நிதி அமைச்சர் பதவி மீண்டும் அலி சப்றிக்கு !

நிதி அமைச்சராக மீண்டும் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றியை நியமிக்க அரசாங்கம் ஆரம்பகட்ட இணக்கமொன்றுக்கு வந்துள்ளது.

புதிதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஐவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குனவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோருக்கு இடையே நடந்த சிறப்பு கலந்துரையாடலில் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சு தவிர வேறு எந்த அமைச்சுப் பதவிகளையும் வகிக்க முடியாது. அதன்படி, சமர்ப்பிக்கப்படும் வரவுச் செலவு திட்டத்தை மையப்படுத்தி அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

அதன்போது, வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகளை அமுல்ச் செய்வது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்புகளையும் பேச்சுவார்த்தையையும் முன்னோக்கி எடுத்துச் செல்வது போன்ற பிரதான பொறுப்புக்களை  ஒப்படைத்து நிதி அமைச்சை அலி சப்றியிடம் மீள கையளிப்பது தொடர்பில் அவதானம் திரும்பியுள்ளது.

இதனைவிட, புதிதாக  5 அமைச்சரவை அமைச்சுக்களை  ஏற்படுத்த அவதானம் திரும்பியுள்ளதுடன்,  பொது ஜன பெரமுன கட்சியின் மூவருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரபலம் ஒருவரும் உள்ளடங்கலாக ஐவருக்கு அவற்றை வழங்கவும் ஆரம்பகட்டமாக பேசப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.