பூர்வீக தொல்லியல் இடங்களை அடையாளங் காணமுற்பட்டால் பல இடங்களில் பல ஆலயங்களை அமைக்க வேண்டி வரும்

அரசியல்வாதிகள் மதக் குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அரசியல்லாபம் தேடுவதாக சர்வமத தலைவர்கள் தெரிவித்தனர்.

தேசிய சர்வமத போரவையால் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த,எஸ். சிவலோகநாத குருக்கள் கருத்து தெரிவிக்கையில், “ஒருசில சுயநலம் கொண்ட மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் நல்லிணக்கத்தினை குழப்பக்கூடிய விடயங்களை பெரிதாக்கி வருகின்றனர். இது மிகப்பெரும் கவலைதரும் விடயம். சில அரசியல்வாதிகளும் இந்த மத குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் தேடுகின்றனர்.

வடக்கில் அரசாங்கத்திற்கு சார்பான தொல்பொருள் திணைக்களத்திற்கு கூறக்கூடிய விடயம் பூர்வீக தொல்லியல் இடங்கள் என தெரிவித்தால் இந்து சமயத்திலும் பல இடங்கள் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதேபோல் பௌத்த மதத்திலும் உள்ளது.

அவற்றையெல்லாம் கூறப்போனால் பல இடங்களில் பல ஆலயங்களை அமைக்க வேண்டி வரும். நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். அவை தற்போதுள்ள மத நல்லிணக்கத்திற்கு குரோதமாகவே அமையும். எனவே தொல்லியல் திணைக்களம் இவ்வாறான விடயங்களை கைவிடுதல் வேண்டும். தற்போதுள்ள சம நிலையை பேணி பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது  யாழ் மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை பி. ஜெபரட்ணம் கருத்து தெரிவிக்கையில், “மத நல்லிணக்கத்திற்கு எமது நாட்டில் முன் எப்போதும் இல்லாதவாறு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

மற்ற மதங்களை மதிக்காத அன்பு செய்யாத ஏற்றுக்கொள்ளதா தன்மை எமது நாட்டில் தலைவிரித்தாடுகின்ற நிலை இருப்பது போல் தோன்றுகின்றது.

இதனால் பல்வேறு இடங்களில் பல்வேறு பிரச்சனைகளால் மதங்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட வாய்ப்பாக அமைகின்றது. இந்த நேரத்தில் நாம் எங்கள் மதத்தை எவ்வாறு மதிக்கின்றோமோ அதேபோல் ஏனைய மதங்களையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் எமது நாட்டில் பல இன மக்கள் ஒன்றாக வாழ்கின்றோம். இருந்தபோதிலும் மக்களிடையே வேற்றுமைகளை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் திணிக்கப்படுகின்றன.

அதாவது ஒரு இனம் வாழும் இடத்தில் அந்த இனத்திற்கு தேவையில்லாத அந்த இனத்திற்கு ஒவ்வாத மற்றோர் இனத்திற்கு தேவையான ஒரு விடயத்தினை செய்கின்றபோது மக்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட காரணமாகிவிடுகின்றது. ஆகவே ஒவ்வாரு இனத்தவரும் வசிக்கும் இடங்கள் மதிக்கப்பட வேண்டும்.

அவர்களுடைய கலாசார சமய விழுமிங்கள் மதிக்கப்பட்டு செயற்பாடுகள் இடம்பெறம்போது இவ்வாறான பிரிவினைகள் எற்படுவதனை தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் பௌத்த, கிறிஸ்தவ, சைவ, இஸ்லாமிய மத குருமார் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பொலநறுவையில் பழமையான சிவாலயங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் கட்டப்படுகின்றன; இந்துக்களை பாதுகாக்க வருமாறு அழைப்பு

பொலநறுவையில் பல பழமையான சிவாலயங்கள் அழிக்கப்பட்டு மறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன் இதனை சில பௌத்த பிக்குகள் இணைந்து முன்னெடுத்துவருவதாக பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழர்களின் பூர்வீக காணிகளையும் அபகரிக்கும் செயற்பாடுகள் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று மாலை பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்தினரால் ஊடக சந்திப்புபொன்று நடாத்தப்பட்டது.இந்த ஊடக சந்திப்பில் பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா,செயலாளர் சிவஸ்ரீ ரதன் சர்மா ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா,பொலநறுவை இந்துக்குருமார் ஒன்றியம் எனது முயற்சியினாலேயே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவந்த நிலையில் அண்மையில் மீண்டும் புதிய நிர்வாக தெரிவின் ஊடாக தலைவராக நான் தெரிவுசெய்யப்பட்டேன்.

