தமிழர் தாயகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக அணிதிரள்வோம் : செல்வம் எம்பி வலியுறுத்து

மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று(23) இடம்பெற்றது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் எந்த தேர்தலையும் சந்திப்பதற்கும் நாம் தயாராக தான் இருக்கின்றோம். அதிபர் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனப்பிரச்சனை சார்ந்து தமிழ் தரப்பிற்கு என்ன செய்யவேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

வெறுமனே கருத்துச் சொல்லிவிட்டு ஏமாற்றுகின்ற நிலைமையினை இம்முறை மக்கள் ஏற்கமாட்டார்கள் அதற்கு உடந்தையாக நாங்களும் இருக்கமாட்டோம். பொது வேட்பாளர் விடயத்தை நாம் சரியாக கையாளவேண்டும்.

ஒருவரை நிறுத்திவிட்டு சொற்பவாக்குகளை பெறும் நிலை இருந்தால் ஒட்டுமொத்த தமிழினத்தின் மானமே போய்விடும். எனவே சரியான நெறிப்படுத்தலின் ஊடாகவே அந்த‌ விடயத்தை செய்யவேண்டும்.

நாளையதினம் எமது மாநாட்டில் வலுவான ஒரு கோரிக்கையினை முன்வைக்க இருக்கின்றோம். எங்களிடத்தில் ஒற்றுமை இல்லை என்று ஏளனப்படுத்தும் விமர்சனத்தை தொடர்ச்சியாக சந்திக்கின்றோம் எனவே அரசியல் கதிரைகளுக்காக வசனங்களை மாத்திரம் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை.

எம்மை பொறுத்தவரை இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் எமது மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலைமை ஏற்ப்படும். அத்துடன் சர்வதேசத்தின் பார்வையினையும் பெறமுடியும்.

இதன்போது தென்னிலங்கை எங்களை பார்த்து அச்சப்படும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்.

எம்மை பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சியினை நாம் ஒதுக்கிவிட முடியாது. பிரச்சனை தொடர்ந்து இருக்கின்றது.

இந்த ஒற்றுமைக்குள் நாங்கள்கொண்டு வரவேண்டும். ஆனால் பொதுச்சின்னம் என்பதே எமது கருத்து. பொதுச்சின்னமாக குத்துவிளக்கு அமைந்திருக்கின்றது.

அவர்களோடு பேசி பொதுச்சின்னத்தின் கீழ் அணிதிரள்வதற்கான முயற்சியினை நிச்சயமாக நாங்கள் மேற்கொள்ளுவோம், தனிப்பட்ட கட்சியின் கீழ் எமது ஒற்றுமை இருக்காது என்றார்.

வவுனியா வெடுக்குநாறி மலை சம்பவத்திற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கண்டனம்

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் நேற்று இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது பக்தர்களின் சமய வழிபாடுகளுக்கு பொலிசார் இடையூறு விளைவித்ததுடன் அங்கிருந்த சமய செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரமுகர்கள் மீதும் வன்முறையை மேற்கொண்டுள்ளனர் இந்த சம்பவமானது கண்டனத்திற்குரியது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்த கருத்தினை இன்றைய தினம் (9) செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் அலுவலகத்தில் வைத்து தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயமானது காலங்காலமான சைவ சமய வழிபாட்டு தளமாக இருந்து வருகிறது இந்த நிலையில் நேற்றைய தினம் (8)சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த பக்தர்கள் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் இன மத நல்லினக்கத்திற்கு பாதகமாக அமையும்

எனவே பொலிசார் எதற்nடுத்தாலும் பொது மக்களிடம் அத்துமீறும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் தமிழ் மக்கள் அவர்களுக்குச் சொந்தமான பூமியில் அவர்களுடைய பாரம்பரிய சமய கடமைகளை செய்வதற்கு இடையூறு விளைவித்த இந்த செயற்பாட்டை நான் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக பொலிசார் செயற்படுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுக்கிறேன் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்தார்

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி யின் தாயார் அமரர் செபமாலை (பாக்கியம்) அவர்களின் இறுதி நல்லடக்க விபரம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் அன்புத் தாயார் செபமாலை ( பாக்கியம் ) அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்.

விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் ஜோசப்வாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை ( பாக்கியம் )அவர்கள் இன்றைய தினம் 5/2/2024 திங்கட்கிழமை ஜோசப்வாஸ் நகரில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலம்சென்ற அமிர்தநாதன் (ஆயுள் வேத வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன், பற்றிக் மற்றும் டெமோன் ஆகியோரின் பாசமிகு தாயுமாவார்.

