யாழில் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை.மாணவர்கள் போராட்டம்

இலங்கையின் சுதந்திர தின விழா மீண்டும் இன்றைய தினம் யாழில் இடம்பெறவுள்ளதால், அதனை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று சற்று முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் சமூக அமைப்பினரும் இணைந்து கொண்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் பங்குபற்றியுள்ளனர்.

மாணவர்களின் போராட்டக் களத்தில் பெருமளவு கலகம் அடக்கும் கால்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்திலும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறியே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது, பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பண செலவிலும் இரண்டாவது தடவையாக சுதந்திர தின கொண்டாட்டம் செய்யவேண்டிய தேவை ஏன் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை, தேர்தலுக்கு பணம் இல்லை என கூறி சுதந்திர தினத்துக்கு பணத்தை செலவளிப்பது ஏன் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய உப தலைவர் இ.தர்சனும் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்றைய போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும் : மட்டக்களப்பு பிரகடனத்தில் வலியுறுத்தல்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியில் இறுதியில் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையானது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

அத்துடன், இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டால், சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு என்பவற்றோடு, தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடு இவ் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த உடன்படிகை மூன்றாம் தரப்பான சர்வதேச தரப்பினரின் முன்னிலையில் எழுதப்பட வேண்டும் எனவும் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று 2023 பெப்ரவரி 7 ம் திகதி தமிழ் மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும், தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஈழத் தமிழராகிய நாம் மரபுவழித் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்குப் பிரகடனப்படுத்துகின்றோம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடு, பொங்குதமிழ் பிரகடனம் எனபவற்றினூடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாகப் பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழரின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்காக, மீண்டும் ஒருதடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக் கூறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இன்று பேரெழுச்சியாக எமது தென் தாயகத்தின் மையப்பகுதியாகிய மட்டக்களப்பு நகரில் ஒன்று திரண்டுள்ளோம்.

தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் எட்டப்பட முன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் கூட்டாகப் பேரெழுச்சி கொண்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள எமது உறவுகளின் ஆதரவுடன் இன்று தாயகத்தில் பெருமெழுச்சியாக திரண்டுள்ள மாணவர்களும், மக்களும், மக்கள் அமைப்புப் பிரதிநிதிகளுமாக முன்னெடுத்துள்ள இன்றைய பாரிய எழுச்சிப் பேரணி தமிழ் மக்களது ஏகோபித்த குரலின் தெளிவான வெளிப்பாடாகும்.

ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான எந்தவொரு அரசியல் நகர்விலும் தமிழர் தேசத்தின் பிரதிநிதிகள், சிங்கள தேசத்தின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் அனைவரும் பின்வரும் ஈழத் தமிழர் வரலாற்று உண்மைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.

பேரெழுச்சிப் பிரகடனம்

யதார்த்த நிலைகளை கருத்தில் கொண்டு, தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த தேசமாக, அவர்களின் பாராதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது மட்டுமே, மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளும் மீள நிகழாது இருப்பதை உறுதிசெய்யும் என்பதை வலியுறுத்தியும், தமிழர் தேசத்தின் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் தங்களுடைய தனியான இறைமையை யாருக்கும் கையளித்திருக்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டும், வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய இந்தப் பேரெழுச்சியின் பிரகடனமானது, தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வாக, சர்வதேச சட்டத்தின் ஆட்சித் தத்துவங்களுக்கு ஏற்புடையதாகவும், மனித உரிமைகள் எல்லா நபர்களுக்கும் சமத்துவமானது என்ற அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையினை மதித்தும், அக்கறையுள்ள அனைத்து தரப்பினர்கள் முன்னிலையிலும் நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்குமாக முன்வைக்கப்படும் தீர்மானங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு இந்தப் பேரணி வலியுறுத்துகிறது.

அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையானது அரசியலமைப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன், பின்வரும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில் இருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

  1. இந்த உடன்படிக்கையானது, ஏனைய விடயங்களிற்கும் மேலாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.
  2. இந்த உடன்படிக்கையானது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
  3. இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டால், சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு என்பவற்றோடு, தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடு இவ் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.
  4. இந்த உடன்படிகை மூன்றாம் தரப்பான சர்வதேச தரப்பினரின் முன்னிலையில் எழுதப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தையின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:

  1. தொடர்ச்சியாக, திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் தேசம் என்ற வகையில், தமிழ் மக்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.
  2. தமிழ் மக்கள் இனவழிப்பிற்கு முகங்கொடுத்து வரும் நிலையில், தமிழர்களின் தேசிய அடையாளத்தின் பாதுகாப்பு மற்றும் ஒரு தேசமாக இருத்தல் என்பவை சமரசத்திற்கு அப்பாற்பட்டதாகவும், உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
  3. முதலில், இரு தரப்பும் கூட்டாக பேச்சுவார்த்தை செய்வதற்கான தெளிவான வழிவரைபடத்தை சர்வதேச மத்தியஸ்தத்துடன் தயார் செய்ய வேண்டும். இது தெளிவான அடைவுகளையும் அதன் கால அட்டவணைகளையும் கொண்டிருக்க வேண்டும்.
  4. பேச்சுவார்த்தைகள் இரண்டு தளங்களில் சமாந்தரமாக நடாத்தப்பட வேண்டும் ஒன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது மற்றையது இறுதி அரசியல் தீர்வை நோக்கியதாக இருக்கவேண்டும்.
  5. உடனடிப் பிரச்சினைகள் குறித்துப் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

5.1. தொல்பொருள் ஆராய்ச்சி, வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் எனும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் நிறுத்தப்படுவதோடு அபகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக உரியவர்களிடம் மீள ஒப்புடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

5.2. தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சிங்களக் குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும்.

5.3. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும். 5.4. உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மாற்றங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும்.

5.5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு சர்வதேச நீதி வழங்கப்படுவதோடு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

5.6. பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நீக்கப்படவேண்டும்.

5.7. மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும், திட்டமிட்ட இன அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் மற்றும் மக்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுதல் மற்றும் கைதுசெய்யப்படுதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

5.8. தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தும் அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும், தடைகளையும் நிறுத்தவேண்டும்.

5.9. காலகாலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதிப் பொறிமுறை (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் – ICC, சர்வதேச நீதிமன்றம்- ICJ) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப் படவேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையால் விசேடமாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் விசாரணைப் பொறிமுறைகளும் அனுமதிக்கப்படவேண்டும்.

5.9.0. இறுதி அரசியல் தீர்வொன்று எட்டப்படும் வரை தமிழ் மக்கள் தமது தாயகத்தின் அன்றாட விவகாரங்களை நடாத்துவதற்கு இடைக்கால நிர்வாகப் பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.

திம்பு கோட்பாடுகள்

  1. இறுதி அரசியல் தீர்வைக் காண்பதற்கு பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

6.1. இலங்கை அரசின் அரசியலமைப்பின் அடிப்படையாகிய ஒற்றையாட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும்

6.2. இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் முதலே ஆக்கப்பூர்வமாக நடாத்தப்பட வேண்டுமாயின் வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள், பொங்கு தமிழ் பிரகடனம் ஆகிய வரலாற்றுப் பதிவுகள் ஊடாக தமிழ் மக்களால் முன் வைக்கப்பட்ட, அதி முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளை மையப்படுத்தி, தமிழ் மக்களின் வேணவாவைப் பூர்த்தி செய்யும் தீர்வை இலக்காகக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆவன: 1) தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தல். 2) தமிழ் மக்களினுடையதாக அடையாளம் காணப்பட்ட, வரலாற்று ரீதியான மற்றும் பாரம்பரியமான தாயகப் பிரதேசத்தை அங்கீகரித்தல். 3) மேற்குறிப்பிட்ட உரித்துடைமையின் அடிப்படையில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும்.

6.3. பேச்சுவார்த்தைகளின் போது சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் (பலதுறை நிபுணர்கள் குழு) சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டும்.

6.4. தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைச் சூழல் ஏற்படும்பட்சத்தில், அது சர்வதேச மத்தியஸ்தத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.

6.5. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இஸ்லாமியத் தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும்.

6.6. முன்னைய பேச்சுவார்த்தைகளைப் போல் அல்லாமல் நடுநிலையுடனும், நேர்மையுடனும் நடுவராகச் செயற்படுமாறு சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம். மேலே கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறையில் திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை ஆராய்ந்து உறுதிப்படுத்திய பின்னரே, எந்தவொரு நிதி வழங்கும் நாடுகளும் மற்றும் நிறுவனங்களும் சிறிலங்காவிற்கு பொருளாதார உதவி வழங்கத் தொடங்கவேண்டும் என நாம் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்.

