காங்கேசந்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை இவ்வாரம் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான ‘செரியபாணி’ பயணிகள் கப்பல் சேவை இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என சிறிலங்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஜே. இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை , இதுவரை சேவையை ஆரம்பிக்க தேவையான ஆரம்ப வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் குடிவரவு அதிகாரிகள் ஏற்கனவே காங்கேசன்துறை துறைமுகத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

40 வருட இடைவெளிக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான படகு சேவை 2023 அக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் பின்னர் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாரா நிறுவனத்தினால் நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் இழப்பு

இலங்கையின் கடற்பிராந்தியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் (நாரா) ஒப்படைக்கப்பட்டிருப்பதன் காரணமாக சுமார் 32 ஆண்டுகளாக நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இப்பொறுப்பை திறம்பட முன்னெடுப்பதற்கு ஏற்றவாறு தேசிய நீர்வரைவியல் காரியாலயத்தை உருவாக்கும் நோக்கில் இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்குச் சொந்தமான கடற்பிராந்தியத்தை நிர்வகிப்பதுடன் தொடர்புடைய இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம்.

கடற்பிராந்தியத்தில் உயிர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச பிரகடனத்தை அடிப்படையாகக்கொண்டே சகல நாடுகளும் அவற்றின் கடற்பிராந்தியத்தை நிர்வகிக்கின்றன.

தமது கடற்பரப்பின் ஊடாகப் பயணிக்கும் கப்பல்களுக்கான கட்டணம் அறவிடல், கடற்பிராந்தியப் பாதுகாப்பின் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல், கடற்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் இப்பிரகடனத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையானது இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் கேந்திர நிலைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கின்றது. உலகின் ஏனைய அனைத்துப் பிராந்தியங்களுக்குமான நுழைவாயிலாகவும், பொருளாதார மற்றும் வாணிப ரீதியில் பெருமளவான நன்மைகளை ஈட்டித்தரக்கூடிய வகையிலும் இலங்கையின் அமைவிடம் உள்ளது.

இலங்கைக் கடற்பரப்பின் ஊடாக நாளாந்தம் சுமார் 200 – 300 வரையான கப்பல்களும், வருடாந்தம் சுமார் 35,000 கப்பல்களும் பயணிக்கின்றன. இவ்வாறு எமது கடற்பரப்பின் ஊடாகப் பயணிக்கும் கப்பல்களிடமிருந்து அதற்கேற்றவாறு கட்டணம் அறவிடப்படும்.

அதற்குரிய அதிகாரம் கடந்த 1981 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (நாரா) வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடற்பிராந்திய விவகாரங்களை உரியவாறு கையாள்வதற்கான நிபுணத்துவம் அக்கட்டமைப்புக்கு இல்லை. அதன் விளைவாக கடந்த 32 ஆண்டுகளாக (1981 தொடக்கம்) எமது நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி எமது கடற்பிராந்தியத்தை உரியவாறு நிர்வகிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் ஏற்ற பொருத்தமான கட்டமைப்பு இன்மையால், அதுபற்றிய தீர்மானங்கள் ஏனைய வெளிநாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இது நாட்டுக்கான வருமானத்தை இல்லாமல் செய்வதுடன் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது.

குறிப்பாக கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்த கப்பல்களின் எண்ணிக்கை கடந்த 2015 ஆம் ஆண்டு 4,197 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், அது 2022 இல் 3,648 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று 2015 ஆம் ஆண்டு திருகோணமலை துறைமுகம், காலி துறைமுகம், காங்கேசன்துறை மற்றும் காரைநகர் துறைமுகம் ஆகியவற்றுக்கு வருகைதந்த கப்பல்களின் எண்ணிக்கை முறையே 164, 72, 32 ஆகப் பதிவாகியுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டு அவை முறையே 95, 7 மற்றும் 0 ஆக வீழ்ச்சிகண்டுள்ளன.

இவையனைத்தையும் கருத்திற்கொண்டு எமது நாட்டுக்குரிய கடற்பிராந்தியத்தை முறையாக நிர்வகிக்கும் நோக்கிலேயே தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் எதிர்ப்பையும் மீறி இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தைத் தயாரித்து, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம். இச்சட்டமூலத்தின் ஊடாக தேசிய நீர்வரைவியல் காரியாலயம் என்ற புதிய கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கும் விதமாக சிரேஷ்ட நீர்வரைவியலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதற்குப் பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படுவார். அதன்மூலம் நாட்டின் கடற்பிராந்தியத்தை முறையாக நிர்வகிக்கவும், அதனூடாக வருமானமீட்டவும் முடியும் என்று தெரிவித்தார்.

