வடக்கைச் சேர்ந்த 12 பேருக்கு இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வாய்ப்பு

வட மாகாணத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடர இந்திய கலாச்சார உறவுகளுக்கான உதவித்தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் மாணவர்களை சந்தித்து இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் சந்தித்து கலந்துரையாடினார்.

600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்

கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் சம்மேளனம், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு இடையே கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01) மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, தொழில் ரீதியான சிக்கல்கள் தொடர்பில்  கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டி ஏற்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சம்மேளத்தின் தலைவர் பரண ஜயவர்தன கூறுகையில்,

கடந்த இறுதி 6 மாதங்களில் 600க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிருந்து விலகி  நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் சில பீடங்களை நடத்தி செல்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளோம். 600க்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன.

வரிக்கொள்ளை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். போராசிரியர்கள் இவ்வாறு விலகி செல்வதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் வரிக்கொள்ளை தொடர்பில் சாதகமான தீர்மானமொன்றை மேற்கொள்ளும் என நாம் கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்தோம். ஜூலை மற்றும் செப்டம்பர் மாதமளவில் எமக்கு ஏதேனும் நிவாரணங்கள் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்தது. இருப்பினும், இதற்கு அரசாங்கம் தயார் இல்லை என தெளிவாகிறது. நாம் இது தொடர்பில் கவலையடைகிறோம்.

எனவே, எதிர்காலத்தில் கடுமையான தீர்மானமொன்றை எடுப்பது தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி வருகிறோம் என்றார்.

அமெரிக்க ஒத்துழைப்பில் கொத்மலையில் காலநிலை மாற்றம் தொடர்பில் சர்வதேச பல்கலைக் கழகம்

காலநிலை மாற்றம் தொடர்பான கற்கை நெறிகளை தொடரும் வகையிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை கொத்மலை பிரதேசத்தில் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான திட்ட வரைபை தயாரித்துள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

இந்த சர்வதேச பல்கலைக்கழத்தை அமைப்பதற்காக 400 ஏக்கர் நிலப்பரப்பு கொத்மலை பிரதேசத்தில்  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு விஜயம் செய்த காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தலைமையிலான குழுவினர் பல்கலைக்கழத்தை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், காலநிலை மாற்றம் தொடர்பான கற்கை நெறிகளை தொடரும் வகையிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு அமெரிக்க தூதரகம் முன்வந்துள்ளது

மேலும், அமெரிக்க பல்கலைக்கழங்களின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க தூதரகம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவிடம் உறுதியளித்துள்ளது.

எவ்வாறாயினும், ஏற்கனவே  அடையாளப்படுத்தப்பட்டுள்ள 400 ஏக்கர் நிலப்பரப்புக்கு மேலதிகமாக மேலும் 200 ஏக்கர் காணியை பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கும் தீர்மானிக்கபட்டுள்ளது.

சர்வதேச தரத்தில் ஸ்தாபிக்கப்பட உள்ள இந்த பல்கலைக்கழத்தின் வதிவிட வசிதகள் உட்பட அனைத்து வளங்களையும் உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

அதிகளவிலான மாணவர்களை உள்வாங்கும் பொறிமுறையொன்று பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

இலங்கை பல்கலைக்கழகங்கள் அன்று ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் காணப்பட்டன. அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்த ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையில் வருடாந்தம் சுமார் 1,70,000 மாணவர்கள் உயர்கல்விக்கு தகுதி பெறுகின்றனர். அவர்களில் சுமார் 40,000 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறுகின்றனர். மேலும், 30,000 முதல் 40,000 பேர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறார்கள். ஆனால், பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறும் 40,000 பேருக்கு மேலதிகமாக மேலும் 25,000-/ 30,000 பேரை இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக கட்டமைப்பொன்று எம்மிடம் உள்ளது. அதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கீழ் உள்வாங்கப்படாத பல்கலைக்கழகங்களும் உள்ளன. மேலும், இலாபம் ஈட்டும் மற்றும் இலாப நோக்கற்ற பல்கலைக்கழக கட்டமைப்பும் உள்ளது. எனவே, இந்த மூன்று முறைகளையும் நடைமுறைப்படுத்துவதா அல்லது ஒரு முறையை உருவாக்கி பல்கலைக்கழக கட்டமைப்பை மீட்டெடுப்பதா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அதிகபட்ச எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு கல்வியை வழங்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அன்று, ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் நம் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் முதன்மை இடத்தில் இருந்தன. ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. எமது பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை மீண்டும் எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நமது பல்கலைக்கழகங்களின் தரம் மற்றும் நற்பெயரை உலகுக்கு எவ்வாறு மீண்டும் உறுதிப்படுத்துவது என்பதை நாம் கண்டறிய வேண்டும். இதன் மூலம் உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை நமது பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும். நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு இது நல்லதொரு நிலை என்றே கூற வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்காத பல்கலைக்கழகங்கள் தொழில் சந்தையை இலக்கு வைத்து செயற்படுவதால் பெருமளவிலான மாணவர்கள் அதன் பக்கம் திரும்பியுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமன்றி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே, இது தொடர்பில் ஏனையவர்கள் தீர்வுகளை வழங்குவார்கள் என்று காத்திருப்பதற்குப் பதிலாக, நாம், நமக்கு ஏற்ற தீர்வுகளை காண வேண்டும்.

