சீனாவின் சினோபெக் நிறுவனம் மேலும் 50 எரிபொருள் நிலையங்களை அமைக்க அனுமதி

சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு இலங்கையில் மேலும் 50 எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினால் சினோபெக் நிறுவனத்துக்காக 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 145 எரிபொருள் நிலையங்களை பொறுப்பேற்பதற்கு அந்த நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

தற்போது, மேலும் 50 நிலையங்களை அமைப்பதற்காக சினோபெக் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மொத்த எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கை 200 எரிபொருள் நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.

எனினும், ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால், வழங்குநர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தங்களைப் பரிசீலிக்க தயாராக உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சீன ஆய்வுக்கப்பல் இலங்கை வர அனுமதி!

சீன ஆய்வுக் கப்பலான ‘சி யான் 06’ இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலின் வருகை தொடர்பில் சீனத் தூதரகமும் வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

சீன ஆய்வுக் கப்பலுடன் இணைந்து நாரா நிறுவனம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும், கப்பல் இலங்கைக்கு வரும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 06’ ஒக்டோபர் முதல் நவம்பர் வரை கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் நிறுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக சமீபத்தில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த கப்பல் தென் இந்திய பெருங்கடல் பகுதி உட்பட பரந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பிரமிட் திட்டத்தில் பணத்தை சுருட்டிய சீனக்கும்பல்

பொரளை லேக் டிரைவ் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்குள் சிலர் புகுந்து, தம்மை கட்டி வைத்து கொள்ளையடித்ததாக சீன பிரஜை ஒருவரின் முறைப்பாடு போலியானது என கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறிய 38 வயதான சீன வர்த்தகர், பிரமிட் மோசடிகள் மூலம் 40 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர், அவரது நண்பர் என சீன இரண்டு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சீன பிரஜை, ஏனைய சீன பிரஜைகள் குழுவுடன் இணைந்து இந்த நாட்டில் பிரமிட் திட்டத்தை மேற்கொண்டு வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததை மறைப்பதற்காக இந்த சீன நபரே திட்டமிட்டு கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

20ஆம் திகதி அவர் பொலிசில் முறையிட்டிருந்தார். தனது 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை கொள்ளையடித்துள்ளனர் என அதில் குறிப்பிட்டனர்.

கடந்த 19ஆம் திகதி வியாபார நிமித்தம் சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பியதாக இந்த சீன பிரஜை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். புகாரின்படி, அவர் தனது மொழிபெயர்ப்பாளருடன் ஊதா நிற கேடிஹெச் வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். வாகனத்தின் உரிமையாளரே தனது மொழிபெயர்ப்பாளர் மற்றும் சாரதி என சீன நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பாளருடன் வீட்டிற்குள் நுழைந்த போது, வீட்டிற்குள் இருந்த முகமூடி அணிந்த மூன்று நபர்கள் தம்மைத் தாக்கி, கழுத்தில் வாளை வைத்து, கைகளைக் கட்டியதாக சீன வர்த்தகர் பொலிஸாரிடம் தெரிவித்தார். தான் துப்பாக்கி முனையில் கட்டப்பட்டதாக மொழி பெயர்ப்பாளர் போலீசாரிடம் தெரிவித்தார்.

அப்போது ஒருவர் தனது மொபைல் போனை எடுத்து சோதனை செய்ததாக சீன தொழிலதிபர், பொலிசாரிடம் கூறினார். தொலைபேசி பூட்டப்பட்டிருந்ததால் கொள்ளையர்கள் தம்மை அச்சுறுத்தியதாகவும், அதனைத் திறக்கும் போது, தனது நண்பர் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தான் சிக்கலில் இருப்பதாகவும் தெரிவித்ததாக சீன பிரஜை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

செய்தி அனுப்பிய சிறிது நேரத்திலேயே வீட்டின் மணி அடித்ததையடுத்து வீட்டில் தங்கியிருந்த கொள்ளையர்கள் பீதியடைந்து வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். மூன்று கொள்ளையர்களும் வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அதே நேரத்தில் சீனப் பிரஜையின் நண்பர்களும் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது வழக்கத்திற்கு மாறான சம்பவம் என்பதால் இது குறித்து முதல் சந்தேகம் எழுந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரண்டு நண்பர்கள் வீட்டிற்கு வந்ததாகவும், அவர்கள் தனது மற்றும் மொழிபெயர்ப்பாளரின் கைகளை அவிழ்த்ததாகவும் சீன நாட்டவர் பொலிஸாரிடம் கூறினார். வீட்டைச் சோதனையிட்டபோது, கொள்ளையர்கள் தமது வாகனத்தில் தப்பிச் சென்றதையும், சமையல்காரர் கை, வாய் கட்டப்பட்டு வீட்டின் உள்பக்கமாக அடைக்கப்பட்டிருந்ததையும் கண்டதாக கூறியுள்ளார்.