அன்னார் ராசம், சலோமை, லிகோனி, சின்னத்தம்பி மற்றும் காலம்சென்றவர்களான அன்னமேரி, செலஸ்ரின், கபிரியேல் ,மற்றும் சாமிநாதன் ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரது இறுதி நல்லடக்கமானது எதிர்வரும் புதன் கிழமை (7/2/20240) அன்று காலை 10 மணியளவில் தோட்டவெளி கிராமத்தில் உள்ள நற்கருணைநாதர் ஆலயத்தில் இரங்கல் பூஜைகள் நடைபெற்று பின்னர் விடத்தல்தீவு அடைக்கலமாதா ஆலயத்தில் வழிபாட்டுடன் விடத்தல்தீவு சேமக்காலையில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்

தாயை இழந்து துயருறும் உறவுகளின் துயரில் நாமும் பங்குகொள்ளுவதுடன் அன்னையின் ஆன்மா அமைதியில் இளைப்பாற இறைவனை பிராத்திக்கின்றோம்.

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி: 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எழு பேரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி இடம்பெற்ற பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட எழு பேரே வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தியமை, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன், கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலருக்கு எதிரான வழக்கு விசாரணையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

குறித்த இரண்டு வழக்குகளும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (08) எடுத்துகொள்ளப்பட்டது.

வழக்கு தொடர்பாக பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும் என தெரிவித்த போது பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி இரண்டு வழக்குகளையும் கிடப்பில் போட்டு அனைவரையும் விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து இரண்டு வழக்கையும் கிடப்பில் போட்ட நீதிமன்றம் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த வழக்குகளில் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஷ் ஆஜராகியிருந்தார்.

சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கேள்வியெழுப்பிய செல்வம் எம்.பி.

சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கடலை ஆளப்படுத்தப் போகின்றார்களா அல்லது மீன் வகைகளை கண்டுபிடிக்கப் போகின்றார்களா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.

சீனாவைப் பொறுத்தவரையில் நிலமாக இருக்கலாம் கடலாக இருக்கலாம். அது தன்னுடைய அதிகாரத்துக்குள் இருக்க வேண்டுமென நினைக்கும் நாடு.

எனவே இந்த விடயத்தில் இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பில் எழுப்பும் கேள்வி நியாயமானது என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை -இந்திய ஒப்பந்தம் தொடர்பில் என்னிடம் சில கேள்விகள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் அடிப்படையிலான மாகாண சபைகள் தற்போது செயலிழந்துள்ளன.

அவற்றுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு எந்தளவில் அக்கறை கொண்டுள்ளது? இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை எடுத்துள்ளதா ?

எமது கடற்பரப்பினுள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பில் நாம் கடற்தொழில் அமைச்சை மட்டும் குறை கூறமுடியாது.

இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை காலம் காலமாக நீடிக்கின்றது. இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு அமைச்சுக்கும் பொறுப்புண்டு. அவ்வாறான தீர்வு முயற்சியில் நீங்கள் ஈடுபட்டால் நாம் உங்களுக்கு முழுமையான ஆதரவு தருவோம் என்றார்.

அடக்குமுறைகள் அதிகரித்தால் மக்கள் வீறுகொண்டு எழுவர் – செல்வம் எம்.பி. எச்சரிக்கை!!!

அடக்குமுறைகள் நெருக்குதல்கள் அதிகரிக்கும்போது, அதற்கு எதிராக மக்கள் வீறுகொண்டு எழுகின்ற சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

போர் நின்றுவிட்டது நாங்கள் சகல விடயங்களையும் செய்யமுடியும் என நாங்கள் எதிர்பார்க்கமுடியாது. துப்பாக்கி சத்தங்கள் இல்லையே தவிர அதே போர் சூழலில்தான் தமிழ் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் கூட்டம் மட்டக்களப்பில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினமான கோவிந்தன் கருணாகரனின் இல்லத்தில் நடைபெற்றது.

கூட்டத்தினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், ஆயுதப்போராட்டங்கள் தொடங்கியதே அடக்குமுறைகளுக்கு எதிராகத்தான்.இந்த அடக்குமுறை என்பது தொடர்ச்சியாக இருக்கும். சிங்கள தேசத்தின் அனைத்து விடயங்களையும் பார்க்கும்போது ஒட்டு மொத்தமாக தமிழர்களின் தேசத்திற்கு எதிரான செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றது.

ஓவ்வொரு விடயத்திலும் எமது பிரதேசம் பறிபோகும் நிலையில் இந்த அடக்குமுறைகள் என்பது எதிர்பார்க்கவேண்டிய விடயம். ஆயுதப்போராட்டம் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகவே கிளர்ந்தெழுந்தது.எங்களைப் பொறுத்த வரையில் அடக்குமுறைகள் நெருக்குதல்கள் அதிகரிக்கும்போது,அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக வீறுகொண்டு எழுகின்ற நிலைப்பாடுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் சாத்தியக்கூறுகள் இப்பொழுது காணப்படுகின்றன.

