உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஆணையாளர்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாமல் போனால் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் ஏற்கனவே முடிவடைந்திருந்த நிலையில், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அரசியலமைப்பின் ஊடாக விதிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு அமைய ஒரு வருடகாலத்துக்கு ஆட்சி காலம் நீடிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

அதன் காரணமாகவே தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்தி உறுப்பினர்களை தெரிவுசெய்துகொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருந்தபோதும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை அரசாங்கத்தினால் வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்தலை உரிய திகதியில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் மார்ச் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

எனவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை உரிய திகதிக்கு நடத்த முடியாமல்போகும் சாத்தியம் இருப்பதால், மாநகர சபைகளின் நிர்வாகத்தை மாநகர ஆணையாளர்களுக்கு கீழ் கொண்டுவரவும் நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் நிர்வாகத்தை மாநகர செயலாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு கீழ் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.