புதிய ஜனாதிபதியால் மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் எதுவும் இல்லை – மனித உரிமை கண்காணிப்பகம்

ஜனாதிபதி மாற்றம் இலங்கையின் மனித உரிமை நிலவரங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டிற்கான தனது வருடாந்த அறிக்கையினை வெளியிட்டுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி இதனைத் தெரிவித்துள்ளார்.

பலவருடங்களாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்டமை ஊழல் ஆகிய சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மில்லியன் கணக்கானவர்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதை தொடர்ந்து 2022 இல் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளிற்கு இறங்கியிருந்தனர்.

நீண்டகாலமாக மனித உரிமை குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜூலையில் பதவி விலகினார்.

எனினும் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தார், செயற்பாட்டாளர்களை கைதுசெய்தார், கடந்த கால குற்றங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை புறக்கணித்தார் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சீர்திருத்தம் மற்றும் பொறுப்புக்கூறல்களிற்கான வேண்டுகோள்களிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒடுக்குமுறையால் பதிலளித்துள்ளார் என மீனாக்சி கங்குலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை இந்த நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவும் அதன் சர்வதேச சகாக்கள் அடிப்படை மனித உரிமைகள் சீர்திருத்தம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்றவற்றை வலியுறுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு மின் கட்டணம் அதிகரிக்கப்படின் விசாரணை மேற்கொள்ளும்

ஜனவரியில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாக கருதப்படும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் விதத்தில் மின்சார கட்டணம்  அதிகரிக்கப்பட்டால் முறைப்பாடுகள் இல்லாமலேயே இந்த விவகாரத்தில் தலையிட தயார் என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதை பொருளாதார நெருக்கடி காரணமாக  ஏற்கனவே பெரும் சுமைகளை சுமக்கும் மக்களை மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும்  உரிமை அரசாங்கத்திற்கோ அதன் பங்குதாரர்களிற்கோ கிடையாது என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் அமைச்சோ அல்லது இலங்கை மின்சார சபையோ மின்சார கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்தால் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு அது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் என அதன் இயக்குநர் நிகால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியா அகதிகளை காப்பாற்றிய இலங்கையர்களுக்கு ஐநா அமைப்பு பாராட்டு

ரோஹிங்கியா அகதிகளின் படகு காப்பாற்றப்பட்டதை அகதிகளிற்கான ஐநா அமைப்பான யுஎன்எச்சீஆர் வரவேற்றுள்ளது.

வார இறுதியில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ரோஹிங்கியாஅகதிகள் படகை காப்பாற்றி அதிலிருந்தவர்களை கரைக்கு கொண்டு செல்வதற்கு இலங்கையின் உள்ளூர் மீனவர்களும் கடற்படையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளை யுஎன்எச்சீஆர் வரவேற்றுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பெருமளவானவர்களுடன் படகு தத்தளித்துக்கொண்டிருப்பதை மீனவர்கள் பார்த்தனர், காப்பாற்றப்பட்ட அவர்களை ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படை துரிதமாக கரைக்கு கொண்டு சென்றது.

இலங்கை கடற்படைக்கும் உயிர்களை காப்பாற்றுவதற்காக செயற்பட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி உடையவர்களாக உள்ளோம் என ஆசியா பசுபிக்கிற்கான யுஎன்எச்சீர்ஆரின் இயக்குநர் இந்திக ரத்வத்த தெரிவித்துள்ளார்.

இது கடலில் உயிர் இழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பின்பற்றவேண்டிய மனிதாபிமானத்திற்கான உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் உடனடி தேவைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு யுஎன்எச்சீ ஆர் அனைத்து உதவிகளையும் வழங்குகின்றது.