அந்த வகையில் எமது மக்கள் இதற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள்.ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மாவீரர்களின் குடும்பங்களை கௌரவித்ததே தவறாக பார்க்கப்பட்டுள்ளது. அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த விடயத்தில் நாங்கள் பின்நோக்கி செல்லமுடியாது. மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.அதற்கான ஆதரவினை நாங்கள் தொடர்ச்சியாக வழங்குவோம். போர் நின்றுவிட்டது நாங்கள் சகல விடயங்களையும் செய்யமுடியும் என நாங்கள் எதிர்பார்க்கமுடியாது. துப்பாக்கி சத்தங்கள் இல்லையே தவிர அதே போர் சூழலில்தான் தமிழ் மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்த மண்ணுக்காக உயிர்நீர்த்த அனைவரையும் நாங்கள் அஞ்சலி செலுத்தவேண்டும் – என்றார்

இலங்கை அரசாங்கத்தின் புதிய பட்ஜெட் ஒரு அழகான காகித பூ போன்றது – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள பட்ஜட் என்பது  பார்வைக்கு நன்றாகவும் அழகாக இருந்தாலும் அது எங்களுடைய மக்களை சென்றடையுமா? ஒழுங்காக நடைமுறைக்கு வருமா போன்ற பல்வேறு கேள்விகள் எங்கள் மத்தியில் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (17) மன்னார் ரெலோ அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னை பொருத்த மட்டில் வரவு செலவு திட்டம் என்பது இப்போது வாசிக்கப்பட்டிருக்கிறது அதிலே சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் அரச ஊழியர்களுக்கு விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு ஒட்டுமொத்தமாக  எல்லாருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்த முக்கியமான விடயம் மாகாண சபைகள் பல்கலைக்கழகங்களை உருவாக்கலாம் என்ற விடயமும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு மிகச் சிறந்த  தீர்மானம். ஆனால் இது ஒரு காகித பூவாகத்தான் நான் பார்கின்றேன்.

ஏன் என்றால்  பொருளாதார ரீதியிலே பின்தங்கி இருக்கிற ஒரு நாட்டிலே இந்த பத்தாயிரம் கொடுப்பனவு என்பதை பார்க்கின்ற போது வரி விதிப்பு என்பது ஜனவரி மாதமே வர இருக்கிறது ஆகவே அவர்களுடைய சம்பள உயர்வு என்பது நான் நினைக்கின்றேன் மார்ச் மாதத்துக்கு பின்னரே கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது ஆகவே இந்த வரியை கட்டுவதற்கு இந்த பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே செலுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை மாகாண சபைகளுக்களுக்கு  பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான அதிகாரம் தொடர்பில்  சொல்லப்பட்டிருக்கின்றது.

காணாமல் போன உறவுகளுக்கு  கொடுக்கின்ற தொகை உயர்த்தப்பட்டிருக்கின்றது என்று அன்றைக்கு ஜனாதிபதி வாசித்தார் என்னை பொருத்தமட்டிலே அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால் அந்த மக்கள்   போரிலே தங்களுடைய உறவுகளை கண்முன்னாலே ஒப்படைத்து நியாயம் கேட்கின்ற,பல வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கின்ற மக்களாக இருக்கிறார்கள்.

அந்த மக்களின் பிரச்சினைகளை நிவாரணத்தின் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்பது  ஏற்றுக்கொள்ள முடியாது ஆகவே சலுகைகள் என்பது என்னும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாற்கான வாய்ப்புகள் என்னை பொருத்தவரை குறைவாக தான் இருக்கின்றது.

அந்தந்த நேரத்திலே வாசிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற போது முக்கியமாக விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு மக்களுக்கு இன்னும் அரசு ஊழியர்களுக்கு இப்படியான சலுகைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பட்சத்தில் நாங்கள் அதை வரவேற்க முடியும்.

அது நடைமுறைபடுத்தும் வரையில் எங்களா கருத்துக்கள் தெரிவிக்க முடியாது இருப்பினும் என்னை பொருத்தவரையில் இந்த வரவு செலவு திட்டம் என்பது என்னை   பார்வைக்கு நன்றாக இருந்தாலும் அழகாக இருந்தாலும் அது எங்கள் மக்களை சென்றடையுமா அல்லது இந்த பத்தாயிரம் வரிகட்டுவதற்கே சரியாகிவிடுமா என்ற கேள்விகள் இருப்பதாகவும் மொத்ததில் இந்த பட்ஜட் ஒரு அழகான காகித பூ மாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கேட்டு இடம்பெறவுள்ள ஹர்த்தால் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை (18) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

