தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதாக காலங்காலமாக ஏமாற்றி வரும் ரணில் விக்கிரமசிங்க – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நீண்ட காலமாக பாரிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு பாடுபட்டு வருகின்றார். எனினும் அவரால் முடியாதவொன்றை குறுகிய காலத்திற்குள் தான் செய்து காட்டியுள்ளதாக மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மனிதநேய மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்ற போது இதனைத் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பொதுச் செயலாளராகவே நான் இந்த புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கின்றேன். நான் சுதந்திர கட்சியை விட்டுச் செல்லவில்லை.

இன, மத, கட்சி பேதமற்ற புதிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இந்த புதிய பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்கு பின்னர் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களால் இலங்கை வங்குரோத்தடைந்த நாடானது.

அதன் பிரதிபலிப்பாக 69 இலட்சம் மக்கள் ஆணையைப் பெற்ற ஜனாதிபதியொருவர் விரட்டியடிக்கப்பட்டார். அவ்வாறான நிலைமை ஏற்பட்ட போதிலும், ஆட்சியாளர்கள் அதிலிருந்து கூட பாடம் கற்கவில்லை.

நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திர கட்சியும் இன்று மண்ணைக் கவ்வியுள்ளன.

இவ்வாண்டு 2.5 பில்லியன் டொலர் வெளிநாட்டுக்கடனை செலுத்த வேண்டியுள்ளது.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனை இரண்டு ஆண்டுகளுக்கு காலம் தாழ்த்தியுள்ளார்.

எனவே இனிவரும் எந்தவொரு அரசாங்கத்துக்கும் பாரிய கடன் சுமை காத்திருக்கிறது.

தேர்தல் நிறைவடையும் வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்தை எவ்வாறு ஏமாற்றுவது என்பதிலேயே ஆர்வம் செலுத்துவார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை காலம் காலமாக ஏமாற்றி வருவதைப் போன்று, இனி சர்வதேச நாணய நிதியத்தையும் ஏமாற்றுவர்.

எனவே இந்த ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்திலேயே எமது இந்த கூட்டணி உதயமாகியுள்ளது என்றார்.