ஐரோப்பிய ஒன்றியம் 16 மில்லியன் யூரோ நிதியுதவி

ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் நிதியிடலுக்காக முன்மொழியப்பட்டுள்ள இலங்கை சமூக சகவாழ்வு மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் கருத்திட்டம் மற்றும் பசுமை கொள்கைகளுக்கான உரையாடல்களுக்கு வசதியளித்தல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

‘பசுமைக் கொள்கைகளின் அடிப்படையிலான இலங்கை’ மற்றும் ‘உள்ளடக்கப்பட்ட ஒற்றுமையான சமூகத்தை’ உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் 2021 தொடக்கம் 2027 வரையான காலப்பகுதிக்காக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வருட அளவுகோல் கருத்திட்டத்தின் கீழ் நிதியனுசரணை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த துறைகள் மற்றும் ஒத்துழைப்புப் பணிகளுக்காக 2021-2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்காக 80 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் இலங்கையில் ‘சமூக சகவாழ்வு மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் கருத்திட்டத்தை’ நடைமுறைப்படுத்துவதற்காக 16 மில்லியன் யூரோ நிதியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த நிதி வழங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் நிதியுதவி ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.