23.8 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான அமெரிக்க டொலர்கள், யுவான், தாய்லாந்து நாணயம், ஹொங்கொங் டொலர்கள், திர்ஹாம்கள் மற்றும் இலங்கை ரூபா என்பவற்றையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக சீன பிரஜை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி 11 கையடக்கத் தொலைபேசிகள், 7 மடிக்கணினிகள், ஐந்து வெளிநாட்டு மதுபான போத்தல்கள், அர்மானி கைக்கடிகாரம், பெறுமதியான இடுப்புப் பட்டை மற்றும் வாகனங்கள் என்பன கொள்ளையிடப்பட்ட ஏனைய பொருட்களில் அடங்கும். அந்த சொத்துக்களின் மதிப்பு 17.7 மில்லியன் ரூபாய்.

கமரா அமைப்பு இருந்தாலும், பாதுகாப்பு கமரா காட்சிகளை சேமித்து வைத்திருக்கும் டி.வி.ஆரும் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளதாக சீன நாட்டவர் புகார் அளித்துள்ளார்.

இந்த சீன பிரஜைகள் தங்கியிருந்த வீடு 70 மில்லியன் ரூபாய்க்கு வாடகைக்கு விடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வீட்டில் இருந்தே இந்த மோசடி நடந்துள்ளது. பொலிசார் அந்த வீட்டை சோதனையிட்ட போது, பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜைகள் கும்பல் தப்பிச் சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சீன பிரஜைகள் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த நாட்டில் தங்கியிருந்து இந்த சர்வதேச பிரமிட் திட்டத்தை ஒன்லைனில் நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்காக பயன்படுத்தப்பட்ட பல மடிக்கணினிகளையும் பொலிசார் கண்டுபிடித்தனர். சோதனையின் போது, அங்கு தங்கியிருந்த சுமார் 15 சீன பிரஜைகள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்ட சுமார் 40 மடிக்கணினிகளை அவர்கள் எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணையில், வாகன சாரதியகவும் மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்ட நபருக்கு திட்டத்தை செயல்படுத்த ரூ.1.5 மில்லியன் வழங்கப்பட்டது தெரிய வந்தது..

இந்த நபர் கொழும்பு துறைமுக நகரத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சீன பிரஜையுடன் பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சீனப் பிரஜைகள் இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் சிகரெட் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து முப்பதாயிரம் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொழும்பில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏழு வீடுகளையும் இந்த கொள்ளையர்கள் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சீனாவினால் அதி நவீன தொடர்பாடல் வாகனங்கள் இலங்கை இராணுவத்துக்கு கையளிப்பு

2017 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும், இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், சீன மக்கள் குடியரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பாடல் அமைப்புகளுடன் கூடிய வாகனங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரால் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை (22) இராணுவ தலைமையக வளாகத்தில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

45 மில்லியன் யுவான் (அமெரிக்க டொலர் 6.2 மில்லியன்) பெறுமதியான இந்த தொடர்பாடல் முறைமை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த வாகனங்கள் அனைத்திலும் அதிநவீன ஈஎல்டி தொடர்பாடல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளன. குறுங் அலைவரிசை அமைப்பு, மற்றும் அவசர காலங்களில் நேரடி தகவல் தொடர்பாடலுக்கு உதவும் விமானிகள் அற்ற விமானங்கள் (ட்ரோன்கள்) என்பன பொறுத்தப்பட்டுள்ளன.

இந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், இலங்கை இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வலையமைப்பை மிகத் திறமையாகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலும் இயக்கும் திறனைப் பெறுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு வாய்ப்பாக அமையும்.

