இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பது வடக்குக்கும் தெற்குக்கும் நல்லது – அலி சப்ரி

இனப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது என வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சிக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கலந்துரையாடல்களும் இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களும் பிரதான இரண்டு விடயங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அங்கு நாம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு, உடலாகம ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்படி, அனைத்து அறிக்கைகளிலும் நாட்டில் இடம் பெற்ற சம்பவங்களுக்கு தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருந்தும் வெளிநாட்டுப் பொறி முறைகளின் கீழ் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனதையே அவை சுட்டிக் காட்டியுள்ளன.

இதற்கமைய, உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் தீர்வுகளை வழங்குவதாக நாம் வாக்குறுதியளித்திருந்த போதும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஜனாதிபதி கூறியதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நவாஸ் ஆணைக்குழுவை நியமித்தார். இதற்கு முன்னைய இருந்த ஆணைக்குழுக்களின் ஆலோசனைகளை உள்வாங்கி இதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை தயாரிப்பதே அந்த ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய இப்பொறி முறையை கொண்டு வருவதற்கு எமக்கு பொறுப்பு உள்ளது. பாதுகாப்பு தரப்பினரும் கூட இப்பொறிமுறையைக் கொண்டு வருவதில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில படைப்பிரிவுகள் பல்வேறு வகையில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர். சில படைப் பிரிவுகளுக்கு ஐ.நா நடவடிக்கைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதேனும் நிகழ்ந்திருப்பின் அது தொடர்பில், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். எவ்வாறானாலும் அது போன்றதொரு ஒழுங்கு முறையை இதுவரை எங்களால் நடை முறைப்படுத்த முடியாமல் போயுள்ளது.

உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இவற்றுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். தென்னாபிரிக்காவுடனும் இது தொடர்பில் நாம் கலந்துரையாடியுள்ளோம். இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாம் முன்வைப்போம்.

இந்தக் குழுவின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பல நல்ல முன்மொழிவுகள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கான வசதிகளை பெற்றுக்கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம் – என்றார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியாவின் மேற்பார்வை அவசியம் – செல்வம் எம்.பி.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியா, மேற்பார்வை பொறுப்பை ஏற்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்து தலையீடு செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே தற்போது மேற்பார்வை பொறுப்பை ஏற்றால் நியாயமான ஒரு தீர்வை பெற முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குழுநிலை விவாத்தத்தின்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

மேலும் சர்வதேசமும் இந்த பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்த 13 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் சந்திப்பு, மனசாட்சியின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன, மத பேதமற்ற வகையில் புதிய அரசியலமைப்பு ஊடாக நிலையான தீர்வு காண வேண்டும் – டலஸ் அழகபெரும

எதிர்கால அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவும், அரசியல் பிரதிவாதிகளை இலக்காக கொண்டும், நாட்டில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது.

சமூக கட்டமைப்பில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு  இன, மத பேதமற்ற வகையில் புதிய அரசியலமைப்பு ஊடாக நிலையான தீர்வு காண வேண்டும். அதற்கு நாங்கள்  முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக்கைதிகளின்  வழக்குகள் தொடர்பில் தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்துமாறும்  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச. 05) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு,நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஒருசிலர் 10 அல்லது 15 வருடங்களுக்கு அதிக காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறை கைதிகள் பலர் சாதனைகளை புரிந்துள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இலக்காக கொண்டு இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் ஆரூரரன்  அண்மையில் அரச இலக்கிய விருதில் தமிழ் சிறுகதைக்கான விருதை பெற்றுள்ளார். இவரை போன்று பலர்  இவ்வாறு சிறையில் உள்ளார்கள்.

60 அல்லது 70 ஆண்டுகளாக சிறையில்  6 பேர் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தேவதாசன்  என்ற சிறை கைதி கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பலர் நோய் வாய்ப்பட்ட நிலையில் சிறை  கைதிகளாக உள்ளார்கள் இவ்வாறானவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

எமது நாட்டின் கல்வி முறைமையை சிறைச்சாலைகள் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் பாடசாலைக்கு செல்லாத 2494 கைதிகளும்,ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையை தோற்றிய 12 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளும், புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளும் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 6,790 கைதிகளும் உள்ளார்கள்.

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் 198 பட்டதாரிகள் சிறைகைதிகளாக உள்ளார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைகைதிகள்  தொடர்பில் நீதியமைச்சர் தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்த  வேண்டும்.அத்துடன் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வழக்குகள்  துரிதப்படுத்தப்பட்டு, உண்மை நிலை நாட்டப்பட வேண்டும்.

அரசியல் பிரதிவாதிகளை இலக்காக கொண்டும். எதிர்கால அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் நாட்டில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகிறது. இரண்டாம் குடியரசு யாப்பு இதுவரை 21 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது,

ஆனால் எப்பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. பல ஆண்டுகால பழமை கொண்ட ஜப்பான் நாட்டின் அரசியலமைப்பு இதுவரை ஒருமுறை தான் திருத்தம்  செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 235 வருடகால அரசியல் பின்னணியை கொண்டு ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பு இதுவரை 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது,ஆனால் 74 ஆண்டுகால அரசியல் பின்னணியை கொண்ட இலங்கையின் அரசியலமைப்பு இதுவரை 21 முறை சீர்த்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகள் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு அரசியலமைப்பை திருத்தம் செய்யவில்லை. நாட்டு மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி அரசியலமைப்பினை திருத்தம் செய்துள்ளன. நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டன ஆனால் நடைமுறையில் அது சாத்தியமாகவில்லை.

சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இனம், மத பேதமற்ற  வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அடிப்படைத் தீர்வுகளை வழங்க ஆலோசனையை வழங்குகின்றேன் – சந்திரிக்கா

தூய பண்டாரநாயக்க கொள்கைகளை மதித்து அதற்கேற்ப அரசியலில் ஈடுபடும் எந்தவொரு அரசியல் குழுவிற்கும் அறிவுரை வழங்க நான் தயங்குவதில்லை. அதன் அடிப்படையிலேயே குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையைப் போக்குதல் மற்றும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அடிப்படைத் தீர்வுகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு நாட்டின் பொறுப்புள்ள மூத்த தலைவர் என்ற வகையில் எனது ஆலோசனையை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாh பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சந்தர்ப்பவாதத்திற்காகவும் , குறுகிய நோக்கத்திற்காகவும் கட்சியை அப்பட்டமாகக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு மத்தியில் , தூய பண்டாரநாயக்க கொள்கைகளை பாதுகாக்க எந்த சந்தர்ப்பத்திலும் உறுதியேற்பேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சி மாறியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் , அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :

நான் ஐக்கிய தேசிய கட்சியுடனும் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாக வெ வ்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கைவிட்டு , வேறு எந்தவொரு கட்சியிலும் நான் இணையப் போவதில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் பிறந்தது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலாகும். வளர்ந்ததும் சுதந்திர கட்சியிலேயே ஆகும். வெ வ்வேறு தாக்குதல்களுக்கு உள்ளானதும் சுதந்திர கட்சியிலேயே ஆகும்.  இறுதியாக, நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே இறக்கவும் எதிர்பார்க்கின்றேன்.

வெ வ்வேறு தவறான கொள்கைகளை பின்பற்றியமையின் காரணமாக இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மிகவும் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே பண்டாரநாயக்க தத்துவத்தைப் மதிக்கின்ற , தெளிவான பாதையில் நான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். அந்தத் தத்துவத்தை ஏற்று அதற்கேற்ப அரசியலில் ஈடுபடும் எந்த ஒரு அரசியல் குழுவிற்கும் அறிவுரை வழங்க நான் தயங்குவதில்லை.

தற்போது நம் நாடு எதிர்கொள்ளும் இரண்டு தேசிய நெருக்கடிகளான குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையைப் போக்குதல் மற்றும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அடிப்படைத் தீர்வுகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு நாட்டின் பொறுப்புள்ள மூத்த தலைவர் என்ற வகையில் எனது ஆலோசனையை வழங்குகிறேன்.

தற்போதைய சுதந்திரக் கட்சித் தலைவர்கள் தமது சந்தர்ப்பவாதத்திற்காகவும் குறுகிய நன்மைகளுக்காகவும் கட்சிக் கொள்கைகளை அப்பட்டமாக காட்டிக்கொடுக்கும் வேளையில், உண்மையான சுதந்திரக் கட்சிக்காக தூய பண்டாரநாயக்க கொள்கைகளை பாதுகாக்க இன்றும், நாளையும், எதிர்காலத்திலும் உறுதியேற்பேன் என்பதை வலியுறுத்துகிறேன்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.