20 ஆம் திகதி ஹர்த்தாலை அனுஸ்டிக்குமாறு கோருகின்றோம். எங்களுடைய மக்கள்  போராட்டத்தின் ஊடாக முன்னுக்கு வந்தவர்கள். போராட்டத்தின் குணாதிசயங்களை கொண்டவர்கள். இருந்தாலும் நீதித்துறை, நில அபகரிப்பு, புத்த கோவில்களுடைய ஆக்கிரமிப்பு  என்பன வடக்கு – கிழக்கில் மிக மோசமாக நடந்து வருகின்றது. எங்களது மக்களின் பூர்வீகம் மற்றும் அவர்களின் நிலங்களை அபகரிப்பதன் ஊடாக எங்களுடைய மக்களின் வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டை தடுத்து நிறுத்தும் வகையில் இந்த கர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

எமது மக்கள் போராட்டத்தின் ஊடாக வந்தவர்கள் ஆகையால் இதற்கு ஆதரவு தருவார்கள் என நம்புகின்றோம். இருந்தாலும் சில சங்கடங்கள் இருக்கின்றது. அன்றாடம் உழைக்கின்ற மக்கள் தமது அன்றைய தேவைக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தற்போது புதிதாக அடாவடித் தனமான, ஜனநாயக விரோதமான செயற்பாடு நடக்கிறது. இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வலர்த்தக நிலையங்களை நடத்துவோர், சிறுதொழில் செய்வோர், மரக்கறி வியாபாரம் செய்வோர் என அவர்களை மிரட்டி அவர்களை கர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் எனக் கூறி வருகிறார்கள். அதற்கு எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

அனைத்து தமிழ் பேசும் மக்களும் இதற்கு ஆதரவு தருவார்கள். அரசாங்கம் கூடுதலான திணைக்களங்கள் மற்றும் பிக்குகளை வைத்து எமது மக்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது. அதனால் அனைவரும் ஆதரவு தர வேண்டும் எனத் தெரிவித்தார்.

மன்னாரிலிருந்து அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல முயற்சித்த தொழிற்பயிற்சி உபகரணங்கள் ரெலோ தலைவர் செல்வம் எம்.பியால் தடுத்து நிறுத்தம்

மடு கல்வி வலயத்தில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மன்னார் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பெறுமதி வாய்ந்த தொழிற் பயிற்சி உபகரணங்கள் குறித்த தொழிற்பயிற்சி கூடத்திலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் முயற்சியால் வியாழக்கிழமை வியாழக்கிழமை (12) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மன்னார் தொழிற் பயிற்சி அலுவலகத்திலிருந்து அழகு சாதனம் மற்றும் சிகை அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட தொழிற் பயிற்சி உபகரணங்கள் அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்வதற்கு ஆயத்தமாகிய நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்திற்கு விரைந்து சென்றார்.

மன்னார் மாவட்டத்திற்கான தொழிற்பயிற்சி நிலையத்திற்கு இளையோர்களின் தொழிற்பயிற்சிக்கு என பல லட்சம் பெறுமதியான அழகு சாதனம் மற்றும் சிகை அலங்காரப் பொருட்கள் வருகை குறித்த நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றது.

எனினும் அவற்றை இங்குள்ள இளையோர்களின் தொழில் முயற்சிக்கு பயன்படுத்தாமல் அஹம்பாந்தோட்டைக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக வியாழக்கிழமை (12) வாகனமும் வந்தது.

அப்பகுதி இளைஞர் யுவதிகள் மூலம் சம்பவத்தை கேள்விப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேரடியாக தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு வடக்கு மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு பேசியதன் அடிப்படையில் குறித்த பொருட்களை ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல இருந்த முயற்சி கைவிடப்பட்டது.

மேலும் குறித்த தொழிற்பயிற்சியை மன்னார் மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்து வைப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஆயுதப் போராட்டத்தை ஏன் கைவிட்டோம் என வருந்துகின்றோம்; ஜனா எம்.பியின் மணிவிழாவில் செல்வம் எம்.பி தெரிவிப்பு

ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று(02) இடம்பெற்ற “ஜனாவின் வாக்குமூலம்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் எங்கு பாத்தாலும் புத்த பிக்குகளின் நாட்டாமைத்தனத்தையும், முப்படைகள் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் அடாவடித்தனத்தையும் காணக்கூடியதாக உள்ளது.

இதனையெல்லாம் பார்க்கும் போது ஏன் ஆயுதப் போராட்டத்தினைக் கைவிட்டோம் என வருத்தமாக உள்ளது. மீண்டும் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்தால் என்ன? என்ற எண்ணமும் தோன்றுகின்றது எனவும் தெரிவித்தார்.