சிறுபான்மையினரை மெளனமாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு கவலை

இலங்கையில் இன மத சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு கவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் செனெட் வெளிவிவகார குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டரில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலைசெய்யப்பட்டதை நான் வரவேற்க்கும் அதேவேளை அவர் கைதுசெய்யப்பட்டமை அச்சுறுத்தப்பட்டமை துன்புறுத்தப்பட்டமை குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என செனெட் குழுவின் தலைவர் செனெட்டர் மெனெட்டெஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு படையினர் புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள்  துன்புறுத்தல்கள் குறித்தும்  இனமத சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கான  நடவடிக்கைகள் குறித்தும் நான் கரிசனை கொண்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized

கருத்து சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்து சுதந்திரத்திற்குள்ள உள்ள உரிமையே ஜனநாயகத்திற்கான முக்கியமான அம்சம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையை மீளகட்டியெழுப்பும் ஸ்திரமானதாக்கும் இந்த அடிப்படை உரிமை பாதுகாக்கப்படுதல் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார

Posted in Uncategorized

இலங்கையில் எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளுக்காக மேலும் ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம் ,ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks Inc) நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே.மாபா பத்திரன மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் தலைவர் ஜெஸ்டின் டிவிஸ்(Justion Divis) ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டதன் பின்னர் ஆர்.எம். பார்க்ஸ் நிறுனவனம் ஷெல் நிறுவனத்துடன் இணைந்து 45 நாட்களுக்குள் முன்னெடுப்புக்களை ஆரம்பிக்க இந்த ஒப்பந்தத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.

கடன் பத்திரங்களை திறந்து பட்டியல்களை மீளச் செலுத்துவதற்கு போதியளவான வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் கடந்த காலத்தில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதியில் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தன.

அதனால் நுகர்வோருக்கு தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக மேற்படி மின்சக்தி எரிசக்தி அமைச்சினால் இந்த மூலோபாயத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக, அமைச்சரவை அங்கீகாரத்துடன், நாட்டில் செயல்படும் விநியோக முகவர் வலையமைப்புகள் மூலம் பெற்றோலிய உற்பத்திகளை இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதற்காக எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் நிறுவப்பட்டுள்ள புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.

இங்கு, சந்தையில் நுழையும் புதிய சில்லறை விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளில் , உள்நாட்டு வங்கிகளில் தங்கியிருக்காமல் அந்நியச் செலாவணித் தேவைகளைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் திறன் இருக்க வேண்டும் என்பது பிரதானமானதாகும். அதன்படி, இந்த நிறுவனங்கள் குறைந்தபட்சம்,செயற்படத் தொடங்கி ஆரம்ப ஓராண்டு காலத்தில் வெளிநாட்டு மூலங்கள் ஊடாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும்.இதற்கான அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்படும்.

2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழு (CASC) மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு (TEC) ஆகியவை முன்மொழிவுகளை ஆய்வு செய்து, பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டு பின்வரும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க பரிந்துரைத்தன.

அந்த நிறுவனங்கள்,

• Sinopec Fuel Oil Lanka (Private) Limited, F5, ஹம்பாந்தோட்டை மெரிடைம் நிலையம்,மிரிஜ்ஜவெல, ஹம்பாந்தோட்டை

• United Petroleum Pty Ltd, 600, கிளென்பெரி வீதி.ஹேதோன், விக்டோரியா 3122, ஆவுஸ்திரேலியா.

• Shell PLC உடன் ஒத்துழைப்புடன் RM Parks, 1061 N பிரதான வீதி, போர்ட்டர்வில் , கலிபோர்னியா 93257, அமெரிக்கா.