மரபுவழித் தாயகம்l

இறுதித் தீர்வை எட்டுவது என்பது, வன்முறைச் சுழற்சிகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும், இலங்கையில் நிலையான அமைதியை அடைவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கும் முக்கியமாக உள்ளதென்பதை இப்பிராந்தியத்தை அக்கறையோடு கையாளும் நாடுகள் உணர்ந்து செயற்படவேண்டும்.

ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சனையில் மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வும், சர்வதேசத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும் என்பதே எமது உறுதியானதும் அறுதியானதுமான நிலைப்பாடாகும்.

அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து, எம்மை நாமே ஆளக் கூடிய நிரந்தரத் தீர்வும் பொதுவாக்கெடுப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை, தமிழ் மக்கள் சார்பாக இந்தப் பிரகடனம் உலகுக்கு அறிவிக்கின்றது.

பேரெழுச்சியுடன் நிறைவடைந்தது பேரணி; உரிமைகளுக்காக மட்டக்களப்பில் அலையெனத் திரண்ட வட, கிழக்கு தமிழ் மக்கள்

கடந்த 04.02.2023 அன்று இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற கருப்பொருளின்கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியொன்று ஆரம்பித்திருந்தனர். அவ்வாறு ஆரம்பித்தவர்கள் திங்கட்கிழமை(06) திருகோணமலைக்கு வந்து செவ்வாய்கிழமை வெருகல் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி ஆரம்பமானது.

இப்பேரணியை தொடர்ந்து அரச புலனாய்வாளர்கள் நோட்டமிட்டுக் கொண்ட இந்நிலையில் இப்பேரணி வாழைச்சேனை, கல்குடா, சந்திவெளி, சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடி, ஊடாக மட்டக்களப்பு நகரை வந்தடைந்தது, அதுபோல் அம்பாறை மாவட்டத்திலிருந்து வந்த இரு தொகுதியினரும், அவர்களுடன் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சங்கமித்தனர்; இறுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் கொள்கைப் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்து.

பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ, பல்கலைக் கழகங்களின் மாணவர்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், என பல்லாயிரக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

பொலிஸாரின் தடையை மீறி யாழ்.பல்கலையில் பேரணி ஆரம்பம்

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பமானது.

பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பேரணி காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் யாழ்.நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றது.

இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நாளை பேரணியில் சகலரையும் அணி திரளுமாறு யாழ்- கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு

தமிழ் மக்களின் கரிநாளான நாளைய தினம் வடக்கிலிருந்து கிழக்குக்கு எழுச்சிப் பேரணி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் யாழ். பல்கலைக் கழகத்தில் யாழ்ப்பாணம் – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த அழைப்பை விடுத்தனர். அத்துடன், தமிழ் மக்களின் அபிலாசைகளான பொங்கு தமிழ் எழுச்சியனூடாக வலியுறுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாய கம், தமிழ்த் தேசியம் என்ப வற்றை முன்னிறுத்தி முன்னெடுக்கும் இந்த எழுச்சிப் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். இதேநேரம் பேரணி ஆரம்பமாகி பயணிக்கும் இடங்களையும் வெளியிட்ட மாணவர்கள் அந்தப் பகுதிகளில் பெருந்திரளாக மக்கள் திரண்டு ஆதரவு அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத் தனர்.

பேரணி ஆரம்பமும் பயணமும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும். நாச்சிமார் கோயிலடி ஊடாக பிரதான தபால் அலுலகம் தமிழாராய்ச்சி மண்டபம், மணிக்கூட்டுக்கோபுரம், ஆஸ்பத்திரி வீதி வழியாக கச்சேரியடியை வந்தடைந்து பின்னர் செம்மணியை சென்றடையும்.

பின்னர் செம்மணியிலிருந்து வாகனங்கள் மூலம் நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து இரணைடுவில் பேரணியின் முதல் நாள் நிறைவடையும். இரண்டாம் நாளான நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகும்.

வவுனியா மன்னார் அணிகளை இணைத்துக் கொண்டு 10.30 மணிக்கு புறப்படும் பேரணி புளியம்பொக்கணை, தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, மூங்கிலாறு ஊடாக புதுக்குடியிருப்பை அடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க் கால் சென்று உறுதியெடுத்துக் கொண்டு முல்லைத்தீவில் நிறைவடையும்.

மூன்றாம் நாளான திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகும் பேரணி தென்னமரவாடியூடாக திருகோணமலையை மதியம் 1.30 மணியளவில் சென்றடையும். பின்னர், திருகோணமலையின் எழுச்சி நிகழ்வுகளில் பேரணியினர் பங்கேற்பர். தொடர்ந்து பயணித்து வெருகலில் மூன்றாம் நாள் நிறைவடையும்.

நான்காம் நாளான செவ்வாய்க் கிழமை முற்பகல் 10 மணிக்கு பேரணி வெருகலிலிருந்து ஆரம்பமாகி வாகரை சென்று அங்கிருந்து மட்டு. நகரை சென்றடையும். இதேநேரம் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் பேரெழுச்சியாக மக்கள் வந்து இணைந்து மாபெரும் பொது கூட்டத்துடன் எழுச்சிப் பேரணி நிறைவு பெறும்.

இப்பேரணிகளில் மாணவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் தரப்பினர் அனைவரும் அலைஅலையாக இணைத்து தமிழ்த் தேசத்தின் நிலைப்பாட்டை முழு உலகத்துக்கும் வெளிப் படுத்த அணிதிரளுமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம் – என்று தெரிவித்தனர்.

வடக்கு – கிழக்கில் நாளை ஹர்த்தாலுக்கு யாழ்- கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினமான நாளை சனிக்கிழமை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு முழுவதும் பூரண கடையடைப்பு போராட்டத்துக்கு யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கரிநாளாக பிரகடனப்படுத்தியும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பேரணி இடம்பெறும் என்று மாணவர்கள் ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது பூரண ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

பேரணிக்கு வலுவூட்டியும் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள்.

இந்தச் சந்திப்பில் மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்தார்.

பெப்ரவரி 4ஆம் திகதி கடைகள், வர்த்தக நிலையங்களைப் பூட்டியும், போக்குவரத்து சேவைகளை நிறுத்தியும் பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்புக் கொடிகளை கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன் பேரணியில் பங்கேற்று வலுச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்துக்கு ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் வேந்தராக பரிந்துரை

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு ஓய்வுபெற்ற ஜெனரல் எச்.எஸ்.எச்.கோட்டேகொடவின் பெயர் ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய வறிய குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு செல்வம் எம்.பி நிதி உதவி வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று திங்கட்கிழமை (19) மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து நிதி உதவி வழங்கி வைத்தார்.

நோர்வே நாட்டில் உள்ள நடேசு அறக்கட்டளை ஊடாக 10 மாணவர்களுக்கும்,ஜேர்மனியைச் சேர்ந்த நாகரெட்ணம் ஜெயதீபன் மற்றும் புலேந்திரன் ஆகியோர் 10 மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.

-மாணவர் ஒருவருக்கு இன்றைய தினம் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.குறித்த மாணவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் 2 வருடங்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறுமை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு தடையாக அமையக்கூடாது என்ற நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து குறித்த உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை பல்கலைக்கழகங்களிற்கு 44,000 மாணவர்கள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் 2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய இம்முறை 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில்,

2021 ஆம் ஆண்டு 2 இலட்சத்து 83,616 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றினர். அவர்களில் ஒரு இலட்சத்து 71,497 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 91,115 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 43,927 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

இவர்களில் உயிரியல் விஞ்ஞான பீடத்திற்கு 9,749 மாணவர்களும் , பௌதீக விஞ்ஞான பீடத்திற்கு 8,020 மாணவர்களும் , வணிக பீடத்திற்கு 7,701 மாணவர்களும் , கலை பீடத்திற்கு 11,314 மாணவர்களும் , பொறியியல் தொழிநுட்ப பீடத்திற்கு 2,236 மாணவர்களும், உயிர் அமைப்புக்கள் தொழிநுட்ப பீடத்திற்கு 1,543 மாணவர்களும் , ஏனைய பீடங்களுக்கு 665 மாணவர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

மேலும் இம்முறை நான்கு புதிய பீடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தளா 50 மாணவர்கள் என 200 மாணவர்களை உள்வாங்க எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிதி பொருhளாதார பீடம் மற்றும் புத்தாக்க இசை தொழிநுட்பம் மற்றும் தயாரிப்பு ஆகியவை புதிய பீடங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மற்றும் பயன்பாட்டு மொழியில் பீடமும் , வவுனியா பல்கலைக்கழகத்தில் வங்கி மற்றும் காப்புறுதி பீடமும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதே வேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கனணி அறிவியல் , மென்பொருள் பொறியியல் மற்றும் தகவல் அமைப்புக்கள் ஆகிய பீடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஏனைய சில பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

Posted in Uncategorized