படகுகளில் ஆபத்தில் சிக்குண்டுள்ளவர்கள் கடலில் மிதப்பவர்களை காப்பாற்றுவதற்கு அனைத்து பொறுப்புணர்வு மிக்க நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அகதிகளிற்கான ஐநாவின் அமைப்பு சர்வதேச கடப்பாடுகள் மற்றும் மனிதாபிமான பாரம்பரியங்களின் அடிப்படையில் அவர்கள் தரைஇறங்குவதற்கும் அனுமதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளிற்கு அருகில் வங்களா விரிகுடாவில் இன்னுமொரு படகு தத்தளிக்கின்றது என்ற தகவல் குறித்து ஐநா அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என அறியும் உரிமை அவர்களது உறவுகளுக்கு உண்டு – திஸ்ஸ விதாரண

”அரசியல் தீர்வுக்கு நான் தயாராக இருந்தேன். தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதற்கு இடமளிக்கவில்லை” என சர்வதேசத்திற்கு தெரிவிக்கும் முயற்சியில் ஜனாதிபதி அரசியல் தீர்வு விவகாரத்தை கையாளுகிறார்.

அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.

இரு தரப்பிலும் இனவாதிகள் உள்ளார்கள் என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

பாராளுமன்றத்திலும் பொது இடங்களிலும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் கருத்துரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் சமஷ்டி தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

காணி பிரச்சினைக்கு தீர்வு, பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைகைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு தீர்வு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச நிர்வாக கட்டமைப்பில் தமிழ் மொழி பேசுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கல், முறையான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

முப்படைகளில் பெரும்பாலானோர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்கள். 30 வருடகால யுத்த சூழலில் இருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் யுத்தம் நிறைவடைந்த பிறகும் படையினரின் அதிகபடியான பங்குப்பற்றலுடன் இருப்பது பொருத்தமற்றது. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைகைதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும்.

யுத்தத்தில் காணாமல்போனோருக்கு நேர்ந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை அவர்களின் உறவுகளுக்கு உண்டு. ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டு உறுதியான இறுதி தீர்வை எட்ட வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் சர்வக்கட்சி தலைவர் கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தை அடிப்படையாக கொண்டு தீர்வு வழங்கும் வகையில் 3 வருடங்களாக பல்வேறு தரப்பினருடன் 128 கூட்டங்கள் நடத்தப்பட்டன. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நான் முன்வைத்த திட்டங்களை தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பினர் ஏற்றுக்கொண்டார்கள்.

இவ்வாறான பின்னணியில் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.சுதந்திர தினத்திற்கு இன்னும் 51 நாட்களே உள்ளன.

அரசியல் தீர்வு வழங்க நான் தயாராக இருந்தேன். ஆனால் அதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என சர்வதேசத்திற்கு காண்பிக்கும் முயற்சியை ஜனாதிபதி தற்போது கையாளுகிறார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு வழங்குவது சாத்தியமற்றதானால் இனங்களுக்கிடையில் மீண்டும் வெறுப்பு நிலை ஏற்படும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் சிங்கள இனம் எமக்கு தீர்வு வழங்க விரும்பவில்லை என்று தமிழ் சமூகம் கருதும் நிலை ஏற்படும்.

அது உண்மையான இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இரு தரப்பிலும் இனவாதிகள் உள்ளார்கள் என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என்றார்.

இலங்கையும் தென்னாபிரிக்காவும் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்  S.E.Schalk உடன் ஒரு சுற்று கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச ஆதரவைப் பெறுவது மற்றும் நாட்டின் சட்ட அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கையில் அடிப்படை உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கும், சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் தென்னாபிரிக்கா ஆதரவளிக்கும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

மோதலைத் தொடர்ந்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த இலங்கை மேற்கொண்ட நல்லிணக்கத் திட்டத்தைப் பாராட்டிய உயர் ஸ்தானிகர் தென்னாபிரிக்காவின் அனுபவத்தின் ஊடாக இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளனர், இலங்கையில் சட்ட அமைப்பை வலுப்படுத்தும்  சட்ட சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என நீதி அமைச்சர் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.

இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணிக்கு எதிரான வழக்கு- ஜஸ்மின் சூக்காவிற்கு ஆதரவாக பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு

பிரிட்டனை தளமாக கொண்ட இலங்கை சட்டத்தரணி ஜயராஜ் பலிகவர்த்தனவிற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜயராஜ் பலிகவர்த்தன ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக தவறான கருத்துக்களை தெரிவித்தமைக்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஜஸ்மின் சூக்கா தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு பக்கச்சார்பானவர் என தெரிவிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்ட ஜயராஜ் பலிகவர்த்தன 47 தூதரகங்களிற்கு அதனை அனுப்பிவைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிரிட்டனின் 2018 தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தரவு பாதுகாப்பு மனுவொன்றை தாக்கல் செய்த ஜஸ்மின் சூக்கா தனது தனிப்பட்ட கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

இயல்பாகவே இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை, இலங்கையின் மனித உரிமை பாதுகாவலர் என்ற அடிப்படையில் எனது பணிகளிற்கு அவதூறு கற்பிக்கும் நோக்கத்தை கொண்டவை என ஜஸ்மின் சூக்கா நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாவலர்களை பயங்கரவாதிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தும் நடவடிக்கைளில் உலகம் முழுவதும் உள்ள ஒடுக்குமுறை அரசாங்கங்கள் ஈடுபட்டுள்ளன என்பது நீதிமன்றத்திற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இலங்கையை சேர்ந்த சட்டத்தரணி தான் தனது அறிக்கையில் ஜஸ்மின் சூக்காவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்களை நீக்க மறுத்ததுடன் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இறுதியில் அவர் ஜஸ்மின் சூக்காவிற்கு குறிப்பிடத்தக்க இழப்பீட்டினை செலுத்த இணங்கியுள்ளதுடன் தனது கருத்துக்களை வாபஸ் பெறுவதற்கும் இணங்கியுள்ளார்.

நீதிமன்றம் அவர் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் இணையத்தில் மன்னிப்பு கோரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ் இணைப்பாளர்

க்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பது என்பதே இந்த வருடத்துக்கான எமது கருப்பொருளாக இருக்கிறது.

அங்கவீனர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்டத்துறை மக்கள் போன்றோரின் உரிமைகளுக்காக அவர்களால் கூட குரல் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.

சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு இன்று யாழில் உள்ள கியூடெக்கில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று. எனக்கும் ஒரு குரல் இருக்கிறது. அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம், நீதி என்பது அவசியம் என்ற தலைப்பிலே நாங்கள் நினைவுகூருகின்றோம்.

இந்த மனித உரிமைகள் தினத்தின் முக்கியத்துவம்  குறித்த ஆவணம் 1948 டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையிலே நிறைவேற்றப்பட்டு, அனைத்துலக மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த ஆவணம் இன்று 75 வருடங்களாக நிலைத்திருக்கக்கூடிய ஓர் ஆவணமாக இருப்பதற்கு அடிப்படை காரணம், இந்த உலகத்தில் வாழ்கின்ற சகல மனித உயிர்களின் உரிமைகளை அங்கீகரித்த ஆவணமாக இது பார்க்கப்படுகிறது.

சகல மக்களையும் ஒன்றிணைப்பது மனித உரிமை. எனவே, சகல உயிரினங்களும் சமமானவை என்ற அடிப்படையில் அந்த உரிமைகளை அங்கீகரித்த ஆவணமாக பார்க்கப்படுகிறது.

இந்த வருடத்துக்கான தொனிப்பொருளில் எனக்கும் ஒரு குரல் இருக்கிறது. அனைவருக்கும் இந்த கௌரவம், சுதந்திரம், நீதி என்பது முக்கியமானதாகும். ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்கு அவர்களது உரிமைகளை பெற்றுக்கொள்வதில் பல சவால்கள் இருக்கின்றன.

குறிப்பாக அங்கவீனர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்டத்துறை மக்கள் போன்றோரின் உரிமைகளுக்காக அவர்களால் கூட குரல் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

எனவே அரசுடன் சிவில் சமூகங்களும் இணைந்து இந்த ஒதுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பது என்பதே இந்த வருடத்துக்கான எமது கருப்பொருளாக இருக்கிறது என்றார்.