சினோபெக் ஒயில் லங்கா தனியார் நிறுவனம் (M/s Sinopec Fuel Oil Lanka (Private) Limited ) (M/s Sinopec) மற்றும் அதன் தாய் நிறுவனத்துடன் நாட்டில் சில்லறை எரிபொருள் வர்த்தகத்தில் பிரவேசிப்பதற்கு கடந்த மே மாதம் 22 ஆம் திகதி அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான டி.வி.சானக, இந்திக அனுருத்த, ஷெஹான் சேமசிங்க தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் மற்றும் குறித்த அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை முகங்கொடுக்கும் சவால்களை முறியடிக்க அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியான சவால்களை முறியடிப்பதற்கும், கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமென அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் உறுதியளித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத், நேற்று செவ்வாய்க்கிழமை (6) வரை நாட்டில் தங்கியிருந்தார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளடங்கலாகப் பல்வேறு முக்கிய தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின்போது, இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியான சவால்களை முறியடிப்பதற்கும், கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமென ரொபர்ட் கப்ரொத் உறுதியளித்தார்.

அத்தோடு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்களை மேலும் ஆழப்படுத்துவதற்கும், நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அவசியமான ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச பொதுக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளையும் அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் சந்தித்துக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

மலையக மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்

மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை மாற்றுவதற்கான தருணமே இது. மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், பல தரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டதுடன், மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இவ்விஜயத்தின் ஓரங்கமாக அட்டனில் உள்ள தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சென்ற அமெரிக்க தூதுவருக்கு, உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அதிகாரிகள் மற்றும் அங்கு பயிற்சிபெறும் மாணவர்களுடன் தூதுவர் கலந்துரையாடினார். இதன்போது, இருதரப்பு உறவுகளுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காந்தி சௌந்தர்ராஜன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமெரிக்க தூதுவர் ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அத்துடன், கல்வி, சுகாதாரம் என மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்தார்.

மேலும், ” நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மலையக பெருந்தோட்ட மக்கள் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டனர். பல தடைகள் இருந்தன. இதனை நான் அறிவேன். எனவே, மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்துக்கான பாதையை மாற்றுவதற்கான சிறந்த தருணமே இது.

இலங்கை தற்போது மீண்டெழுகின்றது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். உங்களுக்கு உதவுவதற்கான பங்காளியாக நாம் இருப்போம்.” – என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் இலங்கையுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கையும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும், ஆசியாவிற்கான அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத்துக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் பலனளித்ததாகவும், இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டை படிப்படியாக தளர்த்துவதற்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மீட்புச் செயற்பாட்டிற்கான தொடர்ச்சியான ஆதரவிற்காக அமெரிக்க அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவிற்கும் இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டு தெரிவித்தார்.

நீதியை நிலைநிறுத்துவதற்கான செயற்திட்டங்களை தொடர்ந்தும் செயற்படுத்துமாறு அமெரிக்க தூதுவர் கோரிக்கை

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பங்கு மிகவும் முக்கியம் என இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் Julie Chung வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் Julie Chung தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றின் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு வலுவான சட்டத்துறை அனைத்து பிரஜைகளும் நீதியைப் பின்தொடர்வதை ஊக்குவிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாட்டின் நீதியை நிலைநிறுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் அவர் கோரிக்கை விடுததுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையில் ஊழல் மோசடிகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை – அமெரிக்க தூதர் ஜூலி சங்

இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், சாதகமான வணிகச்சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான கொள்கை உருவாக்கத்துக்கான உத்வேகத்தை அமெரிக்க வர்த்தகப்பேரவை வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மேலும் பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க வர்த்தகப்பேரவையின் வருடாந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இவ்வருடம் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்புத்தொடர்புகள் ஆரம்பமாகி 75 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.

இவ்வேளையில் அமெரிக்காவும் இலங்கையில் இயங்கிவரும் அமெரிக்க வர்த்தகப்பேரவையும் இலங்கை பொருளாதாரத்தின்மீது ஏற்படுத்தியுள்ள நேர்மறையான தாக்கம் தொடர்பில் நினைவுகூறவிரும்புகின்றேன்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவானது மக்கள், வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.