இலங்கையின் நிதி நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண சீனா தயார்

இலங்கையின் நிதி நெருக்கடி சவால்களுக்கு தீர்வினை காண்பதற்கு உதவுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வங் யி இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா எப்போதும் இலங்கையின் நம்பகதன்மை மிக்க மூலோபாய சகா என தெரிவித்துள்ள அவர் இலங்கை எப்போதும் சீனாவிற்கு நட்பாகயிருந்துள்ளது முக்கிய நலன்கள் குறித்த விடயங்களில் சீனாவிற்கு ஆதரவாக விளங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இறைமை சுதந்திரம் மற்றும் தேசிய கௌரவம் ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கைக்கு சீனா எப்போதும் ஆதரவை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஒக்டோபரில் சீன ஆராய்ச்சிக் கப்பல் விஜயம்

இலங்கைக்கு ஒக்டோபர் மாதத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை மீண்டும் பெரும்புவிசார் அரசியல் சிக்கலை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கையின் அம்பாந்தோட்டை கொழும்புதுறைமுகங்களில் தரித்துநிற்கும் என எதிர்பார்க்கப்படும் சீனாவின் சியான் 6 ஆராய்ச்சி கப்பல் குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது.

ஒக்டோபர் 25ம் திகதி சீன கப்பல் இலங்கையை வந்தடையும் என்பதை இலங்கை கடற்படை நேற்று உறுதி செய்துள்ளது.

குறிப்பிட்ட கப்பல் 17 நாட்களுக்கு இலங்கையில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும்.

இலங்கையின் நாரா அமைப்புடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவே இந்த கப்பல் இலங்கை வருகின்றது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை ருகுணுபல்கலைகழகத்துடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறிப்பிட்ட கப்பல் இலங்கைக்கு வருகின்றது என நாரா தெரிவித்துள்ளது.

தனது ஆராய்ச்சிகளுக்கு அவசியமான மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்காக அந்த கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தவுள்ளதாக நாரா தெரிவித்துள்ளது.

வடக்கில் சீனாவுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் மீள இந்தியாவிடம் கையளிப்பு

வடக்கில் உள்ள அனலைதீவு, நைனாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய தீவுகளில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு இலங்கை அரசினால் சீனாவுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை அழுத்தங்கள் மூலம் இந்தியா கைப்பற்றியுள்ளது.

12 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த திட்டங்கள் 2021 ஆம் ஆண்டு சீனாவின் செனோசர் எச்வின் என்ற நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியிருந்தது. ஆனால் அதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்புக்களை இலங்கை அரசுக்கு தெரிவித்ததால் அன்றைய இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா அந்த திட்டத்தை இடை நிறுத்தியிருந்தார்.

சீனா தனது திட்டத்தை மாலைதீவில் உள்ள 12 தீவுகளில் நடைமுறைப்படுத்தியிருந்ததுடன், இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது. எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக சீனாவின் திட்டத்தை நிறுத்திய இலங்கை தற்போது அதனை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

இதனிடையே, மன்னார், பூநகரி மற்றும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் போன்ற பிரதேசங்களிலும் எரிசக்தி திட்டம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சீனா தனது இரண்டாவது வௌிநாட்டு இராணுவத்தளத்தை ஹம்பாந்தோட்டையில் அமைக்க அதிக வாய்ப்பு

சீனா தனது நாட்டிற்கு வெளியே அமைக்கவுள்ள இரண்டாவது இராணுவத்தளத்தை பெரும்பாலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் William & Mary பல்கலைக்கழகத்தின் AidData ஆய்வுத் திட்டத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவின் துறைமுகத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வெளிநாட்டு கடற்படைத் தளங்களைப் பாதுகாப்பது என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள 46 நாடுகளிலுள்ள 78 சர்வதேச துறைமுகங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்கட்டமைப்பை மேம்படுத்தவும், எண்ணெய், தானியம் மற்றும் உலோகப் பொருட்களின் இறக்குமதி – ஏற்றுமதிக்காகவும் சீன வர்த்தக நிறுவனங்கள் செய்துள்ள பாரிய முதலீடுகள் தொடர்பான விரிவான தகவல்கள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சீன வர்த்தக நிறுவனங்கள் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களை தமது ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ள 78 சர்வதேச துறைமுகங்களின் நிர்மாணத்திற்காக செலவிட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேலதிகமாக அடுத்து வரும் 5 வருடங்களில் ஈக்வடோரின் கினி இராச்சியத்தின் வாடா துறைமுகம் , பாகிஸ்தானின் Gwadar துறைமுகம் மற்றும் கெமரூன் இராச்சியத்தின் க்ரீப் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேலதிகமாக பாகிஸ்தானின் Gwadar துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சீனா அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையில் காணப்படும் நட்பே அதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா மேற்கொண்டுள்ள முதலீடு, இவ்வாறான திட்டமொன்றுக்காக சீனா செய்துள்ள மிகப்பெரிய முதலீடு என்பதுடன், இதன் பெறுமதி 2.19 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பெரும்பான்மை பலத்தை சீனாவிற்கு பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் கடந்த 2017 ஆம் ஆண்டு இணக்கம் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா ஏற்கனவே தனது முதல் வெளிநாட்டு இராணுவத்தளத்தை கிழக்கு ஆபிரிக்காவின் ஜிபூட்டி துறைமுகத்தில் நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இந்து சமுத்திர பிராந்தியத்தை பாதுகாப்பான வலயமாக பராமரிக்க நடவடிக்கை – அலி சப்றி

நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் நெருங்கிய மற்றும் நீண்டகால நட்பு நாடான இந்தியாவுடன் புரிந்துணர்வு உறவைக் கட்டியெழுப்புவது இரு நாடுகளுக்கும் அதேபோன்று பிராந்தியத்திற்கும் மிகவும் நல்லதொரு நிலையாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் உலகின் மொத்த வளர்ச்சியில் 2/3 ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படும் என்பது இன்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விடயம்.

மேலும் இந்தியாவும் சீனாவும் அதில் முன்னிலை வகிக்கும் என்பது எவ்வித விவாதமும் இன்றி சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள உண்மையாகும்.

எனவே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய அபிவிருத்தி வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தை உற்றுநோக்கினால், அந்நாடுகள் இணைந்து செயற்பட்டதன் காரணமாக முழு ஐரோப்பிய பிராந்தியமும் வளர்ச்சியடைந்தது.

மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரையிலும் இதே நிலைதான். சீனாவைப் போலவே, அமெரிக்கப் பிராந்தியமும் அதே முறையில் அபிவிருத்தியடைந்தது. இந்த அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறுவதே எமது எதிர்பார்ப்பாகும்.

இந்து சமுத்திர பிராந்தியம் முழுவதையும் பாதுகாப்பான வலயமாக எவ்வாறு பராமரிப்பது மற்றும் பரஸ்பர பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத விடயங்களை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் கூட்டாகச் செயல்படுவது குறித்தும் இரு தரப்பும் இணக்கப்பாட்டுடன் கலந்துரையாடப்பட்டது” என அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

சீனாவின் பிடியில் சிக்கியுள்ள வட கடலை மீட்பதற்கான நடவடிக்கையை இந்திய பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும்

வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும். என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசங்களின் செயளாளர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

2016ம் ஆண்டு இரு நாட்டு அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அமுல்ப்படுத்த வேண்டும்.

இலங்கை ஜனாதிபதி இந்தியா செல்லவுள்ள நிலையி்ல் மீனவர் பிரச்சினை தொடர்பிலும் இழவை மடிப் படகுகள் தொடர்பிலும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவுடன் பேசவேண்டுமென சில கட்சிசார் அமைப்புக்கள் கூறி வருகின்றன.

தொப்புள் கொடி உறவுகளுக்கிடையிலான பிர்சினையை அரசியலாக்கி கட்சிசார் அமைப்புக்கள் வெளியிடும் கருத்துக்களை மீனவர்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ளவியலாது.

இன்றைய ஜனாதிபதி முன்னர் பிரதமராக இருந்த 2016 ம் ஆண்டு 5 ம் திகதி வெளிவிவகார அரச மட்டத்தி்ல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

இதுவரை அந்த அறிக்கையை ஜனாதிபதியோ உரிய அமைச்சரோ நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதேபோல் தான் தற்போதும் இந்தியாவிற்கு சென்று அறிக்கையொன்று எட்டப்பட்டு நடைமுறைப்படுத்தாத நிலையே ஏற்படவுள்ளது.

ஏற்கனவே டில்லியி்ல் உருவாக்கப்பட்ட உடன்படிக்கை நடைமுறைப்படுத்தினாலே போதுமானது. குறித்த அறிக்கையானது இந்தியாவின் இணையத்தளத்திலும் உள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதம் 28 ம் திகதி 7 சமாசங்களும் 18 சங்கங்களும் கலந்துரையாடி இவ் அறிக்கையை அமுல்ப்படுத்துமாறு ஜனாதிபதி்க்கு கடிதம் அனுப்பினோம்.

குறித்த அறிக்கையில் 6 மாதங்களுக்கொரு தடவை மீனவ அமைப்புக்கள் , கடலோர காவற்துறை மற்றும் இரு நாட்டு அரசாங்கங்களும் கலந்துரையாட வேண்டும் என நல்ல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரமும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடற்தொழிலாளர் பிரச்சினைக்கு ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டுமனக் கூறப்பட்டது.

இந்திய மத்திய அமைச்சர் முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் பலாலி விமான நிலையமூடாக வந்திறங்கி யாழ்.கலாசார நிலையத்தை சம்பிரதாயபூர்வமாக கையளித்தனர்.

அதன்போது இந்திய மீனவர்களை இடியுங்கள், பிடியுங்கள் என கூறி மயிலிட்டி துறைமுகத்தில் கடற்தொழில் சமாசங்களுக்கு இந்தியாப் படகுகள் வழங்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சருடனும் மாநிலத் தலைவருடன் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் பேச அழைத்திருக்கவில்லை.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை இன்றைய சூழலில் அரசியல் கட்சி சார்ந்தவர்களின் பிரச்சினையாகவே மாற்றப்படுகின்றது.

தற்போதும் கடலட்டைப் பண்ணைகள் பினாமிகளின் பெயரிலே உள்ள நிலையில் அரியாலையிலுள்ள கம்பனி சீனா முதலீடாகவிருப்பினும் தற்பொழுது பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்தீவில் உள்ள காவற் கொட்டகைகளில் சீனா நாட்டவர்கள் தங்கியிருந்ததை உறுதிப்படுத்தி யாழ்ப்பாணத்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் ஆங்கிலப் பத்திரிகைளிலும் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

எமது கடலில் நாம் சுதந்திரமாகத் தொழில் மேற்கொள்ள வேண்டும். எனவே வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை 2016 ம் ஆண்டு உடன்படிக்கை மாற்றப்படின் வடக்கு கடலை சீனாவிற்கு ஒப்படைக்கும் சூழ்ச்சியாக அமையும்.

இப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தான் 2017 ம் ஆண்டு 11 ம் ஆல்க கடற்தொழில் உள்ளூர் இழுவைமடிச் சட்டமும் 2018 ம் ஆண்டு வெளிநாட்டு மீனவர் ஒழுங்குபடுத்தல் சட்டமும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை வட மாகாண கூட்டுறவு ஆணையாளர் சங்கங்கள் சமாசங்களி்ன் பதவி.நியமனங்களுக்காக கட்சியின் ஆதரவாளர்களே நியமி்க்ப்படுகின்றார்கள்.

இவ்வாறான செயற்பாடு கூட்டுறவையும், வடக்கு கடலையும் அழிப்பதற்கு துணைபோவதாக அமைகின்றது. ஜனநாயக முறையில் கூட்டுறவு முறைகள் இடம்பெற இடமளிக்காவிட்டால் பதவிகளை வழங்கிவிட்டு சுதந்திரமாகச் சம்பளத்தைப் பெறலாம்.

இதைவிட அரசு காணியை அளவிடுகிறது என போராடுவோர் கடல் பிரதேசங்களை சட்டவிரோதமாக கடலட்டை பண்ணைகளுக்கு வழங்குவதையும் அவதானிக்க வேண்டும்.

இது தொடர்பில் சட்டம் தெரிந்த சட்ட.வல்லுனர்கள் முன்வந்து வழக்குத் தொடுக்க வேண்டும். நிலம் மட்டுமல்ல கடலும் எமது உரிமை.

மீனவர் பிரச்சினை அனைத்து மீனவர் அமைப்புக்களுடனும் இணைந்து கலந்துரையாடி தீர்வுகளை எட்ட வேண்டுமே தவிர கட்சி சார்ந்தோரை முன்னிறுத்தி டில்லியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை மீனவர்களின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கான குரலாக ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே வடக்கு மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவுக்கு இந்திய பிரதமர் மோடி,

அழுத்தங்களை வழங்குவதோடு சீனாவின் பிடியில் சிக்கியுள்ள வடக்கு கடலை மீட்பதற்கான அழுத்தங்களை இந்திய பிரதமர் மோடியை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.