நாங்கள் எமது ஒன்றியம் ஊடாக பல்வேறு சமய சமூக பணிகளை முன்னெடுத்துவருகின்றோம்.மத்திய கிழக்கு நாட்டில் உள்ளவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள வளைகுடா வானம்பாடிகள் அமைப்பிடம் கேட்டதற்கு அமைவாக பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பொலநறுவை மாவட்டம் பெரும்பான்மை சிங்கள மக்களைக்கொண்டபோதிலும் வெலிக்கந்தை பிரதேச சபை,திம்புலாகல பிரதேசசபை பகுதிகளில் தமிழ் மக்கள் பரந்துவாழுகின்றனர்.அங்குள்ள மாணவர்களுக்கு சரியான அறநெறிபோதனைகளை வழங்கும் பணிகளை முதல்கட்டமாக முன்னெடுத்தோம்.

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு வளைகுடா வானம்பாடிகள் அமைப்பிடம் கோரியபோது எமக்கு வழங்கப்பட்டது.பொலநறுவை மாவட்டத்தில் எட்டு அறநெறி;ப்பாடாலைகள் உள்ளன.சுமார் 600மாணவர்கள் அங்கு கற்றுவருகின்றனர்.

இதேபோன்று கற்றல் உபகரணங்களுடன் பிள்ளைகளுக:கு உணவுகளை வழங்குவதற்கும் அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். வளைகுடா வானம்பாடிகள் அமைப்பின் செயற்பாடுகள் எங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகயிருந்தது.எங்களுக:கு அந்த அமைப்பு ஊடாக நிறைய விடயங்களை செய்திருந்தார்கள்.

இதேபோன்று இலங்கையில் உள்ள தமிழ் பேசும் அமைப்புகள் பொலநறுவை மாவட்டத்தின் பக்கம் தமது பார்வையினை செலுத்தவேண்டும்.பொலநறுவை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.பழமையான சிவாலயங்கள் மறைக்கப்பட்டுள்ளன.அங்குள்ள மக்களுக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவம் இல்லை.

அனைத்து தமிழ் மக்களுக்கும் நான் சொல்லும் விடயம்.பொலநறுவையில் பல சிவாலயங்கள் உள்ளன.எத்தனையோ சிவாலயங்கள் அனுராதபுரத்திலும் பொலநறுவையிலும் மறைக்கப்பட்டுள்ளன.முத்துக்கல் என்னும் கிராமத்தின் காட்டுப்பகுதியில் சிவாலயம் ஒன்று மறைக்கப்பட்டுள்ளது.அங்கிருந்த சிவலிங்கம் உடைக்கப்பட்டுள்ளது.

அங்கு பல புராதன சின்னங்கள்,எழுத்துக்கள் உள்ளன.அந்த ஆலயங்கள் பௌத்ததேரர்களின் கைவசம் சென்றுள்ளது.அந்த இடத்திற்கு செல்வதற்கு எங்களை அனுமதிப்பதில்லை.அங்கு பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்றுவருகின்றது.தொல்பொருள் ஆராய்ச்சிஎன்ற போர்வையில் புதையல்கள் தோண்டப்படுவதாக தகவல்கள் வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே பொலநறுவை இந்துக்குருமார் ஒன்றியம் சமய பணிகளில் ஈடுபட்டுவருகின்றது.கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்துவருகின்றோம்.பல்வேறு பிரச்சினைகளுடன் மக்கள் வாழுகின்றார்கள்.

வறுமையின் காரணமாக பாடசாலை கல்வியை நிறுத்திய நிலையிலும் மாணவர்கள் இருக்கின்றார்கள்.இவர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றோம்.

