சில கடுமையான தீர்மானங்களை எடுக்க சர்வதேச நாணய நிதியமே காரணம் – ருவன்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமையவே வரி அதிகரிப்பு உட்பட சில கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது என ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானங்களை இலகுபடுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வங்குராேத்து நிலைமையை அறிந்துகொண்டு சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு கூட பணம் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் பணம் பெற்றுக்கொள்வதாக இருந்தால் அவர்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டி தேவை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த இவ்வாறான கடுமையான தீர்மானங்கள் சரியே என மக்கள் இந்த வருட இறுதியில் புரிந்துகொள்வார்கள் என்றும் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.