ஜே.வி.பி யினரை சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அழைக்க வேண்டும் – பந்துல குணவர்தன

ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மக்கள் விடுதலை முன்னணிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியுடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெல்லவாய பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது.

முறையான மறுசீரமைப்புக்களுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளோம் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

பொருளாதார மீட்சிக்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மாற்றியமைத்தால் அல்லது இடைநிறுத்தினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் என்பதை அரசியல் தரப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களை தவறான வழிநடத்தும் வகையில் போலி அரசியல் வாக்குறுதிகளை வழங்குவதை அரசியல்வாதிகள் அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அரசியல் வாக்குறுதிகளினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் அரசியல் வாக்குறுதிகளை அனைவரும் தவிர்த்துக் கொள்வது அத்தியாவசியமானது.

இந்தியா, சீனா உள்ளிட்ட முன்னிலை நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய எதிர்ப்பு கொள்கைகளை கடைப்பிடித்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டமை வரவேற்கத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணிக்கு ஜப்பான், தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும் என்றார்.

மஹிந்தவை போன்று எம்மை விலைக்கு வாங்க முடியாது – அனுரகுமார

மஹிந்த ராஜபக்ஷவை விலைக்கு வாங்கியதை போன்று  உலக நாடுகளால் எங்களை விலைக்கு வாங்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று (11) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் இந்தியப் பயணத்தால் எதிர்க்கட்சி முகாம்கள் வியப்படைந்துள்ளதாகக் தெரிவித்த அனுரகுமார எதிர்வரும் காலங்களில் மேலும் ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு சகாப்தம் ஆரம்பித்துள்ளதாகவும், மேலும் மேலும் ஆச்சரியங்கள் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

மகிந்த – சந்திரிகா, மைத்திரிபால – மகிந்த, ரணில் – சந்திரிகா போன்ற அரசியல் எதிரிகள் கூட ஒரே மேடைக்கு வரவுள்ள நிலையில் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு எதிராக பல்வேறு கூட்டணிகள் களமிறங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுடனான தனிப்பட்ட போட்டியின் காரணமாக சஜித் அந்த முகாமில் சேரவில்லை.

இல்லையேல் அவரும் அதே முகாமில் இணைந்திருப்பார்.

மஹிந்த ராஜபக்ஷவை விலைக்கு வாங்கியதை போன்று எங்களை உலக நாடுகளால் விலைக்கு வாங்க முடியாது.

இந்திய விஜயத்தின் போது பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டன.

நாட்டின் தேசிய வளங்களைத் தாரைவார்க்க ஒத்துழைப்பு வழங்குவதாக நாங்கள் குறிப்பிடவில்லை.   என்றார்.

இலங்கை இனி தனிமைப்படுத்தப்பட்ட நாடல்ல; சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதே இலக்கு – அநுரகுமார

நாட்டில் விரும்பிய மாற்றத்தை அடைவதற்கான சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதே தமது நோக்கமாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை இனி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாடாக செயற்பட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பிராந்தியத்தில் வளர்ந்து வரும் நாடாகவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடாகவும் விளங்குகிறது. எனவே இலங்கை அந்த நாட்டிடம் இருந்து ஆதரவைப் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

76 ஆண்டு கால அழிவுகரமான அரசியல் கலாசாரத்தை நாம் நிறுத்த வேண்டும். மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர், அந்த மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த எதிர்பார்ப்புக்கு தலைமைத்துவத்தை வழங்கி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும். அதற்கு சர்வதேச ஆதரவு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு சில துறைகளில் மூலதனமும் தொழில்நுட்பமும் தேவை. சந்தையை விரிவுபடுத்த சில நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.

உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக இருப்பதன் மூலம் நமது இலக்குகளை அடைய முடியாது. எனவே, உறவுகளை வலுப்படுத்துவதே தமது இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.

கேரளா கைத்தொழில் அமைச்சர் ராஜீவை சந்தித்த அநுர குமார குழுவினர்

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கலந்துகொள்கின்ற இந்திய விஜயத்தின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் இன்றாகும்.