இந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி எமது ஒன்றியத்தின் கூட்டத்தினை கூட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.பழைய நிர்வாகத்துடன் பல கருத்துமுரண்பாடுகள் இருக்கின்றது.

அவர்களையும் அழைத்து புதிய நிர்வாகத்தினையும் அழைத்து சரியான தீர்வொன்றை எட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.அதற்கான செயற்பாடுகளை செயலாளர் சரியாக முன்னெடுத்திருந்தார்.

அன்றைய தினம் கூட்டத்திற்கு எனக்கும் சரியான நேரத்திற்கு செல்லமுடியவில்லை.எனது கடமையினை முடித்துவிட்டு நான் அங்கு சென்றபோது செயலாளருக்கு பழைய நிர்வாகத்தினரால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.அவர் தாக்கப்பட்டு அவரது பூநூலும் அறுக்கப்பட்டிருந்தது.

அதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.குறித்த தாக்குதல் தொடர்பில் சரியான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவுள்ளது.

இலங்கை வாழ் இந்துக்களுக்காக டெல்லியில் போராட்டம்

இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள கோவில்களை இடிப்பதற்கும், இந்துக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பழமையான வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இந்து கோவில்களை இடித்து, இந்து தமிழ் சமூகத்தின் கலாசார இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் செய்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

இதுபோன்ற செயற்பாடுகள் இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரான தீங்கிழைக்கும் செயல் என இந்து இயக்கத்தின் சர்வதேச தலைவர் ஸ்ரீ அருண் உபாத்யாய் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இந்த பிரச்சினையை இந்திய அரசு உணர்ந்து, இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையில் இந்து மதத்தின் இருப்புக்கு ஆபத்து : பாரதப் பிரதமருக்குக் கடிதம்

இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன.

ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கம் தனது இராணுவத்தின் உதவியுடன் இலங்கையின் வடக்கு, கிழக்கில் இந்து கலாசாரம், பாரம்பரியம், கோவில் ஆகியவற்றின் இறுதிக் கோட்டையை இலக்குவைக்கிறது.

1948ஆம் ஆண்டின் பின்னர் 1800 ஆலயங்களையும் பாரம்பரியங்களையும் அழித்த பின்னர் இது இடம்பெறுகின்றது.

இலங்கையின் வட பகுதியில் அதிகளவு மதிப்புக்குரியதாக காணப்படும் கீரிமலை பகுதியில் காணப்பட்ட ஐந்து நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டுள்ள ஆதிசிவன் ஆலயம் இராணுவ ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் அழிக்கப்பட்டுள்ளதை ஆழ்ந்த கரிசனையுடனும் அவசரத்துடனும் நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இராணுவம் அந்த பகுதியை மிக நீண்டகாலம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பின்னர் பொதுமக்களை அங்கு செல்வதற்கு அனுமதித்த வேளையே இது தெரியவந்தது.

கோவில் இருந்த பகுதியில் அதனை அழித்துவிட்டு ஜனாதிபதி மாளிகையொன்றை கட்டியுள்ளனர். இதன் மூலம் இந்துக்கள் இறந்தவர்களுக்கான இறுதி மரியாதைகளை முன்னெடுக்கும் பகுதியின் புனிதத்தை சீர்குலைத்துள்ளனர்.

2015இல் இந்தியாவின் கௌரவ பிரதமர் நரேந்திர மோடி இந்த பகுதிக்கு அருகில் உள்ள நகுலேஸ்வரம் ஆலயத்துக்கு விஜயம் மேற்கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இலங்கையில் உள்ள இந்து பாரம்பரியம், கலாசாரத்தின் இறுதிச் சின்னமாக காணப்படுகின்றவற்றை அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயற்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தை பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவும், சர்வதேச சமூகமும் பிணையெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் இது இடம்பெறுகின்றது.

புனிதப் பொருள்களை அவமதிக்கும் இந்த செயல் இடம்பெற்ற சில காலத்துக்குள் கிழக்கு திருகோணமலையில் உள்ள இந்துக்களின் புனித பகுதியான கன்னியா நீரூற்றை அனுராதபுர நகரத்துடன் தொடர்புடையது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதனை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. முல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள ஆதி சிவன் ஐயனார் கோவில் அழிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டம் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயத்தின் பல விக்கிரகங்கள் களவாடப்பட்டன.

இலங்கைக்கான சர்வதேச உதவிகளை நாங்கள் வரவேற்கும் அதேவேளை, இலங்கையில் இந்து பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை அழிக்கும் தனது நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை அரசாங்கம் இந்த உதவியை பயன்படுத்த நிதி வழங்கும் சமூகம் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்து மத கலாசாரம் அழிக்கப்படுவதை தடுப்பதற்காக இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை அமைக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை, இலங்கைக்கு நிதி வழங்கும் சமூகம் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் மீது சந்தேகம்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் மீது சந்தேகம்

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆலயத்தின் நிர்வாகத்தினர்,

எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை மூலம் பௌத்த ஆக்கிரமிப்பின் வெளிப்பாட்டை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும். இந்த துன்பியல் சம்பவம் எமக்கு மிகுந்த வேதனை அளிப்பதுடன் இவ்வாறான செயலை செய்தவர்களுக்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தால் எமக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த திணைக்களத்தின் வாகனங்களே அங்கு தொடர்ச்சியாக சென்றுவந்தது. எனவே இந்தச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தின் மீதே நாம் சந்தேகம் கொள்கின்றோம். மனிதஉரிமை ஆணைக்குழுவிலும் அவர்களுக்கு எதிராகவே எமது முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றோம் என்றனர்.

இதேவேளை விக்கிரகங்கள் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பாக இன்றையதினம் காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனையிறவில் ஆடும் சிவன் – நிலாந்தன்.

யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே,கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை நிறு வப்பட்டிருக்கிறது. கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி உயரமான அந்தச் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.இலங்கைத்தீவில் உள்ள மிக உயரமான நடராஜர் சிலை அதுவென்று கூறலாம்.

2009க்கு பின் ஆனையிறவுப் பிரதேசம் யுத்த வெற்றிவாதத்தின் உல்லாசத் தலங்களில் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் பண்பாட்டு தலைநகரமாகிய கவர்ச்சிமிகு யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் எவரும் முதலில் ஆனையிறவில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு யுத்த வெற்றி வளாகங்களைக் கடந்துதான் உள்ளேவர வேண்டும்.அதாவது யுத்த வெற்றி உங்களை வரவேற்கிறது என்று பொருள்.இது எங்களால் வெற்றி கொள்ளப்பட்ட நிலம் என்று பொருள்.

யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் பொழுது குடாநாட்டின் கழுத்துப் பகுதியில் முதலில் தென்படுவது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோல்வியுற்ற படை நடவடிக்கை ஒன்றின்போது பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு கவச வாகனம். அதற்கருகில் அந்தக் கவச வாகனத்தை தடுத்து நிறுத்திய படை வீரர் ஒருவரின் நினைவுச் சின்னம்.அதோடு சேர்த்து ஒரு விருந்தகம்.அதைச் சற்றுத் தாண்டிச் சென்றால் வலது பக்கத்தில் கடலேரியின் பின்னணியில் பிரம்மாண்டமான ஒரு யுத்த வெற்றிச்சின்னம் உண்டு.இலங்கைத்தீவை இரண்டு கைகள் ஏந்தியிருப்பது போன்ற அந்த யுத்த வெற்றிச் சின்னந்தான் யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் வெளியாட்களை வரவேற்கின்றது. அதாவது யுத்த வெற்றி உங்களை வரவேற்கிறது என்று பொருள்.

இவ்வாறு கடலேரியின் உப்புக் காற்றில் எப்பொழுதும் யுத்த வெற்றி வாடை வீசும் ஒரு பிரதேசத்தில்,தமிழ் மக்களின் வழிபாட்டுருக்களில் ஒன்றாகிய நடராஜர் சிலையை நிறுவியமை என்பது அரசியல் அர்த்தத்தில் கவனிக்கப்பட வேண்டியது.

