ஜுன் 8 முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்தக் கோரி போராட்டம் – அனுரகுமார

உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஜூன் 8 ம் திகதி முதல் மீண்டும் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜூன் 8ம் திகதி தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா அம்பாந்தோட்டை அனுராதபுரத்தில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் இறுதியாக கொழும்பை சுற்றிவளைப்பதற்கான மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்கள் மக்களிற்கும் நாட்டிற்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளனர் 68 வீதமான மக்கள் உணவு உண்பதை குறைத்துக்கொண்டுள்ளனர் என்பதை மத்திய வங்கியின் சமீபத்தைய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 வீதமானவர்கள் மருந்துகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர் மேலும் நாற்பது வீதமானவர்கள் கல்விச்செலவுகளை நிறுத்திவிட்டனர் எனவும் மத்திய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.சுமார் 500,000 தொழிலாளர்கள் தங்கள் தொழில்களை இழந்துள்ளனர் பெரும்பான்மையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை மக்கள் வாழக்கூடிய நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது தேசிய மக்கள் சக்தி அந்த சவாலை ஏற்றுக்கொள்ள தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு முதல் ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் அதற்கு முன்னர் உள்ளுராட்சி மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வர இனவாதம்,மதவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் – அனுர குமார

மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர இனவாதம்,மதவாத கருத்துக்கள் சமூகத்தின் மத்தியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

களனி விகாரையில் நாக பாம்பு தோற்றம் பெற்றதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத போதகர் குறிப்பிட்ட கருத்துக்கு முன்னுரிமை வழங்குவது சிறந்ததல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

குருநாகல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் மக்கள் விடுதலைக்கான மக்கள் அலை குறைவடைந்துள்ளது.மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டமும் முடிவடைந்து விட்டது என அரசியல் களத்தில் குறிப்பிடப்படுகிறது.

மக்கள் கூட்டத்தால் மக்கள் முன்னணி தோற்றம் பெறவில்லை.மக்களின் நம்பிக்கையை கொண்டு மக்களாதரவை தற்போது ஒன்றுத்திரட்டியுள்ளாம்.எம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைவடைய செய்ய மாட்டோம்.

வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இயற்றை அனர்த்தத்தினால் நாட்டு மக்களுக்கு இந்த நிலை ஏற்படவில்லை.அரச தலைவர்களின் தவறான நிர்வாகத்தினால் நாட்டு மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே இந்த நிலையை இனியாவது மாற்றியமைக்க வேண்டும்.நாட்டுக்கு பொருத்தமான அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கையை செயற்படுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் மொத்த சனத்தொகையில் 68 சதவீதமானோர் மூன்று வேளை உணவை இரு வேளையாக குறைத்துள்ளார்கள்.40 சதவீதமானோர் அத்தியாவசிய மருந்து கொள்வனவை புறக்கணித்துள்ளார்கள்.40 சதவீதமானோர் அத்தியாவசிய தேவைகளை வரையறைத்துள்ளார்கள்.ஆகவே பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்துக்கும்,சமூக கட்டமைப்பின் உண்மை தன்மைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

பொருளாதார பாதிப்பு காரணமாக சுமார் 5 இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள்.இதனால் சமூக விரோத செயல்கள் தீவிரமடைந்துள்ளன.ஒரு நாடு பொருளாதார பாதிப்புக்கு முகம் கொடுக்கும் போது சமூக விரோத செயற்பாடுகள் இயல்பாகவே தோற்றம் பெறும்.பிரேசில் நாட்டிலும் இவ்வாறான தன்மையே காணப்படுகிறது.

யுத்த காலத்தில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதை போன்று பொருளாதார அநாதைகளாக மக்கள் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக இரவு பகலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.2021 ஆம் ஆண்டு 13 இலட்சம் பெண்கள் வெளிநாட்டு பணி பெண்களாகவும்,2022 ஆம் ஆண்டு 74 இலட்சம் பெண்கள் பணி பெண்களாகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.இதுவே சமூக கட்டமைப்பின் தற்போதைய நிலை.ஆனால் ஜனாதிபதியோ சுபீட்சமான எதிர்காலம் என்று பொருளாதாரத்தை முன்னேற்றி விட்டதாக கருத்து தெரிவித்து தன்னை காட்சிப்படுத்தி உலகத்தை வலம் வருகிறார்.