தற்போதுள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்பை அப்படியே தொடர்வதா அல்லது தேவையான மாற்றங்கள் செய்வதா என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இந்நாட்டின் முதல் வதிவிடப் பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகம், ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், தற்போதுள்ள நவீன பல்கலைக்கழகங்களில் அத்தகைய அமைப்பு காணப்படவில்லை. நாம் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கல்வி தொடர்பான அமைச்சரவைக் குழுவொன்றையும் அமைத்துள்ளோம் என்றார்

பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

கொழும்பு, ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸூடன் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது துணைவேந்தர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சந்திப்புக்களின் போது, பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள், மற்றும் திருட்டு சம்பவங்களின் அதிகரிப்பு போன்ற விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவ சீனா கிழக்கு பல்கலையுடன் ஒப்பந்தம்

கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவுவதற்கு கிழக்கு பல்கலைக்கழகத்துடன் யுனான் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

அண்மையில் இந்த இரு பல்கலைக்கழகங்களும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே ஆசிரியர் உறுப்பினர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள், கூட்டு ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள், கன்பூசியஸ் நிறுவனம் நிறுவுதல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் முழுவதிலும் உள்ள பல்கலைக் கழகங்களில் சீனா கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவி வருகின்றது.

இந்த நிறுவனத்தை உளவு நடவடிக்கைக்காக அந்த நாடு பயன்படுத்துகிறது என்று சர்ச்சை கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை.மாணவர்கள் போராட்டம்

இலங்கையின் சுதந்திர தின விழா மீண்டும் இன்றைய தினம் யாழில் இடம்பெறவுள்ளதால், அதனை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று சற்று முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் சமூக அமைப்பினரும் இணைந்து கொண்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் பங்குபற்றியுள்ளனர்.

மாணவர்களின் போராட்டக் களத்தில் பெருமளவு கலகம் அடக்கும் கால்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்திலும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறியே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது, பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பண செலவிலும் இரண்டாவது தடவையாக சுதந்திர தின கொண்டாட்டம் செய்யவேண்டிய தேவை ஏன் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை, தேர்தலுக்கு பணம் இல்லை என கூறி சுதந்திர தினத்துக்கு பணத்தை செலவளிப்பது ஏன் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய உப தலைவர் இ.தர்சனும் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்றைய போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும் : மட்டக்களப்பு பிரகடனத்தில் வலியுறுத்தல்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியில் இறுதியில் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையானது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

அத்துடன், இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டால், சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு என்பவற்றோடு, தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடு இவ் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த உடன்படிகை மூன்றாம் தரப்பான சர்வதேச தரப்பினரின் முன்னிலையில் எழுதப்பட வேண்டும் எனவும் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று 2023 பெப்ரவரி 7 ம் திகதி தமிழ் மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும், தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஈழத் தமிழராகிய நாம் மரபுவழித் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்குப் பிரகடனப்படுத்துகின்றோம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடு, பொங்குதமிழ் பிரகடனம் எனபவற்றினூடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாகப் பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழரின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்காக, மீண்டும் ஒருதடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக் கூறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இன்று பேரெழுச்சியாக எமது தென் தாயகத்தின் மையப்பகுதியாகிய மட்டக்களப்பு நகரில் ஒன்று திரண்டுள்ளோம்.

தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் எட்டப்பட முன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் கூட்டாகப் பேரெழுச்சி கொண்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள எமது உறவுகளின் ஆதரவுடன் இன்று தாயகத்தில் பெருமெழுச்சியாக திரண்டுள்ள மாணவர்களும், மக்களும், மக்கள் அமைப்புப் பிரதிநிதிகளுமாக முன்னெடுத்துள்ள இன்றைய பாரிய எழுச்சிப் பேரணி தமிழ் மக்களது ஏகோபித்த குரலின் தெளிவான வெளிப்பாடாகும்.

ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான எந்தவொரு அரசியல் நகர்விலும் தமிழர் தேசத்தின் பிரதிநிதிகள், சிங்கள தேசத்தின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் அனைவரும் பின்வரும் ஈழத் தமிழர் வரலாற்று உண்மைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.

பேரெழுச்சிப் பிரகடனம்

யதார்த்த நிலைகளை கருத்தில் கொண்டு, தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த தேசமாக, அவர்களின் பாராதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது மட்டுமே, மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளும் மீள நிகழாது இருப்பதை உறுதிசெய்யும் என்பதை வலியுறுத்தியும், தமிழர் தேசத்தின் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் தங்களுடைய தனியான இறைமையை யாருக்கும் கையளித்திருக்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டும், வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய இந்தப் பேரெழுச்சியின் பிரகடனமானது, தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வாக, சர்வதேச சட்டத்தின் ஆட்சித் தத்துவங்களுக்கு ஏற்புடையதாகவும், மனித உரிமைகள் எல்லா நபர்களுக்கும் சமத்துவமானது என்ற அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையினை மதித்தும், அக்கறையுள்ள அனைத்து தரப்பினர்கள் முன்னிலையிலும் நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்குமாக முன்வைக்கப்படும் தீர்மானங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு இந்தப் பேரணி வலியுறுத்துகிறது.

அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையானது அரசியலமைப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன், பின்வரும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில் இருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

  1. இந்த உடன்படிக்கையானது, ஏனைய விடயங்களிற்கும் மேலாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.
  2. இந்த உடன்படிக்கையானது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
  3. இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டால், சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு என்பவற்றோடு, தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடு இவ் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.
  4. இந்த உடன்படிகை மூன்றாம் தரப்பான சர்வதேச தரப்பினரின் முன்னிலையில் எழுதப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தையின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:

  1. தொடர்ச்சியாக, திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் தேசம் என்ற வகையில், தமிழ் மக்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.
  2. தமிழ் மக்கள் இனவழிப்பிற்கு முகங்கொடுத்து வரும் நிலையில், தமிழர்களின் தேசிய அடையாளத்தின் பாதுகாப்பு மற்றும் ஒரு தேசமாக இருத்தல் என்பவை சமரசத்திற்கு அப்பாற்பட்டதாகவும், உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
  3. முதலில், இரு தரப்பும் கூட்டாக பேச்சுவார்த்தை செய்வதற்கான தெளிவான வழிவரைபடத்தை சர்வதேச மத்தியஸ்தத்துடன் தயார் செய்ய வேண்டும். இது தெளிவான அடைவுகளையும் அதன் கால அட்டவணைகளையும் கொண்டிருக்க வேண்டும்.
  4. பேச்சுவார்த்தைகள் இரண்டு தளங்களில் சமாந்தரமாக நடாத்தப்பட வேண்டும் ஒன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது மற்றையது இறுதி அரசியல் தீர்வை நோக்கியதாக இருக்கவேண்டும்.
  5. உடனடிப் பிரச்சினைகள் குறித்துப் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

5.1. தொல்பொருள் ஆராய்ச்சி, வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் எனும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் நிறுத்தப்படுவதோடு அபகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக உரியவர்களிடம் மீள ஒப்புடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

5.2. தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சிங்களக் குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும்.

5.3. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும். 5.4. உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மாற்றங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும்.

5.5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு சர்வதேச நீதி வழங்கப்படுவதோடு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

5.6. பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நீக்கப்படவேண்டும்.

5.7. மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும், திட்டமிட்ட இன அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் மற்றும் மக்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுதல் மற்றும் கைதுசெய்யப்படுதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

5.8. தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தும் அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும், தடைகளையும் நிறுத்தவேண்டும்.

5.9. காலகாலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதிப் பொறிமுறை (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் – ICC, சர்வதேச நீதிமன்றம்- ICJ) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப் படவேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையால் விசேடமாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் விசாரணைப் பொறிமுறைகளும் அனுமதிக்கப்படவேண்டும்.