எமது இருநாடுகளும் சுமார் 7 தசாப்தகாலமாக பொருளாதார அபிவிருத்தி முதல் தேசிய பாதுகாப்பு வரை பல்வேறு விடயங்கள் தொடர்பில் மிகவும் விரிவாக ஒன்றிணைந்து பணியாற்றிவந்திருப்பதுடன் இருநாடுகளுக்கும் இடையில் வலுவான நட்புறவும் பரஸ்பர நன்மதிப்பும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

அதேவேளை வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவித்ததன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதில் அமெரிக்க வர்த்தகப்பேரவையும் முக்கிய பங்காற்றியுள்ளது.

குறிப்பாக சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட அமெரிக்க வர்த்தகப்பேரவையானது இலங்கையில் அமெரிக்க தனியார்துறை முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தல் ஆகியவற்றைப் பிரதான நோக்கங்களாகக்கொண்டு இயங்கிவருகின்றது. அதன்படி கலந்துரையாடல்கள், ஆலோசனை வழங்கல்கள் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் வளர்ச்சிக்கு அமெரிக்க வர்த்தகப்பேரவை உதவிகளை வழங்கியுள்ளது.

குறிப்பாக இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், சாதகமான வணிகச்சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான கொள்கைகளை உருவாக்குவதற்கான உத்வேகத்தையும் தற்போது இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் மறுசீரமைப்புக்கள் குறித்த ஆலோசனைகளையும் அமெரிக்க வர்த்தகப்பேரவை வழங்கியிருக்கின்றுது.

இதனை முன்னிறுத்திய பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. சிறந்த ஆட்சி நிர்வாகத்தை ஊக்குவிப்பதற்கும், ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் மேலும் பல்வேறு விடயங்களைச் செய்யவேண்டியுள்ளது.

ஆனால் தற்போது அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் இலங்கை மற்றும் அமெரிக்க வணிகங்களுக்கான புதிய வாய்ப்புக்கள் உருவாவதற்கும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீட்சியடைவதற்கும், பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதற்கும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

யாராவது தும்மினால் கூட கருத்து வெளியிடும் ஜூலி சங் திருந்திவிட்டார் – விமல் வீரவன்ச

ஜூலி சங் திருந்திவிட்டார் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை அவர் வெளியிடுவதில்லை- விமல்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலிசங் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டார் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரகலய பிளான் பி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தற்போது சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதில்லை, அவர் நல்லவராக மாறிவிட்டார் யாராவது தும்மினால் கூட டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார் என விமல்வீரவன்சதெரிவித்துள்ளார்

இலங்கையுடன் புதிய சோபா உடன்படிக்கை எதனையும் முன்னெடுக்கும் திட்டமில்லை- அமெரிக்கா

இலங்கையுடன் மீண்டும் புதிய சோபா உடன்படிக்கை எதனையும் முன்னெடுக்கும் திட்டம் எதுவுமில்லை என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களிற்கான அமெரிக்க பணியகத்தின் துணை உதவிச்செயலாளர் அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வது குறித்து தற்போது அமெரிக்கா சிந்திக்கவில்லை என அவர்தெரிவித்துள்ளார். இது குறித்து நாங்கள் தற்போதைக்கு சிந்திக்கவில்லை என அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளிற்கும் இடையில் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் 2019 இல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் அமெரிக்கா இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமான விதத்தில் செயற்படுகின்றது என தெரிவித்துள்ள அப்ரீன் அக்தர் குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு விவகாரங்களில் மிகவும் நெருக்கமாக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படைக்கு அமெரிக்க கடற்படை கலத்தை வழங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா விசேட கடல்ரோந்து விமானமொன்றை இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அது அடுத்தவருடம் இலங்கைக்கு வந்துசேரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தோபசுபிக் பிராந்தியத்தில் இலங்கையை அமெரிக்க வலுவான சகாவாக கருதுகின்றது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized