உரிய திகதியில் தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணைக்குழு உறுதி

உள்ளூராட்சி மன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய உரிய திகதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு மீண்டும் உறுதியளித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடை நிறுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் இராணுவ கேர்ணல் டபிள்யு.எம்.ஆர்.விஜேசுதந்தர தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்யுமாறு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அனைத்து தரப்பினரும் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த பிரியந்த ஜயவர்தன, எஸ்.துறைராஜா மற்றும் பி.பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் பெப்ரவரி 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.