சீன நிறுவனம் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் கைச்சாத்து

உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைக்கு அமைய, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பாக இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சினோபெக் ஃப்யூயல் ஒயில் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சீனா, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முடித்துள்ள நிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக அதிபர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கை – இந்தியா கடல்வழி மின் விநியோக ஒப்பந்தம் தயார்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மின்சாரத்தை கொண்டு வருவதற்கான உடன்படிக்கை கொள்கை ரீதியில் எட்டப்பட்டுள்ளது என்று அறிய வருகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின்சாரத்தை கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் சிறப்பு மின் கேபிளை அமைக்க இந்திய – இலங்கை அதிகாரிகள் உடன்படிக்கைக்கு வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சூழவுள்ள கடற்பரப்பில் இந்திய – இலங்கை எல்லைகளை பிரிக்கும் மணல்பரப்பின் ஊடாக இந்த மின்சார கேபிளை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர,

திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குதங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக இந்தியாவில் இருந்து திருகோணமலைக்கு நிலத்தடி வழியாக எரிபொருள் குழாய் அமைக்கவும் இரு நாட்டு அரசுகளும் திட்டமிட்டுள்ளன.

மின்சார கேபிள் அமைக்க சுமார் 80 கோடி அமெரிக்க டொலர்கள் செலவாகும் என தற்போதைய முதற்கட்ட கணிப்பில் தெரியவந்துள்ளது.

செவ்வாய்கிழமை நள்ளிரவில் எரிபொருள் QR முறை புதுப்பிக்கப்படும்

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR முறை புதுப்பிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் வந்துள்ளது.

இதற்கிடையில், QR முறை மூலம் வாரத்திற்கு பெறப்படும் எரிபொருளின் அளவுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களிலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் செயல்பட ஏற்பட்டதன் காரணமாக விநியோகச் செலவைக் குறைக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ஏப்ரல் மாதம் வரை போதுமான மசகு எண்ணெய் கையிருப்பில் உள்ளது – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

ஏப்ரல் மாதம் வரை போதுமான மசகு எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது நாளொன்றுக்கு 30,000 பீப்பாய் எரிபொருள் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

800 மில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருள், இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

குறித்த எரிபொருள் தொகைக்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபை, எதிர்வரும் நாட்களில் செலுத்தவுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் கூறினார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் நெப்டா,  டீசல் மற்றும் பல எரிபொருள் வகைகள் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படுகின்றன.

உபரியான சுத்திகரிப்பு எரிபொருள் தொகை களஞ்சியப்படுத்தப்படுவதுடன், இவ்வாறு களஞ்சியப்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தொகையானது கப்பல்கள் மூலம் திருகோணமலை எண்ணெய்த் தாங்கி வளாகத்திற்கு அனுப்பப்படுவதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வலுசக்தித் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல்

வலுசக்தி துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது ‘இலங்கையின் எரிசக்தி துறையின் தேவைகளான எரிபொருள், சுத்திகரிப்பு நடவடிக்கைகள், நிலக்கரி வழங்கல் மற்றும் அணுசக்தியில் ஒத்துழைப்பு போன்றவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு தேவையான நிலக்கரி மற்றும் எரிபொருளை வாங்குவதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு கடன்களை செலுத்தாமல் எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது – அநுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பார் என நகைச்சுவை கருத்தை சபையில் குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு கடன்களை செலுத்தாமல் தான் தற்போது எரிபொருள், எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.

இதுவே நாட்டின் பொருளாதார உண்மை நிலை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது புதிய விடயமல்ல. பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பேச்சளவில் குறிப்பிடுகிறதே தவிர நடைமுறையில் எந்த திட்டங்களும்  இதுவரை செயற்படுத்தப்படவில்லை. உண்மை காரணிகளை மறைத்ததால் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டது என்பதை அரசாங்கம் மறந்து விட கூடாது.

எரிபொருள்,எரிவாயு ஆகியவற்றுக்கான வரிசை இல்லை. அத்தியாவசிய பொருள் இறக்குமதி தடையில்லாமல் இடம்பெறுகிறது ஆகவே பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்துக் கொண்டோம் என அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது,நாங்கள் வங்குரோத்து நிலை அடைந்து விட்டோம் என அரசாங்கம் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி அறிவித்தது. செலுத்தாத கடன் தொகையை கொண்டு எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் அரசமுறை கடன்களை செலுத்திய நிலையில் தான் எரிபொருள்,எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டது,ஆனால் தற்போது வெளிநாட்டு கடன்களை செலுத்தாமல் எரிவாயு,எரிபொருள் கிடைப்பனவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் இன்றைய பொருளாதார உண்மை நிலை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பார் என நகைச்சுவை கருத்தை சபையில் குறிப்பிட வேண்டாம்.

