பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதியை வழங்குவது கடினம் – நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவது கடினமாகும் என்று என நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக தேர்தலுக்கு நிதி வழங்குவது கடினமாகும் என நிதி அமைச்சின் செயலாளர் கூறியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் எடுத்த நிர்வாக தீர்மானத்தையும் நிதி அமைச்சின் செயலாளர் ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று முற்பகல் அறிவித்தது.

எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு குறித்த தினங்களில் இடம்பெறாது என்றும், அதற்கான தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு போதிய நிதி வழங்கப்படாத காரணத்தினால் தமது நிறுவனத்தினால் அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்திருந்த நிலையில், நிதி அமைச்சின் செயலாளரினால் இன்றைய தினம் இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அரசுக்கு வருமானம் போதாது – நிதி அமைச்சு செயலாளர்

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கும் சமூக நலனை பேணுவதற்கும் அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் போதாது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய வரிக் கொள்கைகள் தொடர்பில் இன்று (23) நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் வருமானத்தை அதிகரித்தது போன்று செலவைக் குறைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைவர தடை

பயணிகள் அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அவர்கள் வருவதற்கு முன்னர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடம் அனுமதி பெற்றால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் பயணிகள் தங்க நகைகள் அணிந்து வருவதற்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு அல்லது சாதாரண பயணிகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தாது என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் பதவி மீண்டும் அலி சப்றிக்கு !

நிதி அமைச்சராக மீண்டும் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றியை நியமிக்க அரசாங்கம் ஆரம்பகட்ட இணக்கமொன்றுக்கு வந்துள்ளது.

புதிதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஐவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குனவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோருக்கு இடையே நடந்த சிறப்பு கலந்துரையாடலில் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சு தவிர வேறு எந்த அமைச்சுப் பதவிகளையும் வகிக்க முடியாது. அதன்படி, சமர்ப்பிக்கப்படும் வரவுச் செலவு திட்டத்தை மையப்படுத்தி அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

அதன்போது, வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகளை அமுல்ச் செய்வது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்புகளையும் பேச்சுவார்த்தையையும் முன்னோக்கி எடுத்துச் செல்வது போன்ற பிரதான பொறுப்புக்களை  ஒப்படைத்து நிதி அமைச்சை அலி சப்றியிடம் மீள கையளிப்பது தொடர்பில் அவதானம் திரும்பியுள்ளது.

இதனைவிட, புதிதாக  5 அமைச்சரவை அமைச்சுக்களை  ஏற்படுத்த அவதானம் திரும்பியுள்ளதுடன்,  பொது ஜன பெரமுன கட்சியின் மூவருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரபலம் ஒருவரும் உள்ளடங்கலாக ஐவருக்கு அவற்றை வழங்கவும் ஆரம்பகட்டமாக பேசப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.