இந்தியப் பிரதமரின் இராமேஸ்வர வருகையை முன்னிட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இராமேஸ்வர வருகையையொட்டி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 40 மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையே விடுவிக்க முயற்சிக்கப்படுகின்றது.

இம் மாதம் 26, 29, 30ஆம் திகதிகள் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் வழக்குகளை நடத்தி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்றும் நாளையும் நீதிமன்றங்கள் விடுமுறை தினம் என்பதால் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றப் பதிவாளர்கள் மூலம் இந்த விடயத்தை நீதிவானின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

வழக்குக் கோவைகள் மற்றும் இதர பணிகளுக்கான நீதிமன்றின் ஏனைய பணியாளர்கள் உட்பட அனைவரையும் அழைப்பதில் தடை ஏற்பட்டால் இந்திய மீனவர்களின் விடுவிப்பு எதிர்வரும் திங்கட்கிழமையே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.