5.9.0. இறுதி அரசியல் தீர்வொன்று எட்டப்படும் வரை தமிழ் மக்கள் தமது தாயகத்தின் அன்றாட விவகாரங்களை நடாத்துவதற்கு இடைக்கால நிர்வாகப் பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.

திம்பு கோட்பாடுகள்

  1. இறுதி அரசியல் தீர்வைக் காண்பதற்கு பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

6.1. இலங்கை அரசின் அரசியலமைப்பின் அடிப்படையாகிய ஒற்றையாட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும்

6.2. இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் முதலே ஆக்கப்பூர்வமாக நடாத்தப்பட வேண்டுமாயின் வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள், பொங்கு தமிழ் பிரகடனம் ஆகிய வரலாற்றுப் பதிவுகள் ஊடாக தமிழ் மக்களால் முன் வைக்கப்பட்ட, அதி முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளை மையப்படுத்தி, தமிழ் மக்களின் வேணவாவைப் பூர்த்தி செய்யும் தீர்வை இலக்காகக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆவன: 1) தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தல். 2) தமிழ் மக்களினுடையதாக அடையாளம் காணப்பட்ட, வரலாற்று ரீதியான மற்றும் பாரம்பரியமான தாயகப் பிரதேசத்தை அங்கீகரித்தல். 3) மேற்குறிப்பிட்ட உரித்துடைமையின் அடிப்படையில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும்.

6.3. பேச்சுவார்த்தைகளின் போது சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் (பலதுறை நிபுணர்கள் குழு) சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டும்.

6.4. தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைச் சூழல் ஏற்படும்பட்சத்தில், அது சர்வதேச மத்தியஸ்தத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.

6.5. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இஸ்லாமியத் தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும்.

6.6. முன்னைய பேச்சுவார்த்தைகளைப் போல் அல்லாமல் நடுநிலையுடனும், நேர்மையுடனும் நடுவராகச் செயற்படுமாறு சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம். மேலே கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறையில் திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை ஆராய்ந்து உறுதிப்படுத்திய பின்னரே, எந்தவொரு நிதி வழங்கும் நாடுகளும் மற்றும் நிறுவனங்களும் சிறிலங்காவிற்கு பொருளாதார உதவி வழங்கத் தொடங்கவேண்டும் என நாம் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்.

மரபுவழித் தாயகம்l

இறுதித் தீர்வை எட்டுவது என்பது, வன்முறைச் சுழற்சிகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும், இலங்கையில் நிலையான அமைதியை அடைவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கும் முக்கியமாக உள்ளதென்பதை இப்பிராந்தியத்தை அக்கறையோடு கையாளும் நாடுகள் உணர்ந்து செயற்படவேண்டும்.

ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சனையில் மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வும், சர்வதேசத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும் என்பதே எமது உறுதியானதும் அறுதியானதுமான நிலைப்பாடாகும்.

அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து, எம்மை நாமே ஆளக் கூடிய நிரந்தரத் தீர்வும் பொதுவாக்கெடுப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை, தமிழ் மக்கள் சார்பாக இந்தப் பிரகடனம் உலகுக்கு அறிவிக்கின்றது.

பேரெழுச்சியுடன் நிறைவடைந்தது பேரணி; உரிமைகளுக்காக மட்டக்களப்பில் அலையெனத் திரண்ட வட, கிழக்கு தமிழ் மக்கள்

கடந்த 04.02.2023 அன்று இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற கருப்பொருளின்கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியொன்று ஆரம்பித்திருந்தனர். அவ்வாறு ஆரம்பித்தவர்கள் திங்கட்கிழமை(06) திருகோணமலைக்கு வந்து செவ்வாய்கிழமை வெருகல் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி ஆரம்பமானது.

இப்பேரணியை தொடர்ந்து அரச புலனாய்வாளர்கள் நோட்டமிட்டுக் கொண்ட இந்நிலையில் இப்பேரணி வாழைச்சேனை, கல்குடா, சந்திவெளி, சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடி, ஊடாக மட்டக்களப்பு நகரை வந்தடைந்தது, அதுபோல் அம்பாறை மாவட்டத்திலிருந்து வந்த இரு தொகுதியினரும், அவர்களுடன் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சங்கமித்தனர்; இறுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் கொள்கைப் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்து.

பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ, பல்கலைக் கழகங்களின் மாணவர்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், என பல்லாயிரக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

பொலிஸாரின் தடையை மீறி யாழ்.பல்கலையில் பேரணி ஆரம்பம்

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பமானது.

பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பேரணி காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.