பொருளாதார பாதிப்பு மூடி மறைக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். வரி அதிகரிப்பினால் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது பொருளாதார பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.

சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு !

உள்நாட்டு சமையல் எரிவாயுயின் விலைகள் இன்று (டிச.5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ 250 ரூபாய் அதிகரித்து 4,610 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் 5 கிலோ எரிவாயு 100 ரூபாய் அதிகரித்து 1,850 ரூபாயாகவும் 2.3 கிலோ 45 ரூபாய் அதிகரித்து 860 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

எரிபொருள் விலையில் மாற்றம்

லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் ஆகிய நிறுவனங்கள் டீசலின் விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளன.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது.

நள்ளிரவு முதல் நடைமுறை இதன்படி, ஒரு லீட்டர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தற்போது 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாகும்.

Posted in Uncategorized

திருமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! இந்தியா – இலங்கை பேச்சு

திருகோணமலை துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக லங்கா ஐ. ஓ. சி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் – லங்கா திருகோணமலை துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக லங்கா ஐ. ஓ. சி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற் றோலிய கூட்டுத் தாபனம் – லங்கா ஐ. ஓ. சி. இணைந்து நடத்தும் ட்ரிங்கோ பெற் றோலியம் ரேர்மினல் லிமிட்ரெட் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் இந்திய நிறுவனத்துக்கு உரியதாகும். திருகோணமலை துறைமுகத்தில் உள்ள இரண்டாம் போர் காலத்தில் அமைக்கப்பட்ட 51 எண்ணெய் குதங்களை இந்த நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. இந்த எண்ணெய் குதங்களை விரைவாக திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 10 எண்ணெய் குதங்களை 2 கோடி அமெரிக் டொலர் செலவில் உடனடியாக திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோல, மீதமுள்ள எண்ணெய் குதங்களை 5 கோடி டொலர் செலவில் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எரிபொருள் கப்பல்களுக்கு தாமதக் கட்டணமாக 6 மாதங்களில் 10 மில்லியன் டொலர்கள்

டொலர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கம் எரிபொருள் இறக்குமதிக்காக கடந்த ஆறு மாதங்களில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை தாமதக் கட்டணமாக கப்பல் நிறுவனங்களுக்கு செலுத்தியுள்ளது என்று டெய்லி மிரர் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அந்நியச் செலாவணி நெருக்கடியின் விளைவாக, கப்பல் நிறுவனங்களுக்கு செலுத்த போதுமான அமெரிக்க டாலர்களைக் கண்டுபிடிக்கும் வரை எரிபொருள் சரக்குகளை இறக்குவதை தாமதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது.

இது தாமதத்தை விளைவிக்கிறது. மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை இராஜாங்க அமைச்சர் சானக கடந்த ஆறு மாதங்களில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தாமதக் கட்டணமாக கப்பல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்காலத்தில் அதனைத் தவிர்ப்பதற்கான வழிமுறையை அரசாங்கம் வகுக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கோரி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

“இந்த பொறிமுறையானது நடைமுறைக்கு வந்ததும், விநியோகஸ்தர்களிடமிருந்து விலை மனுக்கோரல் ஊடாக சேமிப்பு கிடங்குகளில் சேமிப்பதற்கு விரும்புபவர்களிடம் இருந்து எரிபொருள் சேமிப்புக்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் வழங்குவோம். பின்னர் பணம் செலுத்திய பின்னர் அதனை பயன்பாட்டுக்காக பெற்றுக்கொள்வோம். எனத் தெரிவித்தார்.

இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி இல்லாததால், இலங்கை தற்போது QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்கிறது.

QR குறியீட்டு முறையின் கீழ் விநியோகிக்க ஒரு மாதத்திற்கு 120,000 டன் டீசல் மற்றும் 100,000 டன் பெட்ரோலை நாடு இறக்குமதி செய்கிறது.

எரிபொருள் கொள்வனவுக்கான வெளிநாட்டுக் கடன் பத்திரங்கள் தொடர்பில் கேட்டதற்கு, நிறைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ரஷ்யாவின் கடன் வசதி குறித்து கருத்து தெரிவித்த அவர், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றார்