அச்சிலையின் அழகியல் அம்சங்களைக் குறித்தும் அது பார்த்த உடனேயே கையெடுத்துக் கும்பிடக்கூடிய ஒரு சிலையாக இருக்கிறதா இல்லையா என்பதைக் குறித்தும் பின்னர் தனியாக ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறேன்.இன்று இக்கட்டுரையில் நான் கூறவருவது அச் சிலைக்குப் பின்னால் இருக்கும் பிரதேச,பிராந்திய மற்றும் கட்சி அரசியலைப் பற்றி.

நாவற்குழிச் சந்தியை போலவே ஆனையிறவிலும் அதாவது யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் தமிழ் மக்களை அடையாளப்படுத்தும் கட்டுமானங்கள் அவசியம்.அரசாங்கம் அதைத் திட்டமிட்டு யுத்தவெற்றி வாசலாகக் கட்டியெழுப்பி வைத்திருக்கிறது.தமிழ்மக்கள் அதனை ஒரு மரபுரிமை வாசலாக மாற்ற வேண்டும்.அந்த அடிப்படையில் சிந்தித்து கரைச்சி பிரதேச சபை முடிவெடுத்திருந்திருந்தால் அது வரவேற்கத்தக்கதே.

நாவற்குழியில் ஒரு புத்த விகாரை கட்டியெழுப்பப்பட்டுவரும் ஒரு நிலக்காட்சியில்,சிவபூமி அறக்கட்டளையின் அருங்காட்சியகமும் திருவாசக அரண்மனையும் கட்டப்பட்டிருப்பதுபோல,ஆனையிறவிலும் யுத்தவெற்றி வாசலை எதிர்நோக்கி ஒரு மரபுரிமை வாசலை சிருஷ்டிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு.

ஆனால் அந்த மரபுரிமைக் கட்டமைப்பானது எப்படி அமைய வேண்டும்?அது சிங்கள பௌத்த சின்னங்களுக்கு எதிராக சைவச் சின்னங்களை முன் நிறுத்தும் ஒன்றாக அமைய வேண்டுமா? அல்லது தமிழ்த் தேசியத்தின் மதப்பல்வகைமையை பிரதிபலிக்கும் ஒன்றாக அமைய வேண்டுமா?

சிவபூமி அறக்கட்டளை ஒரு சமய நிறுவனம்.அது தான் போற்றும் ஒரு சமயத்தை முன்னிறுத்தும்.ஆனால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அப்படிச் சிந்திக்கத் தேவையில்லை.மேலும் பொதுவெளிச் சிற்பம் வேறு,மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் விக்கிரகம் வேறு.இரண்டையும் ஒன்றாகக் கண்டு மயங்கும் பொதுப்புத்தியை அரசியல்வாதிகள் இலகுவாகக் கையாள்வார்கள்.

பிரயோக தேசியவாதமும் நடைமுறையில் பொதுப்புத்தியின் மீதே கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால்,தேசியவாதத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று மேற்கத்திய அறிஞர்கள் கூறுவார்கள்.அதாவது ஜனநாயக அடிச்சட்டத்தின் மீதுதான் ஒரு மக்களைத் திரளாகக் கூட்டிக் கட்டவேண்டும்.இதை இன்னும் ஆழமாக சொன்னால், ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரட்டவேண்டும்.இதை இன்னும் நடைமுறை வார்த்தைகளில் சொன்னால், ஒரு மதம் இன்னொரு மதத்திற்கு சமம்; ஒரு பிரதேசம் இன்னொரு பிரதேசத்துக்கு சமம் யாரும் பிரதேச ரீதியாகவோ சாதி ரீதியாகவோ மத ரீதியாகவோ ஒருவர் மற்றவருக்கு மேலானவரும் அல்ல கீழானவரும் அல்ல என்ற அடித்தளத்தின் மீதுதான் ஒரு மக்களைத் திரளாகக் கூட்டிக்கட்ட வேண்டும்.எனவே தேசியவாதம் எனப்படுவது மதப்பல்வகைமையின் மீதே கட்டியெழுப்பப்பட வேண்டும்.மத மேலாண்மையின் மீது அல்ல.இந்த அடிப்படையில் சிந்தித்து தமிழ்மக்கள் தமது மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்கவும் முன்நிறுத்தவும் வேண்டும்.

