’தெமலோ’ இனவாதத்தை குறிக்கும் சொற்பதம், தமிழர் அல்லது திரவிடர் என்றே அழைக்க வேண்டும் – டயனா கமகே

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் இனவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும்.

தமிழர்களை ‘தெமலோ’ என்று குறிப்பிடுவதன் ஊடாகவே இனவாதம் வெளிப்படுகிறது. தமிழர்களை ‘தமிழர் அல்லது திரவிடர்’என்று அழைக்க வேண்டும்.

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்த காலம் முடிவடைந்து விட்டது.

ஆகவே 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பந்தய,சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டின் உயரிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாத காரணத்தால் 30 வருடகால யுத்தம் தோற்றம் பெற்று நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது.

ஆகவே நடைமுறைக்கு சாத்தியமான வகையில் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

நாடு என்ற முதலில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் முதலில் இனவாதத்தை இல்லாதொழித்து தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். அப்போது தான் சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும்.

தமிழ் நபர் ஒருவரை பார்த்து ‘தெமலோ’ என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.அங்கிருந்து தான் இனவாதம் தோற்றம் பெறுகிறது.

தமிழர்களை ‘தமிழர் அல்லது திரவிடர்’ என்று குறிப்பிட வேண்டும்.

அடிப்படை விடயங்களில் இருந்து மாற்றாத்தை ஏற்படுத்தினால் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தலாம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இனவாதம்,மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்த காலம் முடிவடைந்து விட்டது.

இளம் தலைமுறையினர் புதிய மாற்றத்தை நோக்கி பயணிக்கிறார்கள்,அதற்கமைய அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது நாட்டை பிளவுப்படுத்தும்,சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது.

நாட்டின் சுயாதீனத்தை உறுதிப்படுத்திய வகையில் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார்.