மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்தும் வர்த்தமானியை வெளியிடுமாறு பிரதமருக்கு ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.அவசர கடிதம்

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு இன்று (03) திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் அமைச்சரவையில் இருந்து அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

எனினும், இன்னும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லை என்பதனை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

எனவே, விரைவில் மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது்ளது.

அம்பாறை , மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அபிவிருத்தி பணிகளை இலகுபடுத்துவதற்காக குறித்த இரு நகர சபைகளும் மாநகர சபைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள், மனித வளங்களை பயன்படுத்தி மேலதிக நிதியை செலவிடாமல் ஒரு சில மாவட்டங்களில் காணப்படுகின்ற நகரங்களை மாநகரங்களாக தரமுயர்த்தும் நோக்குடன் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர மேயர் ஐ.நா. குழு இடையே சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண மாநகர சபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்கள ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் பீற்றர் டியு, அரசியல் விவகார அதிகாரி அல்மா சாலியு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்த சந்திப்பின் போது, யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் நிறைவில், ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கு, நினைவுச் சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர், பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது