மன்னாரில் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய வறிய குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு செல்வம் எம்.பி நிதி உதவி வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று திங்கட்கிழமை (19) மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து நிதி உதவி வழங்கி வைத்தார்.

நோர்வே நாட்டில் உள்ள நடேசு அறக்கட்டளை ஊடாக 10 மாணவர்களுக்கும்,ஜேர்மனியைச் சேர்ந்த நாகரெட்ணம் ஜெயதீபன் மற்றும் புலேந்திரன் ஆகியோர் 10 மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.

-மாணவர் ஒருவருக்கு இன்றைய தினம் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.குறித்த மாணவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் 2 வருடங்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறுமை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு தடையாக அமையக்கூடாது என்ற நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து குறித்த உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை பல்கலைக்கழகங்களிற்கு 44,000 மாணவர்கள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் 2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய இம்முறை 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில்,

2021 ஆம் ஆண்டு 2 இலட்சத்து 83,616 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றினர். அவர்களில் ஒரு இலட்சத்து 71,497 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 91,115 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 43,927 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

இவர்களில் உயிரியல் விஞ்ஞான பீடத்திற்கு 9,749 மாணவர்களும் , பௌதீக விஞ்ஞான பீடத்திற்கு 8,020 மாணவர்களும் , வணிக பீடத்திற்கு 7,701 மாணவர்களும் , கலை பீடத்திற்கு 11,314 மாணவர்களும் , பொறியியல் தொழிநுட்ப பீடத்திற்கு 2,236 மாணவர்களும், உயிர் அமைப்புக்கள் தொழிநுட்ப பீடத்திற்கு 1,543 மாணவர்களும் , ஏனைய பீடங்களுக்கு 665 மாணவர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

மேலும் இம்முறை நான்கு புதிய பீடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தளா 50 மாணவர்கள் என 200 மாணவர்களை உள்வாங்க எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிதி பொருhளாதார பீடம் மற்றும் புத்தாக்க இசை தொழிநுட்பம் மற்றும் தயாரிப்பு ஆகியவை புதிய பீடங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மற்றும் பயன்பாட்டு மொழியில் பீடமும் , வவுனியா பல்கலைக்கழகத்தில் வங்கி மற்றும் காப்புறுதி பீடமும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதே வேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கனணி அறிவியல் , மென்பொருள் பொறியியல் மற்றும் தகவல் அமைப்புக்கள் ஆகிய பீடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஏனைய சில பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

குறித்த காலத்துக்குள் பட்டம் பெறாதவர்கள் பல்கலைக்கழங்களில் இருந்து நீக்கம் – புதிய சட்ட மூலம்

குறித்த காலத்துக்குள் பட்டம் பெறாத மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்குவது தொடர்பான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சில மாணவர்கள் 9 முதல் 10 வருடங்கள் வரை பரீட்சைக்குத் தோற்றாமல் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி, அரசியல் பணியை மேற்கொள்வதனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சைக்குத் தோற்றாமல் நீண்டகாலமாக பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் கணக்கெடுப்பை குறித்த காலத்துக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பல்கலைக்கழக வேந்தர்களின் ஒத்தாசையை பெறவுள்ளதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.