இந்தியாவின் கமியூனிஸ்ட் கட்சியை (CPIM-Kerala) முதன்மையாகக்கொண்ட இடதுசாரிக் கூட்டமைப்பினால் அதிகாரம் வகிக்கப்படுகின்ற கேரளா மாநிலத்திலேயே இன்று அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள். மூன்று கோடியே ஐம்பது இலட்சத்திற்கு மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட கேரளா மாநிலம் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் வேகமான முன்னேற்றமடைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதியுயர் இடத்தை கேரளா உரித்தாக்கிக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை (09) முற்பகல்வேளையில் கேரளா தலைநகரமான திருவனந்தபுரத்தில் மாநில அரசாங்கத்தின் கைத்தொழில்கள் மற்றும் சட்டம் பற்றிய அமைச்சர் ராஜீவை சந்தித்துக் கலந்துரையாடினார்கள். அமைச்சர் ராஜீவ் இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு அங்கத்தவராக விளங்குவதோடு கட்சியின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரைப்போன்றே ஒரு சட்டத்துறை பட்டதாரியுமாவார்.

அதனையடுத்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (Vikram Sarabhai Space Centre) அவதானிப்புச் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றனர். அந்த நிறுவனத்தின் பணிப்பாளருடன் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டதோடு இந்திய விண்வெளி நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும் தகவல்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் பிரதானமான விண்வெளி ஆராய்ச்சி நிலையமாக அமைவதோடு அது இந்தியாவின் செய்மதி நிகழ்ச்சித்திட்டத்திற்கு அவசியமான ரொக்கெட்டுகளையும் விண்வெளிக் கலங்களையும் உற்பத்திசெய்து வருகின்றது. அதேவேளையில் தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழுவினர் அதன் கட்டுப்பாட்டு நிலையத்தையும் விண்வெளி அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிடுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொண்டனர்.

அதன் பின்னர் மேற்படி குழுவினர் இந்தியத் தகவல் தொழில்நுட்ப துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்ற முதலாவதும் மிகப்பெரியதுமான தகவல் தொழில்நுட்ப பூங்காக்களிலொன்றான திருவனந்தபுரத்தின் Technopark இலும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டனர். அதன் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தருடன் நிறுவனம் சம்பந்தமான விசேட தகவல்கள் பற்றியும் கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டனர்.

இந்த Technopark 1990 இல் கேரளா மாநில முதலமைச்சர் ஈ. கே. நாயனாரின் ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அது 800 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பினைக் கொண்டுள்ளதோடு கட்டிடத்தின் பரப்பளவு 10.6 மில்லியன் என குறிப்பிடப்படுகின்றது. அதற்குள் 480 கம்பெனிகள் இயங்கிவருவதோடு 70,000 பேருக்கு மேற்பட்ட தொழில்வாண்மையாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். இது கேரள மாநில ஆட்சியின் கீழேயே நிருவகிக்கப்பட்டு வருகின்றது.

அடுத்ததாக இந்த பிரதிநிதிகள் குழு G Tech நிறுவனத்தின் பிரதம செயலாளரால் முன்வைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான சமர்ப்பணத்தில் பங்கேற்றதோடு கேரளா பல்கலைக்கழகத்தில் அவதானிப்புச் சுற்றுப்பயணத்திலும் இணைந்து கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து திருவனந்தபுரம் தலைநகரத்திற்கு தெற்கில் அமைந்துள்ள கரையோர Kovalam இன் Vellar கைப்பணிகள் கிராமத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு உருவாகியது.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் 10 ஆந் திகதி இலங்கை திரும்ப உள்ளனர்.

அரசியல், சமூகம், பொருளாதாரம் உட்பட அனைத்து பிரிவுகளையும் புதிய மாற்றத்திற்குள்ளாக்கும் அரசியல் இயக்கம் அவசியம் – அநுர குமார

வெறுமனே ஆட்சி மாற்றத்தினால் எந்தவிதமான பயனும் கிடையாதென்பதும், இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் ஒரே பிடியில் எடுத்து மாற்றத்திற்கு இலக்காக்குகின்ற புதிய அரசியல் இயக்கமொன்று அவசியமெனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கூறினார்.

கடந்த 27 ஆந் திகதி மாத்தறையில் நடாத்தப்பட்ட மேற்படி மாவட்டத்தின் அதிட்டன (திடசங்கற்பம்) முப்படைக் கூட்டமைவின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அந்த மாநாட்டில் அநுரகுமார தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

அரசியல் சூடுபிடித்துள்ளது. தேர்தல் அண்மித்திராத நிலையில் அரசியல் இவ்விதமாக சூடுபிடித்தமை இலங்கையில் ஒருபோதுமே நிலவவில்லை. அண்மைக்காலமாக இலங்கை மக்கள் அரசியல் ரீதியாக மிகவும் அதிகமாக விழிப்படைந்து வருகிறார்கள். விழிப்புணர்வடைந்த அரசியல் முனைப்புநிலையை அடைந்துவருகிறார்கள்.

இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் இறுதியளவில் எமது நாட்டில் இருப்பது புதிய அரசாங்கமாகும், புதிய ஆட்சியாகும். அந்த புதிய அரசாங்கத்தை, புதிய ஆட்சியை தேசிய மக்கள் சக்தியினுடையதாக மாற்றிக்கொள்ள நாமனைவரும் முனைப்பாக பங்களித்துள்ளோம்.

எமது நாடு பயங்கரமான யுத்தத்தில் ஈடுபட்டிருந்தவேளையில் தமது உயிர் உள்ளிட்ட அனைத்தையுமே அர்ப்பணித்து யுத்த முரண்பாட்டினை முடிவுக்கு கொண்டுவந்தாலும் அன்று நீங்கள் எதிர்பார்த்த சாதகமான நாடொன்றில் நன்றாக வசிக்கின்ற மக்கள் பற்றிய எதிர்பார்ப்பு முழுமையகவே சிதைக்கப்பட்டுவிட்டது.

யுத்தம் நிலவிய காலத்தைப் பார்க்கிலும் சீர்குலைந்த, உயிர்வாழ்வது மிகவும் கடினமான மற்றும் உலகின் முன்னிலையில் அபகீர்த்திக்குள்ளான நாடாக விளங்குகின்றது. அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டியது எம்மால் கைவிடமுடியாத பொறுப்பாகும்.

இந்த நெருக்கடிகளை மட்டுப்படுத்தப்பட்ட ஒருசில விடயங்களுக்குள் முடக்கிவிட ஒருசிலர் எதிர்பார்க்கிறார்கள். பொருளாதாரரீதியாக வங்குரோத்து அடைந்துள்ளமை உண்மைதான்.

மக்களின் அத்தியாவசிய பண்டங்கள்மீது வரிவிதிக்கப்படுவது, தொழிலொன்றைத் தேடிக்கொள்ள இயலாது, கிடைக்கின்ற சம்பளத்தில் சீவிப்பது சிரமமானது. நாட்டைவிட்டுச் செல்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், பொருளாதாரரீதியாக வங்குரோத்து நிலையடைந்து உள்ளதென்பது போன்ற விடயங்கள் உண்மையே. எனினும் மறுபுறத்தில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து, குற்றச்செயல்கள் மலிந்துள்ளன.

அண்மையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து வெலிகம பொலீஸ் ஆளுகைப் பிரிவுக்கு வருகை தந்த ஒரு குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தர்கள். அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்கள் மீது வெலிகம பொலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். ஒரு பொலீஸ் உத்தியோகத்தர் இறந்து மற்றுமொருவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.

இறுதியில் கொழும்பு பொலீஸாரும் வெலிகம பொலீஸாரும் ஒருவர்மீது ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டார்கள். வழிப்பறிக்கொள்ளைக்காரன்போல் வீதியில் வாகனத்தை நிறுத்துமாறு கூறியவேளையில் நிறுத்தாமையால் நாரம்மல சாரதியை சுட்டுக்கொன்றார்கள். மதியபோசனம் உண்டுகொண்டிருந்த பிக்குவை சுட்டுக்கொன்றார்கள். பெலியத்தையில் ஐவரைக் கொலைசெய்தவர்கள் யாரென இன்னமும் தெரியாது.

அனைவரதும் உயிர்கள் பாதுகாப்பற்ற அராஜகநிலை உருவாகி உள்ளது. 1993 காலத்திலும் இவ்வாறான நிலைமை காணப்பட்டு ஜனாதிபதி பிரேமதாசவின் படுகொலைக்குப் பின்னர் சற்று தணிந்தது. உங்களதும் எனதும் எம்மனைவரதும் உயிர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பொருளாதாரம் சீரழிந்தது மாத்திரமல்ல மக்களின் உயிர்கள் பற்றிய பாதுகாப்பற்ற நிலைமையின்பேரில் ஆட்சிக்குவர சிலவேளைகளில் திட்டமிடுவதாகவும் இருக்கக்கூடும்.

இது அதிகாரத்திற்காக உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட ஒரு நாடு என்பதை மறந்துவிடலாகாது. எந்தவொரு பிரஜைக்கும் அரசாங்க அலுவலகமொன்றில் இருந்து பணிகளை மேற்கொள்ளமுடியாத சீரழிந்த அரச சேவையே காணப்படுகின்றது.

பொலீஸ் மா அதிபரொருவரை நியமித்துக்கொள்ள முடியாமல் பதிற்கடமையாற்றுவதற்காக நியமித்தவருக்கு கரட், கிழங்கினைக் காட்டிக்காட்டி தமக்குத் தேவையாக நடவடிக்கைகளை ஈடேற்றிக்கொள்கிறார்கள். நீதி பரிபாலனம் தொடர்பில் சந்தேகம் குவிந்துள்ளது. குற்றச்செயல் புரிபவர்கள், மோசடிப் பேர்வழிகள், ஊழல்பேர்வழிகள் ஒன்றுசேர்ந்த குடும்பங்களின் அருவருப்பான, அழுகிப்போன அரசியலே நிலவுகின்றது.

இரும்பு மூட்டைக்கே கரையான் அரித்துவிட்டால் ஏனையவை பற்றிப் பேசுவதில் பிரயோசனமில்லை. உலகின் ஒருசில நாடுகளில் பொருளாதாரம் சீரழிந்தாலும் ஏனைய முறைமைகள் வழமைபோல் நிலவும்.

எமது நாட்டில் சீரழிந்த இந்த முறைமைக்குப் பதிலாக புதிய முறைமையொன்றை நிலைநாட்டுவதை விடுத்து ஆட்சிமாற்றம் அல்லது தலைமைத்துவ மாற்றம் பயன்தர மாட்டாது. மனிதர்கள் சிந்திக்கின்றவிதத்தைக்கூட மாற்றியமைக்கத்தக்க முறைமையொன்று தேவை.

இந்த சமூகத்துடன் எம்மால் முன்நோக்கி நகர முடியாது. பொருளாதாரம், அரசியல், சமூகம் அனைத்தையுமே புதிய மாற்றத்திற்கு இலக்காக்கின்ற அரசியலொன்று தேவை. அண்மைக்காலமாக பல வாய்ப்புகள் உருவாகியபோதிலும் நாட்டை மேம்படுத்துகின்ற நோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை.

மேலைத்தேய ஆதிக்கத்திற்கு 133 வருடங்கள் அகப்பட்டிருந்த ஒரு நாடு சுதேசிகளின் கைகளுக்கு கிடைத்ததும் வெள்ளைக்காரனுக்கு இரண்டாம்பட்சமாகாத அளவுக்கு நாட்டைக் கட்டியெழுப்ப எந்தளவு ஆழமான உணர்வு ஏற்படவேண்டும்? எம்மிடம் உருவாகாத இந்த நோக்கு இந்தியாவின் காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தேசிய இயக்தைச்சேர்ந்த தலைவர்களிடம் இருந்தது.

இந்த நோக்கு இன்று சந்திரனுக்குப் போகின்ற ஒரு இந்தியாவை உருவாக்கி இருக்கின்றது. தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என எற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஒரு பெண் சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தியர் எனும் கொடியின்கீழ் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டார்கள்.

குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து மலையக மக்களை நாடற்ற நிலைமைக்கு மாற்றியதும் தமிழ் அரசுக் கட்சியை உருவாக்க திருவாளர் செல்வநாயகம் முன்வந்தார். 1956 இல் இருந்து மொழிப் பிரச்சினையொன்றை இழுத்துப்போட்டுக் கொண்டதால் 58 அளவில் சிங்கள – தமிழ் கலவரம் உருவாகியது.

ஸ்ரீ எழுத்தில் கறுப்பெண்ணெய் பூசத் தொடங்கினார்கள். 1970 நடுப்பகுதியில் வடக்கில் ஆயுத இயக்கமொன்று உருவாகின்றது. 2009 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெறுகின்றது.

எமது ஆட்சியாளர்கள் உருவாக்கியது முரண்பாட்டு வரலாறாக அமைந்தபோதிலும் இந்திய ஆட்சியாளர்கள் உருவாக்கியதோ ஒருமைப்பாட்டினையாகும். தேசம் ஒன்றாக எழுச்சிபெறுகின்ற வரலாற்றினை அவர்கள் எழுதும்போது முரண்பாடுநிறைந்த வரலாற்றினை எழுதவேண்டியநிலை எமக்கு எற்படுகின்றது.

உலக நாடுகள் இருபதாம் நூற்றாண்டில் பிரமாண்டமான முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கையில் நாங்கள் அந்த நூற்றாண்டினைக் கைவிட்டுவிடுகிறோம். உலகில் உருவாகியுள்ள நவீனத்துவத்திற்கு ஒத்திசைவு செய்யத்தக்க இலங்கையொன்று எமக்குத் தேவை.

