பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்காக நான் பல்வேறு செயற்பாடுகளைச் செய்தேன். கார்பீல்ட் சோபஸ் இலங்கைக்கு வருகை தந்து எங்களுக்கு உதவினார். இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமாயின் கிரிக்கெட்டையும் கட்டியெழுப்ப முடியும்.

கேள்வி:நவம்பர்-டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச கடன் மறுசீரமைப்பு முடிவடையும் என்று எதிர்பார்த்தாலும், அது இன்னும் நடக்கவில்லை. அதற்கு இன்னும் எவ்வளவு காலம் செல்லும்?

பதில்:நவம்பர் மாதம் இன்னும் முடியடையவில்லை. நாம் கடன் வழங்கும் நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளோம். அந்த நாடுகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமான ஆலோசனைகளை சமர்ப்பித்துள்ளன. அது தொடர்பில் நாம் சர்வதேச நாணய நிதியத்துடனும் கலந்துரையாட வேண்டும். ஆனால் அவர்களை மீண்டும் டிசம்பர் 6ஆம் திகதி தான் நாம் சந்திப்போம். எனவே டிசம்பர் மாதம் இறுதி வரை பார்ப்போம். இந்தக் கட்டத்தை வெற்றிகரமாகக் கடந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். ஏற்கனவே வெஸ்டன் மிலன், அதானி போன்ற முதலீட்டாளர்கள் வந்து முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். தோல்வியடைந்த நாடு என்றால், இவ்வாறு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்.

கேள்வி:நீங்கள் முன்வைத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பதிலளித்துள்ளதா? சில தரப்பினர் கூறுவது போன்று வரவு செலவுத் திட்டத்தில் முழுமையாக சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தான் உள்ளதா?

பதில்:இல்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எனக்கு பதில் வரவில்லை. இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் நாங்கள் செயற்பட்டுள்ளோம்.

வெகுசன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2024 வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடு

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் காணப்படுகிறது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் எவ்வித பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை.

இருக்கும் பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் புதிதாக நான்கு பல்கலைக்கழகங்களை அமைப்பதாக குறிப்பிடுவது நகைப்புக்குரியது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட சமர்ப்பின் போது இந்த கருத்தையே குறிப்பிட்டார். ஆனால் எந்த தவறும் திருத்திக் கொள்ளப்படவில்லை.

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. வரி அதிகரிப்பு,தேசிய வளங்களை விற்றல் என்பதை அரச கொள்கையாக முன்வைக்கப்பட்டுள்ளன.

வரையறையற்ற கடன்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் கடன்படு எல்லையை 3400 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளார். ஆகவே இந்த வரவு செலவுத் திட்டம் நடைமுறைக்கு ஒருபோதும் சாத்தியமடையாது.

நாட்டில் 17 அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை.

மாறாக புதிதாக 4 பல்கலைக்கழகங்களையும்,தனியார் பல்கலைக்கழகங்களையும் உருவாக்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.இது நகைப்புக்குரியது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி தனது முன்மொழிவுகள் ஊடாக குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்றார்.

ஆட்சியாளர்களுக்கு சொர்க்கத்தையும் மக்களுக்கு நரகத்தையும் காட்டும் வரவு செலவுத் திட்டம் – சஜித்

ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஆட்சியாளர்களுக்கு சொர்க்கமும் மக்களுக்கு நரகமும்  காட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளர்.

வரவு – செலவுத் திட்ட உரையை ஆரம்பித்த ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்தார், மேலும் பிரார்த்தனை செய்ய வேண்டியவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று புத்த பகவான் கூட போதித்தார், ஆனால் தற்போதைய ஜனாதிபதி பிரார்த்தனை செய்யவில்லை.

இது நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும், வரவு செலவுத் திட்டத்தில் நரகம் பற்றி பேசினாலும், ஆட்சியாளர்கள்  சொர்க்க லோகத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.

