பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப்பெறுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தல்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அரசு முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அதீத கவனம் செலுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, இலங்கை அரசு முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது இலங்கையின் உள்ளகப் பாதுகாப்பு தொடர்பிலான சிறந்த மறுசீரமைப்பின் ஒரு முயற்சியாகக் காணப்பட்டாலும்இ உத்தேச புதிய சட்டமூலம் ஊடாக கடந்த காலத்தில் இருந்து நிலவிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் அவ்வாறே இடம்பெறும் அபாயம் காணப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தேச சட்டமூலத்தில் பயங்கரவாதத்துக்கான வரைவிலக்கணம்இ தடுப்புக் காவல் உத்தரவின் சட்டபூர்வத் தன்மையைச் சவாலுக்குட்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், தடுப்புக் காவல் இடங்களைப் பார்வையிடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இருக்கின்ற வாய்ப்புகளை வரையறுக்கும் விடயமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, சர்வதேச மனித உரிமை கொள்கைகளுக்கு ஏற்றால் போன்று, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைத் திருத்தியமைக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசும் சிங்கள அமைப்புகளும் கனடிய அரசியலுக்கு அஞ்ச ஆரம்பித்துவிட்டன – அ.நிக்ஸன்

புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியத்தை இலக்காகக் கொண்ட ஈழத்தமிழ் அமைப்புகளின் பலத்தை அறிந்த ஒரு பின்னணியிலேதான், சிங்கள அரசியல் தலைவர்கள் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் குறிப்பிட்ட சில தமிழ் அமைப்புகளையும் தனிநபர் குழுக்களையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகும்.

ஈழத்தமிழர்கள் அனைவரும் இலங்கை அரச கட்டமைப்புக்குள் இணைந்து வாழத் தயார் என்ற பொய்யான பரப்புரையின் ஊடாக புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடா போன்ற நாடுகளில் கணக்கைக் காண்பிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

வட அமெரிக்க நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தக்குத் தடை விதிக்கப்பட்டு, அத் தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவிலோ கனடாவிலோ தமிழீழ விடுதலைப் புலிகளில் உறுப்பினராக இருந்த ஒருவர் அதைக் கூறி அரசியல் தஞ்சம் கோரினால் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாது.

அவ்வாறான ஒருவர் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியபின் அல்லது விலக்கப்பட்டபின் கூட அவர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்கினால் அல்லது விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களுக்கு மட்டுமே கனடாவில் அதுவும் நீண்ட இழுத்தடிப்புக்குப் பின்னர் புகலிட அந்தஸ்து வழங்கப்படுவது வழமை.

ஆனால், ஐரோப்பிய நாடுகளில் நிலைமை அவ்வாறில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளில் அங்கம் வகித்து ஆனால், கருத்துநிலையை மாற்றாமல் இருக்கும் பலருக்கும் அகதி அந்தஸ்து வழங்கப்படுவது வழமையாகும்.

பிரித்தானிய அரசு புலிகளுக்குத் தடை விதித்திருந்தாலும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அங்கு தொடர்ந்தும் வாழ அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், கனடாவில் அவ்வாறானதொரு சூழல் இன்றுவரையும் இல்லை.

இதனால், புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் ஈழத்தமிழர்களிடையே கனடாவின் தடை அரசியல் பற்றிய கடுமையான விமர்சனம் இருந்துவருகிறது.

2006ஆம் ஆண்டு கொன்ஸர்வேடிவ் கட்சியின் ஸ்-ரீபன் ஹார்ப்பர் பிரதமராகி இரண்டு மாதங்களுக்குள், அதுவும் பேச்சுவார்த்தைக் காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை கனேடிய அரசு முதன்முதலாக அமுல்படுத்தியது.

கனடாவில் தடை விதிக்கப்படுவதற்கு ஏழு வருடங்களுக்கு முன்னர், 1997இல் அமெரிக்கா விடுதலைப் புலிகள் மீது தடையை விதித்து இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்தது என்பது இங்கு ஒருசேர நோக்கப்படவேண்டியது.

புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வாக்குகளைப் பெற விழையும் தேர்தல் காலங்களின் போதெல்லாம் ஈழத்தமிழர்களின் கடுமையான அதிருப்தி குறித்து கனேடிய பிரதான கட்சிகள் அறிந்திருப்பதால், இலங்கை அரசு மீதும் தாம் அழுத்தம் தருவதாக, அல்லது தர இருப்பதாக பாவனை செய்வதும் சில அழுத்தங்களை மேற்கொள்வதும் வழமை.

எந்த ஹார்ப்பர் அரசாங்கம் 2009ஆம் ஆண்டுக்கும் முன்னர் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததோ அதே ஹார்ப்பர் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2013ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் தான் கலந்துகொள்ளாது புறக்கணித்து தமிழ் மக்களிடையே நற்பெயரையும் அதேவேளை, இலங்கையில் அமெரிக்காவுக்குத் தேவையான ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் அரசியலுக்கும் ஊக்கம் கொடுத்தார்.

கனடாவில் தற்போது லிபரல் கட்சி தலைமையிலான ஆட்சி நடைமுறையில் இருக்கிறது. அதன் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்து வருகிறார். இந்தத் தடையை நீடிக்கும் அதேவேளை, ஈழத்தமிழர் இன அழிப்புக்கு நீதி கோருவது போன்ற பாவனையையும் ஆங்காங்கே வெளிப்படுத்திவருகிறார்.

இவ்வாறு, கனடாவில் புலம்பெயர் ஈழத்தமிழர் மனநிலையைப் புரிந்துகொண்டு இந்த இரண்டு பிரதான கட்சிகளும் இன அழிப்புக்கு நீதி கேட்பது போன்ற தேர்தல் அரசியற் பாவலாவைக் காட்டிவருகின்றன. இதனை ஈழத்தமிழர்களும் தகுந்தமுறையில் பயன்படுத்திக்கொள்ள ஓரளவுக்காவது ஆரம்பித்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

குறிப்பாக, இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்பு நடந்துள்ளது என்றும் அதற்குச் சர்வதேச நீதி வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழர்கள் தமது அரசியல் தரப்புகளுக்கு ஊடாக முன்வைக்கப்பட்ட தீர்மானம்கனேடிய பாராளுமன்றில் அனைத்துக்கட்சி ஆதரவுடனான தீர்மானமாக வெளிப்பட்டது மட்டுமல்ல, 2022ஆம் ஆண்டிலிருந்து மே 18 தமிழ் இன அழிப்பை நினைவுகூரும் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டும் உள்ள சூழலும் தோன்றியுள்ளது.

ஈழத்தமிழர்கள் மீது தடை விடயத்தில் கடுமையாக இயங்கிய கனடா ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற அனுமதித்தது எதற்காக, இன அழிப்பு நினைவேந்தலை அங்கீகரித்தது எதற்காக என்று அங்கு மிகச் சிறிய அளவிலேனும் குடியேறி வாழும் சிங்களத் தரப்பினர் ஆத்திரமடைந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேவேளை, சட்ட நடவடிக்கைகளைச் சவாலாக முன்னெடுத்தும் வந்துள்ளனர்.

கனடாவின் பிரபலமான நகரமாகவும் பெருமளவு ஈழத்தமிழர் வாழுகின்ற பகுதியாகவும் ரொறன்ரோ விளங்கும் போதும், அந்த நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் இலங்கை அரசின் தூதராலயமும் குறைந்தளவில் என்றாலும் தாக்கம் செலுத்தக்கூடிய அளவில் சிங்கள சமூகமும் காணப்படுகின்றன.

இந்தச் சிங்கள அமைப்புகள் இன அழிப்பு என்ற கருத்தியலுக்கு கனேடிய அரச அங்கீகாரம் கிடைப்பதை எதிர்க்கின்றன. கனடாவைத் தொடர்ந்தும் இலங்கையின் பக்கம் வைத்திருக்கும் செயற்பாடுகளை அவை தீவிரப்படுத்தியுள்ளன.

அண்மையில் இலங்கைத் தீவுக்கு விஜயம் மேற்கொண்ட புலம்பெயர் தனிநபர் க்குழுவான சுரேன் சுரேந்திரன் மற்றும் கனேடிய தமிழர் பேரவை முட்டுக்கொடுக்கும் உலகத்தமிழர் பேரவை என்ற அமைப்பின் செயற்பாடுகளோடு சிங்கள புலம் பெயர் அமைப்பும் முட்டுக்கொடுத்து இயங்கிவருவதற்குக் கனடாவில் வலுப்பெறும் ஈழத்தமிழர் சார்பான அரசியலைத் தடுக்கும் நோக்கம் உள்ளது என்பது வெளிப்படை.

கீழே தரப்படும் சிங்கள அமைப்பின் காணொளி அதற்குச் சாட்சியாகிறது. அதேபோல இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வெளியிட்ட இன அழிப்பு செய்தி தொடர்பான கருத்தும் இலங்கை அரசின் இது தொடர்பான பயத்தையும் வெளிப்படுத்துகிறது.

கனடாவில் பாராளுமன்றத் தேர்தல் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சூழலில், அல்லது அதற்கு முன்னர் திடுமென அவ்வாறு நடைபெறும் சூழல் எப்போது தோன்றினாலும், அதை எதிர்கொள்வதில் தற்போதைய ஆளும் கட்சியான லிபரல் கட்சிக்கு எதிராகப் போட்டியிடக்கூடிய எதிர்க்கட்சித் தலைவரும் கென்சர்வேற்றிக் கட்சியின் பிரதமருக்கான வேட்பாளருமான பியர் பொலியெர்வ் கூட தற்போது ஈழத்தமிழர்களுக்கு நடந்த இன அழிப்புக்குக் கனடா நீதி கோரும்
எனக் கூற ஆரம்பித்துள்ளார்.

இது மேலோட்டமாக வாக்கு அரசியலாகத் தெரிந்தாலும் இலங்கை தொடர்பான கனடா அரசின் வெளியுறவுக் கொள்ளையில் ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான சர்வதேச நீதியைக் கோருதல் என்ற கோரிக்கையின் வகிபாகம் வலுப்பட ஆரம்பித்துள்ளதை நாம் இங்கு கூர்மையாக நோக்கவேண்டும்.

இதை மேலும் செம்மைப்படுத்தும் கடமை அங்குள்ள புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புகளுக்கு உண்டு என்ற கருத்தைக் கனடா வாழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
தேர்தல் அரசியலுக்காக இரண்டு கட்சிகளும் ஈழத்தமிழர் மீதான இன அழிப்புத் தொடர்பான கருத்தியலை ஆதரிக்க ஆரம்பித்திருந்தாலும் கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் இதுவரை இன அழிப்புக்கான நீதி தாக்கம் செலுத்த ஆரம்பிக்கவில்லை என்பதையும் இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

கனேடிய அரசின் ஐ.நா. மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும் ஒரு காலத்தில் சிங்களத் தரப்போடும் தமிழ்த் தரப்போடும் சமஷ்டி தீர்வுகுறித்து கருத்துத் தாக்கத்தை ஏற்பட்ட முனைந்தவருமான பொப் ரே கனடிய அரசு ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு என்ற கருத்தியலைத் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று 2023 ஆரம்பத்தில் வலியுறுத்தியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சட்டம் இரத்து செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்ததற்காக 9 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கண்காணிப்பாகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சிறுபான்மை இனத்தவர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மாற்றியமைக்கப்படும் என இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்துள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது கொடூரமான துஷ்பிரயோகம் என்பதுடன், தொடர்ச்சியாக ஒரு சமூகம்

ஓரங்கட்டப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நல்லிணக்கம் தொடர்பில் பேசுகின்ற போதிலும், அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப் பிளவுகளை மேலும் ஆழப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

11 இளைஞர்கள் கடத்தல் : வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு!

கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கப்பம் பெறும் நோக்கத்தில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கியமை  தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையையும்  மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொண்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா (தலைவர்) நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மார்ச் முதாலாம் திகதி மீள ஆரம்பிக்கப்படும்

ஆறு மாதங்களுக்கு முன்னர் தற்செயலாக வெளிவந்த கொக்குத்தொடுவாய் பாரிய மனித புதைகுழி மேலும் விரிவடைந்து செவல்வதாக தெரியவந்ததையடுத்து அகழ்வுப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் நிறுத்தப்படும் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் முதலாம் முதல் மீண்டும் ஆரம்பமாகுமென, நவம்பர் 29ஆம் திகதியான இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், சடலங்களை அகழ்ந்து எடுக்கும் பணிக்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“புதைகுழியானது கொக்கிளாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் 1.7 மீற்றர் நீளத்திற்கு நெடுஞ்சாலையை நோக்கி விரிவடைந்துள்ளமை ஸ்கேன் பரிசோதனை ஊடாக தெரியவந்துள்ளது. இதுத் தொடர்பிலேயே இன்று கலந்துரையாடப்பட்டது. இந்த புதைகுழி முற்று முழுதாக ஆராயப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அனைவரும் உள்ளனர். எனவே எதிர்வரும் வருடம் மார்ச் முதலாம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.”

அகழ்வு நடவடிக்கைகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்காக நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் வைத்தியர் வெளிப்படுத்தினார்.

“இந்த அகழ்வுப் பணிகளை இலகுப்படுத்துவதற்கும், ஒழுங்குப்படுத்துவதற்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். இதற்கான உத்தரவை நீதவான அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார். பகுப்பாய்வு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. ”

இரண்டாம் கட்ட புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்படுவதோடு இத்துடன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளன.  நவம்பர் 28 ஆம் திகதி வரை கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து குறைந்தது 39 பேரின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சில ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

தற்போது 14 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் நேற்று வெளிப்படுத்தியிருந்தார்.

கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியின் அளவை தீர்மானிப்பதற்காக கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களாக ரேடார் கருவிகள் மூலம் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று அதன் முடிவுகள் மற்றும்  நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து முல்லைத்தீவு நீதவான் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டன.

கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு வீதியின் மையப்புள்ளி வரை மனித புதைகுழி விஸ்தரிக்கப்பட்டுள்ளது – சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் (27.11.2023) ஏழாவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார்.

ஏழாவது நாளாக தொடர்ந்த கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு நேற்றையதினம் நிறைவடையும் போது மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது. இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்.

இன்று செவ்வாய்க்கிழமை (28) அகழ்வு பணியானது எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 20 ஆம் திகதி அன்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மீறிவருகின்றது – ஜஸ்மின் சூக்கா

வீரர் தினநிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களை அரசதரப்பினர் படமெடுப்பதை தடுப்பதற்காக சர்வதேச சமூகம் தனது கண்காணிப்பாளர்களை அந்த பகுதிக்கு அனுப்பவேண்டும் என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

2009 மே மாதம் முடிவிற்கு வந்த உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு காரணமானவர்களை எந்த வகை பொறுப்புக்கூறலிற்கும் உட்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளமை இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை ஆழமாக்கியுள்ளது.

யுத்தம் முடிவிற்கு வந்திருக்கலாம் ஆனால் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுவது தொடர்கின்றது.

பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் இழைத்துவரும் வன்முறைகள் தனிநபர்களையும் குடும்பங்களையும் பாதிப்பதுடன் மாத்திரமல்லாமல் கூட்டுசகவாழ் நம்பிக்கை பாரம்பரியம் போன்றன கட்டி எழுப்பப்படும் சமூககட்டுமானத்தையும் அழிக்கின்றது.

விடுதலைக்கான தமிழர்களின் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான குடும்பங்களின் நியாயபூர்வமான உரிமைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மீறிவருகின்றது.

2014ம் ஆண்டு முதல் பலவருடங்களாக எனது அமைப்பு இலங்கையில் சித்திரவதைகளுக்கு உள்ளாகி அங்கிருந்து தப்பியோடியவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது – இதன் போது அவர்கள் நினைவேந்தலில் கலந்துகொண்டவேளை அவர்களை படமெடுத்த இலங்கையின் புலனாய்வு பிரிவினர் பின்னர் அவர்களிற்கு வீடுகளுக்கு சென்று அவர்கள் அச்சுறுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

நாங்கள் சந்தித்த ஒருவர் 2022 நவம்பர் ஏழாம் திகதி வடபகுதியில் மயானத்தில் உரையாற்றியுள்ளார்- புதிய ஜனாதிபதி அவ்வாறான நிகழ்வுகளிற்கு அனுமதியளித்துள்ளதால் அவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்வது பாதுகாப்பானது என அவர் கருதியுள்ளார்,

எனினும் சில நாட்களின் பின்னர் அவரது கருத்துசுதந்திரம் நடமாடும் சுதந்திரம் ஆகியவற்றை மீறும் விதத்தில் அவரை கைது செய்து சித்திரவதை செய்துள்ளனர் அவர் தனது புதிதாக பிறந்த குழந்தையையும் வளர்ச்சியடைந்து வந்த வர்த்தகத்தையும் விட்டு இலங்கையிலிருந்து தப்பிவெளியேறியுள்ளார்.

இவ்வாறான விசாரணைகளின் போது பாதுகாப்பு படையினர் இந்த நினைவுகூரல்களிற்கு யார் வழங்குவது என கேள்வி கேட்கின்றனர் –

நினைவேந்தல்களை ஏற்பாடு செய்வதும் கலந்துகொள்வதும் வெறும் எதிர்ப்பின் செயற்பாடுகள் மட்டுமல்ல இந்த பயங்கரமான போரில் தப்பிய அனைவராலும் உணரப்பட்ட மிக ஆழமான தனிப்பட்ட துரயத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வன்முறைக்கு பலியானவர்களின் குடும்பத்தவர்களும் வன்முறைக்கு பலியானவர்களே மேலும் அவர்கள் காணாமல்போதல் சித்திரவதை அல்லது தங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பு போன்றவற்றை அனுபவித்தவர்கள்.

அவர்கள் உயிர்பிழைத்துள்ள போதிலும் தண்டனையின்மை மற்றும் குற்ற உணர்ச்சியின் பெரும் தடையை எதிர்கொள்கின்றனர்.

உயிர்பிழைத்தவர்கள் உண்மை மற்றும் நீதிக்கான அவர்களது போராட்டத்தில் இறந்தவர்களையும் காணாமல்போனவர்களையும் தொடர்ந்தும் நினைவுநினைவு கூருவது ஒரு தார்மீக மற்றும் சமூக பொறுப்பு என கருதுகின்றனர்.

நவம்பர் 27 ம் திகதி குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களை இழந்தவர்கள் மாத்திரம் அவர்களை நினைவுநினைவு கூருவதில்லை,மாறாக முழுசமூகமும் தியாகத்தையும் கூட்டுதுயரத்தையும் நினைவுகூருகின்றது.

பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தப்பிப்பிழைத்த தமிழர்களின் குழுக்கள் இறந்தவர்களை தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் நினைவுகூரும் உரிமையை மீட்டெடுப்பதை நாம் காண்கிறோம். செயல்பாட்டில் அவர்கள் உயிர்வாழ்வது மற்றும் சாட்சியமளிப்பதன் அர்த்தம் என்ன என்று போராடுகிறார்கள். வருங்கால சந்ததியினருக்கு நினைவாற்றலை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக அவர்கள் தங்கள் தனிப்பட்ட துன்பங்களை மட்டுமல்ல தங்கள் சமூகங்களின் துன்பங்களையும் வெளிப்படுத்த புதிய வழிகளைக் காண்கிறார்கள்.

எந்த அடக்குமுறையும் நினைவுநினைவு கூருவதற்கான மக்களின் தேவையை தடுத்து நிறுத்தப்போவதில்லை ,குறிப்பாக அது உங்களின் குழந்தை அல்லது பெற்றோருக்கானதாகயிருந்தால்.

சித்திரவதையிலிருந்து உயிர்தப்பிய ஒருவர் பூசாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை தானும் தனது நண்பர்களும் நவம்பர் 27 ம் திகதி மெழுகுதிரியை ஏற்றுவதற்காக அதிகாலையில் எழுந்ததை நினைகூர்ந்திருந்தார்.

சிறைப்பாதுகாவலர்கள் பழிவாங்குவார்கள் என தெரிந்திருந்தும் அவர்கள் அதனை செய்தனர்.

அவர்களுக்கு உள்ள இறுதிகௌரவம் அதுவே அது மிகவும் பெருமதியானது.

போரிலிருந்து உயிர்பிழைத்தவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது துக்கத்தை வெளிப்படுத்தி காயங்களை ஆற்ற முடியாத நிலையில் காணப்படுகின்ற சூழலில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உண்மையை கண்டறியும் ஆணைகுழுவை நிறுவது பற்றி பேசுகின்றார்.

உயிர்பிழைத்தவர்கள் அந்த ஆணைக்குழுவிடம் சென்று சாட்சியமளிக்கப்போவதில்லை.

உண்மை ஆணைக்குழு நம்பிக்கை மிக்கதாக காணப்படவேண்டும் வெற்றியளிக்கவேண்டும் என்றால் ஜனாதிபதி அரசவன்முறைகள் முடிவிற்கு வரும் என்பதையும் நவம்பர் 27 ம் திகதி நிகழ்வுகள் கண்காணிக்கப்படாது என்பதையும் அதில் கலந்துகொள்பவர்கள் அவற்றை ஏற்பாடு செய்தவர்கள் பழிவாங்கப்படமாட்டார்கள் என்பதையும் உறுதி செய்யவேண்டும்.

இந்த ஒடுக்குமுறைகள் இடம்பெறுகின்ற வேளை சர்வதேச சமூகம் அமைதியாகயிருக்ககூடாது சீருடை அணியாதவர்கள் படங்களை எடுப்பதை உறுதி செய்வதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பவேண்டும் எனஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுபணிகள் திட்டமிட்டபடி நாளை இடம்பெறும்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

அகழ்வுப்பணி தொடர்பாக இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அகழ்வு பணி நாளை 20 ஆம் திகதி காலை 8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற இருப்பதாகவும் புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது எனவும், இம்முறை அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளதாகவும். இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாகவும் அவ் நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் நவம்பர் 20 மீள ஆரம்பம்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

மனித புதைகுழி தொடர்பான வழக்கு 30 ஆம் திகதி திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

திங்கட்கிழமை (30) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ சமுகமளிக்க முடியாததனால் கொக்குதொடுவாய் அகழ்வு பணியானது மீளவும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மிகுதியாக உள்ள செலவுத்தொகை பணம் எவ்வளவு என்பது தொடர்பாக கதைக்கப்பட்டு அதற்கான கணக்கறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ அவர்களினால் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தவிர்ந்த பிற பொருட்கள் பேராசிரியர் ராஜ் சோமதேவவுக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தேவை என்ற அடிப்படையில் முழுவதும் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.

காணாமல் போனவர்கள் சார்பில் நாங்கள் தோன்றி அதன் கட்டுகாவல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம்.

ராஜ்சோமதேவ அவர்களினால் குறித்த மனித புதைகுழி பகுதியில் 50 மீற்றருக்குள் வேறு மனித எச்சங்கள் இருப்பது சம்மந்தமாக கண்டுபிடிக்க கூடிய ராடர் கருவி ஒன்றினை கொண்டு வருவதற்கான முயற்சிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பான முழுமையான விபரங்களை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி நீதிமன்றத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் அதற்கான ஒன்றுகூடல் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடத்தில் மேற்கொள்ளப்பட்டு அகழ்வுபணி இடம்பெறவுள்ளது.

30 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து கணக்காளர் அவர்களும் பிரசன்னமாகி இருந்ததாக மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அடிப்படை சுதந்திரம், மனித உரிமைகளை பாதுகாக்குமாறு இந்தியா வலியுறுத்தல்

தமிழர்கள் உட்பட குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது என ஜெனிவாவில் உள்ள ஐ. நா சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிக்கும் அடிப்படைக் கொள்கைகளை இந்தியா ஆதரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி இலங்கையில் தமிழர்களின் வாழ்வை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.