Posted in Uncategorized

உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியலில் சந்தியா எக்னெலிகொட

2022ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியலில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொடவும் இடம்பெற்றுள்ளார். இலங்கை அரசை கடுமையாக விமர்சித்த பத்திரிகையாளரான சந்தியாவின் கணவா் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தாா். தன் கணவருக்காக நீதி கோரி போராடி வரும் சந்தியா, தன் கணவரை போலவே காணாமல் ஆக்கப்பட்ட மற்றவர்கள் சார்பிலும் குரல் கொடுத்து வருகின்றாா்.

உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை பிரியங்கா சோப்ரா, விண்வெளி பொறியாளர ஸ்ரீஷா பண்ட்லா, உள்ளிட்ட 4 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளiமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் மீது தாக்குதல் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ் மானிப்பாயில் பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.

மானிப்பாய் ஆலடி சந்தியில் நேற்று திங்கட்கிழமை இரவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் இருந்த வேளை இளைஞன் ஒருவர் தலைக்கவசம் அணியாது வந்தமை தொடர்பில் பொலிஸாருக்கும் இளைஞர் ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து , அங்கு கடமையில் இருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இளைஞன் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்ட வேளை வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டனர்.

தாக்குதல் சம்பவத்தினை அடுத்து அங்கு மக்கள் கூடியமையால் இளைஞனை கைது செய்த பொலிஸார் , மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று, இரத்த காயங்களுடன் நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்த பின்னர் யாழ்.போதனா வைத்திய சாலையில் இளைஞனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , முதற்கட்டமாக யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்று தாக்குதலுக்கு இலக்கான இளைஞனிடம் இன்று செவ்வாய்க்கிழமை வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் , சட்ட வைத்திய அதிகாரியிடம் இருந்து சட்ட மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டு மேலதிக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் தெரிவித்தார்.

மனித உரிமை ஆர்வலர்களை தண்டிப்பது பிரச்சினைக்கு தீர்வை கொண்டுவராது – சர்வதேச அமைப்பு

மனித உரிமை ஆர்வலர்களை தண்டிப்பதும் அவர்களிற்கு தீங்கிழைப்பதும் அவர்களை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதற்காக பல வழக்குகளை தாக்கல் செய்வதும் நெருக்கடிக்கான தீர்வில்லை என தெரிவித்துள்ள டப்ளிளை தளமாக புரொன்ட்லைன் டிபென்டர்ஸ் அமைப்பு

அனைத்து பல்கலைகழக பிக்குமார் ஒன்றிய ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில்வைக்கப்பட்டுள்ளதையும் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளதையும் கண்டிப்பதாக புரொன்ட்லைன் டிபென்டர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச கடப்பாடுகளின் அடிப்படையில் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

மாணவ தலைவர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களிற்கு எதிராக சட்டரீதியான தடைகளையும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களையும் பயன்படுத்துவது மனித உரிமைகள் மற்றும் அமைதியாக அதிருப்தியை வெளியிடுவதற்கான உரிமை குறித்த இலங்கையின் வாக்குறுதிகளிற்கு முரணாண விடயம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு ஆகஸ்ட் 22ம் திகதி பகிரங்க அறிக்கையொன்றில் கரிசனை வெளியிட்டிருந்தது,இலங்கையின் அரசியல் பொருளாதார அமைதியின்மைக்கு ஆக்கபூர்வமான தீர்வை காண்பதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் முக்கியமானவர்கள் என மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாப்பு தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர்களை தண்டிப்பதும் அவர்களிற்கு தீங்கிழைப்பதும் அவர்களை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதற்காக பல வழக்குகளை தாக்கல் செய்வதும் நெருக்கடிக்கான தீர்வில்லை எனவும் புரொன்ட்லைன் டிபென்டர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.