ஒவ்வொரு மதப்பிரிவும் அதனதன் மதச்சின்னங்களை முன்னிறுத்துவதில் தவறில்லை.அது அந்த மதத்தின் கூட்டுரிமை. ஆனால் ஒரு மதம் இன்னொரு மதத்தை அவமதிக்கும்போது அல்லது அந்த மதச் சின்னங்களை அழிக்கும்போது அல்லது ஒரு மதத்தின் மேலாண்மையை நிறுவ முற்படும் போதுதான் பிரச்சினை வருகிறது.அதாவது மதப்பல்வகைமை வேறு ;மத மேலாண்மை வேறு.

அண்மை ஆண்டுகளாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பிலும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இந்திய மத்திய அரசை அணுகுவதற்கு மதத்தை ஒரு வாகனமாக பயன்படுத்த முயற்சிப்பது தெரிகிறது.இதில் சில தமிழ் அரசியல்வாதிகளும் அடங்குவர்.இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மதசார்பு நிலைப்பாட்டைப் பின்பற்றி அதன்மூலம் இந்திய மத்திய அரசாங்கத்தை அணுக முடியுமா என்று மேற்படி தரப்புக்கள் சிந்திக்கின்றன.பாரதிய ஜனதா அரசாங்கமானது இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று.எனவே ஈழத் தமிழர்கள் அந்த அரசாங்கத்தைத்தான் அணுக வேண்டும்.ஆனால் அதன் பொருள் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் பாரதிய ஜனதா பின்பற்றும் அதே நிகழ்ச்சி நிரலை ஈழத் தமிழர்களும் பின்பற்ற வேண்டும் என்றில்லை.
இப்பிராந்தியம் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துட் காணப்படுகிறது.இந்தியாவை மீறி எந்த ஒரு வெளிச்சக்தியும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வைத் தரமுடியாது.இப்பிராந்திய யதார்த்தத்துக்கூடாக சிந்திக்கும்போது ஈழத்தமிழர்கள் பாரதிய ஜனதா அரசாங்கத்தைத்தான் அணுகவேண்டும்.ஆனால் அதன் பொருள் தமிழ் தேசியத்தின் மதப்பல்வமையை பலியிட வேண்டும் என்பதல்ல.

ஈழத்தமிழர்களின் நவீன அரசியல் எனப்படுவது மதப்பல்வகமையின் மீதே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.பெருமளவு இந்துக்களைக் கொண்ட ஈழத் தமிழ்ச் சமூகத்தில் முதலில் தோன்றிய இளையோர் அமைப்பாகிய யாழ்ப்பாண வாலிபர் முன்னணியை உருவாக்கியது(1924) ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவராகிய கன்டி பேரின்பநாயகந்தான்.

தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது, அதன் கால்கோல் விழா 1949ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி மாவட்டபுரம் கந்தசாமி கோவில் முன்றலில் சீலஸ்ரீ துரைசாமிக் குருக்களின் ஆசியுடன் இடம் பெற்றது.இதுதொடர்பான தகவல்களை தமிழரசுக் கட்சியின் வெள்ளி விழா மலரில் காணலாம்.அக்கட்சியின் தலைவராகிய செல்வநாயகம் ஒரு புரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவர்.செல்வநாயகத்தை ஈழத்தமிழர்கள் தந்தை என்றும் ஈழத்துக் காந்தி என்றும் அழைத்தார்கள். தந்தை செல்வா இறந்தபோது அவருடைய உடல் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை. இந்து முறைப்படி வேட்டி அணிவிக்கப்பட்டு,தகனம் செய்யப்பட்டது.தன்னைத் தலைவராக தெரிந்தெடுத்து,தந்தை என்று அழைத்த பெரும்பான்மை இந்து வாக்காளர்களை கௌரவிப்பதற்காக செல்வநாயகம் அவ்வாறு கேட்டுக் கொண்டதாக கருதப்படுகிறது.

