கூட்டமைப்புக்குள் எதற்காக வந்தாரோ அதை சரியாக செய்துள்ளார் சுமந்திரன்; ரணில் இப்பொழுது சிரித்துக் கொண்டிருப்பார் என்கிறார் தவராசா

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எதற்கு வந்தாரோ அதைச் சரியான முறையில் செய்து முடித்திருக்கிறார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய, அரசியல் குழுக்களின் உறுப்பினரும், கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசா தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் ஒரே நிலைப்பாட்டில் உள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளையும் இணைத்துப் பயணிக்கவேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால் அதிகாரம் பதவி ஆசை காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்தவர்கள் கூட்டமைப்புப் பிளவுக்குக் காரணமாக இருந்துள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்க் கூட்டமைப்புக்குள் இருக்கும் ஆமை சுமந்திரன் என பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் பேசினார்.

அவரது கருத்துத் தொடர்பில் தமிழ் மக்கள் ஆழமாகச் சிந்திக்கவேண்டும். சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒன்றாக இருந்தவர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிடாமல் தூள் வியாபாரிகள் காட்டிக் கொடுப்பவர்கள் என விமர்சனம் செய்துள்ளார். அவர் யாரை குறிப்பிட்டார் என தெரியாது. தூள் விற்பவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஒரு விடயத்தை நேராகச் சொல்ல வேண்டும். செல்வம் அடைக்கலநாதன் சரியாக செயற்பட்டுள்ளார். கூட்டமைப்பிற்குள் ஆமை வந்து விட்டது, சுமந்திரன் வந்து விட்டார் என்றார். சுமந்திரனுக்கு பெயர் சொல்லி விமர்சிக்கும் துணிவில்லை. சிறிய, வட்டார தேர்தலுக்காக இப்படி தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது வெட்கக்கேடு. இப்படி விமர்சித்து விட்டு மீண்டும் இணைய முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் ஒரு கட்சியை குறிப்பிடுவது அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து இருப்பதே கூட்டமைப்பு.

தற்போதைய நிலையை பார்த்து ரணில் சிரிப்பார். சுமந்திரன் எதற்காக வந்தாரோ அதை நிறைவேற்றி விட்டார். அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சில தமிழ் அரசியல்வாதிகள் தடையாக இருப்பதாக நீதியமைச்சர் கூறுகிறார்.

அரசியல்வாதிகளின் வழக்கை கையாளுபவரும், அவருடைய சம்மதமும் ஒப்புதலும் இல்லாததால் நீதிமன்றத்தால் அவர்களை விடுவிக்க முடியவில்லையென்றார். அரசியல்வாதியால் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து தனது சம்ம தத்தை அல்லது எதிர்ப்பை தெரிவிக்க முடியாது. நிச்சயமாக, அரசியல்வாதியான சட்டத்தரணியால் மட்டுமே முடியும். யார் அந்த அரசியல்வாதி, சட்டத்தரணியென்பதை நீதியமைச்சர் வெளிப்படுத்தவேண்டும்.

சுதந்திர தினத்தை கரிநாளாக தமிழ் அரசு கட்சி பிரகடனப்படுத்துவதாக செய்தி வெளியானது. உண்மையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. கட்சியின் மத்திய குழு, அரசியல் குழுவில் அது தீர்மானிக்கப்படவில்லை. இதே சுதந்திர தினத்தில்தான் சம்பந்தன் சிங்கக்கொடி ஏந்தினார். சுதந்திரதினத்தில் தானும், சம்பந்தனும் மட்டுமே கலந்து கொண்டதாக சுமந்திரனும் கூறியிருந்தார். இவர்களுக்கு திடீரென ஏன் கரிநாள்?-என்றார்.