எனவே எம்மெதிரில் இருப்பது வெறுமனே ஆட்சிமாற்றத்திற்குப் பதிலாக புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி நாட்டைக்கொண்டுசெல்கின்ற புதிய ஆட்சியாகும். அதற்காக நாட்டை மீண்டும் விழித்தெழச் செய்வித்து தேசத்தை ஒருமைப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.

நாங்கள் வடக்கு மக்களை அழைக்கவேண்டியது 13 ஐ தருகிறோம் என்றல்ல: பெடரல் தருகிறோம் என்றல்ல. இந்த அனர்த்தத்தில் இருந்து விடுபடுவதற்காக நாங்கள் ஒன்றுசேர்ந்து போராடுவோம் என்றே கூறவேண்டும். கப்பம் கொடுத்து வாக்குகளைப் பெறுகின்ற கலாசாரத்திற்குப் பதிலாக புதிய மறுமலர்ச்சி யுகத்துடன் ஒன்றுசேருங்கள் எனக்கூறி அதிகாரத்தின் சுக்கானை தேசிய மக்கள் சக்தியின் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாங்கள் அதிகாரத்தை எடுப்பதென்பது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆரம்பமேயன்றி இறுதிக்கட்டமல்ல. எமக்கு எதிராக ஒன்றுசேரக்கூடிய அனைத்துச் சக்திகளும் ஒரே மேடைக்கு வருகின்றன. திடீர் விபத்து காரணமாக ஒருவர் இறந்தாலும் என்பிபி ஐ பிடித்துக்கொள்கிறார்கள்.

அவர்கள் அந்த அளவுக்கு திகைப்படைந்துள்ளார்கள். அவர்களின் அசிங்கமான, காடைத்தனமான, கீழ்த்தரமான அரசியலை சதாகாலமும் முன்னெடுத்துச்செல்ல முடியுமென்று அவர்கள் நினைத்தார்கள். பல தசாப்தங்களாக அவர்களின் குற்றச்செயல்களையும், ஊழல்களையும் வெளியில் வர இடமளிக்காமல் பிரதான ஊடகங்களில் தணிக்கை செய்திருந்தார்கள்.

இப்போது சமூகவலைத்தலங்களை தடைசெய்யப்போகின்ற ஐயாமார்களுக்கு நாங்கள் கூறுவது ” இப்போது குதிரை தப்பியோடிவிட்டது, லாயத்தை மூடுவதில் பலனில்லை” என்றாகும். இப்போது அவதூறு, அவமதிப்பு, பயமுறுத்தல், அச்சுறுத்தல்களை முன்வைத்து வருகிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பப்பட்டுள்ளது அவதூறு, அவமதிப்பு, பயமுறுத்தல், அச்சுறுத்தல்களுக்கு கட்டுப்படுவதற்காக அல்லவென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். பலதசாப்தங்களாக பெரிகோட்டின் இருபுறத்திலும் வைத்திருந்த பாதுகாப்புப் பிரிவின் இளைப்பாறியவர்களும் நாங்கள் அனைவரும் இந்த பக்கத்தில் ஒன்றுசேர்ந்திருக்கிறோம். பெரிகோட்டின் அந்தப் பக்கத்தில் அவர்கள் தனித்துப்போய் இருக்கிறார்கள்.

ஜெனரல்மார்கள், அட்மிஜரால்மார்கள், எயார் மார்ஷல்கள், மேஜர் ஜெனரல்கள், நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இப்படி ஒன்றாக இருந்தாலும் அவர்கள் சதாகாலமும் அவர்களின் பைக்குள்ளே அனைவரையும் வைத்துக்கொள்ளவே நினைத்தார்கள். இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவினைக்கண்டு அச்சமடைந்தவர்கள் சிறுபிள்ளைத்தனமானவற்றை அமைத்திட முயற்சிசெய்கிறார்கள்.

ஆனால் நாங்கள் எப்போதுமே கூறுவதைப்போல் கொப்பி பண்ணமுடியும், ஆனால் இணையானதாக்கிட முடியாது. இந்த ஒவ்வொருவரும் மக்களுக்கு நல்ல வாழ்க்கை, நல்ல நாட்டை எதிர்பார்த்து வந்தவர்களேயன்றி அவர்களிடம் தனிப்பட்ட தேவைகள் கிடையாது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், உளவுத்துறைப் பிரதானி போன்றவர்கள் பதற்றமடைந்துள்ளார்கள். எனினும் நாங்கள் பதற்றமடையவில்லை.

தம்மை இந்த பேரழிவிலிருந்து விடுவித்துக்கொள்வார்கள் என்ற பாரிய எதிர்பார்ப்பு எம்மீது மக்களுக்கு இருகின்றது. கலவரமடைந்து, பொய்க்கிடங்குகளில் விழுந்து அந்த மக்களின் எதிர்பார்ப்பினை நாங்கள் சிதைக்கப்போவதில்லை.

புயலில் சிக்கியுள்ள இந்த படகினை மிகச்சிறந்த தந்திரோபாயத்தை தெரிவுசெய்து வெற்றியை நோக்கி வழிப்படுத்துவோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். நாங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒரு வார்த்தைகூட பிசகக்கூடாது. ஐ.ரீ.என் தலைவர் சுதர்ஷன குணவர்தன “சமபிம” என பாரிய லிபரலுக்காக தோற்றியவர்கள் அவற்றைப் பிடித்துக்கொண்டு அடிக்கிறார்கள்.

நடவடிக்கைகளை மேற்கொண்டதும் வெற்று ஆசாமிகள். அதனால் ஒருசொல்கூட பிசகுவதற்கு எமக்கு உரிமை கிடையாது. நாங்கள் எந்நேரத்திலும் மனதால் அல்லது மூளையால் முடிவுகளை எடுக்கவேண்டும். அதனால் நாங்கள் பொறுமையுடனும் கவனமாகவும் இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

அதற்காக அசிங்கமான, அழுகிப்போன, துர்நாற்றம் வீசுகின்ற அரசியலை சுத்தஞ்செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு ஒரு சட்டமும் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமும் இருக்கின்ற நிலைமையை நாங்கள் மாற்றியமைத்திடவேண்டும். அனைத்து அதிகாரங்களும் ஒரே வளையத்தின் கைகளிலேயே இருக்கின்றன. அவையனைத்தையும் மாற்றியமைத்து பொருளாதார ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டும்.

எமது கல்வியை பாரிய மாற்றத்திற்கு இலக்காக்கிட வேண்டும். ஒவ்வொரு பிரஜைக்கும் உணவுவேளையொன்றை வழங்குவதற்கான வழிமுறையை உறுதிப்படுத்திட வேண்டும். நாங்கள் தொடக்கத்திலேயே பிரஜைகளுக்கு உணவு, சுகாதாரம், கல்விக்கு உத்தரவாதம் அளிப்போம்.

நெருக்கடியை முகாமை செய்வதற்காகவே சர்வதேச நாணய நிதியம் இடையீடு செய்துள்ளது. எமது ஆட்சியின்கீழ் நெருக்கடியை முகாமைசெய்து மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாதிருக்க புதிய அணுகுமுறைக்குள் நாட்டைக் கொண்டுசெல்வோம். குற்றச்செயல்களிலிருந்தும் போதைப்பொருள்களிலிருந்தும் இந்த நாட்டை மீட்டுப்பதற்கான திட்டம் எம்மிடம் இருக்கின்றது.

ஊர்களில் இருந்தவர்களை அரசியல்வாதிகளின் குற்றச்செயல்களுக்கு ஈடுபடுத்தி எமது நாட்டின் பாதாளக்கோஷ்டியை பாரியளவில் வளர்த்தெடுத்தார்கள். ஜே.ஆர். ஜயவர்தன கோனவல சுனிலுக்கு மன்னிப்பு வழங்கினார். ஆர். பிரேமதாச சொத்தி உபாலியை நிறைவேற்றுச் சபைக்கு எடுத்தார். சந்திரிக்கா குமாரதுங்க பெத்தெகான சஞ்சீவவை தனது பாதுகாப்பு பிரதானியாக நியமித்துக்கொண்டார். நாமல் ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு வழங்குபவர் ஜுலம்பிட்டியெ அமரே. இந்த ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்புப் பிரிவுகளின் ஜெனரல்மார்களின் பாதுகாப்பு போதாதென பாதாளக்கோஷ்டியிடம் ஒப்படைத்தார்கள்.

இந்த நிலைமையை மாற்றியமைத்திட புதிய எழுச்சி, ஒருமைப்பாடு, புதிய மலர்ச்சி எமது நாட்டுக்கு அவசியமாகும். அந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் பாரிய செயற்பொறுப்பு இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவிடம் கையளிக்கப்படுகின்றது. அதனை சிறப்பாக ஈடேற்றுவீர்கள் என்பது எம்மனைவருக்கும் உறுதியானதே

இந்த ஆண்டு புதிய அரசாங்கத்துக்கான மாற்றத்தை உருவாக்க முடியும் – அநுரகுமார

தற்போதுள்ள ஆட்சி முறையை மாற்ற வேண்டும் என்ற மக்களினதும், தேசிய மக்கள் சக்தி கட்சியினதும் கொள்கை இன்று ஒன்றாக மாறியுள்ளதால், இந்த ஆண்டில் புதிய அரசாங்கத்துக்கான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கண்டியில் தெரிவித்துள்ளார்.

அனைத்து வகையிலும் மூழ்கிக்கொண்டிருக்கும் நாட்டை காப்பாற்ற புதிய மறுமலர்ச்சி யுகம் காலத்தின் கட்டாயத் தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்கரின் ஆசி பெற்ற பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தற்போதுள்ள ஆட்சி முறையை மாற்றுவது வெறும் அரசியல் வேலைத்திட்டம் அல்ல, தேசிய செயற்பாடு. புதிய மாற்றத்துக்காக மக்கள் தற்போது முன்வருகின்றனர்.

பொருளாதார ரீதியிலும் அனைத்து துறைகளிலும் நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் இன்று இருந்த இடத்தில் இருந்து ஒரு படி முன்னேறி நாட்டை கட்டியெழுப்பியுள்ளதாக கூறப்படுவது நகைப்புக்குரிய விடயமாகும்.

ஆகவே, இந்தப் பேரினவாதக் கும்பலிடம் இருந்து நாட்டை விடுவித்து, நாட்டைப் புதிய பாதைக்கு வழிநடத்த வேண்டும். இதுவே தேசிய மக்கள் சக்தியின் இலக்காகும்.

மக்கள் வாக்குகள் தேசிய மக்கள் சக்தியிடம் இருப்பதை அறிந்த அரசாங்கம் தற்போது ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதா என்ற குழப்பத்தில் உள்ளது.

எந்தத் தேர்தலை முதலில் நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தி கட்சி தயாராக உள்ளது.

நாட்டில் மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தேவைக்கு ஏற்றவாறு விநியோகம் இல்லாதபோது விலை அதிகரிப்பது சந்தைக் கோட்பாடு. இந்த சூழலில் இதனை அரசாங்கம் தலையிட்டு முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றார்.

அநுரகுமார ஜனாதிபதியானால் பெண் ஒருவருக்கே பிரதமர் பதவி – விஜித ஹேரத்

தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானதன் பின்னர் பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். .

நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், நாட்டில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பதால், பெண் ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதே தமது கட்சியின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதால், தனது சொந்த அரசாங்கமும் அந்த வேலைத்திட்டத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்ததுடன், நிலைமைகளை இலகுபடுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் மீளாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தனது வேலைத்திட்டத்திற்கு துரோகமிழைக்கும் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை எனவும் அவர் அந்த கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

நாட்டில் மாற்றுக் கருத்துடையோரை அடக்கவே பயங்கரவாதச் சட்டம் – விஜித ஹேரத்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசாங்கம் எப்போதும் மாற்று கருத்துடைய அரசியல்வாதிகளை அடக்குவதற்கே பயன்படுத்தி இருக்கிறது. அதனால்தான் இந்த சட்டம் தொடர்பில் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த சட்டமூலத்தில் பயங்கரமான பல விடயங்கள் இருக்கின்றன என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். அதனால் அரசாங்கத்துக்கு எதிரக மக்கள் வீதிக்கு இறங்குவார்கள். அதன்போது அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். அரசாங்கத்திற்கு எதனையாவது செய்யுமாறு கூறினாலோ, செய்ய வேண்டாமென்று கூறினாலோ பயங்கரவாதியென்று கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கிறது. ஆனால் எமது நாட்டில் மாற்று கருத்துடையவர்களை அடக்குவதற்கே இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கவிதை எழுதியதற்காக இளைஞர் ஒருவரர் பல வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அதேபோன்று அனைத்து பல்கலைக்கழக சங்கத்தின் தலைவர் இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் 1983இல் ஜே.வி.பியினரை தடை செய்தனர். ஆனால் ஜனநாயக ரீதியில் அரசியல் செய்கின்றோம். வடக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன்? தவறான தீர்மானங்களே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த தூண்டியது. மக்கள் வீதிக்கு இறங்கும் போது அவர்களை ஒடுக்க இதனை பயன்படுத்தவே முயற்சிக்கின்றனர். அதனால் எமது நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தில் உண்மையான பயங்கரவாதத்தை தடுப்பதற்கு இந்த சட்டம் பயன்படுத்துவதில்லை. மாறாக மாற்று கருத்துடைய அரசியல்வாதிகளை அடக்குவதற்கே பயன்படுத்துகின்றனர். அதனால்தான் இந்த சட்டம் தொடர்பில் மக்கள் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் கடந்த வருடம்கொண்டுவந்தது. ஆனால அப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெற்றுக்கொண்டிருந்ததால் அதனை அரசாங்கம் அன்று வாபஸ் பெற்றுக்கொண்டது. தற்போது மீண்டும் இந்த சட்ட மூலத்தை சமர்ப்பித்திருக்கிறது. இந்த சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் பயங்கரமானவை. அரசாங்கம் இந்த சட்டத்தை எப்போதும் தனது எதிர் தரப்பினரை அடக்குவதற்கே பயன்படுத்தி வந்திருக்கிறது. எதர்காலத்திலும் அதனையே மேற்கொள்ளப்போகிறது. வரலாற்றில் இதற்கான அனுபங்கள் உள்ளன என்றார்.

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வெற்றுப்பயணம் – தேசிய மக்கள் சக்தி

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாத மக்களின் வரிப்பணத்தை வீணடித்த வெற்றுபயணமாகவே வட மாகாண விஜயம் அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரட்ணாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி தலைமையகத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யாத வகையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

காணி விடுவிப்பு, மீள்கட்டுமானம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு, மற்றும் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு என தமிழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறான ஒரு நிலையில் வடமாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு துண்டு காணியேனும் அந்த மக்களுக்கு விடுவித்துக் கொடுக்கவில்லை.

நான் கொழும்பிலிருந்து வருகை தரும்போது வடக்கு அதிகாரிகள் சிலருடன் கதைத்தேன் ஜனாதிபதி விஜயம் அவ்வாறு இருந்தது என அவர்கள் கூறினார்கள் வாகனப் பவனியை கண்டு இரசித்ததாகக் கூறினார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் விஜயத்தை எதிர்த்து யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் போராட்டம் நடைபெற்றது.

ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பை தெரிவித்த போராட்டக்காரர்களை பொலிசார் இழுத்துச் சென்றதையும் தாக்குதலுக்கு தயாராக இருந்த பொலிசாரையும் ஊடகங்களில் ஊடாகப் பார்த்தேன்.

நாட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதி கதிரையிலிருந்து மக்கள் விரட்டியடித்த போது ரணில் விக்கிரமசிங்க பின் கதவால் ஜனாதிபதியானார்.

நாட்டை முன்னேற்ற போகிறேன் என கூறிக்கொண்டு நாட்டு வளங்களை வெளிநாட்டுக்கு தாரைவாக்கம் செயற்பாட்டில் ரணில் விக்கிரமசிங்காக ஈடுபட்டு வருகிறார்.

நாட்டை பாதுகாப்பதற்காக பொதுமக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் அமைப்பினர் மேற்கொள்ளும் போராட்டங்களை பாதுகாப்பு தரப்பினர் மூலம் அடக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என அரசியல் அமைப்பு கூறுகின்றது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கதிரையில் மீண்டும் அமர்வதற்காக தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது வடக்குக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

வட மாகாணத்தின் வளம் மிக்க பகுதிகளான மன்னார் பூநகரி தீவகம் போன்ற பகுதிகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அப் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை.

நாடு பொருளாதார ரீதியில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி ஆடம்பரமாக வாகன தொடரணிகள் சகிதம் வருகை தந்து நான்கு நாட்கள் வடக்கில் முகாமிட்டமை மக்களின் பிரச்சனையை தீர்க்க அல்ல எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரமே என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

2024 வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடு

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் காணப்படுகிறது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் எவ்வித பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை.

இருக்கும் பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் புதிதாக நான்கு பல்கலைக்கழகங்களை அமைப்பதாக குறிப்பிடுவது நகைப்புக்குரியது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட சமர்ப்பின் போது இந்த கருத்தையே குறிப்பிட்டார். ஆனால் எந்த தவறும் திருத்திக் கொள்ளப்படவில்லை.

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. வரி அதிகரிப்பு,தேசிய வளங்களை விற்றல் என்பதை அரச கொள்கையாக முன்வைக்கப்பட்டுள்ளன.

வரையறையற்ற கடன்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் கடன்படு எல்லையை 3400 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளார். ஆகவே இந்த வரவு செலவுத் திட்டம் நடைமுறைக்கு ஒருபோதும் சாத்தியமடையாது.

நாட்டில் 17 அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை.

மாறாக புதிதாக 4 பல்கலைக்கழகங்களையும்,தனியார் பல்கலைக்கழகங்களையும் உருவாக்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.இது நகைப்புக்குரியது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி தனது முன்மொழிவுகள் ஊடாக குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்றார்.