இலங்கை பொலிஸாருக்கு முதல் கட்டமாக 125 ஜீப் வண்டிகள் இந்தியாவால் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாருக்கு 500 ஜீப் வண்டிகளை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. இவற்றில் முதற்கட்டமாக 125 ஜீப் வண்டிகள் நேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன. இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் 125 ஜீப் வண்டிகளையும் உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்தார்.

அதற்கான வைபவம் பத்தரமுல்லையிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உத்தியோகபூர்வமாக மேற்படி ஜீப் வண்டிகளுக்கான ஆவணங்களைக் அமைச்சரிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி, பொலிஸ் மாஅதிபர் சீ.டீ. விக்கிரமரட்ண உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.