எனவே ஈழத்தமிழர்களின் நவீன அரசியலானது மதப் பல்வகமையின் மீதுதான் கட்டியெழுப்பப்பட்டது.அதை இப்பொழுது ஒரு மதத்துக்கு மட்டும் உரியதாக குறுக்கக் கூடாது.குறிப்பாக நவீன யாழ்ப்பாணம் எனப்படுவது திருச்சபைகளுக்கும் ஆறுமுகநாவலர் போன்ற மதப் பெரியார்கள் மற்றும் இந்துபோர்ட் போன்ற இந்து அறக்கட்டளைகளுக்கும் இடையிலான போட்டியின் திரண்ட விளைவுதான்.ஆனால் அந்தப் போட்டியானது மத விரோதமாக,மோதலாக மாறவில்லை.

ஆனால்,2009க்குப் பின் எந்த ஒரு மதத் தலைவரும் துணிந்து கதையாத ஒரு வெற்றிடத்தில், ஒற்றைக் குரலாக ஒலித்த, முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களுடைய அதே மறை மாவட்டத்தில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான முரண்பாடு தூக்கலாகத் தெரிவது தமிழ்த் தேசியத் திரட்சிக்குப் பாதகமானது. தமிழ்த் தேசியத்தை மதப்பல்வகைமையின் மீது கட்டியெழுப்ப விரும்பும் எல்லாச் சக்திகளும் அந்த முரண்பாட்டைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

அவ்வாறு அகமுரண்பாடுகளைத் தீர்க்கும் சக்திமிக்க சிவில் அமைப்புகளோ கட்சிகளோ இல்லாத அரசியல் மற்றும் ஆன்மீக வெற்றிடத்தில்,இன்னொருபுறம்,சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் “எல்லைக் கற்களாக” புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருமோர் ராணுவஅரசியற் சூழலில்,தமிழ் மக்கள் மத்தியிலும் இரவோடிரவாகச் சிலைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.இவ்வாறான சிலை அரசியலின் பின்னணியில்,ஆனையிறவில் நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

சிவ நடனத்துக்கு ஆன்மீக வியாக்கியானம் மட்டுமல்ல,பௌதீகவியல் வியாக்கியானமும் உண்டு.அது ஒரு பிரபஞ்ச நடனம் என்று வர்ணிக்கப்படுகிறது(cosmic dance).ஆனையிறவுச் சிவனுக்கு மேலதிகமாக ஓர் அரசியல் பரிமாணமும் உண்டு.உப்புக் காற்றில் யுத்த வெற்றிச் சின்னங்களின் மத்தியில்,சிவனார் யாருடைய பஜனைக்கு ஆடப்போகிறார்?

வவுனியாவில் இந்துக்களின் புனித பாறையை இடிக்க அரசாங்கம் அனுமதி

வன்னியில் வாழும் இந்துக்களால் வழிபடப்பட்ட பாறையை இடித்தழிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாறையில் (சிறிய மலை) வெளிநபர் ஒருவருக்குக் கருங்கல் அகழ்விற்குப் பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாகப் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாறையில் முன்னெடுக்கப்படவுள்ள கருங்கல் அகழ்வை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள கிராம மக்கள், இந்த மலை பல ஆண்டுகளாக மத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர்.

அந்தப் பாறையின் உச்சியில் அப்பகுதி மக்கள் ஆதிகாலம் முதலே பிள்ளையாரை வழிபட்டு வருவதாகப் பிராந்திய ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைக்குப் பின்னர் கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பாறையின் உச்சியில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு வவுனியா பிரதேச செயலாளர் ஞா.கமலதாசன் மற்றும் பிரதேச சபைத் தலைவர் த.யோகராஜா ஆகியோர் மார்ச் 8ஆம் திகதி அவ்விடத்திற்கான கண்காணிப்பு பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த இடத்தில் பழங்காலத்திலிருந்தே வழிபட்டு வந்த கல் தூண் தற்போது இல்லாமல் போயுள்ளதாகவும், எனினும் அண்மையில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாறை ஒரு வழிபாட்டுத்தலம் என்பதை அறிந்த பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அதிகார சபையுடன் கலந்துரையாடி இது தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பிரதேச வாசிகளுக்கு அறிவிப்பதாக உறுதியளித்ததாகப் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அதிகாரசபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளைப் பலவந்தமாகக் கையகப்படுத்துவதாகத் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மதவாதம், பயங்கரவாதம் ஆயுத கலாசாரம் முடிவிற்கு வரவேண்டும்: அர்ஜுன்

இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருவதாக தமிழக இந்துமக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தற்போதைய பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பன்னாட்டு உதவிகள் இங்கே கிடைக்கப்பெறுகின்றது. இந்திய அரசும் பெரியளவில் இலங்கைக்கு உதவி வருகின்றது.