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு கண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுவது அடிப்படையற்றது.வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.வெளிநாட்டு அரச முறை கடன்களை செலுத்தல்,டொலர்களை மத்திய வங்கி கொள்வனவு செய்தல்,அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி ஆகிய மூன்று காரணிகளுக்காகவே டொலர் அத்தியாவசியமானது.

அரசாங்கம் இந்த மூன்று செயற்பாடுகளிலும் இருந்து விலகியுள்ளது.ஆகவே டொலர் கையிருப்பு மிகுதியாகும்.அதை கொண்டே எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.ஆகவே இது நிலையான பொருளாதார தீர்வு அல்ல பெற்றுக்கொண்ட அரசமுறை நிச்சயம் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய அரசியல்வாதிகளை மக்கள் துரத்தியடித்தார்கள்.மக்களால் வெறுக்கப்பட்ட தரப்பினரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர இனவாதம் மற்றும் மதவாத கருத்துக்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.ஜெரோம் பெர்னாண்டோ என மதபோதகர் குறிப்பிட்ட கருத்து தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

இவர் பல முரண்பட்ட கருத்துக்களை ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டுள்ளார்.அப்போது எவரும் கவனம் செலுத்தவில்லை.களனி விகாரையில் நாக பாம்பு தோற்றம் பெற்றதாக குறிப்பிட்ட ஊடகங்கள் இவர் விடயத்துக்கு முன்னுரிமை வழங்குவது சிறந்ததல்ல ஆகவே மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது – சுனில் ஹந்துனெத்தி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர்.

சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது.

பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால் எங்கும் மீண்டுள்ளதா?

நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்லும்

சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி கூறியுள்ளது.

இந்த சட்டமூலம் தற்போதைய ஜனாதிபதி, பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு மிகவும் ஒத்ததாக இருப்பதாக சட்டத்தரணி சுனில் வதகல தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் அரசியலமைப்பை மீறுகிறது என்பதோடு மக்கள் அனுபவிக்கும் சிவில் உரிமைகளை குறை மதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த போராட்டங்கள் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் எதுவும் இந்த சட்டமூலத்தினால் பாதுகாக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடன் வாங்குவது அவமானம் ; தம்பட்டம் அடிக்க வேண்டாம் – தேசிய மக்கள் சக்தி

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்ட போது பெருமையடித்து பேசியதைப் போன்று ஐ.எம்.எப். கடன் உதவியை கண்டு பெருமிதம் கொள்ள வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைக்கு அங்கீகாரம் வழங்குவதாக அரசாங்கத்தில் உள்ள சிலர் தம்பட்டம் அடிப்பதை இன்று செவ்வாக்கிழமை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியே விஜித ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை நம்பி நாட்டை திவாலாக்கியதன் பின்னர் வரம்பற்ற கடன்களை பெற்றுக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வரிச்சுமையை அதிகரித்து, அரச நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடனாளியாக மாறியுள்ளதாகவும், இது மற்றுமொரு கடன் பொறி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டொலரை விட ரூபாயின் பெறுமதி அதிகரிப்பின் அமெரிக்கா இலங்கை மீது குண்டு வீசும்

அமெரிக்க டொலரை விட இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்தால், அமெரிக்கா எம்மீது குண்டுகளை வீசும் என தேசிய மக்கள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பொருட்களில் விலை குறைவடைவதாக கூறினால் கடந்த வருடம் காணப்பட்ட விலைக்கு குறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி குறையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னர் 33 ரூபாய்க்கு காணப்பட்ட சவர்க்காரத்தின் இன்றைய விலையை ஒப்பிட்டு பார்க்கையில் விலை குறைந்துள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ரணிலால் இவ்வருடம் தேர்தலை நடாத்த முடியாது

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 40 வது பிரிவின்படி, ஐந்தாண்டுகளின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அடுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 40 வது பிரிவின் விதிகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு மட்டுமே அவர் இரண்டாவது தவணைக்கு போட்டியிட்டால், முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அதிகாரம் உள்ளது என்றார்.

கோட்டாபய ராஜபக்ச இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை நடத்தியிருக்க முடியும் என்று கூறிய அவர், அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

2024 நவம்பருக்குப் பின்னரே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தென்னிலங்கை ஏற்றுக்கொண்டு தமிழருக்கு வழங்க முன்வந்த நிரந்தர அரசியல் தீர்வுதான் என்ன? அனுரகுமார திசாநாயக்கா சொல்வாரா? – சுரேந்திரன்

தென்னிலங்கை நிராகரிக்கும் தீர்வு தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்று அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தெரிவித்திருக்கிறார். தென்னிலங்கை இதுவரையும் ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு முன்வைத்த அரசியல் தீர்வுதான் என்ன என்பதற்கு அனுரகுமார திசாநாயக்கவால் பதில் கூற முடியுமா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆகக் குறைந்தது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே இனப் பிரச்சினை உள்ளது என்பதையும் தமிழ் மக்கள் இந்த நாட்டினுடைய ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்து உடையவர்கள் என்பதையும் தங்களது கட்சியாவது ஏற்றுக்கொள்ளுமா?

தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் அல்ல அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்களும் அல்ல என்பதை உங்களது கட்சியின் ஸ்தாபகர் மறைந்த ரோகன விஜயவீர அவர்கள் கட்சி நிலைப்பாடாக அறிவித்தமையும் அதைத் தொடர்ந்தும் உங்களுடைய கட்சி பின்பற்றி வருவதையும் நீங்கள் அறியாமல் இல்லை.

மேலும் எமது அரசியல் தீர்வாக அமையாத 13ம் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராகவும் மாகாண சபை முறைமைக்கு எதிராகவும், அது நாட்டை பிரித்து விடும் என்று தங்களது கட்சி ஆயுதமேந்தி போராடியதையும் நீங்கள் மறந்து இருக்க வாய்ப்பு இல்லை. இணைந்த வடக்கு கிழக்குக்கு எதிராக நீதிமன்றமேறி வாதாடி அதைப் பிரிப்பதற்கும் தங்களுடைய கட்சி ஆற்றிய பங்கு பெருமளவு. அதை தமிழ் மக்கள் ஒருபொழுதும் மறந்துவிடவில்லை.

தமிழ் மக்கள் இந்நாட்டின் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு இனப் பிரச்சினை உள்ளது, அது தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை தென் இலங்கை அரசியல் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்குத் தீர்வாக எதனை பரிந்துரைத்துள்ளார்கள் என்ற கேள்விக்கு தங்களிடம் பதில் உள்ளதா? அல்லது அது சம்பந்தமாக தங்களுடைய கட்சியினுடைய தெளிவான நிலைப்பாடு என்ன என்பதை நீங்கள் எட்டியுள்ளீர்களா?

ஆகவே தங்கள் கட்சி ஆட்சி அமைத்து தென்னிலங்கையும் ஏற்றுக் கொண்ட அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவீர்கள் என்ற கானல் நீரை தமிழ் மக்கள் நம்ப தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்

 

தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படுகின்ற தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது – அநுர

தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படுகின்ற தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள அரசியலைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலமாகவோ அல்லது அதனை மாற்றியமைப்பதன் மூலமாகவோ தமிழர் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வினை வழங்க முடியாது.

அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் தமிழருக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்.
தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது, இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கூறியதாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது கற்பனை கதை

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதை என சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்று முடிவு செய்யவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் கொந்தளிப்பை சமாளிக்கவும், மக்களை ஏமாற்றவும் இந்த கட்டுக்கதை பயப்படுவதாக கூறியுள்ளார்.

அத்தோடு நாடு அபிவிருத்தி அடைந்து வருகின்றது என்றும் தற்போதைய அரசாங்கத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கூட கட்டுக்கதைகள் பயப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய வங்கி முடிவுகளை எடுப்பதில்லை என்றும் இதிலும் அரசாங்கத்தின் உந்துதல் காணப்படுவதாகவும் சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார்.