இலங்கையிலும் இந்தியாவிலும் இந்து சமய வழிபாடுகள் தொடர்பில் ஆய்வுக்குட்படுத்தவேண்டும் – ஜனாதிபதி

இலங்கையில் இந்து சமய வழிபாடுகள் மற்றும் இந்தியாவில் இந்து சமய வழிபாடுகள் ஆகியவற்றுக்கிடையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையின் இந்து சமய வழிபாடுகள், இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முன்னெடுக்கப்படும் இந்து சமய வழிபாடுகளை விட வித்தியாசமானதா என்பதை ஆராய வேண்டும்.

இலங்கையில் பௌத்த விகாரைகளிலும் இந்து சமயம் சம்பந்தமான தெய்வங்களின் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தெற்கில் உள்ள பௌத்த மக்கள் இந்து மத தெய்வங்களையும் வழிபடுகின்றனர்.

பௌத்த விகாரைகளில் சிவன், விஷ்ணு என அந்த இந்து மத தெய்வங்களின் வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர். இந்த வரலாறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டி இருக்கின்றன.

அத்துடன், இலங்கையின் வரலாறு தொடர்பாக நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும். நாங்கள் எமது வரலாறை மறந்து இருக்கின்றோம்.

அந்த வகையில் எமது வரலாறுகளை ஆய்வு செய்வதற்கும் அது தொடர்பான தெளிவை ஏற்படுத்தவும் நிறுவனம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், நாங்கள் அறிந்த மகாவம்சத்தைவிட தற்போதைய வரலாறு வித்தியாசமானது. அதனால் இலங்கை தொடர்பான வரலாறை தொடர்ந்து மேற்கொள்ள இந்த நிறுவனம் ஊடாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.