குறிப்பாக வீதிகள், தொடரூந்து வீதிகள், வீட்டுத்திட்டம் அத்துடன் கடன்கள் என்று பிரதிபலன்னை கருதாமல் பல உதவிகளை செய்துவருகின்றது.

சீனாவும் பல விடயங்களை இங்கே செய்கின்றது, கொழும்பில் ஒரு கலாசார மண்டபத்தினை அமைத்தார்கள் ஆனால் அதன் நிர்வாகத்தை அவர்களே வைத்துள்ளனர். ஆனால் இந்திய அரசால் அமைக்கப்பட்ட கலாசாரமண்டபத்தின் நிர்வாகத்தை இலங்கை அரசிடமே ஒப்படைத்திருக்கின்றது. இருப்பினும் அதனை யாழ்பாண மாநாகரசபையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

அத்துடன் வறுமை, பொருளாதார பிரச்சனைகளில் இருந்து இலங்கை மக்கள் விடுபடவேண்டும். அதற்குரிய மேம்பாடான திட்டங்களை வகுத்து நல்லவிதமாக செயற்படுவதற்கான பிரார்த்தனைகளை நாம் செய்கிறோம்.

இதேவேளை இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருகின்றது. இங்கு வசிக்கும் சிங்கள மக்களாக இருக்கலாம், தமிழ்மக்களாக இருக்கலாம் அனைவரும் மண்ணின் மைந்தர்கள். ஆனால் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து மதமாற்றும் செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றது.

அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் உலகையே உலுக்கியிருந்தது. எனவே மதவாதம், பயங்கரவாதம் ஆயுத கலாசாரம் முடிவிற்கு வரவேண்டும். அமைதியான வளமான இலங்கை உருவாக வேண்டும்’ என கூறினார்.

Posted in Uncategorized

இலங்கையிலும் இந்தியாவிலும் இந்து சமய வழிபாடுகள் தொடர்பில் ஆய்வுக்குட்படுத்தவேண்டும் – ஜனாதிபதி

இலங்கையில் இந்து சமய வழிபாடுகள் மற்றும் இந்தியாவில் இந்து சமய வழிபாடுகள் ஆகியவற்றுக்கிடையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையின் இந்து சமய வழிபாடுகள், இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முன்னெடுக்கப்படும் இந்து சமய வழிபாடுகளை விட வித்தியாசமானதா என்பதை ஆராய வேண்டும்.

இலங்கையில் பௌத்த விகாரைகளிலும் இந்து சமயம் சம்பந்தமான தெய்வங்களின் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தெற்கில் உள்ள பௌத்த மக்கள் இந்து மத தெய்வங்களையும் வழிபடுகின்றனர்.

பௌத்த விகாரைகளில் சிவன், விஷ்ணு என அந்த இந்து மத தெய்வங்களின் வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர். இந்த வரலாறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டி இருக்கின்றன.

அத்துடன், இலங்கையின் வரலாறு தொடர்பாக நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும். நாங்கள் எமது வரலாறை மறந்து இருக்கின்றோம்.

அந்த வகையில் எமது வரலாறுகளை ஆய்வு செய்வதற்கும் அது தொடர்பான தெளிவை ஏற்படுத்தவும் நிறுவனம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், நாங்கள் அறிந்த மகாவம்சத்தைவிட தற்போதைய வரலாறு வித்தியாசமானது. அதனால் இலங்கை தொடர்பான வரலாறை தொடர்ந்து மேற்கொள்ள இந்த நிறுவனம் ஊடாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.