2022 வரவு  -செலவுத் திட்ட பிரேரணையில் எத்தனை விடயங்களை நிறைவேற்ற முடிந்தது என்பது குறித்தும் தெரிவித்த அவர்,  வரவு – செலவு திட்ட பிரேரணையில் அதிகளவான  விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாகவும் கூறினார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் இது இரண்டாவது வரவு – செலவு திட்டமாகும்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2 மணித்தியாலங்கள் நின்றவாறு வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வரவு – செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்து.முன்மொழிவுகளை செயற்படுத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரினார்.

இந்தியாவின் சென்னையில் உள்ள IT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல்.

19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2024 ஆம் ஆண்டில் 01 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2 மணித்தியாலங்கள் நின்றவாறு வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வரவு – செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்து.முன்மொழிவுகளை செயற்படுத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரினார்.

பொருளாதாரம் மீட்சியடையாமல் லெபனான் நாட்டின் நிலைக்கு செல்வதா இல்லையா என்பதை எதிர்க்கட்சியினர் தீர்மானிக்க வேண்டும். ஒருகாலத்தில் பிரித்தானியாவுக்கு கடன் வழங்கிய நாம் இன்று முழு உலக நாடுகளிடமும் கையேந்துகிறோம்.

பொருளாதார நெருக்கடிக்கு கடினமான தீர்மானங்களை  செயற்படுத்தாவிட்டால் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவ எவரும் முன்வரமாட்டார்கள்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு  கடினமான தீர்மானங்கள் இல்லாமல் போலியான அழகான விடையேதும் கிடையாது.

எதிர்காலத்தை சிறந்த முறையில் வெற்றிகொள்ள வேண்டுமாயின் நிலைபேறான பொருளாதார கொள்கை செயற்படுத்த வேண்டும்.

சுற்றுலா கைத்தொழில் துறையை மேம்படுத்த 8 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. சிவிட் ஸ்ரீ லங்கா திட்டத்தின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு முதல் செயற்படுத்தப்படும்.

அம்பாந்தோட்டை, பிங்கிரிய, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் புதிய முதலீட்டு வலயங்கள் ஸ்தாபிக்கப்படும்.

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படும்.

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நடைமுறையில் உள்ள சட்டங்களில் 60 சட்டங்கள் காலத்துக்கு ஏற்றாற் போல் திருத்தம் செய்யப்படும்.

அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

2024 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தைப் போன்று புரட்சிகரமான வரவு – செலவு திட்டத்தை எவரும் சமர்ப்பிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவிக்காமல் நாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்குங்கள்.

திருகோணமலை நகரம் இந்திய முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்யப்படும். இதற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படும்.

பொருளாதார நெருக்கடிக்கு தனித்து தீர்வுகாண முடியாது. அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவேன்.

வரவு – செலவுத் திட்ட  முன்மொழிவுகள் அமுலாக்கம், செலவு தொடர்பில் மாகாண சபைகள் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் தூய்மையான குடிநீர் பிரச்சினைக்கு 2024 ஆண்டின் முதல் காலாண்டுக்குள் நிரந்தர தீர்வு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

நட்டமடையும் அரச நிறுவனங்களினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே நட்டமடையும் அரச நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக எதிர்ப்பு தெரிவிப்பதை அரசியல் தரப்பினர் நாட்டுக்காக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த அரச வங்கிகள் ஊடாக இலகு வட்டி வீதத்திலான கடனுதவி வழங்கப்படும். இதற்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

சிறு மற்றும் பெருங்குளங்கள் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும். வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்துறையை மேம்படுத்துவது பிரதான இலக்கு.

சகலருக்கும் ஆங்கிலம் ‘திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 2034 ஆம் ஆண்டு  சகலருக்கும் ஆங்கிலம் என்ற இலக்கு வெற்றிபெறும்.

நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை  வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த  ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும்.

அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக  மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் எதிர்காலத்தில் மேலதிகமாக 4 பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்படும்.

பழமையான கல்வி முறைமை நடைமுறையில் உள்ளது. நவீன உலகுக்கு பொருத்தமான கல்வி முறைமை 2024 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படும்.

வீதி புனரமைப்புக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

மலையக பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் வரி 2024 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்படும். வீட்டு உரிமை முழுமையாக அவர்களுக்கு வழங்கப்படும். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்பார்ப்பார்களா ?

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஆரம்பகட்டமாக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் கடந்த காலங்களில் முன்வைத்த பரிந்துரைகளை வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கியுள்ளேன். ஆகவே வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மாதக் கொடுப்பனவுகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு :

சிரேஷ்ட பிரஜைகளுக்கான மாதக் கொடுப்பனவு 3000 ரூபாவால் அதிகரிப்பு.

விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு.

2024 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

தேர்தல் வெற்றியல்ல  நாட்டின் வெற்றியே எனக்கு  முக்கியம்.

ஓய்வூதியக்காரர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு.

அரச சேவையாளர்களுக்கான கொடுப்பனவு 10000 ரூபாவால் அதிகரிப்பு.

2024 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் தேர்தல் வரவு செலவுத் திட்டம் அல்ல, எதிர்காலத்துக்கான வரவு செலவுத் திட்டம்.

பூச்சியமாக  வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு கையிருப்பு தற்போது 3.5 பில்லியன் டொலராக நிலைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம் –

இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதார பாதிப்பினால் 30 சதவீதமாக உயர்வடைந்த வட்டி வீதம் தற்போது 15 சதவீதமாக குறைவடைந்துள்ளது –

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட அரசியல்,பொருளாதார கொள்கை தோல்வி. நவீன யுகத்துக்கு இணையாக கொள்கைகளை வகுக்காவிட்டால் ஒருபோதும் முன்னேற முடியாது.

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம்.

சகல அபிவிருத்திகளையும் எதிர்த்து எதிர்காலத்தையும் கொள்ளையடிக்க வேண்டாம்

நட்டமடையும் அரச நிறுவனங்களை தேசிய வளம் என்று குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த சுமைகளையும் மக்கள் மீது சுமத்த முயற்சி

மத்திய வங்கி  சட்டத்துக்கு அமைய எண்ணம் போல் நாணயம் அச்சிட முடியாது. ஆகவே எதிர்வரும் ஆண்டு அரச வருமானத்தை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும். – நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

2023 ஆம் ஆண்டு  3415 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதும், 2410 பில்லியன் ரூபா மாத்திரமே திரட்டப்பட்டுள்ளது.ஆகவே வரி வருமான எதிர்பார்ப்பு இலக்கு தோல்வி – நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது நாணயம் அச்சிட வேண்டும்,கடன் பெற வேண்டும்.ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்துவது சமவுடைமை கொள்ளைக்கு எதிரானது  -நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

சம்பளத்தை அதிகரிக்குமாறு ஒரு தரப்பினர் போராடுகிறார்கள். அரச சேவையாளர்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். அரச சேவையாளர்களுக்கு ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது

கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிலையை நன்கு அறிவோம். வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வது இலகுவானதொரு காரியமல்ல

பொருளாதார மீட்சிக்காக எடுத்துள்ள தீர்மானங்கள் சரி என்பதை கடந்த கால சமூக கட்டமைப்பு நிலைவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எமது பயணம், பாதை, சரியன கடினமானதாக இருந்தாலும் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்

தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

போலியான வாக்குறுதிகள், அரசியல் நிவாரணங்கள் ஆகியவற்றால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.இதனை இனியும் தொடர முடியாது – நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் துரிதகால திட்டங்களுக்கு அப்பாற்பட்டு நீண்டகால இலக்குகளை அடிப்படையாக கொண்டதாக எதிர்கால திட்டங்கள் அமையும் –

எவரும் பொறுப்பேற்காத மரணப்படுக்கையில் இருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன். நாட்டை துரிதமாக மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம் –

அரசாங்கம் மாத்திரமல்ல அனைவரும் அரச நிதியை வீண்விரயம் செய்துள்ளோம். தவறான வாக்குறுதிகள், நிவாரணம் வழங்கல் பொருளாதார முன்னேற்றத்துக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க சபைக்கு முன்மொழிந்தார்.