நாகை- காங்கேசன் கப்பல் சேவை இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜ தந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டமை எமது உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் உங்களுடன் இணைவது எனது பாக்கியம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் புதுடில்லியில் இருந்தபடி நேற்று காலை ஆரம்பித்து வைத்து உரையாற் றுகையிலேயே மேற்கண்டவாறு தெரி வித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- இந்தியாவும் இலங்கையும் கலாசாரம், வர்த்தகம் மற்றும் நாகரீகத்தின் ஆழமான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன.

நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் இலங்கை உள்பட பல நாடுகளுடன் கடல் வணிகத்திற்கு நீண்ட காலமாக அறியப்படுகின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் பூம்புகார் துறைமுகம் ஒரு மையமாக குறிப்பிடப் பட்டுள்ளது. சங்க கால இலக்கியங்களான பட்டினப்பாலை, மணிமேகலை போன்றவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றி பேசுகின்றன.

மகா கவிஞர் சுப்பிரமணிய பாரதி தனது ‘சிந்து நதியின் மிசை’ பாடலில், நமது இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் பற்றிப் பேசியுள்ளார். இந்த படகு சேவையானது அந்த வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளை உயிர்ப்பிக்கிறது.

இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் சமீபத்திய விஜயத்தின்போது, எமது பொருளாதார பங்காளித்துவத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை கூட்டாக ஏற்றுக்கொண்டோம். இணைப்பு என்பது இந்தக் கூட்டாண்மையின் மையக் கருப்பொருள். இணைப்பு என்பது இரு நகரங்களை நெருக்கமாகக் கொண்டு வருவது மட்டுமல்ல.

இது நம் நாடுகளை நெருக்கமாகவும், நம் மக்களை நெருக்கமாகவும், நம் இதயங்களை நெருக்கமாகவும் கொண்டு வருகிறது. இணைப்பு வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்கள்-மக்கள் உறவுகளை மேம்படுத்துகிறது. இது இரு நாட்டு இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. 2015 ஆம் ஆண்டில் நான் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டதை நாங்கள் கண்டோம்.

பின்னர், இலங்கையிலிருந்து புனித யாத்திரை நகரமான குஷிநகரில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியதைக் கொண்டாடினோம்.

சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை 2019 இல் தொடங்கியது. இப்போது, நாக பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகு சேவை மற்றொரு முக்கியமான படியாகும். – என்றார்.

40 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே கப்பல் சேவை ஆரம்பம்

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமானது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காலை, 50 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் காங்கேசன்துறையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த கப்பல் மதியம் 12.20 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து மதியம் 1.20 மணியளவில் மீண்டும் நாக பட்டினத்திற்கு 31 பயணிகளுடன் தனது பயணத்தை ஆரம்பித்த கப்பலை இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் பச்சை கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழிக் கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழிக்கட்டணமாக 53,500 இலங்கை ரூபாவும் அறவிடப்படவுள்ளதுடன், 50 கிலோகிராம் வரை இலவசமாக பொருட்களை எடுத்துச்செல்லலாம்.

இறுதியாக 1984 ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை இடம்பெற்றிருந்த நிலையில் நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து கப்பல் சேவைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களின் பின்னர் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பமாகியுள்ளது. அதனால் 40 வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

சீன ஆராய்ச்சிக் கப்பல் நவம்பரில் இலங்கை வருவதற்கு அனுமதி – அலி சப்ரி

சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கைக்கு வருகைதருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார  அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் சீன கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனினும் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வரமுடியாது ஆனால் நவம்பர் மாதத்திலேயே சீன கப்பல் இலங்கை வரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கை வரமுடியும் என்பது குறித்து அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இது வெறுமனே ஒரு விஜயம் மாத்திரம் இல்லை கப்பல் இலங்கையில் தரித்துநிற்க்கும் நாட்களில் அதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் உள்விவகாரங்களை கருத்தில் கொண்ட பின்னர் கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கான திகதியை வழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சீனாவுடனான இருதரப்பு உறவுகள்  மிகவும் அவசியமானவை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்

காங்கேசன்துறை- நாகப்பட்டினம் கப்பல் சேவை: பரீட்சார்த்தமாக யாழ் வந்த செரியாபாணி

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் பத்தாம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் பரீட்யாசார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிரகாரம் இன்று காலை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட செரியாபாணி எனும் குளிர் ஊட்டப்பட்ட கப்பல் மதியம் 1.15 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது

இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே இந்த பரிச்சாத்த நடவடிக்கைகளின் போது வருகை தந்திருந்தனர். இவ் பரீட்சார்த்த நடவடிக்கைகளின் போது கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்படும் கடல் பாதை, கடல் மற்றும் காலநிலை நிலவரம் சகல விடயங்களும் கணக்கெடுக்கப்பட்டது.

பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொண்டமையை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.சுமார் அரை மணி நேரம் தரித்து நின்ற பின்னர் மதியம் 1.45 மணியளவில் மீண்டும் இக்கப்பல் நாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டது.

நாகப்பட்டினம் இலங்கையிலேயே பயணிக்க இருவழிக் கட்ணமாக 53500 ரூபாயும், ஒருவழிக் கட்டணமீக 27,000ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தங்களுடன் 40 கிலோ வரை உள்ள பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையின் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து வரும் 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடைய முடியும்.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று சோதனை ஓட்டம்!

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கப்பல் நேற்றையதினம் நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மேலும் நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்ததும் இன்றையதினம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையே படகு சேவைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விரைவில் அனுமதிக்கும் – தமிழக அமைச்சர் எ.வ வேலு

வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் இந்தியா – இலங்கை இடையே விரைவில் படகு சேவை தொடங்க நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் கெவடியாவில் 19-வது கடலோர மாநிலங்கள்மேம்பாட்டுக் குழுமக் கூட்டம் நேற்று நடந்தது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் தலைமையில் நடந்த கூட்டத்தில் கடலோர மாநிலங்களின் துறைமுக அமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் அலுவலர்கள், கடல்சார் வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தின் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழகம் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் நுழைவாயிலுடன் கூடிய தனித்துவமான கடற்கரையைக் கொண்டுள்ளது. அதன் கடல்சார் மற்றும் துறைமுகத் துறையைவலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சாகர்மாலாதிட்டத்தின் கீழ், மானியமாக தமிழக கடல் சார் வாரியத்துக்கு ரூ.120 கோடி நிதியுதவி அளித்த மத்திய அமைச்சர், மத்திய அரசுக்குநன்றி.

இந்தியாவை சர்வதேச அளவில்இணைக்கும் வகையில் இலங்கைக்கு தொடங்கவுள்ள முதன்மையான படகு சேவைக்கு வெளியுறவுஅமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது நாடுகளுக்கிடையே உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வர்த்தகத்தையும் மேம்படுத் தும்.

இப்படகு சேவையை விரைவில் தொடங்குவதற்கு நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது.ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1980-ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்தியா – இலங்கை இடையிலான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும்.

கடலோர கடல் வளங்களை பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையும் ஆகும். தமிழகத்தின் மத்தியில் உள்ள தொழிற்சாலை பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக் கூடிய வகையில், கடலூர் பகுதியில் பெரும்திறன் கொண்ட பசுமைவளத் துறைமுகத்தை உருவாக்கவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக்டன் சரக்குகளை இத்துறைமுகம்கையாளும் என எதிர்பார்க்கப்படு கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்கத் திட்டம்

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா வெள்ளிக்கிழமை (04) தலைமன்னார் பியர் மற்றும் தலைமன்னார் பழைய பாலம் ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது, வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் , மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீபன், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் செயலாளர்கள் கடற்படை அதிகாரிகள் இந்திய நலன்புரியாளர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

குறித்த விஜயத்தின் போது அமைச்சருடன் கலந்து கொண்டோர் தலைமன்னார் பியர் மற்றும் தலைமன்னார் பழைய பாலம் ஆகியவற்றை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் தலைமன்னார் பியர் கடற்படையின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

இங்கு அவர் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பாக இரு பகுதிகளை அவர் இங்கு சுட்டிக்காட்டினார். ஒன்று உடனடி அபிவிருத்தித் திட்டம் அடுத்து நீண்ட காலத்திற்கு செய்யும் திட்டங்களை அவர் வலியுறுத்தினார்.

அதாவது மூன்று மாதங்களுக்குள் குறுகிய திட்டத்தை நிறைவு செய்து தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பித்து மக்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பிரயாணம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என இங்கு வலியுறுத்தியுள்ளார்.

காங்கேசன் துறை – நாகபட்டினம் இடையே கப்பல் சேவை விரைவில் ஆரம்பம் – இந்திய துணைத் தூதுவர்

இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் – இந்தியா தமிழ்நாடு நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவையினை விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே குறித்த பயணப்பாதை மாற்றப்பட்டமையினாலேயே இவ் தாமதம் ஏற்பட்டது.

குறித்த கப்பல் சேவை தொடர்பில் விரைவில் ஆரம்பிப்பதற்காக தமிழ்நாடு நாகபட்டினத்தில் பயணிகள் இறங்குமிடம் , சுங்கம் போன்ற அமைக்கும் பணிகளை இடம்பெற்று வருகின்றன. அப்பணிகள் நிறைவடைந்தமையுடன் கப்பல் சேவையினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் . அவ் கப்பல் சேவை தொடர்பிலான நல்லதொரு செய்தியினை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.